“ஏய் சூர்யா சின்னப்பிள்ளைகிட்ட என்ன பேசிட்டிருக்க?” என்று தையல் ஆசிரியை வாசவி வர…
“ஒண்ணமில்லக்கா. ஒல்லியாகுறதுக்கு என்ன செய்யணும் கேட்டா… எக்ஸர்சைஸ் பண்ணச் சொன்னேன்கா.”
“இல்லம்மா. சூர்யாக்கா மரம் ஏறி இறங்கச் சொன்னாங்க. அதுவும் எங்க ஸ்கூல் பக்கத்துல இருக்குல்ல அந்த மரம்.”
“ஓய்! அது நான் படிச்ச ஸ்கூலும்தான். நீ மட்டும் உரிமை கொண்டாடாத” என்ற எச்சரிக்கையை அனுப்ப… வாசவி அவளை முறைக்க… “சும்மா பாப்பாகிட்ட வம்பு பண்ணினேன்கா” என்றாள் பவ்யமாய்.
“இப்படியே இவள்கிட்ட விளையாண்டிட்டிரு. அப்புறம் உன் ஏழு டூ ஒன்பது மணி மிஷினை யாராவது எடுத்துக்கப் போறாங்க.”
“ஹையோ வேண்டாம். அப்புறம் சாயங்காலம் வரைக்கும் காத்திருக்கணும்” என்று உள்ளே சென்று தன் வேலைகளைத் தொடர்ந்தாள். பி.எஸ்சி எம்.எஸ்சி என கற்பனைக் கோட்டையைக் கட்டிய மனது குடும்பச் சூழ்நிலையால் எஸ் சைஸ், எம் சைஸ், எல் சைஸ் என இஞ்ச் டேப்பால் அளவெடுத்துக் கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட படிப்பு முடிந்து ஆறு மாதத்திலிருந்து தைத்துக் கொண்டிருக்கிறாள். எல்லாம் கற்றுத் தேர்ந்தும் புதிது புதிதாக எதையாவது செய்கிறேன் என்று, பழைய ரேஷன் சேலைகள் வேஷ்டிகள் அனைத்தையும் கதம் செய்து மாடல் ஆடைகள் தைக்கிறாள். அதிலும் வாசவியின் குழந்தைதான் அவளின் சின்னக் குழந்தைகளின் ஆடைக்கான மாடல். அவளின் தம்பி பரத்தையும் விட்டு வைப்பதில்லை. கையில் சிக்கும் பிள்ளைகளுக்கு எல்லாம் தன் தயாரிப்பைப் போட்டுப் பார்த்து பெருமைபட்டுக் கொள்வதோடு அவளின் வேலை திருப்தியாகிவிடும். தையல் மிஷின் கேட்டுக் கொண்டிருக்கிறாள். கொஞ்ச நாள் கழித்து வாங்கித் தருவதாக அண்ணனவன் சொல்லியிருக்கிறான்.
“உனக்கு நல்ல திறமையிருக்கு சூர்யா. நீ சிட்டிக்குள்ள இருந்திருந்தா உன் ரேஞ்சே வேற. என்னைவிட எல்லா வகையிலும் பெஸ்டான ஆள் நீ. நானே உன்கிட்ட சந்தேகம் கேட்கிற அளவுக்கு இருக்கு” என்றாள் புன்னகையுடன்.
“போங்கக்கா. இப்படிதான் எதையாவது சொல்லிட்டிருப்பீங்க? நீங்க என்னோட குரு. வருஷக்கணக்கா உங்க மிஷினைத் தேய்ச்சிட்டிருக்கேன். அதுக்குத் திட்டாம பாராட்டிட்டிருக்கீங்க?”
[the_ad id=”6605″]
“அதையெல்லாம் விடு. உன் அண்ணன்தான் கம்ப்யூட்டர் படிக்கச் சொல்றாங்கள்ல. படிக்க வேண்டியதுதானே?” அவள் மறுப்பதன் காரணத்தைக் கேட்டாள்.
“பணம்னு மட்டும் கேட்டு அண்ணன் முன்னாடி போய் நிற்க ஒரு மாதிரியிருக்குக்கா. எங்களை மாதிரிதான அவனையும் பெத்தாங்க. எங்களுக்கு சம்பாதிச்சிப்போட்டுக் காப்பாத்தணும்னு என்ன அவசியம் இருக்கு. பிள்ளைகளைப் பாதுகாக்க அப்பா செய்ய வேண்டிய கடமை இது. இப்பதான்கா அம்மா வேலைக்குப் போறதில்லை. சின்ன அண்ணன் பெரிய அண்ணனோட வேலை செய்றான்தான். முழுக்க தோள் கொடுக்காம அரைகுறையா!”
“இப்ப உள்ள காலகட்டத்துல ஒரு குடும்பத்தைத் தாங்குறதுன்னா சும்மாவாக்கா? மிடில் க்ளாஸ்ல பணம் எப்பவும் பற்றாக்குறைதான். ப்ச்… விடுங்கக்கா. இதுவரை என்னைப் படிக்க வச்சதே பெரிய விஷயம். இன்னும் அண்ணனைக் கஷ்டப்படுத்த வேண்டாமே. என்ன நான் பையனா பிறந்திருக்கலாம்?” என்றாள் பெருமூச்சுடன்.
“ரொம்ப ஏக்கம் போல?”
“நீங்க விளையாட்டா கேட்டாலும் அதுதான்கா நிஜம். வெளியூர் வேலைக்குப் போகப் பையன்களுக்கு எந்தத் தடையும் கிடையாது. கிடைக்கிற வேலையைப் பார்த்து நிறைய சம்பாதிச்சி, என்கூடவே வச்சி அம்மாவைப் பார்த்துக்கணும்னு ரொம்ப வருஷக் கனவு.”
“அப்ப உங்க அப்பா?”
“உண்மையைச் சொல்லணும்னா எங்கப்பாவோட முதல் எழுத்தை முன்னாடி சேர்த்துக்க மாட்டேன். சர்டிபிகேட் மாதிரி எதுக்காவதுதான் அது தேவை. சும்மா டெஸ்ட் சைன் பண்ணினால்கூட அப்பாவின் முதல் எழுத்தைப் போடமாட்டேன். பொதுவாவே பொண்ணுங்களுக்கு அப்பாதான் ரோல் மாடலாம். அவரைத்தான் ரொம்பப் பிடிக்குமாம். எங்க வீட்டுல எல்லாமே வித்தியாசப்படும். பெத்ததோட சரி. எங்களைக் கொஞ்சினதா ஞாபகத்துல கூட இல்லை.”
“ஆனா, சித்தப்பா பொண்ணை பயங்கரமா கொஞ்சுவார். கடைக்குக் கூட்டிட்டுப் போவார். பெரியப்பா, அத்தை பிள்ளைங்க வந்தாலும் பெருமையா பார்ப்பார். அவங்க முன்னாடி எங்களை விட்டுக்கொடுத்துப் பேசுவார். ஏன்தான் பெத்த பிள்ளைங்களை அவருக்குப் பிடிக்காதோ தெரியல? எங்களைத் தவிர மத்தவங்களை ஏன் பிடிக்குதுன்னும் இப்பவரைப் புரியல?”
“வாழ்க்கையில நிறைய முன்னேறணும். நிறைய சம்பாதிக்கணும். நான் ஆசைப்பட்ட எதுவும் நடந்ததில்லை. நானும் ஒருநாள் பெரியாளா வரணும்னு ஆசையிருக்கு. இதுவும் கனவாகப் போகலாம்கா. முப்பது வருஷம் நல்லா வாழ்ந்தவனும் இல்லை. முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லைன்னு சொல்வாங்கள்ல. அது நிஜம்னா கண்டிப்பா சம்பாதிப்பேன்” என்று தன் லட்சியங்களை வெளியிட்டாள்.
அதுவரை பேசவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்த வாசவி, “அதுக்கேற்ற வாழ்க்கைத் துணை அமைய வாழ்த்துகள் சூர்யா. நீ கண்டிப்பா வாழ்க்கையில் முன்னுக்கு வருவ” என்று மனதார வாழ்த்தினாள்.
எதிர்பாரா இடத்திலிருந்து வரும் வாக்கு பலிக்கும் என்பது மனித நியதி! வாசவியின் வாக்கின் வலிமை எவ்வளவோ!
“எங்க அங்கேயும் இங்கேயுமா சுத்திட்டிருக்க? முதல்ல வீட்டுக்குப் போ” என்று லட்சுமணன் தங்கையை விரட்டிக் கொண்டிருந்தான்.
“அண்ணா கோவில் கொடைக்கு நாடகம் போட்டுட்டிருக்காங்க. கொஞ்ச நேரம் பார்த்துட்டுப் போறேனே?” என்றாள் கெஞ்சலாக.
“மணி பதினொண்ணாகுது. பொம்பளைப் பிள்ளைக்கு இங்க என்ன வேலை? வீட்டுக்குப் போ.”
“அங்க பாருண்ணா எத்தனை பொண்ணுங்க இருக்காங்க. நானும் கொஞ்ச நேரம் பார்த்துட்டுப் போறேனே?”
“பரத் எங்க? அவனைக் கூட்டிட்டு வந்திருந்தா பரவாயில்ல. தனியா இங்கல்லாம் வேண்டாம். இங்க இருக்கிற பிள்ளைங்க எல்லாம் அவங்கவங்க அம்மா இல்ல அக்கா உறவு முறைல உள்ளவங்களோட இருக்காங்க. அப்படியில்லன்னாலும் பக்கத்துலயே வீடு இருக்கு. தூக்கம் வந்தா எழுந்து போயிருவாங்க. நமக்கு ஐந்தாறு தெருக்கள் தள்ளிதான் வீடு இருக்கு. முதல்ல வா உன்னை வீட்டுல விட்டுட்டு நான் வர்றேன்” என்றழைத்தான்.
“நீ திரும்ப வருவியா?”
“ஆமா. ஆம்பளைப் பையன் நான். மணல்ல படுத்து தூங்கிட்டு காலையில கூட வருவேன்.”
‘ஹ்க்கும் ஆண்பிள்ளைனா எந்நேரம்னாலும் ஊர் சுத்தலாம். நாம மட்டும் ஒரு விசேஷ நேரத்துல கூட வெளில போக முடியுறதில்ல. இந்த பரத் பயலுக்கு இன்னைக்குப் பார்த்தா தூக்கம் வரணும்.’ மூஞ்சை சுருக்கிக் கொண்டு சின்ன அண்ணனுடன் சென்றாள்.
விளையாட்டுப் போட்டிகள் களைகட்டியிருக்க, விசேஷத்திற்கென்று புதிதாக வாங்கிக் கொடுத்த தாவணியில், அவள் தம்பி பரத்துடன் கோவிலுக்குச் சென்று வேடிக்கை பார்த்திருந்தாள் சூர்யா.
“ஸ்கிப்பிங்கு இளம்பெண்கள் யாரெல்லாம் பெயர் கொடுத்திருக்கீங்க? வர விருப்பம் இருக்கிறவங்க வரலாம்” என்ற அறிவிப்பு வர… பரத் தன் அக்காவின் பெயர் கொடுத்துவிட்டு வந்து, “உன்னோடது பதினாறாவது நம்பர்கா. அநேகமா ரெண்டாவது டீம்லதான் நீ வருவ. ஸ்கூல்ல உன்னை ஜெயிச்ச வினோ அக்காவும் போட்டியில இருக்காங்க” என்றான் சற்று கவலையாய்.
ஏனெனில் பள்ளியில் நடந்த போட்டியில் வினோ இரண்டாமிடம் பிடிக்க, சூர்யா மூன்றாவது இடத்தில் வந்து பிரைஸ் கிடைக்காமல் சென்றிருந்தாள். அந்தக் கவலை பரத்திற்கு இப்பொழுது.
“சரி விடுடா பார்த்துக்கலாம். நல்லா செய்தா அவளே வின் பண்ணட்டும்.”
“நீ அவங்களைத் தோற்கடிக்க மாட்டியா?” ‘ஜெயித்துவிடு அக்கா’ என்பது அவன் பார்வையில் தெரிந்தது.
[the_ad id=”6605″]
அதை உணர்ந்த சூர்யாவிற்குத் தெரியுமே யதார்த்தம் என்பது வேறென்று. “மாட்டேன். நான் ஜெயிக்க முடிந்த மட்டும் முயற்சிப்பேன் பரத்” என்றாள்.
“ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?”
“வித்தியாசம் நிறைய இருக்கு. சொன்னா உனக்குப் புரியாது. நான் என்னோட முழுத் திறமையைக் காண்பிக்கிறேன். அங்க மியூஸிக் சேர் போகுது. போ போய் வேடிக்கை பார்” என்று தானும் பார்க்க, அப்பொழுது கண்களில் பட்டது அந்த கெலடாஸ்கோப். ‘எப்படியாவது அம்மாகிட்டச் சொல்லி அதை வாங்கிரணும்.’ எண்ணங்களின் நடுவே ஸ்கிப்பிங் பற்றிய அறிவிப்பு வர அதில் கவனம் போனது.
முதல் பத்து பெண்கள் ஆடியதில் வினோ ஜெயித்திருக்க, இரண்டாவது பத்து பெண்கள் ஆடியதில் சூர்யா ஜெயித்திருந்தாள். இருவரில் யார் முதல் பரிசை வெல்லப் போகிறார்கள் என்ற சுற்றிற்கு இருவரும் தயாராயிருக்க… அவரவர் ஆதரவாளர்கள் நண்பர்கள் அவரவர் பெயரைச் சொல்லிக் கூச்சலிட… வேடிக்கை பார்ப்பவர்கள் உற்சாக விசிலடிக்க… அவன் மட்டும் எதுவும் செய்யாது அவளை மட்டுமே பார்த்திருந்தான்.
நான்காவது நாளாக நடக்கும் கோவில் கொடையில் எப்பவாவது அவளைப் பார்க்கிறான். அவள்தான் அவனைக் கண்டுகொள்ளவில்லை. சில நேரம் முன்னே சென்று எதிரே வந்தும் பார்த்தான். ம்கூம்… அவனை மட்டுமல்ல யாரையுமே அவள் பார்க்காதது மனதில் சந்தோஷம் கொடுத்தாலும், தன்னையும் பார்க்கவில்லையே என்ற வருத்தம் மேலோங்கியது.
“நீ இங்க நிற்கிறியா? நான் எங்கெல்லாமோ தேடிட்டிருக்கேன்” என்ற நண்பனின் முகம் பார்க்க அவன் கவனம் தன்னிடமில்லை என்பதை உணர்ந்தவன். “விக்கீ” என்று சற்று வேகமாகவே முதுகைத் தட்டினான்.
“யார்டா?” என திட்ட வாய் திறந்தவன், “சதீஷ் நீயா? சே.. நான் யாரோன்னு பயந்துட்டேன்.”
“உன் கவனம் எங்கடா இருக்கு? எவ்வளவு நேரம் உன்னைக் கூப்பிடுறது? அப்படி எதைத்தான் பார்க்கிற?” என்றதும் விக்கி என்றழைக்கப்பட்ட விக்னேஷ் கைநீட்டிய இடம் பார்த்து அதிர்ந்து, “என்னடா பொண்ணைக் கை காட்டுற? நீ வெளியூர்க்காரன். விஷயம் தெரிஞ்சது உன்னைப் பிரிச்சி மேய்ஞ்சிருவாங்க. வா வீட்டுக்குப் போகலாம்” என்றான் கோபமாக.
“ஏன்டா அப்படிச் சொல்ற? எனக்கு அந்தப் பொண்ணைப் பார்த்ததும் பிடிச்சிருச்சிடா. உன் மூலமா பெண் கேட்கலாம் நினைச்சேன். ஏன் உன் நண்பனுக்கு ஹெல்ப் பண்ணமாட்டியா?”
“டேய்! என்ன பேசிட்டிருக்க? கோவில் கொடையைப் பார்க்கணும் சொன்னதால கூட்டிட்டு வந்தேன். அப்பாவுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.”
“சதீஷ் அப்ப ஹெல்ப் பண்ணமாட்டியா? அப்ப நானே அவளோட அப்பா யார்னு கேட்டுப் பேசிக்கிறேன்.”
“சுத்தம். டேய்! நாங்க ஜமீன் பரம்பரைன்னு வெட்டிக் கௌரவம் பேசியே வீணாப்போன மனுஷன் அவளோட அப்பா. நீ கேட்டதுக்காகவே தரமாட்டேன்னு சொல்வார். அந்தப் பொண்ணைக் கேட்கணும்னா அவளோட அம்மா இல்ல அண்ணனைப் பிடிக்கணும்.”
“டேய்! அப்ப நீ எனக்கு ஹெல்ப் பண்றியா?”
“என்ன பண்றது? நண்பனா போய்த் தொலைஞ்சிட்டியே. ஆனா, விக்கி… அந்தப் பொண்ணு பனிரெண்டுதான் படிச்சிருக்கா.”
“அது போதுமேடா. சிக்ஸ்த் செவன்தோட நின்னுட்டாள்னு சொல்லாமல் விட்டியே. அதுவரை சந்தோஷம்.”
“அப்ப படிப்பு கம்மின்னா வேண்டாமா?”
“ஐயா சாமி. படிக்கவே இல்லன்னாலும் அவள்தான் வேணும்” என்றான்.
சட்டென்று சிரித்து பின், “அவங்க மிடில் க்ளாஸ்லயும் கொஞ்சம் கஷ்டப்பட்ட குடும்பம்டா. நீயோ ஓரளவு வசதி. நகை அது இதுன்னு செய்ய அவங்ககிட்ட எதுவும் இருக்காது. அவள் அப்பா வேலைக்குப் போயி நான் பார்த்ததேயில்ல. அதையும் மீறி அவர் கொஞ்சம் சரியில்ல சொல்வாங்க.”
“பொண்ணு எப்படின்னு மட்டும் சொல்லுடா?”
“பொண்ணைக் குறை சொல்ல ஏதுமில்லைடா. வீடு தம்பின்னு தாண்டி கண் அங்கயிங்க அசையாது. யார்கிட்டேயும் நின்னு பேசிப் பார்த்ததில்ல. நம்ம பயலுக அவள் பார்வைக்காகத் தவமிருந்து கண்டுக்கலைன்னதும் சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்ன்ற முடிவுக்கு வந்துட்டானுங்க.”
“இது போதும்டா எனக்கு. பொண்ணு கேட்க எப்பப் போகலாம்?”
“முதல்ல எங்கப்பாகிட்டப் பேசி பொண்ணோட அம்மாகிட்ட கேட்கச் சொல்லலாம். அவங்க சரின்னு சொல்லிட்டா, ஊர்லயிருந்து உன் பேரண்ட்ஸ வரச்சொல்லிடலாம்” என்று பெரியதாய் ப்ளான் செய்ய…
“தேங்க்ஸ்டா நண்பா. தேங்க்யூ” என்று நண்பன்டா என்பதாய் கட்டிக்கொண்டான்.
“போதும்டா விக்கி. நீ பாட்டுக்குக் கட்டிப்பிடிச்சிருக்க. எல்லாரும் நம்மளை வித்தியாசமா பார்க்கிறாங்க. அப்புறம் நீ அவளைக் கட்டிக்க முடியாது. என்னைத்தான்…” என்று வெட்கப்பட…
“அடச்சீ வெட்கம் கெட்டவனே. என்னைப் பார்த்தா எப்படிடா தெரியுது?”
“ஏய்! ம்ம்ம்…” சதீஷ் தன் குரலை ஹஸ்கியாக்க…
“டேய் உன்னை…” என்று அடிக்க ஆரம்பித்தவனைத் தடுத்து, “உன் ஆள் விளையாடுறா பாரு” என்றான்.
“அவள் பெயர் என்னடா?”
“சூர்யா. முழுப்பெயர் இதுதானா தெரியாது.”
[the_ad id=”6605″]
“அதை அப்புறமா தெரிஞ்சிக்கலாம். எனக்கு சூர்யாவே போதும்” என்றவன் கண்கள் சூர்யோதயாவின் மேலிருந்து துளியும் அகலவில்லை. தனக்கு அவளைப் பிடித்திருக்கிறது. அவளுக்குத் தன்னைப் பிடிக்குமா? அதுவும் கணவனென்ற முறையில் பிடிக்குமா என்பதை அறியாதது யார் தவறோ!
ஸ்கிப்பிங் கயிறு சூர்யா வினோ இருவர் கைகளிலும் வேகமெடுத்தும் குறைந்தும் என விடாது குதித்துக் கொண்டிருந்தது. வேகத்தில் இரு கால்களும் உயரே குதித்ததென்றால், சற்று மூச்சு வாங்குகையில் ஒரு கால் மாற்றி ஒரு கால் என விடாது இருவரும் ஜெயிக்கப் போராடிக் கொண்டிருக்க நேரம்தான் ஓடியது.
‘என்னடா இது போரடிக்கிற மாதிரிப் போகுது. பேசாம நாம ஸ்கிப்பிங் போடுறதை நிறுத்திருவோம். அவளாவது ஜெயிக்கட்டும்’ என்று கடைசி ஒரு முறை சுற்றிக் கயிற்றைக் கையிலிருந்து ஸ்லிப்பாவது போல் விட…
“ஹேய் சூர்யா!” என்ற பாராட்டுக் கூச்சல்கள் அவளைச் சுற்றிலும். அப்பொழுதுதான் புரிந்தது, தான் விட நினைக்கும்போதே வினோ அவுட்டாகியிருப்பது.
‘அடப் பார்றா! நாம வேண்டாம் நினைச்சா அதுவே நம்மகிட்ட வருது. விசித்திரமானதுதான் போல நம் வாழ்க்கையில் நடப்பவையும்.’ மனதோரம் புன்னகைத்துக் கொண்டாள்.