பாலியல் தொல்லை என்பதற்கும், பாலியல் வன்கொடுமை என்பதற்கும் வித்தியாசம் உண்டு. பாலியல் தொல்லை என்பது, பெண்களின் அங்கங்களை அவர்களறியாமல் உராய்ந்து சுகம் காண்பது. பாலியல் வன்கொடுமை என்பது பலவந்தப்படுத்துதல். அதாவது கற்பழிப்பு!
பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது பத்தில் ஏழு குழந்தைகள் என்றால்… வன்கொடுமைக்கு ஆளாவது மீதமுள்ள மூன்று குழந்தைகள். அந்த வயதில் புரியாத அனைத்தும் வாலிப வயதில் புரிய, புரிந்த விஷயத்தால் உளவியல் ரீதியாகப் பலர் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், அப்பொழுதும் வெளியே சொல்லாமல் அவர்களுக்குள்ளே மூடி மறைக்கப்படுகிறது. அந்த மாதிரி சூழ்நிலையில் வளர்ந்த பெண்கள், தன் நிலைபோல் அல்லாது தன் பிள்ளைகளைப் பாதிக்கவிடாது பொக்கிஷமாகப் பாதுகாத்து வருவார்கள். மறைமுகமாகவேணும் அவர்களுக்கு ஆண்களைப் பற்றியும் சொல்லியும் வளர்ப்பார்கள்.
சூர்யோதயா ஐந்தாவது படிக்கும் பொழுது ஊருக்குள் வசித்தவர்கள், ஊரிலிருந்து தள்ளியிருந்த வீட்டில் குடியேறினர். வீடு என்றால் கிட்டத்தட்ட கால் ஏக்கரை கபளீகரம் செய்திருந்தது. வீட்டினருகே இடது புறம் அவ்வீட்டின் முந்தைய தலைமுறை இறந்த ஒருவரின் சுமாது இருந்தது. சுமாது என்றால் சிறு கோவில் போலிருக்கும் இறந்தவர் சமாதி. சுற்றிலும் பூச்செடிகள். காய்கறிகள் என்று ஏராளமான செடிகள். வீட்டின் வலதுபுறம் சின்ன பேக்கரி. சற்று நடந்து சென்றால் பஸ்ஸ்டாண்ட் வரும்.
அத்தனி வீட்டில் பேய் பிசாசு பயங்களோ, திருட்டு பயங்களோ இல்லாத சுதந்திரப் பறவைதான் சூர்யாவும் அவள் தம்பியும்.
அருகிலிருந்த பேக்கரியை வடிவின் மகன் நடத்தி வந்தான். அதனால் அவளின் வரவும் அதிகரிக்க, வடிவின் பெண் கலாவும் ஐந்தாவது படிப்பதால் சூர்யாவுடன் சினேகிதமானாள். ஒன்று மட்டும் சூர்யாவிற்குக் கேள்வியாகவே இருந்தது. அது கலா தன் அப்பாவை அப்பா என்றழைப்பது. மற்றவர் முன் சித்தப்பாவாகிவிடுவார் தர்மராஜன்.
“ஏன் எங்க அப்பாவை நீயும் அப்பான்னு கூப்பிடுற?” எனக்கேட்டால், “அப்பாவை வேற எப்படிக் கூப்பிடுறது? ஃபாதர்னா” என்ற கேலிச்சிரிப்பு வரும். தன் பெரியப்பா, சித்தப்பாவை அப்பா என்று தாங்கள் அழைப்பதுபோல், அவளும் சித்தப்பாவை அப்பா என்றழைப்பதாக முடிவு செய்தாள். ஏனோ தன் வயதில் ஒரு தோழமை கிடைத்த சந்தோஷம் சூர்யாவிற்கு.
“லட்சுமணா இதுல ஆயிரம் ரூபாயிருக்கு. பத்திரமா பெட்டியில் எடுத்து வை. நான் வரக் கொஞ்ச நேரமாகும். சூர்யாவை விட்டுட்டு எங்கேயும் போயிராத. அம்மாவும் பரத்தும் மதுரைக்கு விசேஷத்துக்குப் போயிருக்கிற நேரத்திலாவது, பிள்ளைங்களுக்குத் துணையா வீட்ல இருக்க வேண்டாமா? எங்க அவரை?”
“யாருக்குத் தெரியும். இல்லாட்டினாலும் இருந்திரப்போறாரு. நான் பார்த்துக்கறேன்ணா. நீ சீக்கிரம் வா.” அவன் பணம் கொடுத்ததை இன்னொருவன் கவனித்துக் கொண்டிப்பதை யாரும் உணரவில்லை.
இரவு ஆழந்த உறக்கத்திலிருந்த சூர்யோதயாவிற்கு, ஏதோ தன் உடலில் ஊர்வது போல் தெரிய பயத்தில் மெல்லக் கண்திறந்து பார்த்தாள். முன்பின் பார்த்திராத ஒருவன் தன்னிடமிருந்து நகர்ந்து பெட்டியைத் திறந்து பணத்தை எடுத்துக் கொண்டிருந்தான்.
திருடன் என்றதுமே பயம் வர… ஏறியிருக்கும் பாவாடையை இழுத்து விடுவதா? அல்லது இழுத்துவிட்டது தெரிந்தால், தான் முழித்திருப்பது தெரிந்து படத்தில் வருவது போல் தன்னைக் கொன்றுவிடுவானா? பயம் பிடித்துக் கொண்டது. இருந்தும் அருகில் படுத்திருந்த சின்ன அண்ணனைத் தட்டி, “அண்ணா” என்றழைக்க… அவனின் ‘ம்’ இல்… “யாரோ பணத்தை எடுக்கிறாங்கண்ணா. எழுந்திரு” என்றாள்.
“ப்ச்… அப்பா இல்லைன்னா அண்ணன்கிட்டச் சொல்லு” என்று தன் தூக்கத்தைத் தொடர்ந்தான்.
[the_ad id=”6605″]
பணத்தை எடுத்தவனோ அவளை நோக்கி வர சட்டென்று கண்மூடிக் கொண்டாள். சில நொடி அவள் உடல் தொட்டு ஆடையை சரி செய்து கிளம்பினான் அவன்.
காலையில் எழுந்ததும் ராமன் தம்பியிடம் பணத்தைக் கேட்க… இருந்த இடத்தில் பணம் இல்லாததைக் கண்டு அதிர்ந்து அண்ணனிடம் சொன்னான்.
“அண்ணா நேத்து நைட் திருடன் வந்தான். சின்ன அண்ணனை எழுப்பினா எழுந்துக்கவேயில்ல. உன்னைக் கூப்பிடவும் பயமாயிருந்துச்சி” என்றவள் மற்ற எதையும் சொல்லவில்லை. சிறு வயதிலிருந்து அவளை மிரட்டி வைத்தது தொடர்கிறதோ!
கணவன் மட்டும் காணும் அழகு! கண்டவனெல்லாம் கண்டது யார் குற்றம்?
வீடு ஊரின் கடைசியில் இருப்பதால் பள்ளிக்கூடம் செல்ல நீண்ட தூரங்கள் நடக்க வேண்டும். பள்ளிப் பையை ஒரு கையிலும் தம்பியை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு செல்ல… செல்லும் வழியில் ஒரு குடிசை வீட்டிலிருந்த வயதானவர் அழைக்க…
“என்ன தாத்தா வேணும்? எனக்குப் பள்ளிக்கூடத்துக்கு நேரமாகிருச்சி.”
“கையெல்லாம் நடுங்குது அந்தப் பானையிலிருந்து தண்ணி எடுத்துக் கொடுத்துட்டுப் போ.”
“ப்ச்… நேரமாகுது” என்ற சலிப்போடு தண்ணீர் கொடுக்க…
“இந்த ட்ரஸ் நல்லாயிருக்கே. புதுசா?” என்று ஆடையுடன் சேர்த்து அவளையும் தழுவ…
“நேரமாகுது. லேட்டா போனா டீச்சர் முட்டி போட வச்சிருவாங்க.”
“இரு போகலாம். நான் காசு தர்றேன். மிட்டாய் வாங்கிச் சாப்பிடு.”
“ம்… சரி” என்று நிற்க… சிறிது நேரத்தில் கையில் ஒரு ரூபாய் கொடுத்து அனுப்பினான்.
“பரத் வாடா. தாத்தா காசு தந்தாங்க. நாம ஜவ்வு மிட்டாய் வாங்கிச் சாப்பிடலாம்.”
“அம்மா திட்டமாட்டாங்களாக்கா?”
“நாம பள்ளிக்கூடத்துலதான வாங்கி சாப்பிடப்போறோம். அம்மா திட்ட முடியாதே” என்றாள் குதித்தபடி.
யார் கூப்பிட்டாலும், குறிப்பாக ஆண்கள் கூப்பிட்டால் போகக்கூடாது… அவர்கள் மடியில் அமரக்கூடாது… அவர்கள் கட்டியணைத்தால் விடக்கூடாது… அப்படி நடந்தால் வீட்டில் சொல்ல வேண்டுமென்று சொல்லி வளர்க்காதது யார் குற்றம்? குற்றங்கள் தொடங்குமிடம் அவரவர் வளர்ப்பு முறைகளும்! சுற்றமுமே!
சூர்யா ஐந்தாவது முடிக்கும் நேரத்தில் தங்கள் வீட்டினருகே ஒரு கொலை நடக்க… பிணத்தை தங்கள் வீட்டின் எதிரிலேயே எரித்தார்கள். பிள்ளைகளுக்கு பயமென்ற ஒன்று தெரியவில்லை என்றாலும், பூவரசிக்கு ஆளில்லா இடத்தில் தனியே இருக்கப் பிடிக்கவில்லை. இன்னொரு காரணம் வடிவு. தர்மராஜன் வடிவு இருவரின் அவ்வப்போதைய சந்திப்புகள் பிள்ளைகள் கண்ணில் பட்டுவிட்டால் என்ன செய்வதென்று புரியா நிலை. எதற்காகப் பயந்து வீட்டைக் காலி செய்ய எண்ணினாளோ, அது மகளின் கண்முன் காட்சியாய்.
அன்று பூவரசி விறகு வெட்டச் சென்றிருக்க, பள்ளிவிட்டு வந்த சூர்யா தம்பிக்கும் தனக்கும் தின்பதற்கு ஏதாவது இருக்கிறதா என தேட எதுவுமே கிடைக்கவில்லை. உண்டியலில் இருந்து காசு எடுத்து பஸ்ஸ்டாண்டிலுள்ள கடையிலிருந்து தேய்காய் பன் வாங்கி வந்து, வாசலில் அமர்ந்து இருவரும் பாதிப்பாதி சாப்பிட்டு முடித்தார்கள்.
பரத்திற்கு விக்கல் எடுக்க, “இருடா தண்ணீர் எடுத்துட்டு வர்றேன்” என்று வேகமாக உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்துத் திரும்பவும் செம்பை வைக்க உள்ளே வருகையில், அருகிலிருந்த அறையில் அப்பாவும் பெரியம்மா என்றழைக்கப்படும் வடிவும் கட்டியணைத்து நிற்பதைக் கண்டு விக்கித்து நின்றாள்.
அது தப்பு என்று தெரிகிறது. ஒருவேளை தவறான அனுபவங்கள் அவளுக்கு இல்லையென்றால் உடனே கேட்டிருப்பாளோ என்னவோ! பல படங்கள் பார்த்ததின் பாதிப்பு கணவன் மனைவி தவிர்த்து, மற்ற யாரும் யாரையும் கட்டிப்பிடித்தல் தவறென்பது. அதாவது பெரியவர்கள்.
[the_ad id=”6605″]
சிறு செடி அவள். யாரும் அவளுக்கு சரி தவறு அறிவுறுத்தாத போதும், சினிமா பார்த்து கெட்டுப்போகிறவர்கள் இருக்கும் காலத்தில், அதிலுள்ள நன்மைகளை மட்டும் தன் வாழ்க்கையின் பல சமயங்களில் பாடமாக எடுத்துக் கொண்டாள். குழந்தைகள் பாலியல் பற்றிய படங்கள் வந்திருந்தாலோ, அல்லது வந்திருந்து பார்க்க நேரிட்டாலோ தன்னை மற்றவர்கள் தொடுவது தப்பென்று உணர்ந்து விலகியிருப்பாளோ! ஏதோ ஒரு வகையில் தானே அறியாமல், தன்னைத்தானே செதுக்கிக் கொண்டிருந்தாள் சூர்யோதயா!
கர்ணன் போன்றவள் சூர்யா. பிறப்பு மட்டுமே தாய் தந்தையிடம் என்றிருக்க… அவளின் வளர்ச்சியில் அவர்கள் பங்கு இருக்கிறதா என்றால் கிடையாது என்ற பதில்தான் உண்மை. சிலையும் அவளே! சிற்பியும் அவளே!
தாயிடம் பார்த்ததைச் சொல்லவா? வேண்டாமா? மனதினுள் போராட்டம் நடத்தி, இது தெரிந்தால் தாய் அழுவாள் என்று சொல்லாமலே மறைத்தாள்.
திரும்பவும் பழைய வீட்டிற்கே குடியேற, அப்பொழுதுதான் அப்பாவைப் பற்றிய உறுத்தல் சற்று விலகியது. அதை விலக விட்டுவிடுவேனா என்று சூர்யா ஆறாவது படிக்கும் பொழுது, வடிவுடன் அவள் சின்ன மகள் கலாவையும் இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான் தர்மராஜன்.
எதிர்பாரா நேரத்தில் விழும் அடிகள் பெரிதல்லவா! பதினேழு பதினைந்து வயதுப் யைன்களை வைத்துக்கொண்டு குடும்பத்தலைவன் செய்யும் செயலா அது? மற்றவர்கள் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமலும், அவர்கள் பார்வைக்குப் பயந்தும் வீட்டக்குள்ளேயே அழுது அரற்றினாள் பூவரசி.
தாயின் அழுகைக்கானக் காரணம் தெரிந்ததும், ‘அன்றைக்கேத் தாயிடம் சொல்லியிருக்கலாமோ? முன்னாடியே சொல்லியிருந்தால் அம்மா எதாவது செய்திருப்பாங்களே.’ குற்றவுணர்ச்சியுடனான அழுகை அவளிடம்.
ராமன் தாயை நெருங்கி, “அவர் செத்துப் போயிட்டாரா என்ன? பொம்பளையைக் கூட்டிட்டு ஓடியிருக்கார். அதுக்குப் போயி இப்படி உட்கார்ந்து ஒப்பாரி வைக்கிறீங்க?”
“இதுக்குச் செத்திருக்கலாம்” என்ற முனகல் லட்சுமணனிடம்.
“அவனவன் வந்து துக்கம் விசாரிக்கிறான். முன்னாடியே அவங்களுக்குள்ள பழக்கம்னு தெரியுமா?” தாயின் சம்மதமான தலையசைத்தலே அனைத்தையும் சொல்ல… “தெரிஞ்சுமா விட்டுட்டிருந்தீங்க? தப்பு உங்க மேல வச்சிக்கிட்டு, அவனவன் என்னவோ போய் வா மகனேன்னு நான் அனுப்பி வச்சதா சொல்றான்” என தாயைக் கடித்துவிட்டுச் சென்றான்.
[the_ad id=”6605″]
சூர்யாவிற்கும் ஒரு சிலரிடமிருந்து வார்த்தை விஷங்கள் வந்து விழுந்தன. அதில் உடன் படிக்கும் பிள்ளைகளும் அடக்கம். அதுவரை எதுவுமே தெரியாதவளை நீயும் உன் அப்பன் மாதிரியா எனக்கேட்டு அவளறியா அனுபவங்களைச் சுற்றங்கள் கற்றுக் கொடுத்தன.
சேவியர் மூலம் அவர்கள் சென்னையில் இருப்பது தெரிந்த பூவரசி அழுது அரற்றி, “அவங்களை அங்கேயே இருக்கச் சொல்லுங்கண்ணா. வாய்க்கு வாய் என்னையும் என் அம்மாவையும் அசிங்கமா திட்டிட்டு, இப்ப…” அழுகை நில்லாதிருக்க…
“பூவரசிமா! அவன் பொண்டாட்டி பிள்ளைங்களை சம்பாதிச்சிக் காப்பாத்தி நல்லா வாழணும்னுதான் அந்த அச்சாபீஸ் வச்சிக் கொடுத்ததே. அதையும் சரியா செய்யாம பையன் செய்றான். இவன் இந்தளவுக்குப் போவான்னு நினைக்கலைமா. சென்னைக்கு வேலையா வந்த இடத்துல தற்செயலாதான் பார்த்தேன். முடிஞ்சளவு திட்டியிருக்கேன். ஒழுங்கா இல்லைன்னா கையைக் காலை உடைச்சி மூலையில போட்டு கஞ்சி ஊத்து. இல்லையா இங்க கோயம்புத்தூருக்கு அனுப்பி வை. நான் பார்த்துக்கறேன். அவன் இல்லன்னா நீ கொஞ்ச நாள் நிம்மதியாவாவது இருப்ப.”
“என்னைக்கு எங்கப்பா இவருக்கு கட்டி வச்சாரோ அன்னைக்கே என் நிம்மதி போச்சிண்ணா. பேசாம நீங்களே கூப்பிட்டுக்கோங்க. எங்களுக்குச் சம்பாதிச்சித் தரணும்னு அவசியமில்லை. நாங்க இருக்கிற இடத்துல அசிங்கப்படாம கௌரவமா வாழணும். உங்க நண்பன் இங்க இருந்தா கௌரவம் காத்தோட போகும். உங்க கால்ல கூட விழுறேன்ணா. தயவு செய்து அவரை உங்களோடவே வச்சிக்கோங்க. பிள்ளைங்க யாரும் குழந்தை கிடையாது. இவரால அவங்களும் தப்புத் தண்டான்னு போனா நான் உயிரோட இருக்கிறதுல பிரயோஜனமே இல்லண்ணா.”
“சரிமா அழாத. உனக்காதான் யோசிச்சிட்டிருந்தேன். இனி நான் பார்த்துக்கிறேன்மா. கவலையை விடு” என்று நம்பிக்கையளித்து போனை வைக்க…
சேவியரின் அம்மா சவரியாயியிடம் சென்று அண்ணன் செய்த உதவியைச் சொல்லி நன்றி சொன்னாள்.