5
‘கடைசித் தேர்வு முடிஞ்சிருச்சி. இனி ஃப்ரண்ட்ஸ் யாரையும் பார்க்கவும் முடியாது. காலேஜ் போக அண்ணன்கிட்ட கேட்கணும். பி.எஸ்சி எம்.எஸ்சின்னு சும்மா உயர உயர போயிட்டே இருக்கணும்?’
‘அதுக்கு நீ இங்கிலீஷ் மீடியம் படிச்சிருக்கணும். கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல படிச்சிட்டு பறக்க ஆசைப்படுற’ என்று மனசாட்சி கேள்வி கேட்டது.
‘அப்படிப் பார்த்தா சாதிச்சவங்கல்லாம் தமிழ் படிச்சவங்கதான்’ என்று மனசாட்சியை அடக்கி, ‘படிப்பு முடிச்சிட்டு காலேஜ் லெக்சரர் ஆகலாமா? இல்ல லெவன்த் ட்வெல்வ்த் எடுக்கிற டீச்சராகிரலாமா?’
‘அப்பவும் டீச்சிங் தவிர வேறு எதுக்கும் போறதாயில்ல. முதல்ல பாஸாகு’ என மனசாட்சி மண்டையில் தட்ட, தன் எண்ணங்களின் போக்கைக் கண்டு அசட்டுப் புன்னகையுடன் நடந்தாள் சூர்யோதயா.
சைக்கிள் பஞ்சரானதால் காலையில் அவள் பெரிய அண்ணனே பள்ளிக்கு அழைத்து வந்து, “மதியம் வேலையிருக்கு சூர்யா. எக்ஸாம் முடித்ததும் பிள்ளைங்களோட நடந்து வந்திரு” என்று சென்றிருந்தான். பிள்ளைகளோ எக்ஸாம் முடிந்ததும் விட்டால் போதுமென்று அவரவர் சைக்கிளை எடுத்துக் கிளம்ப. இன்னும் சிலரோ அங்கிருக்கும் மற்ற தோழியரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு சற்று லேட்டாக வருவதாகச் சொல்ல, பஸ்ஸை எதிர்பார்த்துக் காத்திருந்து வரவில்லை என்றதும் தனியாகவே நடக்க ஆரம்பித்தாள்.
பையன்களிடம் அதிகம் உறவாட மாட்டாள் என்பதால், ஒன்றிரெண்டு பையன்கள் அவள் நடந்து செல்வதைக் கண்டாலும் என்ன சொல்வதென்று தெரியாமல் சென்றுவிட்டார்கள்.
திடீரெனக் கேட்ட வித்தியாசமான சத்தத்தில் சுற்றுப்புறம் பார்க்க, காற்றின் ஹோவென்ற பயமுறுத்தும் இரைச்சல் மட்டுமே! ‘ஆத்தாடி!’ மனம் பக்கென்று அதிர, ‘சுற்றிலும் ஒரு ஈ காக்கை கூடக் கிடையாது. காத்திருந்து பஸ்ஸிலாவது வந்திருக்கலாமோ? ம்க்கும்… அப்படி வர்றதாயிருந்தா இப்பவரையா பஸ் வராமலிருக்கு. வந்தால் நிறுத்தி போயிருக்கலாமே’ என்ற யோசனையில் வந்தவளுக்கு இப்பொழுது பயம் பிடித்துக் கொண்டது. கேள்விப்பட்ட சினிமாவில் பார்த்த செய்திகளின் தாக்கங்கள் தற்பொழுது.
[the_ad id=”6605″]
‘நடக்கும் வழியில் விதவிதமான பழத்தோட்டம் இருந்து, அதன் பழங்கள் யாவும் கைக்கு எட்டுமளவிற்கு இருந்தால் எப்படியிருக்கும்? வாவ் கற்பனையே சுகமாயிருக்கே! அந்த தோட்டத்திலிருந்து ஒரு பெரிய மலைப்பாம்பு நம்மை விழுங்குவது போல் வந்தால் அது எப்படியிருக்கும்?’ கற்பனை என்பதையும் மறந்து ‘ஐயோ!’ என்ற அலறல் மனதிற்குள் எழ நடையை எட்டிப்போட்டாள்.
‘தனியாகச் சென்ற பெண் கற்பழித்துக் கொலை. காட்டு வேலைக்குச் சென்று தனியாக வந்த இளம்பெண்ணை மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்ற இருவர் அப்பெண்ணைக் கதறக்கதறக் கற்பழித்துக் கொலை செய்துவிட்டனர்.’ சமீபத்தில் பார்த்த செய்தி கண்முன் ஓட… அதற்கு மேல் நடக்க முடியாது வேகமாக ஓடினாள்.
‘எதாவது வண்டி வருதா? ம்கூம். அட்லீஸ்ட் தெரிஞ்சவங்க யாராவது…’ நிற்காமல் ஓடியவளை ஓடு ஓடு என்று மூளை விரட்ட, கிட்டத்தட்ட காட்டுப்பகுதியின் முக்கால்வாசி இடத்தைக் கடந்த வேளையில்…
“ஏன் சூர்யா ஓடி வர்ற? எதாவது பிரச்சனையா?” என்றான் சித்தப்பா முறையுள்ள அவள் வயதுப்பையன்.
“பிரச்சனையா? ஹையையோ அப்படிலாம் எதுவுமில்ல. வழியில ஒரு பெரிய பாம்பு பார்த்தேன். அதான் பயந்து…”
சுற்றிலும் பார்த்தவன் “பாம்பு எதுவும் இல்ல. அது எங்கயாவது போயிருக்கும். அதைவிடு நான் உன்கிட்ட ரொம்ப நாளா ஒண்ணு சொல்லணும்னு நினைச்சிட்டிருந்தேன். வா பேசிட்டே நடப்போம்” என்று அவளின் முன்னே நடந்தான்.
“இல்ல பரவாயில்ல சொல்லிட்டு நீ கிளம்பு. ஃப்ரண்ட் வீட்லயிருந்து அம்மாவுக்கு போன் பண்ணியிருந்தேன். இப்ப அம்மா வந்துட்டிருக்காங்க” என்றாள் வேகமாக.
“உங்க வீட்லதான் போன் இல்லையே?”
“சேவியர் மாவோவோட அம்மா வீட்ல இருக்கு. அவங்களுக்கு பண்ணி வரச்சொன்னேன்” எனவும் அவனுக்குள் பதற்றம் வர சற்று வியர்த்ததோ!
[the_ad id=”6605″]
“என்ன சித்தப்பா ஏதோ பேசணும் சொன்ன?” ஒரே வயதென்பதால் உறவை சொல்லி மரியாதையை எடுத்திருந்தாள்.
“அ..அது ஐ லவ் யூ” என்றான் பட்டென்று.
முதல் முறை தன்னைப் பார்த்து இந்த வார்த்தையை ஒருவன் உபயோகித்ததில், அதுவும் சித்தப்பன் முறையிலுள்ள ஒருவன் சொன்னால்! அதிர்ந்து நின்றவள் திரும்பியும் பாராது நடந்துவிட்டாள். “ஏய் சூர்யா… பதில் சொல்லிட்டுப் போ? ஐ லவ் யூ” என்று கத்தினான்.
ஐந்து வயதில் தாத்தா என்று சென்ற குழந்தைக்கு, சாக்லேட் கொடுத்து தவறான தொடுகை செய்தவன் மகன் எப்படியிருப்பான்?
விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்!
சட்டென்று ஒரு எரிச்சல். ‘சே.. அப்பனுக்கு மகன் தப்பாகாமல் பிறந்திருக்கான். அந்தாள் என்னடான்னா தெரியாமல் படுற மாதிரி மேல உரசுறான். சின்ன வயசுல எதுவுமே தெரியாது. இப்ப அப்படியில்லன்னு தெரிய வேண்டாம். பையன் அதுக்கு காதல்னு வர்ணம் பூசி அனுமதி கேட்கிறான். என்ன உறவுமுறைன்னாவது யோசிக்க வேண்டாமா?’ அவன் தொடர்வது தெரிந்தாலும் நிற்காமல் நடக்க… யாரோ இருவர் பைக்கிள் வருவது தெரிய சைக்கிளை அழுத்தி மிதித்து அங்கிருந்து மறைந்துவிட்டான்.
‘தூரத்துல வர்ற யாரையோ பார்த்துட்டு, ஐ லவ் யூ சொன்னவன் அத்துக்கிட்டு ஓடுறான். என்னைப் பார்த்தா இவனுங்களுக்கு அப்படி என்னதான் தோணுது? இந்தளவுக்குக் கேவலமாகவா என் நிலை இருக்கு. இன்னும் என்னை சின்னப்பொண்ணுன்னு நினைச்சீங்களாடா? நான் பெரிய பொண்ணாகிட்டேன். இப்பவும் அப்படியே விட்டுட்டிருப்பேன்னு எதை வச்சி நினைச்சீங்க? என்னைத் தொடும் உரிமை என் வருங்காலக் கணவனுக்கு மட்டுமே!’ தன் வாழ்க்கைத் துணை பற்றிய முடிவில் ரொம்பவேத் தெளிவாக இருக்கிறாள் சூர்யா.
ப்ளஸ்டூவில் எண்ணூற்று ஐம்பது மார்க் எடுத்து மேலே படிக்க வைக்க அண்ணனிடம் கேட்கலாமா? வேண்டாமா? என்று ஒற்றையா ரெட்டையா போட்டபடி அறைக்குள் நடையிட்டாள்.
“என்ன சூர்யாமா? குட்டிபோட்ட பூனைபோல சுத்திட்டிருக்க?”
“அம்மா அண்ணன்கிட்ட காலேஜ் போக பார்ம் வாங்க கேட்கணும். கொஞ்சம் பேசுறீங்களா?”
“அதுக்கெல்லாம் நிறைய செலவாகுமே.”
தனக்குமே அண்ணனைக் கேட்டு மேலும் மேலும் சங்கடப்படுத்தக் கஷ்டமாத்தான்மா இருக்கிறது. இருந்தாலும் ஒரு மனம் படிப்பு முக்கியமென்று அடித்துக்கொள்கிறது. அனைத்து காலேஜிலும் பார்ம் கொடுக்கிறார்கள். அண்ணனிடம் அனுமதி கிடைக்குமா? என அல்லாடிக் கொண்டிருக்கிறது மனது.
“என்னமா? நான் சொன்னது காதுல விழலையா?”
“ஹான்மா! வி..விழுந்ததுமா. இருந்தாலும் படிக்க ஆசையாயிருக்கு” என்றாள் திக்கித்திணறி.
“நான் சொல்லிப் பார்க்கிறேன்” என்றவர் மகனைப் பார்த்துக் கேட்கவே நான்கு நாட்களானது.
பார்ம் கொடுக்க கடைசி நாளுக்கு முன்தினம் தர்மராஜிடம் பணம் கொடுத்த ராமன், “காலேஜ்கு சூர்யாவையும் கூட்டிட்டு போய், அப்படியே பார்ம் நிரப்பிக் கொடுத்துட்டு வாங்க. ரெண்டு இல்ல மூணு காலேஜ்ல கொடுத்திருங்க. டைம் கிடையாது. ஒரு சீட்டாவது கிடைச்சா நல்லாயிருக்கும். அன்னைக்கே செய்திருக்கணும். வேலையில மறந்துட்டேன்” என்றான்.
“நாங்க விடியற்காலையில கிளம்புறோம். அப்பதான் ஒன்பது மணிக்கெல்லாம் காலேஜ்ல இருக்க முடியும்” என… இரண்டே காலேஜில் பார்ம் கிடைக்க நிரப்பிக் கொடுத்து ஒருவித நிம்மதியுடன் வந்தாள் சூர்யோதயா.
ஆயிற்று இரண்டு மாதங்கள். சேர்க்கைக்கானக் கடிதம் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். கடைசி நேரத்திலாவது படிக்க அனுமதி கொடுத்ததைக் குறை சொல்வதா? இல்லை முன்னரே ஏன் செய்யவில்லை என்று அண்ணனிடம் சண்டை போடுவதா? அப்பாவின் கடமையை அண்ணனவன் செய்யும் பொழுது எதிர்மறை எண்ணங்கள் எப்படி வரும். தங்களிடம் ஒட்டிப் பாசத்தைக் கொட்டவில்லை என்றாலும், அண்ணன் அவளுக்கு அப்பாவாகிற்றே! எப்படி குறை சொல்வாள்?
சீட் கிடைக்காத குற்றவுணர்வில் தங்கையிடம் வந்தவன், “வேற எதாவது படிக்கிறியா சூர்யா?” எனக்கேட்க…
“இருக்கட்டும்ணா. நான் வீட்டுலயே இருக்கேன்.”
“இல்ல எதாவது கம்ப்யூட்டர் கோர்ஸ்…”
“இல்லண்ணா வேண்டாம். இங்க உள்ள கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கிறதுக்குப் பதிலா, அம்மாவுக்குத் துணையா இருந்துக்கறேன்.”
“இங்க எதுவும் சரியில்லன்னா கொஞ்சம் தூரமா இருந்தா போறியா?”
“அச்சோ! எனக்குக் கம்ப்யூட்டர் படிப்பே வேண்டாம் சொல்றேன். நீ எதையும் நினைக்காம போய் வேலையைப்பாரு” என்றாள்.
“ம்… சரி” என்று வெளியில் சொல்லி, ‘சாரி’ என்று மனதிற்குள் மன்னிப்புக் கேட்டான். வெளிப்படையாக வீட்டினுள் உள்ளவர்களிடம் உறவு கொண்டாடுவது அவன் குணமல்ல. ஒரு விலகல். எப்பொழுதும் ராமன் பற்றி பூவரசி சொல்வது, ‘அவன் என் மாமியார் வார்ப்பு. அவங்களை மாதிரி ஒட்டாத குணம். என்ன அவங்ககிட்ட இல்லாத பாசம், பொறுப்பு இவன்கிட்ட இருக்கு’ என்பார்.
அதன்பின் படிப்பெல்லாம் பழைய பேப்பரிலும் பழைய புத்தகங்களிலும் செல்ல, வாசிப்பைக் கையில் எடுத்துக் கொண்டாள். அதிலுமே வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகளைத் தேடித்தேடி படித்து, நல்லவற்றை மட்டுமே மனதிற்குள் பொருத்திக் கொண்டாள்.
“சூர்யாமா எழுந்திரு. இருவது வயசாகுது. இன்னும் ஒருத்தர் எழுப்பாம எழுந்துக்கத் தெரியல.”
“ம்மா… பிள்ளைகளை அம்மாதான்மா எழுப்பிவிடணும்.” முறைத்த தாயிடம். “நிஜம்தான்மா. வேணும்னா என் ஃப்ரண்ட்ஸ்கிட்டக் கேட்டுப் பாருங்க” என்று புன்னகைத்தாள்.
[the_ad id=”6605″]
“கல்யாணம் பண்ணிப்போய் என்னதான் செய்யப்போறியோ? உன் மாமியார் என் மாமியார் மாதிரி இல்லாமலிருந்தா பரவாயில்லை. எனக்கு மாதிரி வாய்ச்சிட்டா?”
“அதான் எல்லா வேலையும் செய்றேனேம்மா. மீதியிருந்தா கல்யாணத்துக்கு முன்னாடியே கத்துக்குறேன். சரியா?”
“சரி சரி. தையல் க்ளாஸ்கு நேரமாகுது. சீக்கிரம் போனால்தான் உட்கார மிஷின் கிடைக்கும்னு சொல்வ. எழுந்து தயாராகு.”
“மணி ஒரு ஐந்தரை இருக்குமா?”
“மணி ஆறாகுது. இருட்டாயிருந்தா நேரமும் அப்படியேவா நிற்கும். முதல்ல எழுந்து ஓடு” என விரட்ட…
“ம்மா… ஏன்மா அப்பவே எழுப்பலை. ஆறரைக்கு க்ளாஸ் இருக்கு” என்றபடி வேகமாக எழுந்து அரக்க பரக்க ஓடித் தயாராகி ஏழு மணிக்கெல்லாம் கிளம்ப… “காப்பி குடிச்சிட்டுப் போ” என்ற தாயிடம், “வந்து ஒரேடியா சாப்பிட்டுக்கிறேன்மா” என்றாள்.
“வயசுப்பொண்ணு இப்படி வயித்துல ஒண்ணுமே இல்லாமலா போவ. வா வந்து காப்பியக் குடிச்சிட்டுப் போ” என அதட்டலிட்டார்.
“ஆமா பெரிய பால் காப்பி. கடுங்காப்பிதானம்மா” என அலுத்தபடி காஃபியை வாங்கி ஊதிக்குடிக்க ஆரம்பிக்க…
“உங்கப்பா சம்பாதிச்சுக் கொட்டுறதுல ஹார்லிக்ஸ் கூட கேட்ப.”
“சேச்சே.. ஹார்லிக்ஸ்லாம் கேட்கமாட்டேன்மா. பூஸ்ட், போர்ன்வீட்டாதான் கேட்பேன்” என்று முதல்முறையாக தாயிடம் வம்பு வளர்க்க… ஏனோ அது அவளுக்குப் பிடித்திருந்தது. பூவரசியோ மகள் கிளம்பாத எரிச்சலில் பேசிக்கொண்டிருந்தார்.
“வாயே பேசாத ஊமை மாதிரி இருந்துட்டு என்னையே கேலி செய்றியா?”
“ஒவ்வொரு வீட்ல போய்ப் பாருங்கம்மா. அவங்க அம்மாவை பொண்ணுங்க என்ன பாடுபடுத்துறாங்கன்னு. நான்லாம் சும்மா லைட்டாதான் பேசுறேன்.”
“லைட்டோ, பல்போ இப்பப் பேச நேரமில்ல கிளம்பு. ஆமா லட்சுமணன் எங்க?”
பல்பில் வந்த சிரிப்பை அடக்கி, “தெரியலையேமா” என்றாள்.
“எப்பப்பாரு கண்டகண்டப் பசங்களோட ஊர் சுத்திட்டு இல்லாத கெட்ட பழக்கமெல்லாம் கத்துக்கிட்டு அலையுறான். தகப்பன்தான் சரியில்லன்னா பிள்ளையுமா அப்படியே வரணும்.”
புலம்பும் தாயைப் பார்த்தவளுக்கு எப்பொழுதும் போல், ‘நான் பையனா பிறந்திருந்தா எதாவது வேலை செய்து உங்களைக் கண்போல் பார்த்திருப்பேன்மா’ என்று தோன்றியது.
“ஏன்மா அப்பா இப்படியிருக்காங்க? நீங்க மாத்தியிருக்கலாம்ல?”
“படமும் நிஜ வாழ்க்கையும் வேற வேற சூர்யாமா. உங்க அப்பாவைத் திருத்த அந்த ஆண்டவனாலயே முடியாதப்ப, நான் என்ன செய்ய முடியும்? இதயமே இல்லாத உன் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததே உலக அதிசயம்தான். அப்பவாவது திருந்தினாரா? ம்கூம்.. சில பிறப்புகளை என்ன செய்தாலும் மாற்ற முடியாது. கவலைன்னா என்னன்னு தெரியாமலே வாழ்ந்து சாகப்பிறந்த மனிதன் உன் அப்பா. அப்படி கவலை இருந்திருந்தா பிள்ளைங்க பெருசானதும் அந்த வடிவைக் கூட்டிட்டு ஓடுவாரா? அட இப்பவாவது கல்யாண வயசுல பிள்ளைங்க இருக்கிறாங்களே, எதாவது நல்லது பார்க்கலாமேன்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா? இன்னும் தெனவெடுத்துப் போய் சுத்திக்கிட்டிருக்கார். தர்ம நியாயமே தெரியாத மனுஷனுக்குப் பெயர் தர்மராஜன்.”
“பேசாம எமராஜன்னு வச்சிருக்கலாம்லமா. இல்ல நாம மாத்திப்போமா?” என்றாள் சீரியஸான பாவனையில்.
“ஏன் அவர் நல்லாயிருக்கிறது பிடிக்கலையா? ஆமா நேரமாகுதுன்னு இங்க என்ன கதையளந்துட்டு இருக்க? வாய் பார்த்துட்டே நில்லு. தைச்சி நல்லா கிழிச்சிருவ” என்று மகளைக் கடிய…
“அதைத்தான்மா செய்யப்போறேன்.” இன்னும் நின்னா அடி கன்பார்ம் என மனதில் நினைத்து, “வர்றேன்மா” என்று ஓடியேவிட்டாள். தையல் சொல்லித்தருவது பெண் என்பதால் ஓரளவு நிம்மதியே சூர்யாவிற்கு.
“ஏய் சூர்யாக்கா. நீ மட்டும் எப்படி கலரா ஒல்லியாயிருக்க?” என்று தையல் சொல்லித்தரும் வாசவியின் பெண் கேட்க…
“அதுவா பாப்பா… நம்ம பள்ளிக்கூடம் பக்கத்துல பெரிய மரம் ஒண்ணு இருக்குல்ல அதுல, ஒரு நாளைக்குப் பத்து முறை ஏறி இறங்கினேன். இப்ப கொஞ்ச நாளா குண்டாகணும்னு தோணிச்சா அதனால ஏறுறதை விட்டுட்டேன்.”
“உண்மையாவா?” என்பதாய் குழந்தையின் பார்வையிருக்க…
“நான் உண்மையைத்தான் சொன்னேன். நம்பினால் நம்பு. நம்பாக்காட்டி போ. வேணும்னா என் தம்பிகிட்ட கேட்டுப்பாரு” என்றாள் கெத்தாக.