பேசி முடித்து கணவனிடம் போனைக் கொடுத்து, “ஹரிணி மாதிரி நமக்கும் குழந்தை இருந்தா நல்லாயிருக்கும்லங்க” என்றாள் புன்னகை முகமாக.
அவளின் குழந்தை ஆசையில் கண்கள் மின்ன, “அப்ப குழந்தை ரெடி பண்ணிடலாமா?” எனக்கேட்க…
“எப்படி?” என்றாள் புரியாமல்.
“பகல் நேரம். வீட்டிலும் யாருமில்லா தனிமை. இரவில்தானே பயமெல்லாம். ஏன் பகலில் முயற்சிக்கவில்லை” என்ற எண்ணம் தோன்றிய நொடி, “வா சொல்றேன்” என்று அறைக்குள் சென்று கதவைச் சாத்தி, “எனக்கும் உன்னை மாதிரியே ஒரு குழந்தை வேணும். அதுக்கு…” என்று அவளை நெருங்க, அவள் பின்னே நகர… கட்டியணைத்து முத்தக் குளியல் நடத்தி கட்டிலில் தஞ்சமடைய… அவளின் எதிர்ப்பும் கம்மியானது.
அவனுக்காகவே தன் விருப்பமின்மையைக் கட்டுப்படுத்தி எந்த உணர்வுமில்லாமல் கிடந்தவளை சில நிமிடங்கள் கழித்தே உணர்ந்தான். “என்னடி இது?” புரியாது அப்பாவியாய் விழித்தவளைக் கண்டு கோபம் வர, “சே…” என எழுந்து வெளியே சென்றான்.
“ஏ..ஏங்க” என்ன அழைத்தும் அவன் நிற்காது செல்ல, ‘ஏன் கோபமா போறாங்க? இன்னைக்குதான் நாம எதுவும் தடுக்கலையே. என்ன தப்பு செய்தோம்’ என்று தெரியாமல் தனக்குள்ளேயே கேட்டுக்கொள்ள… வீட்டைவிட்டுச் சென்றவன் இரவு நெடுநேரம் கழித்தே வீடு வந்தான்.
இரவு சாப்பிடக் கேட்க அவனோ ‘சாப்பிட்டாயிற்று’ என்று அறைக்குள் சென்று ஓரம் கட்ட… அருகே படுத்து அவன் எதாவது பேசுவான் என எதிர்பார்த்து தன்புறம் திரும்பவில்லை என்றதும் அவன் முதுகு தொட்டு “கோபமா இருக்கீங்களா?” என்றாள்.
வேகமாக அவள்புறம் திரும்பியவனின் கண்கள் சிவப்பாய் இருப்பதைக் கண்டு, “தண்ணியடிச்சீங்களா?” என்றாள் கோபமுடன்.
“ஆமா அடிச்சேன். இப்ப அதுக்கென்ன?”
“எனக்குப் பிடிக்காது சொன்னேனே” என்றாள் ஆதங்கமாய்.
[the_ad id=”6605″]
“உனக்கு எதுதான் பிடிச்சது?” அவன் சலிப்பாய் சொல்ல…
“நான்தான் எதையும் மறுக்கலையேங்க.”
“ஓ… அதுக்குப் பெயர்தான் மறுக்காததா? மரக்கட்டை மாதிரி கிடந்த நீ. கணவன் மனைவி மனசும் உடலும் ஒத்துப்போய் வாழ்றதுதான் தாம்பத்தியம். ஆனா, நீ… உனக்கும் அவங்களுக்கும் வித்தியாசமில்லாம இருக்கிற” என்று கடுமையாகவே வார்த்தையை விட்டான்.
“ஏன் இப்படிப் பேசுறீங்க? யார் அவங்க? சொல்லிக்குடுத்தா கத்துப்பேன்ங்க” என்று அவனுக்கு ஆறுதலாய் பேசினாள்.
அதில் இன்னும் கோபம் எழ, “வேற எப்படி பேசச் சொல்ற? கத்துக் கொடுத்தா கத்துக்கிறாளாம். உன்னை… அவங்க யார் கேட்டல்ல… ப்ராஸ்டிடியூட்” என்று பல்லைக்கடித்து அவளை வேதனைப்படுத்தவென்றே சொன்னான்.
அந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல், “அப்படின்னா?” எனக் கேட்க…
“ஓ… நீ தமிழ்ல? மறந்துட்டேன். பிராஸ்டிடியூட்னா தமிழ்ல விபச்சாரின்னு அர்த்தம். அதாவது தப்பான பொண்ணுங்க” என்றான் தன் எரிச்சல் முழுவதையும் காட்டி.
“எ..என்ன சொன்னீங்க விபச்சாரியா? என்..என்னைப் பார்த்தா சொன்னீங்க? எப்படி மனசு வந்தது உங்களுக்கு?”
“ஆமா. அவள்தான் குடுத்த பணத்துக்கு என்னை என்ன வேணும்னா செய்துட்டுப் போன்னு படுத்துக்கிடப்பா. நீ…”
“கோபத்துல வார்த்தையை விடுறீங்க. நானும் அந்த மாதிரிப் பொண்ணுங்களும் ஒண்ணா? கட்டின புருஷன் உங்ககிட்டயே என்னால…” சட்டென்று உடைந்து அழுதவள், “வேற ஒருத்தனை எப்படி? தண்ணியடிச்சா… தராதரமில்லாம பேசுவீங்களா? நான் என்ன பண்ணுவேன். என்னால ஏத்துக்க முடியலையே. அதுக்காக இப்படி ஒரு வார்த்தை… உங்களை என்னவோன்னு நினைச்சிருந்தேன். நீங்க…”
மனைவியின் அழுகையில் ஏறிய போதை இறங்க, “சூ..சூர்யா சாரிமா. நான் ஏதோ…”
“மனசுல உள்ள அழுக்குகள்தான் தண்ணியடிச்சா வெளில வரும்னு பெரியவங்க சொல்வாங்க. அப்ப உங்க மனசுல நான் அந்த இடத்துலதான் இருக்கேனா? காதல் அது இதுன்னதெல்லாம்… எதுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?” என விடாது அழுதாள்.
‘இப்படின்னு தெரிஞ்சிருந்தா கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன்’ என உள்ளுக்குள் ஒலித்த குரலில் விக்னேஷ் ஆடித்தான் போனான். ‘ஆசைப்பட்ட பொண்ணு கிடைத்தும் என் நினைப்பு ஏன் இப்படிப்போகுது? தேவதையாகப் பூஜித்தவளை, தேவையில்லாத பொருளாக விலக்க முடிந்தால் அதெப்படிக் காதலாகும்? நடந்தது, நடப்பது வீட்டுக்குத் தெரிந்தால் எங்கள் நிலை… கடவுளே! இந்த எதிர்மறை எண்ணம் எப்பவும் வரக்கூடாது. வந்தால் வாழ்க்கையே வீணாகிரும்.’
மனதைத் தேற்றி தலைகவிழ்ந்து அழுது கொண்டிருந்த மனைவியினருகில் சென்று, “மன்னிச்சுக்க சூர்யா. நீ சொன்ன மாதிரி தண்ணியடிச்சதும் பேச்சும் தரங்கெட்டுதான் வருது. இனிமேல் தண்ணியடிக்க மாட்டேன். அழாத சூர்யா ப்ளீஸ். நீ அழுதா எனக்குக் கஷ்டமாயிருக்கு. உன்னை சந்தோஷமா வைக்கணும்னு நினைச்சி நிறைய கனவு கண்டுட்டிருக்கேன். நான் இப்படிப் பேசுவேன்னு… சாரிமா” என்று அவள் தலையில் கைவைக்க…
“முதல்ல என் மேலயிருந்து கையை எடுங்க. எப்ப அப்படி ஒரு வார்த்தை உங்ககிட்டயிருந்து வந்ததோ அப்பவே…” என குலுங்கி அழ…
“ஏய் சாரிபா. நான் ஒரு மடையன். உன்னைப்பற்றித் தெரிஞ்சிருந்தும் இப்படி வாய்விட்டுட்டேன். என்னை மன்னிச்சிருடா. இனி இந்த மாதிரி ஒரு வார்த்தை சொல்லவேமாட்டேன். ப்ளீஸ்! ஏதோ ஒரு இயலாமையில்…”
கணவனின் அளவுக்கதிகமான கெஞ்சலில் சற்றுத் தெளிந்தவள், “நீங்க சொன்ன மாதிரி ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிக்கலாமா?”
“இல்லமா கொஞ்ச நாளாகட்டும்” என்றவனுக்குள் குற்றவுணர்வு.
“கொஞ்ச நாளா? அதெல்லாம் வேண்டாம். நாம நாளைக்கே போகலாம்.”
“சூர்யா!”
“இதுதான்ங்க என்னோட முடிவு. பிறகு உங்க இஷ்டம்” என்று அவனுக்கு முதுகுகாட்டிப் படுத்துக்கொண்டாள்.
[the_ad id=”6605″]
விக்னேஷின் உள்ளே சென்றிருந்த ஆல்கஹால் இன்னும் மீதமிருக்க, மனைவியவளை நெருங்கி அணைத்து முதுகின் இடைவெளியில் முத்தமிட்டு தனக்குள் அவளை இன்னுமின்னும் இறுக்கித் தன் தேவையைச் சொன்னாலும், அடுத்த சில நிமிடங்களில் அவளின் கண்ணீர் கையில் பட… தன் ஏக்கத்தை அடக்கி, “தூங்கு சூர்யா” என்றான்.
அவனிடம் திரும்பி மன்னிப்பு கேட்க… “ஒண்ணும் பிரச்சனையில்லை. நீ தூங்கு” என்று ஆதரவாய் அணைக்க, அத்தோழமை அணைப்பில் நிம்மதியாகக் கண்மூடினாள். அவளுடன் அவனும்.
இரவில் எதுவும் நடவாததுபோல் கிச்சனில் வேலை செய்தவள் காலேஜ் செல்லும் விக்னேஷின் இரு தம்பிகளுக்கும் டிபனும் லஞ்சும் கொடுத்து வீட்டுப் பெரியவர்களையும் கவனித்துத் தங்களின் அறைக்கு வர… அதே நேரம், “இன்னைக்கு சென்னை அவுட்டோர் ஏரியாவுல ஒரு சூட்டிங் இருக்குது சூர்யா. நைட் வர லேட்டாகும். நீ எனக்காகக் காத்திருக்காம தூங்கு” என்றான்.
“சரிங்க. ஆனா…”
“என்னமா சொல்லு?”
“இல்ல ஹாஸ்பிடல் போகணும்னு…”
“அவசியம் போய்தான் ஆகணுமா?”
“அவசியம்ன்றதை விட அத்தியாவசியம்ங்க. அதனால கண்டிப்பா போய்த்தான் ஆகணும்” என்றாள் பிடிவாதமாய்.
“அப்ப நாளைக்கு ஒரு அப்பாய்ண்ட்மென்ட் வாங்கிடுறேன். போய்ப் பார்த்துட்டு வரலாம்” என்றதும் சந்தோஷம் எழ, “ம்.. சாப்பிட வாங்க” என்றாள் புன்னகைத்து.
‘இந்தப் புன்னகை ஒன்றே போதும்’ என தோன்றினாலும், ‘இது மட்டுமே போதுமா?’ என்றது இன்னொரு மனம்.
அவளின் நிராகரிப்பு எல்லாம் சிறு சிறு ஏக்கங்களாய் மாறி கோபம் என்ற அளவில் வந்து நிற்கிறது. கோபம் மாறி வெறுப்பு அவனை அள்ளிக் கொண்டால்?
உள்ளே வந்த ஜோடியைப் பார்த்த டாக்டர் அவர்களை உட்காரவைத்து பெயரைக் கேட்க…
“என் பெயர் விக்னேஷ். இவள் என் மனைவி சூர்யோதயா.”
“லவ் மேரேஜா மிஸ்டர்.விக்னேஷ்?”
“இல்ல டாக்டர். அரேஞ்ச் மேரேஜ்தான். நான் விரும்பிப் பொண்ணு கேட்டு முடிச்சேன்” என்றான் மனைவியைப் பார்த்தபடி.
“அப்பப் பாதி லவ்! பாதி அரேஞ்ச்னு சொல்லுங்க.”
“எஸ் டாக்டர்.”
“என்ன பிரச்சனை? குழந்தை பிறக்க லேட்டாகுதா? (https://punditfeed.com/) ”
“இல்ல டாக்டர். எங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சே பதினைந்து நாள்தான் ஆகுது. இது வேற.”
“ஏன் உங்க ஒய்ஃப் பேசமாட்டாங்களா?” சூர்யாவை ஆழ்ந்து பார்க்க…
“நான்தான் டாக்டர்கிட்டப் போகலாம்னு சொல்லி கூட்டிட்டு வரச்சொன்னேன் டாக்டர்.”
“ஓ..ஓகே. என்ன பிரச்சனை சூர்யோதயா?”
எப்படிச் சொல்வதென்று அவள் திணறுவதைக் கண்டவன், “அவள் கிராமத்துல வளர்ந்த பொண்ணு டாக்டர். பேச ரொம்பக் கூச்சப்படுவா. நானே சொல்றேன. மேரேஜ் மட்டும்தான் ஆகியிருக்கு. எங்க வாழ்க்கையை ஆரம்பிக்க முடியலை. நைட்டானா தலை சுத்துதுன்னு ஒரு மாதிரியாகிடுறா. ஒரு நாள் இரண்டு நாள்னு இல்லாம இந்த இரண்டு வாரமுமே இப்படித்தான் நடக்குது. அதனால எங்களுக்குள்ள சின்னச் சின்னதா சண்டைகளும் வருது. வாழ்க்கையை ஆரம்பிக்கிறதுக்குள்ள பிரச்சனைகள் அதிகமாகிருமோன்னு பயமாயிருக்கு டாக்டர்.”
“மிஸஸ்.சூர்யோதயா நீங்க கொஞ்சம் வெளியில வெய்ட் பண்ணுங்க. உங்க ஹஸ்பண்ட்கிட்டப் பேசிட்டு உங்களைக் கூப்பிடுறேன்” என…
அதுவரை டாக்டரே என்றாலும் எப்படி ஒரு பெண்ணிடம் இப்படி வெளிப்படையாகப் பேசுகிறான் என்று கணவனையே பார்த்திருந்தவள். டாக்டரின் குரலில் திரும்பி சம்மதமாகத் தலையசைத்து வெளியே சென்றாள்.
“நீங்க உங்க பெர்சனலை ஓபனா என்கிட்ட சொன்னது உங்க ஒய்ஃப்கு வித்தியாசமாயிருக்கு போல. உங்க ஒய்ஃப் எப்படி விக்னேஷ்? நீங்க எங்க சந்திச்சீங்க?”
“ரொம்ப நல்லவள் டாக்டர். அழகாயிருக்கன்னு சொன்னா… நான் அழகான்னு கேட்கிற அளவுக்கு நல்லவள். பாசக்காரி. ஃப்ரண்ட் ஊருக்கு திருவிழாவுக்குப் போனப்பதான் இவளை சந்திச்சேன். எப்பவும் அவள் தம்பியோட இருப்பா. அனாவசியமா ஆண்கள்கிட்ட நின்னு பேசுறது கிடையாது. அமைதியான குணம். குடும்பப் பொறுப்பு அதிகம். அவளைப் பிடிச்சிருந்தாலும் எனக்குத் தருவாங்களான்னு குழப்பத்துலதான் கேட்டோம். அவங்க வீட்டுல அழகு தேவையில்லை குணம் போதும்னு சொல்லிட்டாங்க. அதுவும் விரும்பிக் கேட்டா நல்லா பார்த்துப்பேன்னு நம்பிக்கை அவங்களுக்கு. சூர்யாவுமே உருவத்தைக் குறையா பார்க்கிற ஆள் கிடையாது.”
“உங்க மனைவிக்கு உங்க மேல லவ் இருக்கா?”
“இல்லன்னுதான் தோணுது டாக்டர்.”
“எதை வச்சிச் சொல்றீங்க விக்னேஷ்?”
“நான் தொட்டா…” சிறிது தயங்கியவன், “கட்டிப் பிடிச்சா, முத்தம் கொடுத்தா அதை ஒரு சாதாரண நிகழ்வா எடுத்துக்கிறா. அதாவது வெட்கப்படுறது, கூச்சத்துல தள்ளிவிடுறது இப்படி எதுவும் அவள்கிட்டக் கிடையாது. தள்ளி விடுவா அது என்னோட நெருக்கம் பிடிக்காததால. அவளுக்கே குற்றவுணர்ச்சி வந்து எனக்காக இறங்கி வந்தாலும், உடல் மனம்னு எல்லாத்தையும் கட்டுப்படுத்திட்டுப் படுக்கும்போது… அ..அது எனக்கு அசிங்கமா இருந்தது டாக்டர்” என நிறுத்தினான்.
“ம்… அப்புறம்?”
“முந்தா நாள் கொஞ்சம் வார்த்தை விட்டுட்டேன். அதனாலதான் டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போங்கன்னு பிடிவாதமா நின்னுட்டா” என அன்று நடந்ததைச் சொல்லி தலைகவிழ…
சட்டென்று எழுந்த கோபத்தில், “ரொம்பவே உங்க மனைவியைக் கௌரவப்படுத்தியிருக்கீங்க சார். அதென்ன ஒரு பிராஸ்டிடியூட்டோட… உங்களுக்கே அது அசிங்கமா தெரியலையா? முதல்ல அந்த மாதிரிப் பெண்கள்கிட்ட நீங்க போயிருக்கீங்களா?” என்றாள் கோபத்தை அடக்கி.
“ஐயோ! இல்ல டாக்டர். ப்ரண்ட்ஸ் சொல்லிதான் தெரியும்.”
“தெரியாத எதையும் பேசாதீங்க மிஸ்டர். அதிலும் உங்க மனைவி கூட அந்த மாதிரிப் பெண்களைக் கம்பேர் பண்றது எவ்வளவு மட்டமான செயல்.”
“சாரி டாக்டர். தப்புன்னு உணர்ந்துட்டேன். இனிமேல் ட்ரிங்க் பண்றது இல்லைன்னு சத்தியம் பண்ணிட்டேன்.”
“ம்… கெட்டதிலும் ஒரு நல்லது. சரி நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்குறீங்க?”
“அவளோட பிரச்சனையை சால்வ் பண்ணனும் டாக்டர்.”
“ஓ… ஓகே. கடைசியா ஒரு கேள்வி. உங்க ஒய்ஃப்கு பாஸ்ட் லவ் எதாவது இருக்கா?”
“அதுக்கு சான்ஸேயில்ல டாக்டர்” எனும்போது ஹரிணியின் முகம் சம்பந்தமில்லாமல் நினைவு வர, அதை டாக்டரிடம் சொல்லி தீர்வு கண்டிருக்கலாம் விக்னேஷ். விதி ஏற்கனவே மனைவியைப் பேசியதற்கு டாக்டரிடம் வாங்கிக் கட்டியிருந்ததால் அதைச் சொல்லாமல் விட்டான்.
[the_ad id=”6605″]
“சரி நீங்க போய் உங்க மனைவியை வரச்சொல்லுங்க. அவங்ககிட்டேயும் பேசிப் பார்த்துட்டு நெக்ஸ்ட் என்ன செய்யலாம்னு சொல்றேன்.”
“சரிங்க டாக்டர்” என்று சூர்யாவை தனியே டாக்டரிடம் போகச் சொல்ல…
“தனியாவா? தனியால்லாம் நான் போகல. நீங்களும் வாங்க சேர்ந்தே போகலாம்.”
“சூர்யா ட்ரீட்மெண்ட் உனக்குதான். அடம்பிடிக்காமல் போ. டாக்டர் கேட்கிற கேள்விக்கு எதையும் மறைக்காமல் பதில் சொல்லு” என்று டாக்டர் அறைக்குள் தள்ளி கதவை சாத்தினான்.
“வா சூர்யா உட்கார்” என்றதும் தயங்கித் தயங்கி அமர… “ஏன் பயப்படுற? உன்னோட தோழியா என்னை நினைச்சி வெளிப்படையாப் பேசணும். என்ன பேசுவல்ல?”
‘ஹான்!’ என மிரள விழித்து டாக்டரின் கண்பார்த்து, “சரிங்க டாக்டர்” என்றாள்.
“என் பெயர் பிரம்மசக்தி ருத்ரன்! இது எங்க ஹாஸ்பிடல்தான். என் கணவர் ருத்ரன்! என் மாமனார், என் மாமியார், என் நாத்தனார் எல்லாருமே டாக்டர்தான். சோ உன்னோட பிரச்சனை எதுவாயிருந்தாலும் சரி பண்ணிடலாம்.”
“நீங்க அழகாயிருக்கீங்க டாக்டர். நான் வந்ததிலிருந்து உங்களைத்தான் பார்த்துட்டிருந்தேன்” என்றாள் தன் மனதில் நினைத்ததை மறைக்காது.
“நன்றி” என்ற பிரம்மசக்தியிடம் மாறாத புன்னகை மட்டுமே!