8
திருமணத்திற்கு வராத நண்பர்கள் கல்யாண ட்ரீட் வைப்பதாக சொல்லவும் மனைவியையும் தன்னுடன் அழைத்தச் சென்றான் விக்னேஷ். அனைவரும் அவனுடன் சினிமாவில் நடிக்கும் ஸ்டண்டர்ஸ். அவ்விடமோ ஒரு மினி பாரையே தாங்கியிருக்கும் போலிருந்தது.
“என்னங்க இந்த இடமே ஒரு மாதிரியிருக்கு. இங்கயா பார்ட்டி?” என்றவள் முகம் அஷ்டகோணலாகப் போனது.
“பயப்படாத சூர்யா. ஃப்ரண்ட்ஸ் அவங்க ஒய்ஃபோடதான் வந்திருக்காங்க. ஆண்கள் மட்டும் இருக்கிற இடம்னா உன்னைக் கூட்டிட்டு வந்திருப்பேனா?”
“நீங்க தண்ணியடிப்பீங்களா?”
“எப்பவாவதுன்னு போன்ல சொல்லியிருக்கேனே சூர்யா.”
“எப்பவாவதா? நான் கவனிக்கலைங்க. இந்தப் பழக்கத்தையெல்லாம் விட்ரலாமே?” மனம் அலைபாய, ‘அப்பொழுதே இவன் பேசியதை ஓழுங்காகக் கேட்டிருந்து கண்டித்திருக்கலாமோ’ என்றுதான் தோன்றியது.
“நீ சொன்ன பிறகு நான் செய்வேனா! இன்னைக்கு மட்டும்பா. ப்ளீஸ்” என்ற கெஞ்சலில் அவள் உள்ளமும் இளக சன்னமான சிரிப்புடன், “சரிங்க. ஆனா, எனக்கு அந்த ஸ்மெல் பிடிக்காது. தண்ணியடிச்சிட்டு என்கிட்ட வரக்கூடாது” என்றாள்.
“சரின்னு சொல்லிட்டு இப்படி மடக்கிட்டியே” என்று நெஞ்சைப் பிடிப்பதைப்போல் நடித்தவனைக் கண்டு இன்னும் சிரிக்க…
“அட அட விக்கி யார்டா இந்தப்பொண்ணு? உன் ஒய்ஃப் கூட்டிட்டுதான வரச்சொன்னோம்” என்று அருகில் வந்த நண்பர்கள் கூட்டத்திடம், சூர்யாவின் மேல் கைபோட்டு, “ஷி இஸ் மை ஒய்ஃப் சூர்யோதயா” என அறிமுகப்படுத்தினான்.
கரண்ட் ஷாக்கடித்தால் எப்படியிருக்குமோ அந்த அதிர்வுதான் அந்த நண்பர்களின் முகத்தில்.
[the_ad id=”6605″]
கைகுவித்து வணக்கம் சொன்னவள் எதிரிலிருந்தவர்களின் பார்வையில் குழம்பி, என்னவென்பதாய்க் கணவனிடம் சைகையால் கேட்க… அவள் கையமர்த்தி, “டேய் ஏன்டா இப்படிப் பார்க்குறீங்க? என் மனைவிக்கான அறிமுகப் பார்ட்டியில யாரோ ஒருத்தியவா கூட்டிட்டு வருவேன். சரியான இடியட்ஸ்டா நீங்க.”
“மச்சி நிஜமாவே உன் ஒய்ஃபா? சே கடவுளுக்குக் கண்ணே இல்லையா?” என்றான் வானம் பார்த்து.
“டேய்!” என்று நண்பர்கள் அவனை அடிக்க அந்த இடம் கலகலப்பானது.
அனைவரும் தன்னையே வித்தியாசமாகப் பார்ப்பது தெரிய, “ஏங்க இப்படிப் பார்க்கிறாங்க? சங்கடமா இருக்கு” என…
“அதுவா! இவனுக்கு இவ்வளவு அழகான பொண்ணான்ற பொறாமைமா.”
“நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன். இந்த ஊர்ல உள்ள பொண்ணுங்க எவ்வளவு அழகா ஸ்டைலா இருக்காங்க. நீங்க என்னைப்போய்…”
‘அடிப்பாவி! மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்துட்டு, அழகாவா இருக்கேன்னு கேட்கிற?’ மனதிற்குள் வியந்து, “நீ அழகுன்னு நான் விளையாட்டுக்குச் சொல்லலை சூர்யா. நிஜமா நீ அழகிதான். பாரு இவனுக்கு இப்படி ஒரு வாழ்வான்னு பொங்குறானுங்க. அவனுங்க போதை தெளிஞ்சி வரட்டும். அவங்க மனைவிமார் அங்க இருக்காங்க பாரு” என்று பெண்களருகில் அழைத்துச் சென்றான்.
“விக்கி… அண்ணா…” என்று பெண்கள் அழைத்து சூர்யாவின் அழகைப் புகழ்ந்ததில் மேலும் கர்வம் விக்னேஷிற்கு.
அவனின் கர்வம் அடிபடும் நேரமும் வருமோ!
“என்ன படிச்சிருக்கீங்க?” என்று சூர்யாவிடம் கேட்ட கேள்விக்கு…
“பி.எஸ்சி” என்றான் விக்னேஷ்.
“என்னங்க நா…”
“ஆமா நீ சொல்றதுக்கு முன்ன நான் சொல்லிட்டேன்” என்று அவளை அடக்கினான்.
பின் அவனின் நண்பர்களும் வர பார்ட்டி முடிந்து கிளம்புகையில்தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள். “குடிச்சிருக்கீங்களா? எனக்குப் பிடிக்காது சொன்னேன்ல.”
“சாரிமா கூல்ட்ரிங்க்ஸ்ல கலந்து குடுத்துட்டானுங்க. தெரிஞ்சே குடிப்பேனா?”
“எ..என் பக்கத்துல வராதீங்க வாமிட் வருது.”
“ஏய்! என்ன உன் அப்பா அண்ணனெல்லாம் குடிச்சதில்லையா?”
“அதனால்தான் எனக்குக் குறையே இல்லாத கணவன் வேணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டேன். ஆனா, நீங்க…”
“இந்த ஒரு டைம் மன்னிச்சிரு. இனிமேல் இந்தத் தப்பு நடக்காமல் பார்த்துக்கறேன். ஐ லவ் யூ செல்லம்” என்று குடியில் அவளை அணைக்க வர…
அவனது மன்னிப்பில் மனம் இளகினாலும், “பொது இடத்துல வச்சி என்ன செய்ய வர்றீங்க? உங்களை ரொம்ப நல்லவர்னு நினைச்சேன்” என்று மென்மையாகக் கடிய…
“ப்ச்… முதல்ல பைக்ல உட்கார்.” அவள் அமர்ந்ததும் வீட்டிற்கு வர எற்கனவே ஹோட்டலில் உணவு முடித்திருந்ததால் ட்ரஸ் மாற்றி மனைவியின் அருகில் படுத்தவனிடமிருந்து விலகிப் படுத்தாள்.
அவளைத் தன்புறமாக இழுத்து, “என்னைப் பார்த்தா நல்லவனா தெரியலையா?” என்றதில் ஆல்கஹால் வாடை வர தன் மூக்கை மூடி முகம் சுளித்தவளைக் கண்டு கோபம் வர, “கல்யாணம் முடிஞ்சி பத்து நாளைக்கும் மேலாகுது. உன் பக்கத்துல வந்தாலே தலை சுத்துதுன்னு சொல்லி விரட்டி விடுற. உனக்கு மதிப்பு கொடுத்து விலகிப்போனப்ப தெரியலையா நான் நல்லவன்னு? வலுக்கட்டாயமா உன்னை எடுத்திருந்தா இப்படிப் பேசயிருக்க மாட்டல்ல?” என்றான் கோபமாக.
“இங்க பாருங்க நீங்க குடிச்சிருக்கீங்க. இப்ப எது சொன்னாலும் அது தப்பாகும். போய்ப் படுத்துத் தூங்குங்க” என்று பொறுமையாக எடுத்துச் சொன்னாள்.
“என்னடி தப்பாகும்? நீ சரியா நடந்தா எல்லாம் சரியாதான் இருக்கும்.”
“என்ன சரியா நடந்துக்கல?”
“நீ எப்ப சரியா நடந்த? கல்யாணத்தன்னைக்கு எவ்வளவு ஆசையா பக்கத்துல வந்தா… சரி அன்னைக்குதான் அப்படின்னா, இன்னைக்கு வரை…”
“அ..அது என் தப்பு கிடையாது. ஏன்னு தெரியலங்க, நைட்டானா உடம்புல ஏதோ மாற்றம் வருது. நானே நினைச்சாலும் இந்த உறவை ஏத்துக்க முடியலை. நிதமும் உங்களோட சுமூகமா வாழணும்னுதான் நினைக்கிறேன். ஆனா…”
அவ்வளவு நேரமிருந்த கோபம் குறைய, ஆல்கஹாலின் வேகமும் குறைந்திருக்க, “உனக்கு ஹெல்த் ப்ராப்ளம் எதாவது இருக்கா சூர்யா?” என்றான் அக்கறையாய்.
“சேச்சே இல்லைங்க. அப்படி இருந்தா சொல்லியிருக்க மாட்டேனா?”
“அப்ப… சந்தேகத்துல கேட்கிறேன்னு தப்பா நினைக்காத. நீ யாரையாவது..?” என இழுத்தான்.
“யாரைவாவதுனா? புரியல தெளிவா சொல்லுங்க?”
“யாரையாவது காதலிச்சியா? அப்படினாதான் இன்னொரு ஆணை ஏத்துக்க முடியாதுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.”
“ஹா..ஹா அப்படின்னு யார் சொன்னது? ஒரு ரகசியம் சொல்லவா?” என்று ஹஸ்கி வாய்சில் சொல்ல…
“ம்… சொல்லு” என்றவன் அவள் சிரிப்பிலும் நெருக்கமான பேச்சிலும் முழு போதையும் தெளிந்து, மங்கையவள் மேல் போதையேற மோகம் சூழ மயங்கி நின்றான்.
[the_ad id=”6605″]
“கல்யாணத்துக்கு முன்ன யாரையும் காதலிக்கக்கூடாதுன்னு இருந்தேன். கல்யாணத்துக்குப் பின்ன கணவனைக் காதலிச்சா வாழ்க்கை நல்லாயிருக்கும்ன்ற எண்ணம் உண்டு எனக்கு.” அவன் கண்களைப் பார்த்து நேருக்கு நேர் சொல்ல… அவனோ முழுதாக மயங்கிப்போய் நின்றான்.
‘அவளே அறியா அவளின் காதல் தெரிந்தால் இருவரின் நிலை?’
“அப்ப நீ எனக்கு மட்டும்தான்.”
“அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு?”
“அப்ப என்னைக் காதலிக்கிற சொல்லு?”
“தெரியலையே!”
“கல்யாணத்துக்கு முன்ன சொன்ன பதிலையே இப்பவும் சொல்ற பார்த்தியா. நீதான சொன்ன கணவனைக் காதலிப்பேன்னு. அப்புறமென்ன பிரச்சனை?”
“ஆமா அப்படிதான் சொன்னேன். காதல்னா! காதலிக்கிறவங்களைப் பார்த்தா… அவங்க தொட்டா… வெட்கம் வரணும்ல. ஆனா நீங்க தொட்டா எனக்கு எந்தவித புது உணர்வும் வர்றதில்லை. ஏன்னு யோசிச்சே நிறையக் குழம்புறேன்” என்று தன் நிலையைச் சொன்னாள்.
அவள் வெளிப்படையாகப் பேசியதே தன்னை விரும்புவதற்கான ஆரம்ப கட்டமாக நினைத்தாலும், “என்ன சொல்ற சூர்யா? எந்த ஃபீலிங்கும் வரலையா? அப்ப நான் உன்னை இம்ப்ரெஸ் பண்ணலையா?” என்றான்.
“அ..அது உங்களை எனக்குப் பிடிக்கும்ங்க. உங்க அன்பான பேச்சு. பழகுற விதம்… என் மனசறிஞ்சி அனுசரணையா இருக்கிறது எல்லாமே பிடிக்கும். ஆனாலும், ஏதோ ஒண்ணு… அதை என்னன்னு சொல்லத் தெரியலைங்க” என்று தலைகுனிந்து அமர…
“சரி விடு. இன்னும் ஒரு வாரம் ஃப்ரீயா இரு. அதுக்கு மீறியும் இப்படியே இருந்தா எதாவது லேடி டாக்டரைப் பார்க்கலாம். உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”
“இல்லைங்க.”
“சரி தூங்கு” என்று படுத்தவனுக்குள் பலவித யோசனைகள். ‘ஒருவேளை காதலிச்சதை மறைக்கிறாளோ? சேச்சே… அப்படின்னா கண்ணைப்பார்த்துப் பேச முடியுமா? ஏதோ ஒண்ணு இருக்கு’ என்பது மட்டும் மூளையில் பதிந்தது.
“சூர்யா உன் அம்மா பேசுறாங்க” என்று சத்தமாகச் சொல்லி, பூவரசியிடம் நலம் விசாரித்து மனைவியிடம் கொடுக்க… “அம்மா எப்படியிருக்கீங்க?” என்ற குரல் சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தது.
“நான் நல்லாயிருக்கேன்மா. நீ எப்படியிருக்க? அங்க உன்னை நல்லா பார்த்துக்கறாங்களா?”
“ரொம்பவே நல்லாயிருக்கேன்மா. எல்லாரும் நல்லா பழகுறாங்க. நல்லா பார்த்துக்கிறாங்க” என்றவள் கண்கள் நன்றியுடன் கணவனைக் காண… அவனோ கண்ணடித்து முத்தத் தூது அனுப்ப… மெல்லிய புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டு, “தேங்க்ஸ்” என்றாள் ஒளியில்லா உதடசைவில்.
‘நீ பேசு’ என்பதாய் சைகையில் கூற… புன்னகை மாறாது தாயிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“சூர்யாமா இசக்கி உன்கிட்ட பேசணுமாம். போனைப் பிடுங்கிட்டிருக்கா.”
“ஹை… இசக்கிம்மா வந்திருக்காங்களா?”
“இல்லமா. நான் உங்க மாமா வீட்டுக்கு வந்திருக்கேன். இப்ப அவளோட போன்ல இருந்துதான் பேசுறேன். இந்தா இசக்கி பேசு” என தோழியிடம் கொடுத்து நகர்ந்தார் பூவரசி.
“வெள்ளச்சி எப்படியிருக்க?”
“நல்லாயிருக்கேன்மா. நீங்க, அழகுப்பா, அண்ணாலாம் எப்படியிருக்கீங்க?”
“எல்லாரும் நல்லாயிருக்கோம்மா. வீட்ல நல்லா பார்த்துக்கறாங்களா?”
“சூப்பரா பார்த்துக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்மா.”
“இதுதான் எங்களுக்கு வேணும். சிட்டி உனக்குப் பழக்கமில்லடா. தனியா எங்கேயும் போயிராத என்ன?”
“சரிம்மா என் இசக்கிம்மா.”
“கிண்டலா பண்ற. நேர்ல பார்க்கும்போது வச்சிக்கிறேன்” என்றார் மிரட்டலாக.
“பொண்ணைக் கட்டிக் குடுத்துட்டு வச்சுக்கிறேன்னு எந்த அம்மாவாவது சொல்வாங்களா?”
“அடிப்பாவி! ஏ புள்ள பூவு… உன் பொண்ணு என்னமா வாய் பேசுறா” என்று தோழியிடம் புகாரளித்து, “உன் சந்தோஷம் இதுலயே தெரியுதுடா. நல்லாயிரு” என்று வாழ்த்த… “ஏ..ஏய்.. பாப்பு…” என்ற இசக்கியின் குரல் மறைந்து, “அம்மா” என்ற குரல் இனிய கானமாய் காதினில் ஒலித்தது. போனை இசக்கியிடமிருந்து பிடுங்கியிருந்தாள் உதய ஹரிணி.
“ஹேய் பாப்பு! பாட்டி வீட்டுக்கு வந்திருக்கீங்களா?” என்றாள் ஆர்வமாக.
“இல்லம்மா. பாட்டி கூடவே வந்தேன்.”
“நல்ல தெளிவுதான் பாப்பு நீ. சாப்பிட்டாச்சா?”
“ம்… சாப்பிட்டுட்டேன். நீங்க?” எனக்கேட்டு, “எப்பம்மா நம்ம வீட்டுக்கு வருவீங்க?” என்றவள் குரலில் ஏக்கமிருந்ததோ!
“அம்மா அங்;க வரக்கூடாதுடா. அன்னைக்கு அம்மா கூட ஒரு பாட்டி இருந்தாங்கள்ல அவங்களோட வந்துட்டேன்.”
“அப்ப வரமாட்டீங்களா? நீங்க என்னோட அம்மாதான? ஏன் அங்க போனீங்க?” என்று குழந்தை அழ ஆரம்பிக்க…
“நான் எப்படிடா ஹரிணிமா அங்க வரமுடியும்? உன்னை அப்பா நல்லா பார்த்துப்பாங்க. எது வேணும்னாலும் அப்பாவைக் கேட்கணும் சரியா?”
[the_ad id=”6605″]
“எனக்கு என் அம்மா நீங்கதான் வேணும்” என்று திரும்பவும் ஆரம்பிக்க… அவளை எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் விழித்தாள் சூர்யா.
பேசும் மனைவியை ஆராய்ச்சியாய் இன்னும் சொல்லப் போனால் சற்று அதிர்ச்சியுடன் யோசனையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான் விக்னேஷ். போன் ஸ்பீக்கரில் கிடந்ததால் குழந்தையின் ‘அம்மா’ என்ற உரிமை அழைப்பில் ஆரம்பித்து, ‘எப்ப வீட்டுக்கு வருவீங்க? என் அம்மா நீங்கள்தான்’ என்ற பேச்சுகள் யாவும் இருவருக்குமான நெருக்கத்தை உறுதிப்படுத்தியது.
ஏதோ பெத்த பிள்ளையை விட்டுப் பிரிந்த தாயின் வருத்தம் சூர்யாவிடம் இருப்பதாக உணர்ந்தான். உணர்ந்தான் என்பதைவிட, அவன் கற்பனை அதற்கு உருவம் கொடுத்தது எனலாம்.
‘இவர்களுக்குள் எதாவது… சேச்சே… இருக்காது. அப்படியிருந்தால் தனக்குக் கேட்குமாறு எப்படிப் பேசுவாள்?’ என்றது அறிவு.
‘ஏன் நடிப்பாக இருக்காது’ என்றது மனது.
‘இல்ல என் சூர்யாவுக்கு நடிக்கத் தெரியாது’ என்றது அறிவு.
‘அந்தக் குழந்தைக்கு அம்மா இல்லையெனில் அப்பா இருக்கிறார்தானே! இவளை ஏன் அம்மா சொல்லணும். இவளும்தான் அதை ஏன் ஒத்துக்கணும்? சூர்யோதயா! உதய ஹரிணி! பெயர்ப் பொருத்தமும் கூட இடிக்கிறதே.’ என்று அழுத்தியது மனது.
மனைவியின் மேல் நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், அவளின் விலகலும், குழந்தையின் அம்மா என்ற உரிமை அழைப்பும் அவனைக் குழப்ப ஆரம்பித்தது.