6
“அக்கா சூப்பர். நீ எங்க விட்டுருவியோன்னு பயந்துட்டு இருந்தேன் தெரியுமா? சரியா அவங்க ஸ்லிப்பாகி நிற்கிறாங்க. நீ கயிறை விடுற. ஷப்பா! நொடிக் கணக்குதான் வித்தியாசம். ஆனா, ரெண்டு பேரும் கயிறை ஒரே டைம் விட்ட மாதிரிதான் தெரிஞ்சது. யாரோட கயிறு முதல்ல விழுதுன்னு பார்த்தா வினோ அக்காவோடது. செம ஷாட் தெரியுமா?” தம்பியின் பாராட்டில் மென்மையாகப் புன்னகைக்க, “இந்த கப் நல்லாயிருக்குக்கா” என்று தன் கையிலுள்ள அக்காவின் பரிசை ஆவலுடன் தடவிப்பார்த்தான்.
“நீதானடா ஜெயிக்கணும் சொன்ன. நீயே வச்சிக்கோ” என்றவளுக்குள் ‘நானாதான் விட்டேன்னு தெரிஞ்சது காரித்துப்பிருவான். அப்படியே மெய்ன்டெய்ன் பண்ணிருவோம்’ என்ற எண்ணமே.
செல்லும் அவர்கள் இருவரையுமே பார்த்திருந்த விக்னேஷ் சற்று தூரம் அவர்களைப் பின் தொடர உடன் வந்த நண்பனிடம், “என்னடா சதீஷ் பார்க்கவே மாட்டேன்றா? ஒருத்தன் பின்னாடி வர்ற ஃபீல் கூடவா வராது.”
“எனக்கென்ன தெரியும். சில பசங்க அவளோட வீட்டுக்கு முன்ன உட்கார்ந்து அரட்டை அடிக்கிற மாதிரி அவளைத்தான் சைட்டடிப்பானுங்களாம். யாரோ என்னவோ பண்றாங்கன்னு தன் வேலையை மட்டும் பார்ப்பாளாம்.”
“ம்… குட்” என்றவனுக்கு எங்கே தெரியும்.. அவளுக்கு ஆண்கள் மேல் எந்த அபிப்ராயமும் இல்லையென்று. ஒரு சாதாரண மனநிலையில் வளர்ந்திருந்தால் வயதுக்குண்டான ஆர்வம், ஆசை இருந்திருக்குமோ என்னவோ! அதிலும் அவள் அப்பா மாதிரி ஆணுடன் வாழ்வதால், மற்றவர்களை என்ன மாதிரி எடை போடுகிறாள் என்பது அவளுக்கேப் புரியாது.
வீட்டிற்குச் சென்றதும் அவன் அப்பாவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டான் சதீஷ்.
“என்னப்பா விக்னேஷ் இவன் சொல்றது உண்மையா?”
[the_ad id=”6605″]
“ஆமா அங்கிள். எனக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கு. வீட்ல அப்பா அம்மா நான் சொன்னா சரி சொல்லிருவாங்க. நீங்க கொஞ்சம் கேட்டுச் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்.”
சில நிமிட யோசனைக்குப் பின், “சரிப்பா. கோவில் கொடை முடியுறதுக்குள்ள பூவரசிகிட்டப் பேசிட்டு சொல்றேன். அவள் சம்மதிச்சா உங்க அப்பா அம்மாவை வரச்சொல்லலாம்.”
“தேங்க்யூ அங்கிள்” என்று சந்தோஷத்துடன் விக்னேஷ் செல்ல…
“பையன் எப்படிடா?” என்று மகனிடம் இன்னுமே ஆழமாக விசாரித்துக் கொண்டார் பிள்ளைக்குத் தகப்பனாய்.
“அம்மா ப்ளீஸ்மா. ஐம்பது ரூபாய் தாங்கம்மா. அந்த கெலடஸ்கோப் வாங்கிக்கிறேன்.”
“ஆமாம்மா வாங்கித்தாங்க” என்று பரத்தும் அக்காவுடன் நிற்க…
“ஒண்ணு வாங்கிக் கொடுத்துட்டு ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டு உருளவா? அதெல்லாம் வேண்டாம்” என்றார் பிள்ளைகளைத் தெரிந்த தாயாய்.
“நானும் தம்பியும் சேர்த்தே யூஸ் பண்ணிக்கிறோம்மா. மீறி அடம்பிடிச்சான்னா அவனுக்கேக் கொடுத்திருறேன்மா. டேய் தம்பி சொல்லுடா” என்று தம்பியைத் தூண்டிவிட்டாள்.
“ஆமாம்மா. நாங்க சண்டை போட்டுக்கமாட்டோம். அக்கா கேட்டா நான் குடுத்திருறேன்” என்றான் வேகமாக.
“அப்ப சரி அண்ணன் வரட்டும். காசு வாங்கித் தர்றேன்” என்றதும் இருவரும் சந்தோஷமாகத் தலையாட்டிச் சென்றார்கள்.
அந்தச் சின்ன சந்தினுள் தனியாக வந்து கொண்டிருந்தவளை வழிமறித்தான் அவன்.
‘கடவுளே! இவனா! சே இது மாதிரி நடக்கக்கூடாதுன்னுதான் இந்தப் பாதையில் வர்றதேயில்ல. இன்னைக்கு சிக்கிட்டேனா.’ மனதில் எழுந்த வெறுப்பை முகத்தில் காட்டாது அவனையும் பார்க்காததுபோல் நகர்ந்தாள்.
அவளை வழிமறித்து, “உன்னைப் பார்த்துதான் பின்னால் வந்தேன். நீ பார்க்காத மாதிரிப்போற?”
“வழி விடுங்க. யாராவது பார்த்தா தப்பாகிப்போகும்.”
“ப்ச்… இப்பல்லாம் நான் கூப்பிட்டா வரமாட்டேன்ற? இந்தா இதைப்பிடி” என்று இருபது ரூபாய் நோட்டை அவள் கைகளில் வலுக்கட்டாயமாகத் திணிக்க… “வேண்டாம்” என மறுத்தவள் கையில், “அட வச்சிக்க” என்று திணித்து அவளை உரசிச் செல்ல… தேகத்தில் தீப்பிடித்த உணர்வு அவளுள். ‘இதற்கு என்ன அர்த்தம்?’ என்பதாய் அந்த ரூபாய் நோட்டை வெறித்துப் பார்த்தாள்.
அதே நேரம் அவள் நின்றிருந்த வீட்டின் பின்புற ஜன்னலிலிருந்த ஒரு பெண்ணும் பார்த்து, வயசுப்பெண் தவறாகப் போய்விடக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் பூவரசியிடம் சொல்லிவிட்டாள். விளைவு!
இது எதுவுமறியாமல் கையிலுள்ள பணம் மனதைப்போல் கனக்க, வீட்டிற்கு வரும் வழியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் கொடுத்து, எதாவது வாங்கிச் சாப்பிடச் சொல்லி அவர்கள் விளையாடுவதைப் பார்ப்பதுபோல் சிறிது நேரம் அமர்ந்தவள், தன்னை ஆசுவாசப்படுத்தி நடக்க ஆரம்பிக்கையில் பலவித யோசனைகள்.
‘எனக்குக் கல்யாணம் ஆனால் கூட இந்தத் தொல்லைகள் தொடருமோ? என் கணவனிடம் யாராவது உன் பொண்டாட்டி தப்பானவள். அவளை நானே பார்த்…’ தொண்டையில் எதோ அடைக்க, ‘அப்படிச் சொன்னா என் வாழ்க்கை என்னாகிறது? நான் கன்னிப் பெண்தான்னு சொன்னா என்னை நம்புவாங்களா? படங்கள்ல காண்பிக்கிற மாதிரி சந்தேகப்பட்டா? இல்ல வீட்டைவிட்டே விரட்டிட்டா? இல்ல. அப்படி விரட்டுறதுக்கு முன்ன நான் அவனை விட்டு விலகிருவேன். ஆமா அப்படி ஒரு சூழ்நிலை அமைந்தால் அந்த வாழ்க்கையை என்னால வாழ முடியாது.’
‘முருகா காப்பாத்து. அப்படி எதுவும் நடக்கக்கூடாது. நான் என் கணவனுக்கு உண்மையுள்ளவளா இருப்பேன். சின்ன வயசுல நடந்ததை வச்சி என்னைத் தண்டிச்சிராத. எனக்குன்னு அன்பான கணவன், குழந்தைகள்னு சந்தோஷமான ஒரு வாழ்க்கை போதும். ரொம்ப வசதியா வாழணும்னு கிடையாது. ஆனா, நிம்மதியா வாழணும். அதுக்கு நீதான் துணை புரியணும்.’ மனதினுள் தன் எதிர்காலத்தைப் பற்றிய வேண்டுதலுடன் வந்தவளை, நிகழ்காலம் அடித்துத் தூக்கிச் சுருட்டிப்போட்டது.
“அவனுக்கும் உனக்கும் எத்தனை நாள் பழக்கம்?”
வீட்டினுள் நுழைந்ததும் கேட்ட தாயின் திடீர்க் கேள்வியில், “யா..யார்மா?” என்று திணற…
“ஓ… அப்ப அந்த முத்துகுமார் பயலையும் தாண்டி இன்னும் ஆள் இருக்காங்களா?” என கோபமாகக் கேட்க…
[the_ad id=”6605″]
“அம்மாஆஆ” என்ற அலறல் அவளிடமென்றால்… “எல்லாத்தையும் கெடுத்துட்டியேடி. அந்த காளியம்மா வந்து சொன்னதோடில்லாம, உன் பொண்ணை பத்திரமா பார்த்துக்கோ அக்கான்னு அறிவுரை சொல்லிட்டுப் போறா. குனிஞ்ச தலை நிமிராத பொண்ணுன்னு எல்லார்கிட்டேயும் பெருமையா சொல்லிட்டிருந்தேன். ஆனா, நீ… அப்பனுக்குத் தப்பாமல் பிறந்திருக்கல்ல. அந்தாள்தான் பொண்ணுங்க பின்னாடி போறார்னா, நீயும் எப்படி? இதுக்கா பொம்பளைப்புள்ள வேணும்னு தவமா தவமிருந்தேன்.” கரைகட்டிய கண்ணீர் விழியிலிருந்து கொட்ட…
“அம்மா அப்படில்லாம் இல்லமா.”
“இல்லையா? ஒண்ணும் இல்லாததையா மெனக்கெட்டு அவள் வந்து சொல்லிட்டுப் போறா? பொய் பேசுற நீ” என்று அருகிலிருந்த கம்பை எடுத்து விளாசித்தள்ள… கண்களில் கண்ணீருடன் தான் சிறு வயதிலிருந்து செய்த தவறுக்குத் தண்டனையாக எண்ணி அமைதியாக வாங்கிக்கொண்டாள். ‘சிறு வயதிலேயே இதைச் செய்திருந்தால் தான் இப்படி இருந்திருக்க மாட்டோமோ?’ மனம் கேள்வி கேட்கவும் மறக்கவில்லை.
“கட்டினவன் சரியாயிருந்தா இப்படிப்பட்ட அசிங்கத்தையெல்லாம் கேட்டிருப்பேனா? கட்டினதுதான் சரியில்லன்னா… பெத்தது… மாரித்தாயே! இத்தனை வருஷம் அரும்பாடுபட்டு வளர்த்தது இதுக்காகத்தானா? இதைப் பார்க்கவா என்னை உயிரோட வச்சிருக்க? தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலைன்னு சொல்வாங்களே? இங்க தகப்பனைப் போலல்ல இருக்கு. கடைசிவரை எனக்குக் கண்ணீர்தான் சொந்தம் போல.”
“மூத்தவன் பணம் கொடுத்தாப் போதும்னு வீட்டோட ஒட்டுறதில்ல. ரெண்டாவது இருக்கிறது கெட்ட பழக்கத்தை எல்லாம் கத்துவச்சிட்டு மானத்தை வாங்குது. நீ… இப்பவே ஆம்பளை தேடுற? இப்பதானா? இல்லை…”
‘அம்மாஆஆ…’ என்ற அலறல்கள் யாவும் தொண்டைக்குழியிலேயே நிற்க, கண்களில் கண்ணீர் வழிய உதட்டைக் கடித்து அழுகையை அடக்கி நின்றிருந்தாள்.
மகளின் அலறல் அவரின் காதில் விழவில்லை. பூவரசியின் மனம் பெண்ணைப் பற்றிக் கேட்டதிலிருந்து பேதலித்தாற்போல்தான் இருக்கிறது. தன் பெண்ணா இந்தத் தவறு செய்தாள் என்பதை நம்பமுடியவில்லை அவரால். வார்த்தைகள் எதுவும் அவர் தேர்ந்தெடுத்துப் பேசவில்லை. ஆனால், கொட்டும் வார்த்தைகளை அவரால் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை.
‘அப்பாவோட கம்பேர் பண்ற அளவுக்கு மோசமானவள் இல்லம்மா.’ சொல்லத் துடித்த நாவை அடக்கி, அழுது அரற்றிக் கொண்டிருக்கும் தாயைப் பார்க்க அது இன்னும் வேதனையே சூர்யாவுக்கு. மகனாய் இருந்து தாங்க நினைத்தவளாயிற்றே!
“ஊர்லயே பொறுக்கின்னு பெயரெடுத்தவன் அந்த முத்துகுமார். போயும் போயும் அவனைப்போய்… என்ன காதலா?” என்றவர் குரலில் இகழ்ச்சியே.
“ஐயோ! இல்லம்மா” என்றாள் வேகமாக.
‘நான் உன்னை நம்பமாட்டேன்’ என்பதாய் பூவரசியின் பார்வையிருக்க…
“நிஜமாவே அப்படிலாம் எதுவும் கிடையாதும்மா. என்னை நம்புங்க” என்று கதறி அழுதாள்.
மகளின் அழுகை தாக்கியபோதும், ‘தன் பெண்ணா இப்படி?’ என்ற மன அழுத்தம் வர வேகமாக வெளியே சென்றுவிட்டார்.
அன்று முழுவதும் மகளிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. மறுநாள் தங்களின் அச்சாபீஸ்கு ரோடு வழி செல்லாமல் தெரு வழி செல்கையில்… அங்கு சில பெண்கள் சுற்றியிருந்தார்கள்.
எதையும் கண்டுகொள்ள மனமில்லாது சென்றவரை… “பூவரசிக்கா செட்டியார் வளையல் கொண்டு வந்திருக்கார். டிசைன்லாம் புதுசா இருக்கு. சூர்யாவுக்கு வாங்கிக்கொடுங்க” என்று அங்கிருந்த பெண் அழைக்க…
“ஆமா. இப்ப வளையல் கேப்பா. அப்புறம் பிடிச்ச புருஷன் கேட்பா. யாரு வாங்கித் தர்றது?” இடம் அறியாது தன் ஆற்றாமையைக் கொட்டினார்.
சூர்யாவிற்கோ நெருப்பின் மேல் நிற்பது போல் உணர்வு எழ சட்டென்று கண்களில் கண்ணீர்.
“என்னக்கா? பொண்ணைப் பக்கத்துல வச்சிட்டு என்னப் பேச்சுப் பேசுறீங்க? பாருங்க அழுறா.”
“அழுதா மட்டும் கிடைச்சிருமா மணி?”
“நீங்க ஏதோ குழப்பத்துல இருக்கீங்க. வளையல் இன்னொரு நாள் பார்த்துக்கலாம். சூர்யா அம்மாவை கூட்டிட்டுப் போ” என்றாள் அப்பெண்.
“ம்மா… வாங்கம்மா. உங்களை மீறி எதுவும் எப்பவும் செய்யமாட்டேன்மா. அதுக்காக மத்தவங்க முன்னாடி… ப்ளீஸ்மா” என்று தாய்க்கு மட்டும் கேட்குமாறு கெஞ்சி கைபிடித்து இழுத்துச் சென்றாள்.
“நிஜமாத்தான் சொல்றியா? இல்ல என்னை ஏமாத்த நடிக்கிறியா?”
“சத்தியமாம்மா. நீங்க சொல்றதை மட்டும்தான் செய்வேன்” என்றவள் குரலில் உறுதியிருந்தது.
“அப்ப அவன்?”
“அவன் இவன்னு எவனும் கிடையாதுமா. சில விஷயங்கள் சொல்லிப் புரியவைக்க முடியாது. யார் யார் எப்படின்னு எனக்கும் தெரியும்மா. உங்க இஷ்டப்படிதான் எப்பவும் நடப்பேன்.”
மனதின் ஓரம் சிறு நிம்மதி எழுந்தபோதும் அதை மகளிடம் காட்டாது, “நானும் பார்க்கத்தானே போறேன்” என்று நடக்க… இன்னும் தன்னை நம்பாது செல்லும் தாயை வேதனையுடன் பார்த்தாள் சூர்யோதயா.
“பூவரசி கொஞ்சம் நில்லுமா?” எனக்கேட்ட ஆணின் குரலில் திரும்பியவர், “வாங்கண்ணா. நல்லாயிருக்கீங்களா?” எனக்கேட்க…
“நல்லாயிருக்கேன்மா. நீ எப்படியிருக்க?”
“நல்லாயிருக்கேன்ணா.”
“எங்க அச்சாபீஸ் போறியாமா? உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே?”
“என்கிட்டயா? என்னண்ணா பேசணும்?”
“பொண்ணுக்குக் கல்யாணத்துக்குப் பார்க்குறியாமா?”
[the_ad id=”6605″]
அவர் என்ன பேச வருகிறார் என புரிந்ததும், “நீ அச்சாபீஸ் போ. நான் பேசிட்டு வர்றேன்.” மகளை அனுப்பி அவரிடம் திரும்பிய பூவரசி, “என் குடும்ப நிலை உங்களுக்குத் தெரியாதாண்ணா? நகை போட்டுக் கட்டிக்குடுக்கிற நிலையில் நாங்க இல்லையே. நகை போடாமல் கட்டிட்டுப் போக யார்ணா இப்ப தயாராயிருக்கா? கடவுள் அதுக்குன்னு வழிகாட்டும்போது பார்த்துக்கலாம்ணா” என்றார்.
“என்னமா இப்படிச் சொல்லிட்ட? வழிகாட்ட கடவுள் என்னை அனுப்பினதா நினைச்சிக்க?”
“புரியலண்ணா?”
“புரியுற மாதிரியே சொல்றேன். என் பையன் சதீஷோட நண்பன் நம்ம ஊர்க் கொடையைப் பார்க்க வந்திருந்தான். வந்த இடத்துல நம்ம பாப்பாவைப் பார்த்திருக்கான். பார்த்ததும் பிடிச்சிருக்குன்னு என்கிட்ட வந்து கேட்டான். நான் உன்கிட்ட பேசிட்டு வர்றேன்னு சொல்லியிருக்கேன். நீ என்னமா சொல்ற?”
“அண்ணா அது வந்து…”
“நகைதான்னா… பிரச்சனை இல்லமா. ரொம்ப நல்ல பையன். அவங்க குடும்பத்துல உள்ளவங்களும் நல்லவங்கதான். இவன்தான் மூத்த பையன். இவனுக்குக் கீழ இரண்டும் பையன்கள்தான். நாத்தனார் பிரச்சனை கிடையாது. இன்னும் பூவரசி முகம் தெளியாததைக் கண்டு, என்னமா இன்னும் தயங்குற? நகைப் பிரச்சனையில்லாம வேற எதுவும் இருக்கா?” என்றார்.