7
“பூவு உனக்கு போன் வந்திருக்கு” என்று பக்கத்து வீட்டிலிருந்து குரல் வர ஓடிச்சென்று போனை எடுத்து, “போன்ல யாருங்க?” என்றார்.
‘போன்ல யாருங்களா? சுத்தம். அம்மாவைப் போலதான் பொண்ணும் போல.’ சிரித்தபடி தாயிடம் கொடுத்து பேசச் சொல்லி நின்றவன், சூர்யாவை கூப்பிடச் சொல்லி தாய் விமலாவிடம் சொல்ல… மகனின் ஆசை உணர்ந்து பூவரசியிடம் மருமகளிடம் பேச வேண்டுமென்று கேட்டதும், சரியென்று மகளை அழைத்து வந்து பேசச்சொன்னார்.
யாரென்றே தெரியாததால் மாட்டேனென மறுத்தவளிடம் கெஞ்சி கொஞ்சி “பேசிட்டு வா” என்று வெளியே சென்றார்.
“ப்ச் போங்கம்மா” என முனகி, “ஹலோ” என்றாள்.
“நல்லவேளை போன்ல யாருங்கன்னு உன் அம்மா மாதிரி கேட்கல” என்று நிம்மதிப் பெருமூச்சுவிட, அந்த மூச்சை நிறத்தவென்று போனில் கேட்ட ஆண்குரலிடம், “நீங்க யாருங்க?” என்றாள்.
‘சுத்தம். ஆரம்பிச்சிட்டாளா?’ தலையிலடிக்கப் போன கையைத் தாயைக் கண்டு இறக்கி, “என் குரல் உனக்குத் தெரியலையா சூர்யா?” என்றான் விக்னேஷ்.
“ஏன் சார்? போன்ல குரல் மாறுபட்டுக் கேட்கும்னு தெரியாதா?”
‘புள்ள தெளிவாத்தானய்யா இருக்கு’ என சாலமன் பாப்பையா அவனுள் வந்து கௌண்ட் கொடுக்க… “ஹேய்! நான் விக்னேஷ் பேசுறேன். உன்னோட பாதி புருஷன்” என்றான் கேலியாக.
“ஓ… அப்ப மீதி எப்ப வருவான்?” எனத் தீவிரமாகக் கேட்க…
“மீதி என்ன வர்றது, முழுசாவே அடுத்த மாசம் வந்து உன் கழுத்துல தாலி கட்டுவான்” என விளக்கமளித்து, “எதாவது பேசு சூர்யா” என்றான் ஹஸ்கியாக.
“என்ன பேசணும்? எனக்கு எதுவும் தோணலையே?”
அவளின் விட்டேத்தியான பதிலில் கடுப்பாகி நொந்து, “நான் பேசுறேன்” என்றவன், டிகிரி முடித்து அப்பாவின் கார் மெக்கானிக் ஷாப்பைப் பார்த்துக் கொள்வதாகவும், நட்புகளின் உதவியால் சமீபகாலமாக சினிமாவில் சிறு சிறு வேடங்களில் வந்து போவதாகவும், அந்தப் படங்களின் பெயரையும் சொல்ல…
‘இவரை எப்படி சினிமாவுல எடுத்தாங்க?’ கேள்வி மனதினுள் எழுந்தாலும், “சூப்பர்ங்க” என்று சொல்லிவைத்தாள். நன்றி தெரிவித்தவன் தன் நட்பு வட்டம் தொடங்கி பெரிய வட்டம் போட்டு வர, அதற்குள் சூர்யாவிற்குக் கொட்டாவி வர வாய்மூடி அடக்கி சிவனே என்று கேட்டிருந்தாள்.
[the_ad id=”6605″]
எதிரில் ‘ம்..’ என்ற சத்தம் கூட வரவில்லை என்றதும் விக்னேஷ், “சூர்யா! சூர்யா” என்று சத்தமிட்டழைக்க…
“ஹான்! என்னாச்சி?” என்றாள் வேகமாக.
“இல்ல எந்த சத்தமும் இல்லையா? அதான் போன் கட்டாகிருச்சோ நினைச்சேன்.”
“இல்ல. நீங்க பேசுங்க” என்று அவனைப் பேசவிட்டு ம்… கொட்டி கால் மாற்றி கால் நின்றபடி பக்கத்து வீட்டுச் செடிகளை வேடிக்கை பார்த்திருந்தாள்.
“சரி சூர்யா டைமாகிருச்சி. நாளைக்குப் பேசலாம்” என்று போனை வைக்க…
‘நாளைக்குமா? ஹ்ம்… அம்மா’ என்ற சிணுங்கல் அவளிடம். ‘கல்யாணம் பண்ணிக்கப் போறவன்கிட்ட மணிக்கணக்கா பேசினாலும் அதில் ஒரு சுகம் இருக்கும் சொல்வாங்க. ஆனா, விக்னேஷ் கூடப் பேசினா மட்டும் எப்படா வைப்பான்னு இருக்கே. ஏன்?’
‘புருஷனை காதல் செய்யக் கத்துக்கோடி என் அறிவுக்கொழுந்தே!’ என்றது மனம்.
சிறு புன்னகையுடன் வீடு செல்ல, “உன் மாமியார் நல்லா பேசினாங்களா?” என்றதும் சற்று உஷாரானவள், “ஆமாம்மா ரொம்ப்பப நல்ல்லா பேசுறாங்க. என்ன எனக்குதான் கொஞ்சம் போரடிக்குது” என்றாள்.
“மாமியார்ல அப்படித்தான் இருக்கும். இதே மாப்பிள்ளையா இருந்தா அதுக்குள்ள முடிஞ்சிருச்சே தோணும்” என்று யதார்த்தத்தைச் சொல்ல…
‘அந்த மாங்காகிட்டதான் பேசிட்டு வர்றேன்’ என நொந்து சென்றாள்.
பணத்துக்காக ராமன் அலைய, பத்திரிக்கை தங்கள் பிரஸ்ஸிலேயே அடித்ததால் அந்தச் செலவு மிச்சமாக, பயணச் செலவு கொஞ்சம் வைக்க வேண்டியிருந்தது. வீட்டைக் கட்டிப்பார்! கல்யாணத்தைப் பண்ணிப்பார்! என்று சும்மாவா சொன்னார்கள்.
தாயின் அலுப்பில் சூர்யாவிற்கு, ‘இப்படிக் கடன் வாங்கியேணும் திருமணம் செய்வது அவசியமா?’ சற்று கலக்கமாகத்தான் இருந்தது. அதைத் தாயிடமும் கேட்டுவிட்டாள்.
“கொஞ்சம் வாயை மூடிட்டுக் கம்முன்னு இருக்கியா? கல்யாணம் முடியாம கன்னியாஸ்திரியா போகப்போறியா என்ன? உனக்கு முடிச்சால்தான் உன் அண்ணனுக்குப் பார்க்க முடியும். உங்கப்பன் அந்த வடிவோட பொண்ணு கல்யாணத்துக்கு ஓடி ஓடி அலைஞ்சார். பெத்த பொண்ணு கல்யாணத்துக்குப் பத்திரிக்கை வைக்கக்கூடக் காசு குடுத்துக் கூட்டிட்டுப் போகவேண்டியிருக்கு. என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கேட்கல. எல்லாம் என் தலையெழுத்து. நீ என்னடான்னா அபசகுனமா பேசிட்டிருக்க?”
“நீங்க கஷ்டப்படுறீங்களேன்னு…”
“நாங்க கஷ்டப்படுறோம்னா, இல்ல பையனைப் பிடிக்கலையா?”
“அப்படிலாம் இல்லம்மா.”
“உன்னோட சேர்த்துப் பார்த்தா அந்தப் பையன் கம்மிதான். ஆனா, நல்ல பையன். இதுக்கு மேல என்ன வேணும். ஏன் பையனைப் பிடிக்கலையா? நீ வேற யாரையாவது…”
“அம்மா பளீஸ்! எனக்குப் பிடிச்சிருக்கு. இவ்வளவு தூரம் வந்த பிறகு என்ன கேள்விம்மா?”
“அப்ப அமைதியா கல்யாணத்துக்குத் தயாராகு. மத்த எதையும் யோசிக்காத” என்று எழுந்து சென்றார்.
திருமணத்திற்குள் நான்கைந்து முறை போன் செய்துவிட்டான் விக்னேஷ். புடவை எடுத்திருக்கோம். தாலி வாங்கியாச்சி. ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் இன்வைட் பண்ணியிருக்கேன். இப்படி எத்தனையோ உளறல்கள்!
அவளுக்கு அவை உளறல்கள் மட்டுமே. அதைத்தாண்டி அவன் காதலை, ஆசையை உணரவில்லை சூர்யா.
விக்னேஷிற்கோ… எத்தனையோ கனவுகள்! எத்தனையோ எதிர்பார்ப்புகள்! தன் மனைவியை நண்பர்களிடம் காண்பித்து அவர்களின் பொறாமையில் சந்தோஷம் கொள்ள ஆவல். ‘சினிமாவில் உள்ள ஹீரோயினைவிட என் மனைவி சூர்யா அழகுடா’ என்ற கர்வம் அவனிடம்.
ஆம். கண்டதும் மயக்கம் கொண்டது அவள் அழகினிலே! மயங்கிக் கிடப்பதும் அவள் அழகினிலே! அந்த மயக்கம் தெளியும்போது சூர்யோதயாவின் நிலை.
திருமண நாளும் இனிதே விடிய, சூர்யாவின் தத்து அம்மா இசக்கியுடன் ஒரு மூன்றரை வயதுக் குழந்தையும் நின்றிருந்தாள்.
“இசக்கிமா எப்படியிருக்கீங்க?”
[the_ad id=”6605″]
“நல்லாயிருக்கேன்மா.”
“யார் இந்தப் பாப்பா? அண்ணனுக்கு கல்யாணமாகிருச்சா?”
“உனக்கு முடிக்காமல் எப்படி உன் அண்ணனுக்கு முடிப்பேன்னு நினைச்ச?” என்று இசக்கி சொல்ல…
“அதுவும் உனக்குச் சொல்லாம?” என்றபடி அங்கு வந்தான் அவன்.
“ரவிண்ணா? இசக்கிமா… ரவி அண்ணனா இவங்க?” என்று ரவியிடம் திரும்பி, “அடையாளமே தெரியலைண்ணா” என்றாள்.
“ஆமா. நாம மாசம் ஒரு முறை சந்திக்கிறோம் பாரு அடையாளம் தெரியுறதுக்கு. எப்படி இருக்க வெள்ளச்சி?”
“அண்ணா!”
“என்னடா தங்கை?” என்றான் கேலியாக.
“எனக்குக் கல்யாணமாகப் போகுது. இப்பவும் வெள்ளச்சிதானா? யாராவது கேட்டா கேலி பண்ணுவாங்க.”
“யார் கேட்டாலும், கேலி செய்தாலும் நீ என் தங்கை வெள்ளச்சிதான். அதை யாரும் மாத்த முடியாது. உன் புருஷனா இருந்தால் கூட” என்றான் அழுத்தமாய்.
“ம்மா பாருங்கம்மா அண்ணனை” என்று இசக்கியிடம் புகாரளிக்க… சிணுங்கும் மகளைப் பார்த்தபடி வந்த பூவரசி, “நீங்க வந்ததும்தான் இசக்கி சிரிக்கவே செய்றா. இவ்வளவு நேரம் இவள் முகத்தைப் பார்த்திருக்கணுமே.”
“அதான் நாங்க வந்துட்டோம்ல” என…
“ஆமா யார் இந்தக் குட்டிப்பொண்ணு?”
‘சபரி மச்சான் பொண்ணா?’ என சூர்யா கேட்க நினைக்கையில் பூவரசி கேட்டிருந்தார்.
“அவன் வரலையா?”
“நீங்க போயிட்டு வாங்க சொல்லிட்டான்.”
“அப்ப இவளோட அம்மாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?”
“அவள் இப்ப இல்ல பூவு.”
“இசக்கி! அப்படின்னா?”
அதிர்ந்த தோழியின் முகம் பார்த்து, “கொஞ்ச நாள் காத்திருந்து கல்யாணம் செய்திருக்கலாம். என் அண்ணன் பொண்டாட்டி பட்ட அவசரத்தினால எல்லாமே தப்பாப் போச்சி. இப்ப இந்தக் குழந்தை மட்டும் போதும்னு தனியா நிற்கிறான்.”
‘ஏன்? என்னாகிற்று?’ என சூர்யா நினைத்ததை பூவரசி கேட்க…
“நல்ல நாள் அதுவுமா அவளைப்பற்றி எதுக்கு பூவு? முதல்ல கல்யாணம் முடியட்டும். மற்றதை நிதானமா பேசிக்கலாம்” என்று தோழியை வெளியே அழைத்துச் சென்றார்.
சூர்யாவிற்கு சபரியை நினைத்து மனம் கலங்கியது. ‘அந்த மச்சான் ரொம்ப நல்லவங்களாச்சே. அவங்க வாழ்க்கையில் சிக்கலா? எவ்வளவு தன்மையானவங்க. சே… இந்தக் கடவுளுக்குக் கண்ணேயில்லபா. எப்பப்பாரு நல்லவங்களைச் சோதிக்கிறதையேத் தன்னோட முழு வேலையா வச்சிருக்காரு.’
கடவுளைத் திட்டியபடி குழந்தையைக் கண்டவளுக்கு, ‘பாப்பா எவ்வளவு அழகாயிருக்கா. என்ன கொஞ்சம் ஒல்லியா இருக்கிறா. அதுசரி அம்மா இருந்து பார்த்தாலே…’ யோசனையில் இருந்தவளின் மனம், ‘ஐயோ!’ என்றலறியது. ‘தாய் இருக்கும் தன்னையே விட்டு வைக்காத இச்சமூகம், தாயில்லா இக்குழந்தையை! கடவுளே! நான் அனுபவிச்ச எதுவும் இந்தக் குழந்தைக்கு வேண்டாம். குழந்தையை நல்லபடியா வாழ வை!’ கடவுளிடம் வேண்டி குழந்தையிடம் குனிந்தவள், “உன் பெயர் என்ன பாப்பா?” எனக்கேட்க…
“உதய ஹரிணிம்மா” என்றாள்.
“ம்… நல்ல பெயர்தான்.”
“ஆமாம்மா. அப்பாவும் அப்படிதான் சொல்வாங்க” என்றதும் தடுமாற்றம் அவளினுள். ‘அம்மா என்றா அழைத்தாள்? இல்லை. ஆமாம் என்பதை ஆமாம்மா எனக் கேட்டிருக்கும். அப்படித்தான் இருக்கும்’ என்று தன்னையேத் தேற்றி, சில நிமிடம் தன்னருகில் உட்காரவைத்து, குட் டச் பேட் டச் பற்றி மேலோட்டமாக பாடம் எடுத்தாள்.
“அப்பாவும் உங்களைப் போலதான் சொல்வாங்கம்மா” என புன்னகையுடன் சொல்ல…
இப்பொழுது தெளிவாகவே ‘அம்மா’ என்ற வார்த்தை கேட்க… என்ன செய்வதென்று புரியாமல் விழித்தாள் சூர்யா. அவ்வழைப்பு மனதினுள் ஒரு இனம்புரியா தவிப்பை உண்டாக்கியது.
“ஹ..ஹரிணிமா எல்லாரையும் அம்மான்னுதான் சொல்வியா?” எனக்கேட்க…
“அம்மாவை மட்டும்தான் அம்மா சொல்லணும். மத்தவங்களைச் சொன்னா தப்பு” என்று சிரித்தாள்.
‘தன்னை எப்படி?’ புரியாமல் அமர்ந்திருந்தவள், “அம்மா பசிக்குது” என்ற குழந்தையின் குரலில் உருகித்தான் போனாளோ! வேகமாகக் கிச்சன் சென்று இரண்டு இட்லியுடன் சாம்பார் வைத்து எடுத்து வந்து ஊட்டிவிட்டாள்.
குழந்தைகள் என்றால் போதும் சூர்யாவிற்கு. வாசவியின் குழந்தையையும் தன் குழந்தையாய்ப் பார்த்துக் கொள்வதில் இவளை மிஞ்ச ஆள் கிடையாது. அநேக நேரம் தையல் க்ளாஸில் வாசவியின் குழந்தையுடன்தான் சூர்யாவின் நேரம். அதிலும் ஹரிணி தாயில்லாக் குழந்தை என்றதும் தானறியா பாசம் அவள்மேல். அதிலும் அம்மா என்ற வார்த்தை அவளை சிறகில்லாமல் பறக்க வைத்தது. அடைகாக்கும் கோழியாய் குழந்தையை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.
சற்று முன்னரே அங்கு வந்த இசக்கி இருவரையும் பார்த்து பெருமூச்சுவிட்டார். அவருக்கு சூர்யாவை சபரிக்குக் கேட்க ஆசை. ஒரு குழந்தைக்கு அப்பா என்பதாலேயே வாய் திறக்காதிருந்தார். யாரிடமும் என்ன என்றால் என்ன என்பதுடன் நிறுத்தும் குழந்தை அம்மா என்றழைத்துத் தன் பசியைச் சொல்வதென்றால்… அந்நேரம் ஏனோ அம்மா என்றழைக்கச் சொன்ன பெண்ணிடம், அப்படி அழைக்க மாட்டேனென்று ஹரிணி மறுத்தது நினைவு வந்தது. ‘முன்னரே தோழியிடம் பேசியிருக்கலாமோ!’ காலம் கடந்த ஞானோதயம் இசக்கிக்கு.
[the_ad id=”6605″]
‘இல்லை. இது தப்பு. இன்னும் சில மணி நேரங்களில் இன்னொருவன் மனைவியாகப் போகிறவள்’ என்று அந்த நினைப்பை உதறி குழந்தையிடம் சென்றவர் அப்பொழுதுதான் கவனித்தார் சூர்யாவின் கழுத்தை.
“இந்தச் செயின் கழுத்துலதான் போட்டிருக்கியா?”
“எப்பவும் கழட்டக்கூடாதுன்னு சொல்லி நீங்க தந்ததாச்சேம்மா. எந்த சூழ்நிலையிலும் கழட்டமாட்டேன்” என்றாள்.
ஏதோ நினைத்தவராய், “நல்லாயிருமா” என்றார்.
எந்தவிதத் தடையுமில்லாமல் சூர்யோதயாவின் கழுத்தில் தாலிகட்டி தன் மனைவியாக்கிக் கொண்டான் விக்னேஷ். பரவச உணர்வுகள் எதுவுமில்லாமல், எல்லா பெண்ணுக்கும் நடப்பதுதானே என்பதாய் சூர்யோதயா அமர்ந்திருக்க… உலகத்தையே வென்ற சந்தோஷத்தில் விக்னேஷ் அமர்ந்திருந்தான்.
பூவரசி மணமக்களை மனதார வாழ்த்த… இசக்கிக்கும் ரவிக்கும் அதிர்ச்சியாக இருந்தது. “சபரி மச்சானுக்கு சரளா அத்தை அவசரப்பட்ட மாதிரி, வெள்ளச்சி கல்யாணத்துல சித்தி ரொம்ப அவசரப்பட்டுட்டதா தோணுதும்மா” என்ற மகனின் குரலில்…