4
“ஏய் இசக்கி! நீ வருவன்னு எதிர்பார்க்கல. எப்படியிருக்க? மச்சானும் பையனும் எப்படியிருக்காங்க?”
“யார் எப்படியிருந்தா என்ன? நீ என்கிட்டப் பேசாத. என் பொண்ணு சடங்குக்கு எனக்கே பத்திரிக்கை வைக்கலை. அம்மா வீட்டுக்கு வந்ததனால தெரிஞ்சது. உங்க மச்சான்கிட்டக் கேட்டுட்டு இங்க வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சி. எங்க அந்த வெள்ளச்சி?”
“ஏய் மன்னிச்சுக்கோடி. சித்திக்குப் பத்திரிக்கை வைக்கப் போனப்ப நீ ரெண்டு நாளைக்குள்ள வருவன்னு சொன்னாங்க. அதான் சித்திகிட்ட குடுத்து உனக்கு வைக்கச் சொல்லிட்டு வந்தேன். நான் அனுப்பி உனக்கு வந்து சேரலைன்னா என்ன செய்றது? அதான்… மன்னிச்சுக்கோ இசக்கி” என்றார் கெஞ்சலாய்.
“ம்ம்.. அம்மா சொன்னாங்க” என்று விரைத்துக்கொண்டு நிற்க…
“அப்பக் கொஞ்சம் சிரிச்சாப்ல முகத்தை வச்சுக்கோயேன். ஏன் எதோ போருக்குப் போற சிப்பாய் மாதிரி விரைச்சிட்டு நிற்கிற?”
ஈஈஈஈ… என பற்களைக் காட்டி, “சரி வா. முதல்ல என் பொண்ணைப் பார்க்கணும். சின்ன வயசுல பார்த்தது. நல்லா வளர்ந்திருப்பாள்ல?”
“நீயே வந்து உன் பொண்ணோட வளர்ச்சியைப் பார்த்துக்கோ. ரவியை ஏன் கூட்டிட்டு வரல?”
“நாங்க இங்க அவசரமா கிளம்பிட்டதால அவன் வரலை. இல்லன்னா இங்க வராமலிருப்பானா?”
“தங்கச்சி விசேஷத்துக்கு இல்லாம என்ன பெரிய வேலை?” என்றவர் அருகில் நின்றிருந்த இளைஞனைக் கண்டு, “யார்பா நீ?” எனக் கேட்க…
“யார் நீயா? ஏய் பூவு நம்ம ராஜாங்கம் அண்ணன் பையன் சபரிநாதன். இவன் நிச்சயத்துக்குதான் ஊருக்கு வர்றதா அம்மாகிட்டச் சொல்லியிருந்தேன்.”
“ஓ… நிச்சயம் முடிஞ்சிருச்சா?”
“ம்… முடிஞ்சி பத்திரிக்கையும் அடிச்சாச்சி அத்தை. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம். அப்படியே பத்திரிக்கையும் வைச்சிடுறேன்” என்று இசக்கியிடமிருந்த பத்திரிக்கையை வாங்கி பூவரசியிடம் கொடுத்தான் சபரிநாதன்.
“தனியா விசேஷத்துக்குப் போக வேண்டாம்னு உங்க மச்சான் சொன்னதால மாப்பிள்ளைப் பையனையும் கூட்டிட்டு வந்துட்டேன்.”
“ராஜாங்கம் அண்ணன் மாதிரியே இருக்கான். இவனை குழந்தையில பார்த்தது. நல்லா வளர்ந்துட்டான் இசக்கி. வயசு இருபத்தைந்து இருக்குமா?”
“அதேதான். இப்ப கல்யாணம் வேண்டாம்னு ஒரே அடம். பொண்ணு இவன் அம்மாவோட சொந்த அண்ணன் பொண்ணுதான். அவங்களும் இப்பவே முடிச்சாகணும்னு நிற்கிறாங்க. ஜாதகம் கூடப் பார்க்கலை. பெயர்ப் பொருத்தம் இருந்ததே போதும்னு தேதி குறிச்சிட்டாங்க.”
சபரியிடம் திரும்பிய பூவரசி, “நல்லாயிருக்கியாப்பா? அப்பா அம்மால்லாம் எப்படியிருக்காங்க? உனக்கு தங்கச்சி ஒருத்தி இருக்காள்ல?” என்றார்.
[the_ad id=”6605″]
“நல்லாயிருக்கேன் அத்தை. அப்பா அம்மா எல்லாரும் நலம். தங்கச்சிக்குக் கல்யாணமாகி சென்னையில இருக்கா.”
“ஓ… சரி வாங்க” என்று மூவரும் சூர்யோதயா இருந்த அறைக்குள் வர, “வெள்ளச்சி” என்ற குரல் கேட்டதுதான் தாமதம், “இசக்கிம்மா” என கன்றுக்குட்டியாய் வந்து இசக்கியை அணைத்துக் கொண்டாள்.
“ஏய் வெள்ளச்சி என்னை அடையாளம் தெரியுதா? அப்பா என் கண்ணேபட்டிரும் போலிருக்கு. என்ன அழகாயிருக்கா என் பொண்ணு.”
“எங்கம்மாவை எனக்குத் தெரியாதா? இப்படிக் கூப்பிடுற ஒரே ஆள் நீங்கதான்.”
“உன் அண்ணனோட சேர்த்து ரெண்டு பேர்ன்றதை ஞாபகம் வச்சிக்கோ” என்றார் இசக்கி.
“ம்… தெரியும். சின்ன வயசுல ஊர்ல வச்சிப் பார்த்துப் பழகியிருக்கேனே. அப்புறம் அம்மாகிட்ட கதை கேட்டா இசக்கி புராணம் மட்டும்தான் சொல்வாங்க. எனக்குப் பெயர் வச்சது முதற்கொண்டு.”
“பாருங்கப்பா. நம்ம கதையைக்கூட புராணத்துல சேர்த்துட்டாங்களா? நல்லா பேசுற வெள்ளச்சி” என்றவர், “ஆமா என்னதிது கழுத்துல வெறும் பாசியைப் போட்டிருக்க? இந்தா இந்த செயினைப் போடு” என்று வேகமாகக் கழட்டி அவள் கழுத்தருகே கொண்டு செல்கையில், அவசரமாக மருமகனை ஒரு பார்வை பார்த்து கழுத்தில் போட்டுவிட்டார்.
“அம்மா திட்டுவாங்கம்மா” என யாரிடமோ பேசிக் கொண்டிருந்த தாயைப் பார்த்துப் பயந்தவளிடம்…
“இது நான் என் பொண்ணுக்குப் போடுறது. இதை உன் அம்மா கூட தடுக்க முடியாது. அதுவுமில்லாம மத்தவங்ககிட்ட வாங்கினால்தான் திட்டுவா. நான்னா எதுவும் சொல்லமாட்டா.” கழுத்திலிருந்த பாசியைக் கழட்டி செயினை சரி செய்து, “இப்பப் பார்க்க இன்னும் அம்சமாயிருக்க. இது எப்பவும் உன் கழுத்துலதான் இருக்கணும். எந்த சந்தர்ப்பத்துலயும் இந்தச் செயினைக் கழட்டக்கூடாது. இது உன் இசக்கிமா உனக்காகக் கொடுத்தது. சரியா?”
பேசிக் கொண்டிருந்தவர் சென்றதும் திரும்பிய பூவரசி செயினைப் பார்த்து, “எதுக்கு இசக்கி இதெல்லாம்? செயின் எப்படியும் மூணு பவுன் இருக்கும்போல. மச்சான் திட்டப்போறாங்க” என…
“அதெல்லாம் எதுவும் சொல்லமாட்டாங்க. இவள் எனக்குப் பொண்ணுன்னா.. அவங்களுக்கு யாராம்? என் பொண்ணுக்கு நான் போடுறேன். எதுக்குன்னு ஏன் கேட்கிற? எதுவும் பேசக்கூடாது” என்று தோழியை அடக்கி, “நான் சொன்னது நினைவிருக்கா வெள்ளச்சி?” என்று சூர்யாவிடம் கேட்க… புரியாமல் அவள் பார்க்க… “தாயை மாதிரியே அப்பாவியாவே இரு” என்று திட்டி, “இந்தச் செயினை எப்பவும் கழட்டக்கூடாது சொன்னேன்ல. அதைக் கேட்டேன்.”
“சரிம்மா. எந்த சூழ்நிலையிலும் கழட்டமாட்டேன்” என்றாள் புன்னகையுடன்.
“சரி சாப்பிட வா இசக்கி. நீயும் வாப்பா சபரி.”
“பசிக்கலை அத்தை. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷங்கழிச்சி சந்திச்சிருக்கீங்க. பேச நிறைய இருக்கும். சாப்பிட்டுட்டேப் பேசுங்களேன். பிறகு நேரம் கிடைக்காது.”
“அதெல்லாம் எவ்வளவு கூட்டத்திலும் நாங்க பேசிப்போம். பசிக்கலைன்னாலும் சாப்பிட வா” என்றழைத்துச் சென்றார்.
“இன்னும் மூணு நாலு வருஷம் கழிச்சி சபரிக்குப் பொண்ணு பார்த்திருந்தா, நம்ம வெள்ளச்சியை எடுத்திருப்பேன் பூவு.”
“அதனாலென்ன? நாலு வருஷம் காத்திருக்கச் சொல்லு மருமகனுக்கே முடிச்சிரலாம்” என்றார் புன்னகையுடன்.
“ஏய்! இவனுக்குக் கல்யாணம் முடிவாகிருச்சின்றதாலதான தைரியமா சொல்ற? மயினி மட்டும் அவசரப்படலைனா தூக்குடா பொண்ணைனு சொல்லியிருப்பேன்.”
“ஹா..ஹா அதான நீ யாரு?” என்ற பூவரசிக்கு நீண்ட வருடங்கள் கழித்து நிறைவான புன்னகை.
“அம்மா உங்களை அப்பா கூப்பிட்டதா தம்பி சொல்லிட்டுப் போறான். வாசல்ல நிற்கிறாங்க போல” என்று சூர்யா வந்து நிற்க…
“அப்படியா? ம்… சரி இவங்களுக்கு சாப்பாடு வை. அம்மா என்னன்னு கேட்டுட்டு வந்திருறேன்.”
“ம்… சரிம்மா” என்றாள்.
அதைப் பார்த்திருந்த சபரிநாதன், “அம்மா எது சொன்னாலும் தலையாட்டல்தானா?” எனக்கேட்க…
“அம்மான்னா ஸ்பெஷல் இல்லையா மச்சான். சொல் பேச்சு கேட்கிறதில் தப்பில்லை” என்று புன்னகையுடன் சொன்னாள்.
“எப்படிப் படிக்கிற வெள்ளச்சி?”
“எனக்கு எத்தனை வயசாகுது. இன்னும் வெள்ளச்சிதானா இசக்கிம்மா?” என்று சிணுங்க…
[the_ad id=”6605″]
“உன்னை முதல் முதல்ல தூக்கிப் பார்த்தேனே அப்ப எப்படியோ… அதுதான் எப்பொழுதுமே!”
“நான் இப்ப கலர் கம்மியாகிட்டேன்மா” என்று தன் முகத்தைத் தொட்டுக் காண்பிக்க…
“மண்ணுக்குள்ள இருந்தாலும் வைரம் வைரம்தான். படிக்கிற பொண்ணுடா நீ. வெயில், அலைச்சல் இப்படிக் காரணத்தால கலர் கம்மியா தெரிவ. அதுக்காக நீ கருப்பாகிருவியா?”
“பொண்ணை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க” என்று புன்னகைத்தவள், “அச்சோ! அதுக்குள்ள ஏன்மா கையைக் கழுவிட்டீங்க? பேசிட்டிருந்ததுல நானும் கவனிக்கல” என்றாள்.
“உன்னைப் பார்த்ததுலயே மனசு நிறைஞ்சிருச்சிமா. உன்கிட்டப் பேசிட்டே சாப்பிட்டதுல வயிறும் நிறைஞ்சிருச்சி.”
“மச்சான் நீங்களாவது கொஞ்சம் சாதம் வச்சிக்கோங்க.”
அவள் கேட்ட விதத்தில் மறுக்கத் தோன்றாமல், “கொஞ்சமா வை போதும்” என்றான்.
“நானும் கொஞ்சம்தான் வைப்பேன். அதிகம் வச்சி வேஸ்டாகிரக்கூடாதே. சாதம் அன்னலட்சுமி! தெய்வத்தை யாராவது அவமதிப்பாங்களா?”
“அம்மா தாயே! நீ வை நான் சாப்பிடுறேன்” என்று உண்டு முடித்து எழுந்து கைகழுவி கர்சீப் எடுக்கப் போனவனிடம், “இந்தாங்க மச்சான்” என்று எடுத்து வந்த துண்டைக் கொடுத்தாள்.
பதிலுக்கு “தேங்க்ஸ்” என்றான்.
“இதுக்கு எதுக்கு நன்றி சொல்றீங்க? வீட்டுக்கு வந்தவங்களைக் கவனிக்கிறதுக்கு நன்றி தேவையில்லை” என மிடுக்காகச் சொல்ல…
“சரிமா சொல்லலை. மறக்காம என் கல்யாணத்துக்கு வந்திரு.”
“கல்யாணம் எங்க மச்சான்?”
“ராமேஸ்வரத்துலதான். பொண்ணு வீடு இராமநாதபுரத்துல இருக்கு.”
“அம்மாவே வர்றாங்களோ என்னவோ தெரியாது. இதுல நான் எப்படி? அம்மா சைடுனா விசேஷம்னா அம்மா போவாங்க. அப்பா சைடுலனா அப்பா போவாங்க. அப்பக்கூட அம்மா… ம்… பார்க்கலாம்” என்றாள் யோசனையுடன்.
“சரிமா. விழா நாயகி நீ உள்ள போ. நான் வெளிய போய் உட்கார்றேன்” என்றவன் இசக்கியினருகில் வந்தமர்ந்து, “பொறுப்பும் குழந்தைத்தனமும் சேர்ந்த பொண்ணு அத்தை. எவ்வளவு ஈஸியா ஒரு உறவை ஏத்துக்கிட்டு முறை சொல்லிக் கூப்பிடுறா” என்றவனுக்கு ஆச்சர்யமே!
“அப்பத் தூக்கியிருவோமா?” மருமகனைப் பார்த்துக் கண்ணடித்தார் இசக்கி.
“அப்ப மது?” என்றான் சிரித்தபடி.
“ஆக தூக்குறதுல பிரச்சனை இல்ல. மதுதான் பிரச்சனை. அப்படித்தான?”
“ஐயோ அத்தை! நான் என்ன அர்த்தத்துல சொன்னா… நாம யாரையும் தூக்கவும் வேண்டாம். அந்த வெள்ளச்சியும் வேண்டாம்.”
‘என்னது? நான் வேண்டாமா உனக்கு?’ மனக் கண்முன் காளி அவதாரம் எடுத்திருந்தாள் சூர்யா.
“பூவுகிட்டச் சொன்னதுதான் சபரி. உங்கம்மா அவசரப்படலைன்னா என் பொண்ணை உன்கிட்டதான் சேர்த்திருப்பேன். உனக்கு அவளும் அவளுக்கு நீயும் நல்ல பொருத்தமாயிருப்பீங்க.”
“என்ன அத்தை நீங்க. அவ ரொம்பச் சின்னப் பொண்ணு. பதினைந்து வயதிருக்குமா?”
“பதினாறு முடிஞ்சி பதினேழு நடக்குது.”
“சரி. உங்க பாய்ண்ட் வந்தாலும், பதினாறுக்கும் இருபத்தைந்துக்கும் நடுவுல ஒன்பது வருஷம் நிற்குதே. சின்னப் பொண்ணு அத்தை. அவளுக்கு ஏற்ற பையன் கிடைப்பான்.”
“பூவுக்கு ஆன மாதிரி ஆகிரக்கூடாதுடா. ஏற்கனவே தான் நாலாவது பிறந்து கஷ்டப்படுற மாதிரி தன் பொண்ணுக்கும் ஆகிருமோன்னு பயப்படுறா. அந்த பயத்தைப் போக்கவாவது நல்ல வரன் அமையணும்.”
“உங்ககிட்ட சொல்லாமலா மாப்பிள்ளை பார்ப்பாங்க. அப்ப பெஸ்டா செலக்ட் பண்ணிரலாம் அத்தை” என்றான்.
தாய்மாமன் வீட்டினர் நேரத்திற்கே வந்து அருகிலுள்ள கோவிலில் இருக்க, அங்கிருந்து மேளதாளத்துடன் பூவரசியின் வீட்டிற்குச் செல்வதாகயிருந்தது. கோசலை மட்டும் பேத்தியைப் பார்க்கும் ஆவலில் பேத்தியிடம் வீடு வந்துவிட்டார்.
சடங்கு நேரம் நெருங்க விளக்குகள் பளிச்சிட்டு வெளியே தாய்மாமன்கள் வரவை முன்னிட்டு மேளச்சத்தம் கேட்டது.
“வந்து ரெண்டு மணிநேரமாகுது. இவ்வளவு நேரம் எல்லாரையும் கோவில்ல காத்திருக்க வைச்சிட்டார் உன் புருஷன்” என சடைப்பாக சொன்னார் கோசலை.
“அம்மா! நானே எல்லாம் சரியா நடக்கணும்னு நினைச்சிட்டிருக்கேன். நீங்க எதாவது பேசி அவர் காதுல விழுந்துரப்போகுது.”
“ஆமா பேசிட்டாலும். மருமகன் வாயைத் திறக்காமல் இருந்தாலே போதும். எல்லாம் சரியா நேரா நடக்கும்” என கோசலை கரித்துக்கொட்ட… அதற்குள் மேளம் வீட்டு வாசலில் நின்றது.
நடு ஹாலில் வரிசைத்தட்டு வைத்து மாமன் சேலையை அவர்களது மனைவிமார் சூர்யோதயாவிடம் எடுத்து வந்து, அவளுக்குத் தலைக்கு ஊற்றி, புடவைகட்டி அலங்காரம் செய்து சபைக்கு அழைத்து வந்து அங்கிருந்த நாற்காலியில் அமரவைக்க சுற்றியிருந்த அத்தனை கண்களும் சூர்யாவின் மேல் பட்டுத்தெறித்தது.
“பூவு மகளா இது? எவ்வளவு அழகு” என தாய்வீட்டு சொந்தங்கள் ஆச்சர்யப்பட… “இந்த தர்மா பயலுக்கு பொண்டாட்டி பொண்ணு இரண்டுமே அழகா மாட்டிக்கிருச்சி. பொழைக்கத் தெரியாத, பொறுக்கித்தனமா சுத்துற பயலுக்கெல்லாம் நல்ல வாழ்க்கை அமையுது. நம்ம வீடுகள்ல… ஹ்ம்… கடவுள் கூட ஓரவஞ்சனைதான் செய்கிறார்” என்பதான ஏக்கப் பெருமூச்சு அவர்களுக்குள்.
[the_ad id=”6605″]
மாமன் மாலை போட்டதும் தொடர்ந்த சடங்குகள் அனைத்தும் முடிய, எட்டு வயதுப் பையனுடன் வந்திருந்தாள் தர்மராஜின் தங்கை முருகேஸ்வரி. வாழ்க்கையில் அடிகள் பல வாங்கி சற்று மனம் தெளிந்திருக்கிறாள். முருகேஸ்வரியின் திருமணத்தை நடத்த அவளின் அண்ணன்கள் மூவருடன் சேர்த்து அவளின் தகப்பனும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கருப்பாக கொஞ்சம் குண்டான உருவத்தால் மாப்பிள்ளை கிடைக்காதது வீட்டு ஆண்களுக்கு இன்னும் வசதியாகிப்போனது.
முடிந்தவரை அவளுக்கு எதாவது செய்வார்கள் எனக் காத்திருந்த பூவரசி, அவர்களின் விட்டேத்தியான செயலைக்கண்டு, ‘இவங்களை நம்பினா வேலைக்காகாது. நாமதான் எதாவது செய்து வயசுப்பொண்ணைக் கரையேத்தணும்’ என்று அத்தனை ஆண்டுகள் பழகிய இடமென்பதால் சிலரிடம் சொல்லி வைத்திருக்க…
முதலில் கிடைத்த வரன் நல்லதாக இருந்தது. முருகேஸ்வரியின் நேரமோ என்னவோ, கிணற்றடியில் குளித்துக் கொண்டிருக்கையில் அங்கு வந்த மாப்பிள்ளைப் பையன், “இன்னைக்கு இவள் துணியை மட்டும் துவைக்கிறா. கல்யாணத்துக்குப் பிறகு என்னோடதையும் சேர்த்துத் துவைப்பா” என்று கேலி செய்ய… சுருக்கென்று அவளின் முன்கோபம் முன்னே வர பூவரசியிடம் வந்து “அவனைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று பிடிவாதமாக நின்றாள். அவன் விளையாட்டுக்குப் பேசினேன் என்று சொல்லியும் அவள் கேட்கவில்லை. அந்த கல்யாணப் பேச்சு அத்தோடு நின்றது.
அடுத்து வந்த வரன் பார்க்க வளர்த்தியும் சிவந்த உடலுமாக இருக்க முருகேஸ்வரிக்குப் பிடித்துவிட்டது. அவனுமே களையாக இருந்த முகம் பார்த்து சம்மதித்திருந்தான். திருமணம் முடிந்து சில மாதங்களில் பூவரசியிடம் வந்தவள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாள். பதறி என்னவென்று கேட்கையில், “என் புருஷன் தினமும் என்னை அடிச்சிக் கொல்றார் மயினி. எத்தனையோ தடவை நீங்க எனக்கு அறிவுரை சொன்னீங்க. என்னோட திமிர்னால அதைக் காது கொடுத்துக் கேட்டுக்கல. அண்ணனும் அம்மாவும் உங்களை அடிக்கும்போது வேடிக்கை பார்த்ததுமில்லாமல், நானுமே உங்களை ரொம்பக் கொடுமைப்படுத்திட்டேன். அதுக்கெல்லாம் இப்ப நான் அனுபவிக்கிறேன். நான் உங்களோடவே எதாவது வேலையைப் பார்த்துட்டு இருந்திருறேன்” என்று அழுதாள்.
“அப்படிலாம் இருந்திர முடியாது முருகேசு. கொஞ்ச நாள்லயே இப்படி வந்து நிற்கிற. அப்படி நினைச்சிருந்தா நான் கல்யாணம் முடிஞ்ச மறுநாளே எங்கம்மா வீட்டுக்குப் போயிருக்கணும். ஏன் போகலன்னு கேட்டா என்கிட்டப் பதில் இப்பவும் கிடையாது. உன் புருஷன்கிட்டப் பேசி விட்டுட்டு வர்றேன்” என்று அழைத்துச் செல்ல… வரமாட்டேனென்று அவள் மறுக்க… வலுக்கட்டாயமாய் இழுத்துச் சென்று அவள் கணவனிடம் பேசி விட்டு வர… சில நாட்கள் தன்மையாகச் செல்லும். அடுத்து வன்மை ஏறி சண்டை முற்றி பூவரசியைத் தேடி வருவாள்.