“அவன் அடிக்க ஆரம்பிச்சப்பவே திருப்பிப் பிடிச்சிருந்தா, இப்படி ஒருத்தியை இழுத்துட்டுப் போறளவுக்கு வந்திருப்பானா? மனுஷன்னா மானம் மரியாதையோட வாழணும். கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும், குரங்கோடதான் வாழ்வேன்னு நிற்பாங்களாம். உன் புருஷன் விஷயத்துல அது சரியாயிருக்கு.”
அவர் சொல்லும் உண்மை முகத்திலடிக்க, புடவை முந்தானையை வாயில் திணித்து பூவரசி அழுது கொண்டிருக்க…
“அவன் ஒரு ஆளுன்னு அழுதிட்டிருக்க. உன்னையும் திருத்த முடியாது. முதல்ல கண்ணைத் தொடைச்சிட்டு பிள்ளைங்களைப் பாரு. உன்னால அவங்களும் பட்டினி கிடக்குறாங்க” என்று விரட்ட… கண்ணீரைத் துடைத்து வீட்டிற்குச் சென்றாள்.
சேவியர் சொன்னது போல் வடிவையும் அவள் மகளையும் ஊருக்கு அனுப்பிவிட்டு, தர்மராஜனைத் தன் இருப்பிடம் அழைத்துக் கொள்ள… பொறுப்பான இடத்தில் இருக்கும் நிம்மதியில் வேலையைத் தொடர்ந்தாள் பூவரசி.
ராமன் ஏற்கனவே ஆள் அண்டாதவன். இந்நிகழ்ச்சிக்குப் பின் வீட்டுக்குத் தேவையானதை மட்டும் செய்துவிட்டு ஆபீஸிலேயே படுக்க, வீட்டிற்கு வர போகவென்று உள்ளதும் கம்மியானது. லட்சுமணனோ சகவாசம் சரியில்லாது திருட்டு தம், தண்ணியடிக்க என்று ஆரம்பித்திருந்தான்.
பொதுவாக சில பழமொழி உண்டு. தாய் எவ்வழியோ ம(க்)கள் அவ்வழி. தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை. இந்தப் பழமொழிகள் அப்பா மகன் உறவுக்கு ரொம்பவேப் பொருந்தும். தகப்பன் தண்ணியடித்து வீடு வருவதால் தாய் என்னென்ன கஷ்டப்பட்டாள் என்பதை உடனிருந்து பார்த்து வளரும் பையனுக்குப் புரியாமலா போகும். இருந்தும் அதே தப்பை அவன் செய்வது எந்த வகையான செய்கையோ தெரியவில்லை. கேட்டால் ஜீன் கோளாறாம். கோளாறு பிடித்தவர்களின் வாக்குமூலம். தகப்பன் ஜீனைக் கணக்கிலெடுப்பவர்கள், தாயின் ஜீனும் தன்னிடமிருப்பதை ஏன்தான் மறக்கிறார்களா!
அவ்விடத்தில் மகனைத் தட்டிக்கேட்கும் தகுதியைத் தகப்பன் இழக்க, தாயின் புத்திமதியோ புலம்பல்களோ செல்லுபடியாகாமல் போய்விடுகிறது.
பதினான்கு வயதில் லட்சுமணன் சிகரெட் பிடிப்பதைக் கண்டு, அவனின் சட்டையைக் கழற்றி, உடலெல்லாம் மிளகாய் வத்தல் விதைகளைத் தேய்த்துக் கைகளைப் பின்னே கட்டி, சுட்டெரிக்கும் வெயிலில் டிரௌசருடன் படுக்க வைத்துத் தண்டனை கொடுத்தான் தர்மராஜன்.
[the_ad id=”6605″]
தப்பு செய்யும் மகனைத் தண்டிக்கும் எண்ணம் நல்லதுதான். அதையே தர்மராஜன் பெற்றோர் அன்று செய்திருந்தால் இன்று இன்னொரு தர்மராஜனாக லட்சுமணன் உருவாகாமல் இருந்திருப்பானோ!
மகனைத் தண்டிக்கும் தகுதி அவருக்கு இருக்கிறதா என்றால் சிறிதுகூட இல்லை எனலாம். அங்குதான் ஆரம்பிக்கிறது பையனின் ஈகோ. ‘இவர் செய்தால் சரி. நான் செய்தால் தப்பா? என்னை சிகரெட் பிடிக்கக்கூடாதுன்னு சொல்றதுக்கு இவருக்கு என்ன உரிமையிருக்கு?’ இதோ இன்று அப்பழக்கம் சாராயம் குடிப்பதில் வந்து நிற்கிறது. விளைவு…?
“அம்மா தம்பி ட்யூஷன் வரமாட்டேன்றான். எனக்கு பத்தாவது பப்ளிக் எக்ஸாம் நெருங்குது. இவன் என்னடான்னா விளையாடிட்டிருக்கான். சத்தம் போட்டு அனுப்பிவிடுங்கம்மா.”
“நீ ட்யூஷன் போயிட்டிருமா. அவனுக்கு ரெண்டு போட்டு அனுப்புறேன்.”
“போங்கம்மா. எப்பப் பார்த்தாலும் நான்தான் கடைசியா போறேன்னு எவ்வளவு திட்டுறாங்க தெரியுமா?”
“ஆமா பெரிய படிப்புப் படிக்கிற. எல்லா பரீட்சையிலும் ரெண்டு பாடமாவது பெயிலாகாம இருந்திருக்கியா? இவ்வளவுக்கும் ட்யூஷன் வேற.”
“ம்மா…” என்று சுற்றிலும் பார்த்தவள், “பப்ளிக் எக்ஸாம்ல பாஸாகிருவேன்மா. இதுவரைக்குமே எந்த க்ளாஸ்லயாவது பெயிலாகி ரெண்டு வருஷம் இருந்திருக்கேனா?”
“அதுவும் இதுவும் ஒண்ணா? ஒழுங்கா படிச்சி பத்தாவது பாஸாகப்பாரு.”
“ம்…” என தலையசைத்து, “ட்யூஷன் ஃபீஸ் கேட்டாங்க” என்றாள்.
“அம்மா நாளைக்குத் தந்திருவாங்கன்னு சொல்லு. சரி நேரமாகுது கிளம்பு” எனவும் அவள் நடக்க ஆரம்பிக்க, “சூர்யா கொஞ்சம் நில்லு. ரிப்பன்ல பூ அவிழ்ந்திருக்கு பாரு” என்று ரிப்பனை சரி செய்து, “இப்ப கிளம்பு” என்றார்.
ஏழாவது படிக்கச் சென்றதிலிருந்து அவளுக்கு அவளே பின்னிக் கொள்கிறாள். பின்னல் அழகாகயிருக்கிறதா? யாரும் கேலி செய்வார்களா எதுவும் அறியவில்லை. அறியவில்லை என்பதைவிட அந்தளவுக்கு யோசனையில்லாதவள் சூர்யோதயா. அப்படியேத் தெரிந்தாலும் சீ… போ எனத் தட்டிவிட்டுச் செல்லும் ரகம். அதற்காக யாரிடமும் சண்டையிட்டதுமில்லை. கோபம் என்ற ஒன்று இருப்பதையே அவள் அறியாள். அதுவும் ஒரு உணர்வு! நமக்குள்தான் அதுவும் இருக்கிறது என்பதும் தெரியாது. அதைத் தேவையான இடத்தில் வெளிப்படுத்த வேண்டுமென்பதையும் ஒருநாள் அறிவாளோ!
லீவு நாட்களில் அடுப்பில் சமையல் செய்வது, தம்பியைத் தாயாய்த் தாங்குவது, வீட்டு வேலையுடன் தன் வேலையையும் தானே செய்வது, இது எதுவுமே யாரும் சொல்லிக்கொடுத்து அவளுக்கு வந்ததில்லை. மனம் சொல்ல அவள் செய்கிறாள்.
பரத் படித்து முடித்து அக்காவுக்காகக் காத்திருக்க, நிறைய நேரம் எப்படி இருப்பானென்று யோசனையில் இருந்தவள் தூரத்தில் தாய் கூப்பிட வருகிறாரா என்று பார்த்தாள். அவர் வருவது போல் தெரியவில்லை என்றதும், “பரத் அம்மா கூப்பிட வர்றாங்களான்னு போய்ப் பார்த்துட்டு வாயேன்” என்றாள்.
“கூ இருட்டாயிருக்குக்கா. நான் போகமாட்டேன். வேணும்னா நீயும் சேர்ந்து வா.”
“இந்தக் கணக்கைப் போட்டு முடிச்சிட்டுத்தான் போகணும்னு டீச்சர் சொல்லியிருக்காங்க. நான் முடிச்சிட்டு வர்றேன். நீ கிளம்பு.”
“அப்ப நானும் இருக்கேன்” என்று அருகில் அமர்ந்துவிட்டான்.
ட்யூஷன் முடிந்து நடக்கையில் சற்றுத் தள்ளியிருந்த போஸ்ட் லைட் வெளிச்சம் தெரிந்ததும் பரத் பாய்ந்து ஓட, புத்தகச் சுமை அதிகமானதால் சூர்யா சற்று மெதுவாகவே நடக்க, எதிரில் வந்து நின்றவனைக் கண்டு பதறி வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவளைத் தடுத்து நிறுத்திய முத்துகுமார் என்பவனுக்கு இருபத்தோரு வயது.
“ஏய்! எங்க போற நில்லு?” என்று தடுத்து நிறுத்தினான்.
[the_ad id=”6605″]
“அம்மா தேடுவாங்க. நான் வீட்டுக்குப் போகணும்.”
“ஏய்! கொஞ்ச நேரம் சும்மா கட்டி மட்டும் பிடிச்சிக்குறேன்.”
“இல்ல வேண்டாம். அம்மா வந்துட்டிருப்பாங்க” என்று அழுகைக்குச் செல்ல…
“ஸ்ஸ்… ஏன் அழுற? நீ சீக்கிரமே வயசுக்கு வர வேண்டாமா?”
“வேண்டாம். எப்ப வர்றேனோ அப்பவே வந்துக்கறேன். நீங்க இங்கிருந்து போங்க” என அவனை விரட்டினாள்.
“அதுவரை ஏன் காத்திருக்கணும்?” விடாது கருப்புவாய் அவளை இழுக்கப்பார்க்க…
“ப..பரவாயில்லை நான் காத்திருக்கேன். நீங்க உங்க வேலையைப் பாருங்க” என்று முகம் திருப்பி நடக்க ஆரம்பித்தாள்.
“வேலையைப் பார்க்கத்தான வந்திருக்கேன்.” சட்டென்று அவளைக் கட்டியணைத்துப் பலவந்தப்படுத்தப் பார்க்க… அவனைத் தள்ளிவிட முனைந்து முடியாமல், “விடுங்க… விடு. என்னைக் காணும்னு அம்மா வர்றாங்க” என்றதும் வேகமாக விலகி அந்த இருட்டுக்குள் ஓட்டம் பிடித்தான்.
யாரும் எதுவும் சொல்லாமலேயே சூர்யாவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஆண்களின் தொடுகையைப் பற்றி விவரம் தெரிய ஆரம்பிக்கிறது. படங்களில் பார்த்த பண்பாடு, கற்பு, ஒழுக்கம் என்பவை மனதினுள் புகுந்து எல்லை மீற நினைப்பவர்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறாள். கணவனிடம் மட்டுமே தன்னை முழுமையாகக் கொடுக்க வேண்டும். அதற்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம் என்பதுவரை புரிந்து வைத்திருக்கிறாள்.
திருமணத்திற்கு முன் பெண்கள் தப்பு செய்தாலும் குழந்தை வருமென்பதை சினிமா மூலம் அறிந்ததால், சூழ்நிலை காரணமாக மறுக்க முடியாத கட்டத்தில், கட்டிப்பிடித்தல் மட்டுமே அனுமதித்து விரட்டி விடுகிறாள். வயதிற்கு வந்தபின் தப்பு செய்தால்தான் குழந்தை பிறக்கும் என்பதுகூடத் தெரியாது அப்பெண்ணிற்கு.
[the_ad id=”6605″]
சிறு வயதில் நடந்தவை ஓரளவு புரிபட கொஞ்சம் கொஞ்சமாக அதைத் தவிர்க்கப் பார்க்கிறாள். ருசி கண்ட பூனைகள் சும்மாயிருக்குமா என்ன? இதோ இதுபோல் அத்து மீறி அவளை நாசப்படுத்தப் பார்க்க… அது தப்பு என்பதை மூளையில் பதியவைத்தவள் அதை மனதிற்கும் உடலிற்கும் எடுத்துச் சென்றாள்.
நிர்வாண உடலைப் பார்ப்பதாலோ, தொடுவதாலோ மட்டும் கற்பு நெறி தவறிவிடுமா என்ன?
சிறு வயதில் நடந்த மிச்சம் மீதி இந்த மாதிரி அவள் முன் வந்து நிற்கிறது. அவளால் விரட்டவும் முடியவில்லை. வீட்டில் சொல்லவும் முடியவில்லை. சிறு தவறு செய்தாலே பூவரசி விளக்குமார் பிய்ந்துவிடும் அளவிற்கு அடித்துவிடுவார். அப்படியிருக்கையில் சூர்யா இதைச் சொன்னால்… முத்துகுமார் போன்றவர்களைத் திட்டினால், எங்கே தன்னைத் தப்பானவள் என்று வெளியில் பரப்பிவிடுவார்களோ என்ற பயமும் ஒரு காரணம்.
எதையும் நேருக்கு நேர் எதிர்கொள் என்று சொல்லித்தர அந்த இரண்டுங்கெட்டான் வயதுப் பெண்ணிற்கு ஆளில்லையே! பாவம்தான் அவளும்!
சூர்யோதயாவிடம் அந்த பதினைந்து வயதிற்குரிய உடல் வளர்ச்சிகள் இருந்தது. இருந்தும் பருவம் எய்தவில்லை. பூவரசியிடம் கேட்பவர்களுக்கு, “நான் பதினேழு வயசுலதான் வந்தேன். என் பொண்ணுக்கு பதினைஞ்சுதான ஆகுது. லேட்டா வர்றது நல்லதுதான். மெல்லவே வரட்டும்” என்று அவர்களிடம் சொன்னாலும், மனதிற்குள் தன்னைப்போல் அவளுக்கும் தாமதமாவது சிறு பயத்தைக் கொடுத்தது.
ஏனோ குழந்தை பிறந்த பொழுது சித்தி சொன்ன ‘நாலாவது பெண்’ என்ற வார்த்தை மனதிற்குள் சுற்றிச் சுழன்றது. ‘மாரித்தாயே! என் பொண்ணை நீதான் பத்திரமா பார்த்துக்கணும்’ என உடனடி வேண்டுதலும் வைத்தார்.
தவறான எண்ணத்தில் தன் பின் சுற்றும் ஆண்களைக் கண்டு எரிச்சல் வர ஆரம்பித்தது சூர்யோதயாவிற்கு. தன் அப்பாவையும் தெரியுமாதலால், ஆண்கள் எல்லாம் மோசம் என்ற படிப்பினையைக் கற்றுக்கொண்டாள். எங்கு சென்றாலும் தம்பியை உடனழைத்துச் செல்ல… தம்பியானவனை மீறி அவளைத் தொட்டு அவள் கத்திவிட்டால் தங்களுக்கு அவமானம் என்று தங்கள் கௌரவத்திற்காக விலக ஆரம்பித்தனர்.
பூவரசியோ மகள் வயதுக்கு வர இயற்கை வைத்தியங்களை யாருமறியாமல் செய்து, “சின்ன வயசுல கை சப்பாத, மண்ணு திங்காதன்னு சொன்னா கேட்டியா நீ. இப்பப்பாரு உடம்புல ரெத்தமில்லாம எப்படி வயசுக்கு வருவ? இந்தா இந்த மருதாணி உருண்டையை வாய்க்குள்ள போட்டுத் தண்ணியைக் குடி.”
“ம்மா… இதையா? வாந்தி வந்திரும்மா” என்று மறுக்க…
“கொஞ்சம் குமட்டும்தான். இருந்தாலும் குடிச்சிரு” என வலுக்கட்டாயமாகக் கொடுக்க… அவளை என்ன கொடுமைப்படுத்தினாலும் சீக்கிரமே வரமுடியாதென்று, பதினொன்றாம் வகுப்பு காலாண்டு லீவில், அதாவது மருந்து சாப்பிட்ட ஆறு மாதங்கள் கழித்து ஒரு வழியாக பெரிய பெண்ணாகிவிட்டாள்.
சந்தோஷம்! குழப்பம் கலந்த கலவையின் நிலை பூவரசிக்கு.
வயதுக்கு வந்துவிட்டோம். இனி நாம் வழி தவறாது ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் சூர்யோதயாவிற்கு.