“சேச்சே… இல்லண்ணா. நீங்களே சொல்றீங்கன்னும் போது நல்ல குடும்பமாதான் இருக்கும். நான் பெரியவன்கிட்டயும், அவன் அப்பாகிட்டயும் பேசிட்டு சொல்றேன்.”
“சரிமா. பையன் இன்னைக்கு சாயங்காலம் சென்னை கிளம்புறான். உன் பதில் தெரிஞ்சதும்தான் அவங்க குடும்பத்தை வரவழைக்க முடியும். அதுக்கு முன்ன பையனைப் பார்க்கணும்னா சொல்லு?”
“இல்லண்ணா. எடுத்தோம் கவிழ்த்தோம்ன்ற வேலையா இது. நான் வீட்ல பேசிட்டுச் சொல்றேன்ணா. இப்ப கிளம்புறேன்” என்று பூவரசி செல்ல… அவரின் சம்மதமே பெரிதென்பதாய் சதீஷின் அப்பாவும் வீட்டை நோக்கி நடந்தார்.
மாப்பிள்ளை பார்த்தது பற்றி வீட்டில் பேச, அனைவரும் முடியாதென்று மறுக்க… ஏற்கனவே மகளைப் பற்றிய விஷயம் உறுத்தலாக இருப்பதால், அதை சரி செய்யவாவது இந்தத் திருமணம் நடந்தாக வேண்டிய கட்டாயத்திலிருந்தார் பூவரசி. தானாக வந்த சம்பந்தம் என்பதால், தன் பெண் நன்றாக இருப்பாள் என்ற நம்பிக்கை எழ பிடிவாதமாய் நின்று தகப்பனையும் மகனையும் சம்மதிக்க வைத்து, இரண்டு நாட்களில் தங்கள் முடிவைச் சொல்லியிருந்தார்கள்.
“அடுத்த நாலாவது நாள் நல்லாயிருக்குதாம்மா. அதுக்குள்ள ஜாதகம் பார்த்துட்டா அன்னைக்கே நிச்சயம் பண்ணிரலாம் சொல்றாங்க. பாப்பா ஜாதகம் இருந்தா என்கிட்ட குடுமா. அவங்க சார்பா நான் பார்க்கிறேன். இல்லன்னா பெயர் ராசி பார்த்துக்கலாம். உனக்கு எதாவது ஆட்சேபணை இருக்காமா?” என்று பையன் வீடு சார்பாக சதீஷின் அப்பா பேசினார்.
“அப்படிலாம் இல்லண்ணா. நிச்சயம்னா கொஞ்சம் செலவாகும்ல. அதான் எப்படி செய்யலாம்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.”
“ஹா..ஹா அப்பக் கல்யாணச் சாப்பாடு ரெடின்னு சொல்லு. சரி உன் புருஷன் என்ன சொல்றார்?”
[the_ad id=”6605″]
“அவர் சொல்ல என்னயிருக்கு அண்ணா. அவருக்கு இஷ்டமில்ல. வயசுப்பொண்ணு இருக்குன்ற எண்ணமே இல்லாம அலையுற மனுஷனை என்னன்னு சொல்றது? அவரை எதிர்பார்த்தா என் பிள்ளைங்க காலத்துக்கும் அப்படியேதான் இருக்கணும். அதான் பிள்ளைங்களாவது நல்லாயிருக்கட்டுமேன்னு துணிஞ்சி முடிவெடுத்துட்டேன். மச்சினனுக்கும் நாத்தனாருக்கும் தனியா கல்யாணம் முடிச்சி வச்ச என்னால் என் பிள்ளைங்களுக்குப் பார்க்கத் தெரியாதா?”
“உன் குணத்துக்கு எல்லாமே நல்லபடியா நடக்கும். நீ கவலைப்படாம கல்யாண வேலையை ஆரம்பி” என்றார்.
“சரிங்கண்ணா” என்று சந்தோஷமாய்க் கிளம்பி தோழிக்கும் லெட்டர் போட்டு வரச்சொல்லி, நெருங்கின சொந்தங்களுக்கும் போன் மூலம் தகவல் அனுப்பி, பணத்தைப் பற்றிய பயமிருந்தாலும் சந்தோஷமாகவே வளைய வந்தார் பூவரசி.
தர்மராஜன் ஒட்டாத தன்மையுடன் வெட்டி கௌரவமும் பேசி நேரத்தை ஓட்ட… ராமனிற்குதான் சற்று பாரம் ஏறியது. ‘சமாளிக்க முடியுமா?’ என்ற கேள்வி போய், ‘சமாளித்துதானே ஆகவேண்டும்’ என்ற திடம் வந்திருந்தது. இதோ எல்லா ஏற்பாடும் ஆகிற்று.
மாப்பிள்ளை வீட்டினர் காரில் வந்திறங்க, மாப்பிள்ளை யாரென்று பார்த்த பெண் வீட்டாருக்கோ சற்று அதிர்வுதான்.
விக்னேஷ்! ஐந்தரை அடி உயரத்தில் மாநிறத்தில் சற்று குண்டாக இருந்தான். அவனின் உடல் பருமனே அவனின் உயரத்தைக் குறைத்துக் காட்டியதென்றால் மிகையில்லை.
‘முன்னரே பையனைப் பார்த்திருக்கலாமோ?’ என பூவரசி நினைத்தாலும், விக்னேஷிடம் பேசிய பின்பு அவனின் புன்னகை முகமும், அனுசரித்துப்போகும் குணமும் பிடித்துப்போக… வாழ்க்கைக்கு அழகு முக்கியமல்ல. அனுசரணையும் சம்பாத்தியமும்தான் முக்கியம் என்று விக்னேஷை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டார்.
[the_ad id=”6605″]
ஜன்னல் வழி மாப்பிள்ளையைப் பார்த்த சூர்யாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வீட்டில் பார்த்த பையன். முகலட்சணம் இருக்கிறதே அதுவே போதும் என்ற எண்ணம் அவளுக்கு. அமைதியாக அத்தனை சடங்கிலும் கலந்துகொண்டாள்.
தன்னை ஆர்வமாகப் பார்க்கும் மாப்பிள்ளையின் பார்வைதனில் துளியூண்டு வெட்கம் வரவில்லை சூர்யாவிற்கு. ஏனென்ற ஆராய்ச்சியில் நுழைவதற்குள், நிச்சய மாலையை விக்னேஷ் அவள் கழுத்திலிட, பதிலுக்கு அவள் கழுத்திலிருந்த மாலையை அவனுக்குப் போடச்சொல்லி பெரியவர்கள் சொன்னதும் அவன் மேல் உரசாமல் சற்று கவனமாகவே போட்டாள்.
சூர்யா ஐந்தேகால் அடி உயரம், விக்னேஷ் குண்டாக இருப்பதால் கிட்டத்தட்ட இருவருக்குமிடையே இரண்டு இஞ்ச் அளவே வித்தியாசமிருந்தது.
உள்ளுர்வாசிகள் சிலர், “கிளிமாதிரி பொண்ணுக்கு இந்தப் பையனா? நகை இல்லாமல் கட்டுறதால பூவரசி பொண்ணுக்குப் பொருத்தமா பார்க்கலையோ?” சிறு சிறு சலசலப்புகள் கூட்டத்திற்குள். மாப்பிள்ளை வீட்டினரோ பெண்ணின் அழகும் அமைதியும் பிடித்துப்போய் சலசலப்புகளைக் கண்டுகொள்ளாது இருந்தனர்.
தனியாக நின்றிருந்த நேரத்தில், “எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா சூர்யா?” என்றான் ஆர்வமாக.
“தெரியலை?” என மெல்லிய குரலில் சொல்ல…
“தெரியலையா?” மனம் சற்று வாடினாலும் தன் வழக்கமான புன்னகையைக் கொண்டு, “இனிமேல் தெரிஞ்சிக்க” என்றான்.
‘ம்…’ என்ற தலையாட்டலே வர… சந்தோஷத்தில் அவள் தோளில் கைபோடவும் அவள் விலக, மறுபடியும் அவன் உரிமையுடன் கைபோட… யாருக்கு வந்த விருந்தோ என அப்படியே நின்றுவிட்டாள். வெட்கம், நாணம் என்ற எந்த உணர்வுகளும் அவளுள் எழவில்லை. உடன் பயிலும் பெண்கள் தோளில் கை போட்டால் எப்படியோ, அப்படியொரு உணர்வுதான் அவளிடம்.
முதல்முறையாக அவளைத் தொடுவதால் அவளுள் எழும் வெட்கம் எதிர்பார்த்த விக்னேஷிற்கு ஏமாற்றமே! அவனுக்குத் தெரியுமா? அவளைப் பொறுத்தவரை ஆணின் தொடுகை என்பது மரத்துப்போன ஒன்றென்பது.
‘கணவனால் அவ்வுணர்வுகள் எழுமா? இல்லை இதுதான் காலத்திற்குமா?’ சூர்யாவுடன் நாமும் காத்திருப்போம்.
“சூர்யா!”
“சொல்லுங்க?”
“நீ நார்மலாதான இருக்க?”
“ஏன் கேட்குறீங்க? நான் எப்பவும் நார்மல்தான்” என்று புன்னகைத்தாள்.
அப்புன்னகை ஒன்றே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. ‘உரிமைப்பட்டவன் நான் தொட்டதால் அவள் அதைப் பெரியதாக எடுத்துக்கவில்லை போல. நாமதான் அவளுக்குப் பிடிக்கலையோ யோசிக்கிறோம்.’ புலம்பிய தன் மனதைத் தேற்றி, “நீ ரொம்ப அழகாயிருக்க” என்றான்.
“நன்றி” என்று அதற்கும் புன்னகைக்க… சற்று தடுமாறித்தான் போனான் அவள் அழகினில்.
“என்னாச்சி அப்படிப் பார்க்கறீங்க?”
“என்னென்னவோ ஆகுது சூர்யா.” அவள் புரியா பார்வை பார்க்க… ‘பார்த்தே கொல்றதுன்றது இதுதானா? உடனே கல்யாணத்தை வச்சி முதல் நாளே…’ கற்பனைகள் தறிகெட்டோட… தன் முன் வளை ஓசையுடன் முன்பின் ஆடிய கைதனில் நிஜம் வந்து கண்ணில் மின்னலடிக்க, “உன்னை ஒரு கிஸ் பண்ணிக்கவா?” என்றான்.
சற்று பயந்து பின்னே நகர்ந்தபடி, “இ..இல்ல த..தப்பு. க..கல்யாணத்துக்குப் பிறகுதான் எ..எல்லாம்” என்றாள் திணறியபடி.
“முன்னாடியும் பண்ணலாம் சூர்யா. இப்ப நீ எனக்குப் பாதி பொண்டாட்டி. உரிமை இருக்கிறதால கேட்கிறேன்.”
“இல்ல முடியாது” என்று மறுக்க…
“லவர்ஸ்லாம் கல்யாணத்துக்கு முன்ன கிஸ் பண்ணி ஹக் பண்ணிப்பாங்க.”
“ஹக்னா என்ன?” என்றாள் அந்த தமிழ்வழிக்கல்வி மாணவி.
[the_ad id=”6605″]
“இது தெரியாதா? சுத்தம்!” என மானசீகமாக தலையில் கைவைத்து, ‘டேய் விக்னேஷ் இவளுக்கு ஏபிசிடி கொல்லிக் கொடுக்கவே வருஷம் போயிரும்போல. இதுல மத்ததெல்லாம்…’
“ஹான்! அப்புறம்… லவர்ஸ்தான கிஸ் பண்ணிக்கலாம். நாம கல்யாணம்தான பண்ணிக்கப் போறோம்?” தன் அபிப்ராயத்தைச் சொல்ல…
சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்த விக்னேஷ், “ஹக்னா கட்டிப்பிடிக்கிறது” என்றவன் மாலையுடன் அவளை அணைத்து, “லவர்ஸ்தான்னு இல்ல நிச்சயமானவங்களும் கிஸ் பண்ணிக்கலாம்” என்று கன்னத்தில் முத்தமிட்டு விலக…
அவளுள் ஏதேதோ வேண்டாத நினைவு எழ அதை அடக்கி, “ஐயோ எச்சில்” என்று கன்னம் துடைத்து அவனைக் கேவலமாய் ஒரு பார்வை பார்க்க…
‘என்ன லுக்டா இது? முத்தம் எச்சில்ல எப்ப சேர்ந்தது? அடிப்பாவி! இதுக்கே இப்படினா… அதுக்கு ஆப்படிச்சிராதடி ஆத்தா!’ மனம் புலம்பித் தள்ளியது.
அடுத்தடுத்து ஆட்கள் வர பந்தி முடிந்து மாப்பிள்ளை வீட்டினர் அனைவரும் விடைபெற்றுச் செல்கையில், ‘போன் பண்றேன்’ என்று கைவைத்துச் சொல்லி அவள் தலையசைப்பை மட்டுமே வாங்கிச் சென்றான்.
மனதிற்குள் ஏதோ ஒரு ஒட்டுதலில்லா எண்ணம் எழ, சேலையிலிருந்து நைட்டிக்கு மாறி படுக்கப் போகும்போது ஹாலில் டிவி ஓடிக்கொண்டிருந்தது. அந்த சேனலில் பெண் பார்க்கும் படலம் நடக்க… தானும் தன் தம்பியும் படுக்கும் அறையிலிருந்து அப்படத்தைக் கண்டாள்.
மாப்பிள்ளையின் ஒற்றைப் பார்வைக்கே மணப்பெண் வெட்கம் கொண்டு நாணுவதும், யாருமறியாமல் அவன் விரல் ஸ்பரிசம் படுகையில் முகம் சிவக்க, உதடு துடிக்க அங்கிருந்து ஓடுவதும்பட்டது.
அந்த நிமிடம்தான் விக்னேஷ் தன்னைப் பாதிக்கவில்லை என்பதை முழுதாக உணர்ந்தாள். ‘அவனின் பார்வையிலும் தொடுகையிலும் அணைப்பிலும், ஏன் முத்தத்திலுமே தனக்கு ஏன் வெட்கம் என்ற ஒன்று வரவில்லை? ஏன் முத்துகுமார் மாதிரி ஆள் தொடுகையில் நிற்பதுபோல் நின்றேன். ஏன் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறக்கவில்லை? ஏன் நாணம் கொள்ளவில்லை? ஏன் கணவனாகப் போகிறவனிடம் ஒரு ஈர்ப்பு வரவில்லை? என் உடலில்தான் ஏதேனும் கோளாறா? அல்லது உடல் மரத்துவிட்டதா?’ ஏனென்ற கேள்வியே அதிகமாகியது அவளினுள்.
கணவனுடன் சந்தோஷமானதொரு வாழ்க்கை வாழ நினைத்திருந்தவளுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியே!
விக்னேஷ் என்பவன் அவளின் உள்ளம் கவரவில்லையோ!
‘இல்ல அப்பா அம்மா மாதிரி நான் வாழக்கூடாது. கல்யாணமானா எல்லாம் சரியாகிரும் சொல்வாங்களே, அப்படி மஞ்சள் கயிறு மேஜிக் நடந்து என் கணவனை நான் காதலிக்க ஆரம்பிச்சா எந்தப் பிரச்சனையும் வராது’ என்று விக்னேஷின் உருவத்தைக் கண்முன் கொண்டுவர முடிந்தவரை முயற்சித்தாள்.
அந்தோ பரிதாபம்! அவனின் முகம் சிறு துளிகூட அவள் உள்ளமதில் இடம் பெயரவில்லை. கனவில் தேடித்தேடி அலுத்துப் போனவளுக்கு, அதைத் தாண்டி வளர்த்தியாய், ஒல்லியென்று சொல்ல முடியா ஒரு உருவம் காட்சி தந்தது. அதிர்ந்து வேகமாக எழுந்தவள் வியர்த்துப்போய் அமர… அந்த வளர்ந்தவன் முகமும் அவளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
‘என்னடா சூர்யாவுக்கு வந்த சோதனை? யார் அவன்? என் கனவில் அவன் ஏன் வரவேண்டும்? அவனை யார் என் கனவில் வரச்சொன்னது?’ தன் மீதுள்ள கோபத்தில், ‘முதலில் எதையும் இல்ல எவனையும் யோசிக்காமல் தூங்கு’ என்று தன்னைத்தானே அதட்டி அடுத்த ஐந்து நிமிடத்தில் உறங்கிப்போனாள்.