“அந்த பயம் இருக்கட்டும் மச்சான்” என மிரட்டலாய் சொல்ல…
“உன் தங்கச்சி வீடு எங்கயிருக்குபா?”
“திருவெற்றியூர்ல இருக்கும்மா. அத்தைகிட்டப் பேசினதை பாப்பாவும் கேட்டு நானும் வருவேன்னு அடம்.”
“அதனாலென்ன? நம்ம மேல பாசம் இருக்கிறவங்களைத் தேடுறது இயல்பு. அதிலும் இவள் குழந்தைதானப்பா.”
அவரின் புரிதலுக்கு ஒரு நன்றிப் புன்னகை கொடுத்து, “என்ன பண்ணின நீ? உன் பெயரைக் கேட்டாலே பரவசமாகிடுறா?”
“நான் என்ன பண்ணினேன். நீங்க என்னைக் கிண்டலடிக்கிறீங்களா?” என்றாள் சிணுங்கலாக.
“இல்லமா. நிஜமாதான் சொல்றேன். சூர்யான்னதுமே அம்மான்னு ஒரே குஷி. சொல்லாதன்னு சொல்லிப் பார்த்தாச்சி. நோ யூஸ்.”
“இருக்கட்டும் மச்சான். குழந்தைக்கு என்ன தெரியும்? சரி வந்த வேலை முடிஞ்சிதா?”
“ஆமா உதயா. நைட் ஒன்பதுக்கு ட்ரெய்ன்.”
“டைம் இப்பவே ஐந்தாகுது மச்சான்.”
“இன்னும் நாலு மணிநேரம் இருக்கு. தங்கச்சி வீட்டுக்குப் போக ஒரு மணிநேரமாகிரும். அங்கயிருந்து சென்ட்ரல் எக்மோர்னு ட்ராபிக் தாண்டி ஒன் ஹவர் வச்சாலுமே இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கு” என்றான்.
“அப்ப நான் பாப்பாவோட பக்கத்து கோவிலுக்குப் போயிட்டு வரட்டுமா?”
“ம்.. சரிமா. லேட் பண்ணியிராத. ஹேய்! ஒன் மினிட்” என்று ஷோல்டர் பேக்கில் இருந்த இரண்டு கிஃப்ட் பேக்கை எடுத்து அவளிடம் நீட்டி, “இது உங்க ரெண்டு பேருக்கும் என்னோட கல்யாணப்பரிசு” என்றான்.
சில வினாடிகளேனும் மாமியாரைப் பார்க்க, அவரின் சம்மதமான தலையாட்டலில், “தேங்க்ஸ் மச்சான்” என வாங்கிக் கொண்டு, “இதோ கோவிலுக்குக் கிளம்பி வர்றேன் மச்சான்” என்று முகம் கழுவி ஆடை சரி செய்து குழந்தையுடன் வெளியே வர விக்னேஷ் உள்ளே நுழைந்தான். “இப்பதான் வர்றீங்களா? சபரி மச்சானும் பாப்பாவும் வந்திருக்காங்க” என்றவள் குரலில் அவ்வளவு துள்ளல்.
சூர்யாவின் குரலில் திரும்பிய சபரியின் கண்கள் சற்று அதிர்ச்சியைத்தான் காட்டியது. திரும்பி சூர்யாவைப் பார்க்க அந்தப் பதினாறு வயதில் எவ்வளவு வெள்ளந்தியாகச் சிரித்தாளோ அதே சிரிப்பு. உடனே தன் முகத்தை மாற்றிப் புன்னகைத்து, “வணக்கம் ப்ரதர்” என்றான்.
“வணக்கம். ஏன் எழுந்துட்டு… நீங்க உட்காருங்க. வந்தவங்களுக்கு சாப்பிட எதாவது குடுத்தியா சூர்யா?”
“ம்… காஃபி மட்டும்தான்ங்க குடுத்தேன். வேற எதுவும் செய்யலியே?”
“நான் என்ன யாரோவா உதயா? எனக்கெந்த பிரச்சனையும் இல்லை. நீ கோவிலுக்குப் போகணும் சொன்னல்ல போயிட்டு வா. நான் உன் ஹஸ்பண்ட் கூடப் பேசிட்டிருக்கேன்” என்றான்.
“அப்பா நீங்களும் வாங்கப்பா. நீங்க நான் அம்மா சேர்ந்து கோவிலுக்குப் போகலாம்.”
குழந்தை பேசியதை எந்தவித விகல்பமுமில்லாமல் எடுத்து, “ஆமாம் மச்சான். நீங்களும் எங்களோட வாங்க போகலாம்” என்று சூர்யாவும் அழைத்தாள்.
சபரிக்கு சற்று தர்மசங்கடமாக, “உதயாவும் குழந்தைதான். தப்பா எடுத்துக்காதீங்கம்மா” என்றான். தான் வந்ததில் அவளுக்கு எதுவும் பிரச்சனையாகிவிடுமோ என்று பயம் வந்தது.
[the_ad id=”6605″]
“என்ன மச்சான் யாரை குழந்தை சொல்றீங்க?”
“உன்னைத் தவிர வேற யாரை சொல்லப்போறேன்.”
“பாருங்கத்தை. நான் குழந்தையா?”
“யார் சொன்னது? நீ குழந்தை இல்லை. ஆனால், ஆமாம்” என்றார் கிண்டலாக.
“நீங்களும் சேர்ந்துட்டீங்களா?” என சிணுங்கி முறைக்க…
“அப்பா வாங்கப்பா” என்று திடீரென சூர்யாவிடமிருந்து சபரியிடம் குழந்தை பாய… அதில் நிலை தடுமாறி “பாப்பு” என்றவள் சபரியின் மேல் தானும் சாய்ந்தாள்.
“சூர்யா பார்த்து” என்றபடி விக்னேஷ் வருமுன் சபரியே அவளையும் குழந்தையையும் பிடித்து நிறுத்த, “தேங்க்ஸ் மச்சான்” என்றாள்.
அதன் பின்னே ஏதோ ஒரு உறுத்தல் தோன்ற தன்னைப் பார்த்தவளுக்கு சபரி ஷோல்டரில் கைவைத்து அணைத்துப் பிடித்திருப்பது புரிந்தது. சூழ்நிலையில்தான் பிடித்திருக்கிறான் என்றாலும் ஏதோ போலிருக்க, முதல்முறையாக சற்று கூச்சத்துடன் கூடிய அவஸ்தையுடனும் அவன் கையை மெல்ல எடுத்து விட்டாள்.
“இப்ப ஓகேதான உதயா?” சபரி கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் தலையசைத்து நகர்ந்து நின்றாள்.
அனைத்தையும் பாhத்திருந்தான் விக்னேஷ். அனைத்தையும் விட மனைவியின் நடவடிக்கைகள் அவனுள் பலவித சந்தேகங்களை விதைத்தது. ‘தன்னிடம் தோன்றாத கூச்சம் இவனிடம் தோன்றுகிறதா? எப்படி சாத்தியம்? தமிழர் பண்பாடு! கலாச்சாரம்! என்று வளர்ந்தவள் இப்படி அடுத்தவனிடம் தடுமாறுவாளா?’ அவன் பார்வை அவர்களிடத்தில் இன்னும் கூர்மையானது.
“விக்கி குழந்தை ஆசைப்படுறா. நீங்க எல்லாருமே போயிட்டு வாங்க.”
‘குழந்தை என் மனைவியையும் ஆசைப்படுகிறாள். அனுப்பிவிடவா?’ மனதிற்குள் எழுந்த கொந்தளிப்புடன் தனக்குள்ளேயே கேட்டான்.
சந்தேக விதை விருட்சகமாகுமா? அல்லது மட்கிப்போகுமா?
“என்னடா விக்கி அப்படியே உட்கார்ந்திருக்க? போய் முகம் கழுவிட்டு வந்து கூடப் போயிட்டு வா.”
“ஒரு நிமிஷம்” என்று அவர்கள் முகம் பார்க்காமல் செல்ல… தாய் மகனை யோசனையுடன் பார்க்க… சபரி சூர்யா குழந்தை மேல் கவனமாக இருந்தால் எதையும் உணரவில்லை.
அருகிலிருந்த கோவில் சென்று வந்து சபரி கிளம்பும் வரையிலுமே சூர்யாவின் பேச்சும் ஹரிணியின் பேச்சும் ஓயாதிருக்க… கிளம்புகையில் “அம்மா வாங்கம்மா” என அழ ஆரம்பித்த குழந்தையை சூர்யா சமாதானப்படுத்த தோளில் போட்டுத் தட்டிக்கொடுக்க…
“சாரிமா. இப்படிச் செய்வாள்னு தெரிஞ்சிருந்தா கூட்டிட்டு வந்திருக்க மாட்டேன்” என்றான் சங்கடத்துடன்.
“என்ன மச்சான் இப்படிச் சொல்றீங்க? நம்ம பாப்பாதான. நான் சொன்னா கேட்பாள்” என்று ஏதேதோ சமாதானம் செய்து கையில் சாக்லேட்ஸ் கொடுத்து குழந்தையை சபரியிடம் கொடுக்க… வாங்குகையில் தெரியாமல் ஏற்பட்ட உரசலில் சட்டென்று விலகினாள். அவள் முகத்தில் கோபம் இல்லாமல் பதற்றம் மட்டுமே!
“சாரி” என்றுரைத்தாலும் எல்லா பெண்களுக்கும் உரிய அனிச்சை செயல் என்று சபரி நினைக்க… விக்னேஷிற்குத்தானே தெரியும் அதன் சூட்சுமம். அதைப்பற்றி டாக்டரிடம் கேட்கவும் முடிவு செய்திருந்தான்.
சபரி சென்றதும் சூர்யா இரவு சமையலுக்கு கிச்சன் செல்ல அதற்குள் விக்னேஷின் இரு தம்பிகளும் வந்து அவரவர் கைபேசியை நோண்டிக் கொண்டிருக்க… பெரிய மகனிடம் வந்த தாய் விமலா, “ஏன் ஒரு மாதிரியிருக்க?” என்றார்.
“நல்லாத்தான்மா இருக்கேன். ஏன் திடீர்னு கேட்குறீங்க?”
“இன்னைக்கு நடந்தது ஒரு சாதாரண நிகழ்வு. சூர்யா தங்கமான பொண்ணுடா. எதாவது பேசி அவளைக் காயப்படுத்தாத” என்றார்.
“பெத்த பையன் கஷ்டப்பட்டா பரவாயில்லையா?” கோபமாக தாயைப் பார்க்க…
“அவள் குழந்தைடா.”
“ஆமாம்மா. அதான் குழந்தைக்கும் அவளோட பெயரையே வச்சிட்டாங்க” என்றான் வன்மமாய்.
“விக்கி தப்புடா” என்று அவனுக்கு வாழ்க்கையைப் புரிய வைக்க முயல…
[the_ad id=”6605″]
“ஆமா தப்புதான் பண்ணிட்டேன்” என்றபடி எழுந்து செல்ல விக்கித்துப் போய் அமர்ந்திருந்தார் விமலா. சந்தேகம்! ஆளைக் கொல்லும் கொடிய நோய் என்பதை உணராதவரா என்ன?
இரவு உணவுக்குப் பின் அறைக்குள் வந்தவளைக் கண்ணெடுக்காது பார்த்தான். எந்தவித பதற்றமும் இல்லாமல் தன்னருகில் உட்கார்ந்தவளிடம், “நீ எனக்கு வேணும்” என்று கட்டிலில் சரித்து முத்தங்களிட… பிடிக்காத முத்தங்களை தடுக்க வழியில்லாது, ‘நீ எத்தனை வேண்டுமானாலும் கொடு அதை நான் எண்ணுகிறேன்’ என்பதாய் எதிர்க்காது சலனமில்லாமல் அவளிருந்தாள்.
“இன்னும் சரியாகலையா சூர்யா?”
“இப்பதானங்க ட்ரீட்மெண்ட் போகுது. மாற்றம் வர ஒரு பத்து நாளாவது ஆகாதா?”
“அப்ப…” எதையெதையோ எண்ணி மனம் தவிக்க… டாக்டரைப் பார்க்கும் வரை அமைதியாயிருக்க முடிவு செய்தான்.
தொடர்ந்து இரண்டு மூன்று கவுன்சிலிங் செய்தும் அவளின் நடவடிக்கை மாறாதிருக்க… “சே.. இதுக்காக ஹாஸ்பிடல் போறோம்னு நினைச்சா எனக்கே அசிங்கமாயிருக்கு” என்று அவள் காதில் விழுமாறு மெல்லப் புலம்பும் நிலையானது விக்னேஷிற்கு. குழந்தைக்காக அலைவதற்கும், தாம்பத்திய உறவிற்கே ஹாஸ்பிடல் போகவேண்டிய நிலைமைக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா!
‘அசிங்கம்!’ ஒரு வேளை இப்படி அவளைக் கூட்டிக்கொண்டு அலைவதுதான் அவளின் தற்போதைய பிரச்சனையாக இருக்குமோ! அதை விக்னேஷ் உணரவில்லை என்பதே நிஜம்.
இருவருக்குள்ளும் யாருமறியா சத்தமில்லா சண்டைகள் அதிகரித்தது.
ஒரு நாள், “ஏன் சூர்யா உன் சபரி மச்சானை ரொம்பப் பிடிக்குமோ?” என்றான் உன் எழுத்திற்கு அழுத்தம் கொடுத்து.
அவனின் உள்குத்து எதுவுமறியாமல் எப்பொழுதும் போல், “ம்… பிடிக்கும். சூப்பராயிருக்காங்கள்ல? முதல் முறை பார்த்தப்ப சினிமாவுக்கு நடிக்கப் போயிருக்கலாம் தோணிச்சி. மச்சான்கிட்ட சொல்ல நேரம் கிடைக்கல. அப்ப விட இப்ப இன்னும் சூப்பராயிருக்காங்க. பாப்பா அதைவிட அழகாயிருக்கா.”
“நான் அழகு கிடையாதா சூர்யா?” என அவளை ஆழம்பார்க்க.
“யார் சொன்னது நீங்க அழகில்லைன்னு? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான அழகு.”
“ம்… அந்தப் பாப்பா உன்னை மாதிரி தெரியுறாள்ல?”
“நிஜமாவாங்க. என்னை மாதிரியே இருக்காளா? என்னவோ தெரியலைங்க அவளை ரொம்பப் பிடிச்சிருக்கு. சபரி மச்சான் சரி சொன்னா நாமளே வளர்த்துக்கலாம்ங்க.”
“அப்ப அவர்?”
“மச்சான் வேற கல்யாணம் செய்துக்கட்டும்.”
“ஏன் அவரை நீயே முடிச்சிருக்கலாமே?” கண்களில் ஏளனத்துடன் அவன் கேட்க…
“என்ன உளர்றீங்க?” என்றவள் குரலில் சிறிதான கோபம்.
“ஹேய் கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னேன். அப்ப அவரை முடிச்சிருக்கலாமே?” அவள் பதிலுக்காய் அவளைக் கூர்ந்து பார்க்க…
ஏதோ யோசனை செய்து, “அப்படிச் செய்திருந்தா பாப்பா என்னோட இருந்திருப்பாள்ல. இப்ப அப்படி நினைக்கிறது கூட தப்பு. இப்ப நான் உங்க மனைவி.”
“சரி படுத்துக்கோ. நான் இப்ப வந்திருறேன்” என்று வெளியே சென்றவன் வரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தவள் அப்படியே தூங்கிப்போனாள்.
[the_ad id=”6605″]
அவனோ பித்துப் பிடித்த நிலையில் சுற்றிக் கொண்டிருந்தான். “நான் ஏன் அழணும்? பொய்யாகக் கூட அவனைக் கல்யாணம் செய்திருக்கமாட்டேன் சொல்லலை. அவனை ரொம்பப் பிடிச்சிருந்தா என்னை ஏன் கல்யாணம் செய்த? அவனைப் பிடிச்சிருக்கு சொன்னா தப்பா எடுத்துப்பேன்னு குழந்தையைக் காரணம் சொல்றியா? யூ ப்ளடி! அவனைப் பார்த்ததும் முகத்துல பல்ப் எறியுது. அவன் தொட்டா கூச்சம் வருது. கட்டினவன் தொட்டா மரப்பாச்சி பொம்மை மாதிரி நிற்கிற. உன் குணமே இதானா? இல்லை என்னை ஏமாத்துறியான்னே தெரியலை.”
“ஆனா, ஒண்ணு கன்பார்ம். நான் சீக்கிரமே இதை நினைச்சி பைத்தியமாகிருவேன். வீட்ல கூட என் பிரச்சனையைச் சொல்ல முடியல. ஆசைப்பட்டுக் கல்யாணம் செய்து வாழவே இல்லன்னா எந்தப் பெத்தவங்கதான் தாங்குவாங்க. எங்கம்மா உனக்கு எவ்வளவு சப்போர்ட் தெரியுமா? என்னோட இயல்பான குணம் மாறுவது எனக்கேத் தெரியுதுன்றப்ப, என்னைப் பெத்தவங்களுக்குத் தெரியாதா என்ன? என்ன பதில் சொல்வேன் அவங்களுக்கு. இந்த விஷயம் தெரிஞ்சா… கடவுளே! உன் ஒருத்தியால…” என தலையைப் பிடித்து அமர்ந்தவன் ஏதேதோ கணக்கிட்டு விடையுடன் வீடு சென்றான்.
“சூர்யா! வா ஹாஸ்பிடல் போகணும்.”
“ம்… சாரிங்க.”
“ப்ச்… அதெல்லாம் தூக்கிக் குப்பையில் போட்டுட்டு வா” என்றான் கோபமாய். எங்கேயென்று கேட்ட தாயிடமும் சிடுசிடுத்து ஹாஸ்பிடல் சென்று டாக்டரிடம் தனியாகப் பேசினான்.
ஆழ் மயக்கத்திற்குக் கொண்டு வந்து அவளின் இத்தனை ஆண்டு கால வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளும் சிகிச்சை. அந்த அறைக் கட்டிலில் சூர்யா அரை மயக்கத்திலிருக்க… சைக்யாட்ரிஸ்ட் ருத்ரன் அவளைக் கேள்வி கேட்க உடன் சக்தியும் விக்னேஷ{ம்.
ருத்ரனின் கேள்விகளுக்கெல்லாம் சூர்யா அளித்த பதிலில் உச்சக்கட்ட கோபத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளானான் விக்னேஷ். விளைவு! அவளை விட்டு நிரந்தரமாகப் பிரிய முடிவெடுத்ததோடு தனக்குப் பெண் பார்க்க வீட்டிலும் சொல்லிவிட்டான்.
சூர்யாவின் நிலையைப் பற்றி அவன் யோசிப்பதாகக்கூட இல்லை. ருத்ரனும் சக்தியும் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவளை விட்டுப் பிரியும் தன் முடிவில் தெளிவாக இருந்தான். இதோ பிரிந்தும் விட்டான்.
ஆனால், சூர்யா அவளின் ஊருக்குச் செல்லவில்லை. ‘சூர்யா எங்கே?’