9
தன் மனதிலுள்ளதைப் பேசும் கிராமத்துப் பெண் சூர்யோதயாவை பிரம்மசக்திக்கும் ரொம்பவேப் பிடித்தது. “உன் பெயர், ஊர், அப்பா அம்மா பற்றிச் சொல்லு?” என்றாள்.
“எனக்குப் பெயர் வச்சது அம்மாவோட ஃப்ரண்ட் ப்ளஸ் சித்திப்பொண்ணு இசக்கிம்மாதான். சூர்யோதயத்துல பிறந்ததால அந்தப் பெயரையே வச்சிட்டாங்க. வெள்ளச்சின்னு கூப்பிடுவாங்க.”
“அதென்ன வெள்ளச்சி?”
“அ..அது நான் பிறக்கும்போது ரொம்பக் கலரா கொழு கொழுன்னு இருந்தேனாம். இப்பவும் இசக்கிம்மா அண்ணாலாம் வெள்ளச்சிதான்” என்று புன்னகைத்தாள்.
“அப்புறம்?” ஆர்வமாய் பிரம்மசக்தி கேட்க…
அம்மாவில் ஆரம்பித்து அண்ணன்கள், தம்பி அனைவரையும் பற்றிச் சொன்னாள்.
“உன் அப்பா எப்படின்னு சொல்லவேயில்லையே சூர்யா?”
“அப்பா! ஹ்ம்… பொண்ணுங்களுக்கு பொதுவா அப்பாதான் பிடிக்குமாம். ஆனா, எனக்கு அவரைச் சுத்தமா பிடிக்காது டாக்டர்.”
அருவருப்பான ஒன்றைப்பற்றிப் பேசினால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது சூர்யாவின் முகம்.
“ஏன்மா?”
“என்னன்னு சொல்றது? இந்த வயசிலும் அவருக்குப் பொண்ணுங்க தொடர்பிருக்கு. அவரோட கூடப்பிறந்த தம்பி இறந்ததும் சித்தி கூட… ரொம்ப மோசமான ஆளு டாக்டர். எங்கம்மாவை அவரும் அவர் குடும்பமும் எவ்வளவு கொடுமைபடுத்தியிருக்காங்க தெரியுமா? எங்க அம்மா மேல சின்னதா கூட அன்பு கிடையாது அவருக்கு. சம்பாத்தியமும் கிடையாது. பெத்த பிள்ளைங்க மேல பாசம் அக்கறைன்னு எதுவும் கிடையாது. மொத்தத்துல அப்பான்ற உறவுக்கு அருகதையில்லாத மனுஷன் டாக்டர்.”
“ஹேய்! சூர்யா ரிலாக்ஸ்” என்று அருகிலிருந்த தண்ணீர் எடுத்துக் கொடுக்க, வாங்கிக் குடித்துவிட்டு மீதி தண்ணீரை டேபிளில் வைத்தபடி, “சாரி டாக்டர்” என்றாள்.
“ஏன் இவ்வளவு கோபம் சூர்யா?”
[the_ad id=”6605″]
“வீட்டோட தலைவன் சரியில்லன்னா அந்த வீடு எந்தளவு பாதிக்கப்படும்னு நேரடியா அனுபவிச்சவள் டாக்டர் நான். வேலைன்னா என்னன்னே தெரியாத அம்மா வேலைக்குப் போனது… படிச்சிட்டிருந்த அண்ணன் தன் படிப்பை விட்டு குடும்பப் பொறுப்பை ஏத்துக்கிட்டது… படிக்க ஆசையிருந்தும் சூழ்நிலை காரணமா நான் வீட்லயே இருந்தது… இதுக்கெல்லாம் காரணம் யார் டாக்டர்? அவர் செய்த செய்துட்டிருக்கும் பாவங்கள் என் தலையில் விழுந்ததை என்னன்னு டாக்டர் உங்ககிட்டச் சொல்வேன்” என்றாள் தன்னையறியாது.
“புரியல சூர்யா? என்ன பாவம்?”
“அ..அது ஒண்ணுமில்ல டாக்டர். அவர் செய்த தவறான செயல்ல எங்க குடும்பம் பட்ட, படுற கஷ்டத்தைச் சொன்னேன்.”
அவள் பேசுவதில் ஏதோ ஒரு உறுத்தல் தோன்றினாலும் இன்னும் நோண்டாது, “இதெல்லாம் உங்கம்மா சொன்னாங்களா?” எனக்கேட்க…
“எங்கம்மாவா? அம்மா அதிகம் சொன்னதில்ல டாக்டர். சில டைம் ஆதங்கத்துல வெளிவரும். தெரிஞ்சவங்க பெரியவங்க சொல்லிருக்காங்க. எனக்கு விவரம் தெரிஞ்சதிலிருந்து நானே பார்க்கிறேனே.”
“உன் ஹஸ்பண்ட் எப்படி?” எனக்கேட்டு, “தப்பான அர்த்தத்துல கேட்கலபா” என்றாள் முந்திக்கொண்டு.
பிரம்மசக்தியுடன் தொடர்ந்து பேசியதால் சிறிது தைரியமும் சூர்யாவிற்கு வந்திருக்க, “தெரிஞ்சிக்கதான் நீங்க கேட்குறீங்கன்னு புரியுது டாக்டர். என் ஹஸ்பண்ட் நல்லவங்கதான். ஊர்ல பார்த்து பிடிச்சிதான் கேட்டாங்க. இப்பவரை சில விஷயம் தவிர குறை சொல்ல முடியாது. அந்த சில கூட குறையில்லாத மனுஷன்னு யாருமில்லையே.”
மெச்சுதல் வந்த போதும், “உனக்கு உன் ஹஸ்பண்டைப் பிடிக்குமா? பிடிக்கும்னா எந்தளவுக்கு?”
“அன்பானவர்! அதனாலயே பிடிக்கும் டாக்டர். எந்தளவுக்குன்னா… எங்கம்மான்னா எனக்கு உயிர். பெரிய அண்ணன் மேல் மரியாதை அதிகம். எங்களைப் படிக்க வச்சி வளர்த்த நன்றிக்கடனும் இருக்கு. சின்ன அண்ணன் தப்புப் பண்றான். அதனால சரியா சொல்லத் தெரியலை. தம்பி! அவனோடதான் எப்பவும் இருப்பேன். அவனுக்கு நான் அம்மான்ற உணர்வு வரும். அதே மாதிரிதான் விக்னேஷ{ம். சின்ன வயதிலிருந்து ஒரு ஆணோட பழகியிருந்தா வருமே ஒரு நட்புணர்வு… அதுதான் அவங்கமேல வருது.”
“அவர் உன்னை ரொம்ப நேசிக்கிறாரே சூர்யா?”
“தெரியும் டாக்டர். என்னால அப்படி யோசிக்கக்கூட முடியலை.”
“ஏன் அவரைப் பிடிக்கலையா?”
“நீங்க கேட்கிறது புரியுது டாக்டர். என் காதுபடவே சிலர் எங்களுக்குள்ள பொருத்தமில்லைன்னு சொல்லிருக்காங்கதான். வீட்ல பார்த்த பையன்றதால நல்லவங்களா இருப்பாங்ன்ற நம்பிக்கையிருந்தது. அதுதான் நிஜமும்கூட. எனக்கு எந்த லவ்வும் கிடையாது டாக்டர். நான் பார்த்த ஆம்பளைங்க மாதிரி பொறுப்பில்லாதவனா, பொறுக்கியா இருக்கக்கூடாதுன்றது மட்டுமே என்னோட ஆசை. கல்யாணத்துக்குப் பிறகு காதலிச்சுக்கலாம் முடிவுல இருந்தேன். ஆனா, பெண்களுக்கு இயற்கையாகவே இருக்க வேண்டிய வெட்கம், கூச்சம், நாணம் எதுவும் எனக்கு இல்லையோ தோணுது டாக்டர்.”
“ஏன் அப்படி நினைக்கிற சூர்யா?”
“நினைக்கலை டாக்டர். அதுதான் நிஜம்.”
“உன் ஹஸ்பண்ட் உன்னைத் தொட்டா என்ன மாதிரியான ஃபீல் வருது? அவரை விலக்குறதுக்கான காரணம், அவரைப் பிடிக்காமல் தெரிஞ்சே செய்றியா? இல்ல உன்னை அறியாமலா?”
“டாக்டர் இப்ப நீங்க என்கிட்டப் பேசிப் பழகியிருக்கீங்க. திடீர்னு பின்னாடி வந்து என்னைப் பயமுறுத்தத் தொடுறீங்கன்னா… யாரோ எவரோன்னு பயந்து நடுங்காம, நான் சாதாரணமா திரும்பிப் பார்ப்பேன்.”
“ஏன் அப்படி?” என்றாள் ஆர்வமாய்.
அவர்களில் டாக்டர் யார் என்பதே மறந்திருந்தது போலும்.
“நான் வளர்ந்தது கிராமம். யாரும் யார் மேலயும் சட்டுன்னு கை வச்சிரமாட்டாங்க. அப்படி வைக்குறதாயிருந்தா, உரிமைப்பட்டவங்களாதான் இருப்பாங்க. நான்னு தெரிஞ்சிதான் நீங்க என்னைத் தொடுவீங்க. ரொம்ப சிம்பிளான விஷயம் டாக்டர். கல்யாணத்துக்குப் பிறகு இவங்க தொடுறப்பவும் அந்த உரிமை தெரிஞ்சுதே தவிர, அந்த நெருக்கத்தினால் வந்த வெட்கம்… சாதாரணமான கூச்சம் கூட வரலை. இதுவரை யார் மேலயும் வந்ததுமில்லை.”
“என் ஹஸ்பண்ட் பக்கத்துல வரும்போது வேண்டாம் பக்கத்துல சேர்க்காதேன்னு மனம் சொல்லி, உடல் ஒத்துழைக்க மறுக்க… அப்ப ஆட்டோமேடிக்கா தலை கிறுகிறுன்னு சுத்தி ஒரு மாதிரியாகுது. என் கணவன்தானேன்னு என்னை முழுசா… அதுக்கும் முயற்சித்துப் பார்த்துட்டேன். பதில் ஜீரோதான் டாக்டர். அதுக்குதான் உங்களைப் பார்க்க வந்தோம்.”
“என்ன காரணமா இருக்கும்னு நினைக்கிற?”
“டாக்டர் நான் என்ன…”
“நீ கிராமத்தில் வளர்ந்திருந்தாலும் புத்திசாலிதான் நீ. நிறைய யோசிக்கிற. நிறைய விஷயங்களை அப்சர்வ் பண்ணி வச்சிருக்க. எப்படியும் இதையெல்லாம் மண்டையில போட்டு க்ரைண்ட் பண்ணி வச்சிருப்பல்ல அதைக் கேட்கிறேன்.”
“யோசிச்சு மூளைதான் டாக்டர் குழம்புது. நான் எதிர்பார்த்த குணத்துலதான் இவங்க இருக்காங்க. இருந்தும் ஏன்னு புரியல. ட்ரீட்மெண்ட் குடுத்து சரி பண்ணுங்க டாக்டர்.”
“வேற எதுவும் உங்க சின்ன வயசுல..?”
“அப்படிலாம் எதுவுமில்ல டாக்டர்” என்றாள் வேகமாக.
அவளின் அந்த அவசரம் சக்தியின் கண்களுக்குத் தப்பவில்லை. பெல்லடித்து நர்ஸ் வந்ததும், “வெளியில விக்னேஷ்னு ஒருத்தர் இருப்பார் வரச்சொல்லுங்க” என்றனுப்ப… விக்னேஷ் வந்ததும் உட்காரச் சொல்லி, “பொதுவாக பேசி சில டெஸ்ட் எடுத்தப் பார்க்கலாம் விக்னேஷ். ஹெல்த் நார்மல்னா சைக்யாட்ரிஸ்ட் ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம். உங்களுக்கு ஆட்சேபணை இல்லன்னா மட்டும்.”
[the_ad id=”6605″]
“எனக்கில்லை டாக்டர். சூர்யா…” என இழுக்க…
“எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல டாக்டர்” என்றாள்.
“ஓகே விக்னேஷ். இப்ப வெளியில வெய்ட் பண்ணுங்க செக்கப் முடிந்ததும் கூப்பிடுறேன்” என்று சூர்யாவிற்கு சில டெஸ்ட் எடுத்து மறுநாள் வரச்சொன்னாள்.
“என்னடா விக்கி நேத்தும் நீயும் அவளும் வெளியில போறோம்னு கிளம்புனீங்க. இன்னைக்கு என்ன? சூட்டிங் இல்லன்னா செட்டுக்குப் போகலாம்ல?”
“அம்மா நேத்து போனது ஃப்ரண்ட் வீட்டுக்கு. இன்னைக்கு ஹாஸ்பிடல் போறோம். ரெண்டு நாளா தலைவலிக்குது சொல்றா. சீக்கிரம் வந்திடுறோம்மா.”
“என்னது தலைவலியா? ஏன்மா என்கிட்ட சொல்லலை? நேத்தே ஹாஸ்பிடல் போயிட்டு வந்திருக்கலாம்லடா?” என்று மருமகளிடம் கேட்டு மகனிடம் முடித்தார்.
“தலைவலிதானன்னு விட்டுட்டேன் அத்தை. இன்னைக்கும் தலைவலி விடலன்றதால கூட்டிட்டுப் போறேன் சொன்னாங்க.”
“சரிடா பார்த்துக் கூட்டிட்டுப் போ. புது இடம் சூர்யாவை விட்டுட்டு எங்கேயும் நகர்ந்திராத” என்று அறிவுறுத்தியே அனுப்பினார்.
ஹாஸ்பிடலில் டாக்டர் அழைப்பு வந்ததும் உள்ளே சென்றவர்களிடம், “சூர்யாவோட ரிசல்ட் வந்திருச்சி. உடல் லெவல்ல ஷி இஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட். தொடு உணர்வுகள் அவங்க மனசு சம்பந்தப்பட்டது. அது உடல்ல பாதிப்பை ஏற்படுத்துதுன்னா, அதுக்கான சில டேப்லட் என் ஹஸ்பண்ட் சஜசன்ல எழுதியிருக்கேன். சைக்யாட்ரிக் ட்ரீட்மெண்ட்கு ஒன் வீக் கழிச்சி வாங்க ஆரம்பிச்சிரலாம்” என்றனுப்பினாள் டாக்டர்.பிரம்மசக்தி.
வீட்டில் நுழைந்தவர்களிடம் தலைவலி பற்றி விசாரிக்க, மாத்திரையைக் காண்பித்து “இன்னைக்குள்ள சரியாகிரும் சொல்லிருக்காங்க” என்று தங்கள் அறைக்குள் செல்ல நிம்மதிப் பெருமூச்சு அவர்களுள்.
‘இன்னும் எத்தனை நாட்கள் இந்தப் போராட்டம்’ என்பது ஒருபுறம் எனில், இருந்தும் மனைவியைக் கண்டு எழும் ஆசையையும் அடக்க வழியில்லை விக்னேஷிற்கு. திரும்பவும் முயற்சி! திரும்பவும் தோல்வி! திரும்பவும் ஏமாற்றம்! ஏனோ வாழ்க்கையே வெறுத்துப் போனது போன்ற மனநிலை விக்னேஷிற்கு.
ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகாவது அனைத்தும் சாயாகிவிடும் என்று மனதினோரம் சிறு நம்பிக்கை. அந்த நம்பிக்கையும் ஆட்டம் காண வைக்கவென வந்தான் சபரிநாதன்.
“வணக்கம்மா.”
“வாங்க. யாரைப் பார்க்கணும்? விக்கியையா? இப்ப வந்திருவான்பா உட்கார்” என்றார்.
“நான் சூர்யோதயா பார்க்க வந்தேன்மா.”
“சூர்யாவா? இதோ கூப்பிடுறேன்பா” என்று மருமகளை அழைத்து, “முதல் முறையா மருமகளைப் பார்க்க அவங்க சொந்தம்னு நீங்கதான் வந்திருக்கீங்க” என்க.
‘என்னைப் பார்க்கவா? யாராயிருக்கும்? சென்னையில் அப்பா சொந்தக்காரங்க சிலர் இருக்கிறதா கேள்விப்பட்டிருக்கேன். அவங்க ஏன் இங்க வரப்போறாங்க?’ யோசனையுடன் அறையிலிருந்து வெளியே வந்தவளை, “அம்மா” என ஓடி வந்து கட்டிக்கொண்டாள் உதய ஹரிணி.
அதே நேரம் வெளியே சென்றிருந்த விக்னேஷ் வீட்டினுள் நுழைய கால் வைக்க அதிர்வில் அப்படியே நின்றான்.
“பாப்பா! அவங்களை அம்மான்னு கூப்பிடக்கூடாது சொன்னேன்ல” என்ற குரலில் நிமிர்ந்து சபரியைப் பார்த்தவள் சில நொடிகள் பார்த்தது பார்த்தபடியே நின்றுவிட்டாள்.
“என்ன உதயா பார்க்கிற?” என்றான் புன்னகையுடன்.
“நீங்க… உங்களை அடையாளமே தெரியல மச்சான்” என்று ஆச்சர்யப்பட்டாள்.
[the_ad id=”6605″]
“தம்பி உனக்கு என்ன முறை வேணும் சூர்யா?”
“மாமா பையன் அத்தை. இது அவங்க பொண்ணு உதய ஹரிணி.”
“இவங்க உதய ஹரிணி! உன் பேர் சூர்யோதயா! உன் பெயர்லையும் உதயா வருதேமா?” என்றார் ஆச்சர்யமாய்.
“அட ஆமாம் அத்தை. நான் இதுவரை யோசிக்கவேயில்ல. ஹேய் செல்லம் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே பெயர்” என்று ஹைபை கொடுத்து, “பாப்பாவுக்கும் இசக்கிம்மா தான் பெயர் வச்சாங்களா மச்சான்?” எனக்கேட்டாள்.
குழந்தையாய்க் குதூகலித்துக் கேட்டவளைக் கண்டு புன்னகைத்து, “வேற யாரா இருக்க முடியும். சாட்சாத் அவங்களேதான்.”
“அத்தை எப்படியிருக்காங்க? அன்னைக்குப் பேசின பிறகு இன்னும் பேசலை. உட்காருங்க மச்சான். ஏன் நின்னுட்டிருக்கீங்க? என்ன சாப்பிடறீங்க?”
“உதயா என்ன கொடுத்தாலும் ஓகே. ஆமா உன் ஹஸ்பண்ட் எங்க?”
“வர்ற நேரம்தான் மச்சான். இருங்க வர்றேன்” என்று குழந்தையுடன் உள்ளே சென்றவளை அதிசயமாகப் பார்த்திருந்தான் விக்னேஷ்.
அதிசயம்தான்! அவள் முகத்தில் கண்ட ஒவ்வொரு உணர்வும் அதிசயமே!
குழந்தையை முதலில் பார்த்ததால், அவன் சபரியாகத்தான் இருக்குமென்று அவனின் இருபத்தைந்து வயது முகம் தேட, முகத்தில் சற்று முதிர்ச்சியும் பொறுப்பும் சேர்ந்து இன்னும் அழகாகத் தெரிய, தன் சிறு வயது ஹீரோவிடம் தன்னை மீறிய சில நொடி ரசனை. உடனே வீட்டாளாய் அவனைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டாள்.
அதைப் பார்த்திருந்த விக்னேஷிற்கோ, தன் உறவாய் புகுந்த வீடு தேடி வந்த முதல் சொந்தம் என்ற ஆர்வமும் அவள் முகத்தில் அதிகமிருப்பதை உணர்ந்தான். அதைவிட அவன் உள்ளே நுழைகையில் கேட்ட அம்மா என்ற அழைப்பும் அதைத் தொடர்ந்த பெயர் பொருத்தமும் சந்தேகப்படாதே என்பதையும் தாண்டி சந்தேகப்படவே வைத்தது.
முதலில் தண்ணீர் கொடுத்தவள் அப்படியே வீட்டைப்பற்றி விசாரித்தபடி காஃபியும் பிஸ்கட்டும் எடுத்து வந்து, குழந்தைக்கும் என்ன வேண்டுமென்று கேட்டு ஹார்லிக்ஸ் கலந்து வந்து கொடுக்க… சூர்யாவின் மாமியாரோ, அவளின் உணர்வு புரிந்தவராக தானும் அவர்களுடன் பேசியபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
“நீங்க வந்தது ரொம்ப சந்தோஷமாயிருக்கு மச்சான். இங்க எப்படி நீங்க?”
“உதயா அமைதி. வேலை விஷயமா வந்தேன். என் தங்கச்சி வீடும் இங்க இருக்கிறதால பாப்பாவையும் கூட்டிட்டு வந்தேன். காலையில இசக்கி அத்தைகிட்ட பேசினப்ப உன்னைப் பார்த்துட்டுதான் வரணும்னு ஆர்டர் போட்டுட்டாங்க. உங்கம்மா சொல் மீற முடியுமா என்ன? அந்தளவு தைரியம் எனக்கில்லமா” என்றான் புன்னகையுடன்.