அவள் கணவனிடம் கேட்டால், “வாய்க்கு வாய் எதிர்த்துப் பேசுறாக்கா. வீட்லயும் யார்கூடவும் சரியா ஒட்டுறதில்ல. பதிலுக்குப் பதில் பேசினால் கோபம் வராதா” என்பான். ஆண்கள் யாரும் அதைக் கண்டுகொள்வதில்லை. ஆக மொத்தம் நாத்தனாரைக் கட்டிக்கொடுத்து இருவருக்கும் இடையில் மீடியேட்டர் வேலை பார்த்தே பூவரசிக்கு நாட்கள் ஓடியது. முருகேஸ்வரி அவளின் பெரிய அண்ணன் வீட்டிற்கு செல்லமாட்டாள். சுகம் துக்கம் எல்லாவற்றிற்கு பூவரசி மட்டுமே வேண்டும்.
அதேபோல் கொழுந்தன் கோவிந்தராஜனும் சென்னையில வேலை செய்கிறேன் என்று நிறைய வருடங்கள் ஓடியிருக்க, நாத்தனாரைப்போல் அவனுக்கும் பூவரசிதான் பெண்பார்க்க வேண்டியதாகியது. முப்பத்து நான்கு வயதில் தலை சற்று வலுக்கையடிக்க பெண் கிடைப்பது அரிதானது. அதையும் மீறி ஒரு சம்பந்தம் வர, மணமேடையில் அவனைக் கண்ட அப்பெண், “கிழவனைக் கட்டிவைக்கப் பார்க்குறீங்களா. இந்தாளைக் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்” என்று அடம்பிடிக்க, பெரியவர்கள் வற்புறுத்தி முடித்து வைத்தனர்.
அவளுக்கு பதினெட்டே வயது. அவனைப் பிடிக்காமல் பூவரசியைச் சுற்றினாளே தவிர, புருஷனை கண்டுகொள்ளவே இல்லை. சில நாட்களில் பிடிவாதமாக அவனை வேண்டாமென்று தாய்வீடு செல்ல… சென்ற சில மாதங்களில் அவளுக்கு இரண்டாவது திருமணம் செய்துவிட்டார்கள்.
முதல் கல்யாணம் தோற்றுப்போக, அவளுக்குத் திருமணமான விஷயம் கேள்விப்பட்ட தர்மராஜனின் அப்பா, அவசர அவசரமாக ஒரு பெண்ணைப் பார்த்துக் கோவிலில் வைத்துக் கல்யாணம் செய்து வைத்தார்.
காய்ந்த மாடு கம்மங் கொள்ளையில் புகுந்தால் எப்படியிருக்குமோ அதுதான் அவனின் நிலையும். முதல் மனைவியிடம் பெற முடியாததை எல்லாம் இவளிடம் பெறத்துடிக்கும் அவசரம். இருபத்து நான்கு மணிநேரங்களும் தனி அறைக்குள்ளேயே அவர்களின் லீலைகள் தொடர, அவர்களின் அறையைத் தட்டி விளையாடுவது சூர்யா, பரத் தாண்டி பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கும் விளையாட்டானது என்றால்… அவர்களை விரட்டுவது கோவிந்தனின் வேலையானது.
வேறு ஊருக்குத் தனிக்குடித்தனம் சென்று அவளுடனான வாழ்க்கையில் ஒரு பெண் குழந்தை பிறக்க, அடுத்த சில வருடங்களில் பக்கவாதத்தில் விழுந்துவிட்டான். நன்றாக இருந்தவன்… மனைவியை நோகாமல் தாங்குபவன். அவனுக்கு அப்படி என்றதும் தன்னாலேயே பதற்றம் வரத்தான் செய்தது பூவரசிக்கு.
முதுகுளத்தூரில் இருக்கும் அவன் வீட்டிற்குச் சென்று விசாரிக்க, பூவரசியும் கோவிந்தனும் தனியாக இருக்கும் வேளையில், “என்னை மன்னிச்சிருங்க மயினி” என்று கையெடுத்துக் கும்பிட்டான். அவன் வார்த்தைகள் யாவும் திக்கித்திணறியே வந்தன.
“எ..என்னாச்சி? கையை கீழே இறக்கு” என்ற பூவரசிக்கு அதிர்வுதான். திருமணம் முடிந்த நாளிலிருந்து அண்ணன் மனைவி என்ற மரியாதை கொடுத்ததில்லை. மாறாக அடிக்கவில்லை என்றாலும் கையை ஓங்கிய நிகழ்வு நடந்திருக்கிறது. கட்டினவன் சரியில்லையெனில் எலி கூட புலி வேஷம் போடும்போல! பூவரசியை அவன் பேசாத வார்த்தையில்லை. அவளின் அம்மாவை இழிவுபடுத்தும் கெட்ட வார்த்தைகளையும் இன்ன பிற வார்த்தைகளையும் சாதாரணமாக அண்ணியவளிடம் உச்சரித்திருக்கிறான்.
இதோ பேசிய வாயும், ஓங்கிய கையும் காலும் இழுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவிற்கும் பூவரசி அவனுக்கு சாபமிட்டதில்லை. சிறு வயதில் இப்படியிருக்கிறானே என்ற வருத்தம் இருந்திருக்கிறது.
கடவுள் இருக்கிறார் என்பது இதுதானோ! தெய்வம் நின்று செய்கிறதா!
[the_ad id=”6605″]
“நான் உங்களைப் பேசிய வார்த்தையெல்லாம் என் பொண்டாட்டி வடிவுல வந்து நிற்குது. இப்படி ஆகுறதுக்கு முன்னாடி தெரியாமல் நடந்ததெல்லாம், எனக்கு இப்படியானதும் கண்முன்னயே நடக்குது. எவனெவனோ வர்றான். ஏன்டின்னு கேட்க முடியல. உத்தமியான உங்களை வாய்க்கு வாய் தப்பானவள்னு பேசினதுக்குச் சரியான தண்டனைதான் குடுத்திருக்கார் கடவுள். எனக்கு வாய்ச்சவளே அப்படியிருக்கிறா மயினி. என்னை மன்னிச்சிருங்க” என மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான்.
இத்தனை வருடங்களாக பூவரசியின் மனதிலிருந்த வடுவில் ஒன்று அடையாளம் தெரியாமல் மறைந்தது. அதன் தாக்கமோ என்னவோ அவர்களைத் தங்கள் ஊருக்கே அழைத்து வந்து சற்றுத்தள்ளி குடித்தனம் வைக்க… பூவரசியின் மாமனாரோ நான் சின்ன மகன் வீட்டில்தான் இருப்பேனென்று அங்கு சென்றாலும் அவருக்கான உணவு பூவரசிதான் கொடுப்பது. தான் பார்த்த பெண் என்பதால் சின்ன மருமகள்மேல் அலாதி பாசம் அவருக்கு.
மாமனாருக்குக் கொடுத்து விடும் உணவின் அளவு நாளுக்கு நாள் அதிகரிக்க, சற்று நாட்கள் கழித்தே சின்ன மகனின் குடும்பமும் அதில்தான் சாப்பிடுகிறதென்று புரிந்தது. வயதான மனிதர். பக்கவாதத்திலிருக்கும் கொழுந்தன்… தன் குணம் கொடுப்பதே என்று இன்று வரை பூவரசி கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கான நன்றி அவர்களிடம் இருக்கிறதா என்றால் அது சுத்தமாக கிடையாது.
உதவியின் விளைவு பூவரசியின் வீட்டில் வெடித்தது.
இதோ மேடையின் முன் ஊன்றுகோலை சேரின் அருகில் வைத்து மேடையை கல்மிஷமில்லாமல் பார்த்திருக்கும் கோவிந்தராஜன்… இன்னொரு புறம் ‘எதாவது வேலையிருக்கா சொல்லுங்க செய்றேன்’ என்று ஓடியாடும் முருகேஸ்வரி. காலம்தான் எவ்வளவு விசித்திரங்களை வைத்திருக்கிறது.
மேளம் போட்டோ என்று சடங்கு நல்லபடியாக நடந்து பந்தி நடந்து கொண்டிருந்தது.
பூவரசியிடம் வந்த இசக்கி, “பூவு நாங்க கிளம்புறோம்” என…
“இந்த நேரத்துலயா? இருந்து நாளைக்குக் காலையில போகலாம் இசக்கி.”
“கடைசிப் பஸ்ஸைப் பிடித்தாவது இராமேஸ்வரம் போயிருவேன்னு உங்க மச்சான்கிட்டச் சொல்லியிருக்கேன்.”
“சித்திகிட்டச் சொல்லிருறேன் இசக்கி.”
“சித்திகிட்டச் சொல்லிருவ. உன் மச்சான்கிட்ட யார் சொல்றது? இராமேஸ்வரத்திலிருந்து காலையில பஸ் ஏறி சீக்கிரம் வந்து சேருன்னு போன்ல இங்க வர அனுமதி கேட்கும்போதே சொல்லிட்டாங்க. இப்ப மீற முடியாது. ரவி கடையை தனியா பார்த்திட்டிருக்கான். இல்லன்னா கூட சமாளிச்சிக்குவாங்க. புரிஞ்சிக்கோ பூவு.”
“சரி இசக்கி. சபரி கல்யாணம் எங்க வச்சி?”
“ராம்நாடு. வந்தன்னா அப்படியே அம்மாவைப் பார்த்த மாதிரியும் இருக்கும்” என்றவர் “சபரி கிளம்பலாமா?” என்றார்.
“ஏய் இரு. ஏன் அவசரப்படுற?” சுற்றிலும் பார்த்து தன் பெரிய மகனைக் கண்டதும், “ராமு வந்து சித்தியையும் மச்சானையும் பஸ் ஏத்திவிட்டுட்டு வா. துணைக்கு தம்பியையும் கூப்பிட்டுக்கோ” என…
“சரிம்மா” எனும்போது சூர்யா வர, இசக்கி ஊருக்குச் செல்வதாகச் சொல்லவும் அழப்பார்த்தவளின் கன்னத்தில் முத்தமிட்டு, “என் பொண்ணுக்கு முதல்ல திருஷ்டி சுத்திப்போடு பூவு. எத்தனை பேர் என்னெல்லாம் பேசிச்சிதுங்க தெரியுமா? சரி கிளம்புறோம்?” என்று பஸ் ஏற நடந்தார்கள்.
அவர்கள் செல்ல பூவரசியின் அம்மா, அண்ணன்கள் அக்கா வீட்டினர் அனைவரும் கிளம்பும்போது ஆரம்பித்தது அப்பிரச்சனை. அதுவரையிலும் தர்மராஜன் நல்லவன் வல்லவன் என்பதாய் இருந்த மாயை பூவரசியின் உறவினர்களிடமிருந்து மறைந்தது.
“என்ன பூவரசி உன் புருஷன் இப்படியிருக்கார்? உன் கல்யாணத்தப்ப போடாத நகையை பொண்ணு விசேஷத்துக்கு வந்தப்பவா கேட்கிறது? இதோ உன்னோட அம்மா இங்கதான் இருக்காங்க. இவங்ககிட்ட இருந்தா கேட்டு வாங்கிக்கச் சொல்லு அவரை.”
“அவர்தான் எதோ கேட்டார்னா, நீங்களும் ஏன் இப்படிப் பேசுறீங்க?”
“பேசாம என்ன செய்யச்சொல்ற? அவனவன் குடும்பத்தைப் பார்க்க வேண்டாமா? உன் சின்ன அண்ணன் பொண்டாட்டி, என் புருஷன் சம்பாதிக்கிறதுக்கு முன்ன பேசினதுக்கு நான் பொறுப்பாக முடியாது சொல்றா.”
“இப்படி ஒவ்வொருத்தரா பொறுப்பைத் தட்டிக்கழிச்சா எப்படியாம்?” என்று தர்மராஜன் இடையிட…
“இப்பதான் கல்யாணம் செய்த மாதிரி நகை கேட்டா எப்படி? உங்க பொண்டாட்டிக்கு நீங்க செய்து போடுங்க எங்களுக்கென்ன வந்தது?” என்று பெரிய மருமகள் பட்டென்று பேச…
“அப்ப பேசின நகையைப் போடமாட்டேன்றீங்களா?”
[the_ad id=”6605″]
“இனிமேல் நகை வேணும்னா உங்கப்பனைப் புதைச்ச குழியிலிருந்துதான் எடுக்கணும் பூவுமா” என்றார் கோசலை. அவருக்குக் கோபம். ஏற்கனவே மகள் வாழ்க்கை சிதறிக்கிடக்கிறது. இதில் தங்களுக்கு சம்பந்தமே இல்லை என்பதாய் பேசும் மருமகள்களும், அதோடு ரொம்ப யோக்யன் என்ற நினைப்பில் நகை கேட்கும் மருமகனின் பேச்சும் பிடிக்காது சொல்லிவிட்டார்.
“உங்க வீட்டுக்கார் சம்பாதிச்சி உனக்கோ, உன் பொண்ணுக்கோ என்ன நகையைப் போட்டிருக்காராம்” என்று சின்ன அண்ணன் மனைவி நாசூக்காய் பிரச்சனையை பூவரசியிடம் திருப்பினார்.
பூவரசியின் அக்காவோ, “உனக்காகத்தான் பூவு அந்த மனுஷனை கேள்வி கேட்காம இருக்கோம். இல்ல…” என்று நிறுத்தினார்.
“இல்லன்னா என்ன பண்ணுவீங்களாம்?” என்ற தர்மராஜனின் அருகில் அண்ணன் நடராஜனும், கோவிந்தராஜன் மனைவியும்.
“தர்மர் பேருக்கேத்தாப்ல தர்மரானவன் மாப்பிள்ளைன்னுதான கட்டி வச்சது. ஆனா, பெயருக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லையே?” என்று பூவரசியின் அக்கா கேள்வியெழுப்பினார்.
“சம்பந்தம் இல்லாதவன் வீட்டுக்கு ஏன் வர்றீங்க?”
“இது கேள்வி. எல்லாருக்கும் கேட்டுச்சா? அவர் நியாய தர்மத்தை அவரே வச்சிக்கட்டும். வாங்க கிளம்பலாம்” என்று அவர்கள் செல்ல… கோசலைதான் யாருக்காகவும் பேச முடியாது, “என் பொண்ணு கடைசிவரை இப்படி அல்லாடிட்டுதான் இருக்கணுமா? அவளுக்கு விடிவே வராதா?” என அழுகையில் கரைந்தார்.
அடுத்த இரண்டு மாதத்திற்கெல்லாம் அவரும் இயற்கை எய்திட, பூவரசியின் பிறந்த வீட்டு உறவு விசேஷங்களுக்கு மட்டுமே என்றானது.
செல்பவர்களைத் தடுக்கும் பொருட்டுப் பேசிய பூவரசியின் கெஞ்சல்கள் யாவும் வீணானதுதான் மிச்சம். அவர்கள் சென்றதும், “எங்க வீட்டாளுங்களை அனுப்பியாச்சி. இப்ப சந்தோஷமா?” என்று கோபத்தில் திட்ட…
“நகைபோட வக்கில்ல. பேச்சு வேற கேட்குதா. போ போய் நகை வாங்கிட்டு வந்து பேசு” என்று வாயை அடைத்து உட்கார வைத்தார்கள்.
இரவில் தர்மராஜன் அண்ணனுடன் தன் தம்பி மனைவி மூவரும் போட்ட கூட்டணியின் பலன் காலையில் பூவரசியின் மேல் அடியாக இறங்கியது. இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் காத்திருந்திருப்பாரோ? மகனின் மேலுள்ள பயத்தால் கை நீட்டாதிருந்தவர், மற்றவர்கள் ஏற்றிவிட்டதில் தன் கை குறுகுறுப்பைத் தீர்த்துக் கொண்டார்.
“ஏன்மா அப்பா அடிச்சாங்க?” தாயின் கையிலுள்ள காயத்தைப் பார்த்த சூர்யா கேட்க…
“எனக்கென்ன தெரியும். சொல்லிட்டா அந்த மனுஷன் அடிக்கிறார். நைட் நாம தூங்கினதும் அண்ணனோடவும் தம்பி பொண்டாட்டியோடவும் ஏதோ குசுகுசுன்னு கூடிக்கூடிப் பேசிட்டிருந்தாங்க. காலையில…” என்று கன்னத்தைக் காட்டினார்.
“இந்தச் சித்திக்கு என்னவாம்மா? என்னையும் பார்க்கிறப்ப எல்லாம் முறைச்சிட்டே இருக்காங்க. எனக்கு அவங்களைப் பிடிக்கவேயில்லைம்மா.”
“அவளை ஏன் பேசிட்டு. நம்ம வீட்டுல உள்ள ஆள் சரிகிடையாது. நீ பள்ளிக்கூடம் கிளம்பலையா? சைக்கிள்ல காத்து இருக்கான்னு பார்த்துக்க. ரெண்டு நாளைக்கு அண்ணனோட போ” என்று லட்சுமணனை அழைக்க… சோம்பலாய் வந்து நின்றிருந்தவனிடம் தங்கையை பள்ளியில் விடச்சொல்லி சொன்னார்.
“என்னது சைக்கிளா? மூணு கிலோமீட்டர் இவளை வச்சிக்கிட்டு சைக்கிள் மிதிக்கணுமா? என்னால முடியாது. அண்ணன்கிட்ட டிவிஎஸ் பிப்டி வாங்கித் தாங்க கூட்டிட்டுப் போறேன்.”
“அம்மா இவன்கிட்ட அதைக் கொடுத்தா வரும்போது இரும்புக்கடையிலதான் போடணும். இது சரிவராது நானே கூட்டிட்டுப் போறேன். வா சூர்யா” என்று முன்னே நடக்க… சின்ன அண்ணனுக்கு அலவம் காட்டிச்சென்றாள்.
“பாருங்கம்மா அலவங்காட்டிட்டுப் போறா.”
“அண்ணனா இருக்கச் சொன்னா நீ மாட்ட. அப்புறம் அவளை எப்படி குறை சொல்றது? பெரியவன் குடும்பப் பொறுப்பைச் சுமக்குறான். நீ வேலைன்ற பெயர்ல கண்துடைப்பு பண்ற.”
“அப்ப என்னையும் படிக்க வச்சிருக்கலாம்ல” என்று தெனாவெட்டாய் கேட்க… பூவரசியோ அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்துத் திரும்பிக்கொள்ள… “ம்மா கேட்டதுக்குப் பதில்” என்று கேள்வியுடன் நிற்க…
“அடிபடாம போயிருடா. படிக்கச் சொல்லி வாத்தியாருங்ளே விட்டுக்கு வந்து கேட்டும் என்னால முடியவே முடியாதுன்னு சொல்லிட்டு ஓடினவன் நீ. மரத்துல கட்டி வச்சி உதைச்சும் கேட்கல. இப்படி என்னைக்காவது வந்து கேட்பன்னு தெரிஞ்சிதான் அன்னைக்கே தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். இப்பப் பழியை எங்கமேலயே திருப்புறீகளோ” என்று ரெய்ட் விட…
“டேய் கூப்பிட்டியா?” இல்லாத நண்பனை வரவழைத்து ஓடிவிட்டான்.
தொடர்ந்து வந்த நாட்களில் பூவரசியின் மாமனாரும், கொழுந்தனும் இறந்துவிட்டார்கள். சனி பிணம் தனிப்போகாது என்ற பழமொழிக்கேற்ப மாமனார் காசிராஜன் இறந்து முப்பகு கழிக்கும் முன் சின்ன மகனும் இறந்துவிட… இரு சாவுகளைக் கண்ட வீடு அமைதியாகவே இருந்தது.
வேலைக்குச் செல்லுமாறு தர்மராஜனைச் சொல்ல அவரின் அமைதியே இனிமேல் செல்லமாட்டார் என்று சொன்னது. தனியாக இருக்கும் தம்பி மனைவிக்குத் துணையாய் தர்மராஜன் போக, நாளடைவில் தம்பி மனைவியைத் தனக்குத் துணைவியாய் ஆக்கிக்கொண்டாரோ! விஷயம் சிறிது சிறிதாகக் கசிந்து அவர்கள் குடும்பத்தைக் கண்டு ஊரே சிரித்தது.
அவமானத்தில் செத்துவிடத் தோன்றியது பூவரசிக்கு. ‘பேசாமல் பிள்ளைகளுக்கு மருந்தை வைத்துக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்ளலாமா’ என்ற எண்ணம் மனம் முழுவதையும் ஆக்கிரமித்தது.
[the_ad id=”6605″]
குடும்பப் பொறுப்பில்லாத, மனைவியைச் சந்தேகப்படும், மாற்றான் மனைவியைத் தேடும் ஆண்கள் கணவனாக வரப்பெற்ற பெண்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தங்களால் தாங்க முடியாமல், அவர்களையும் மீறி வரும் உணர்வு தற்கொலை. மன திடம் படைத்தவர்கள் அதிலிருந்து மீள்வர். மற்றவர்கள்…
கடைசி நேரத்தில் தன் சுயநல முடிவு தப்பு என்பதை புரிந்த பூவரசி கடவுளைத் தஞ்சம் அடைந்தார். அதே சமயம் அந்த ஊரில் இருக்கவும் இஷ்டமில்லை. மகள் மற்றும் சின்ன மகனின் படிப்பு, மேற்கொண்டு எதையும் செய்யவிடாமல் தடைபோட பல்லைக்கடித்து அவ்வூரிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை.
நிஜ அக்கறை உள்ள மனிதர்களும், நியாயம் புரிந்தவர்களும் இருப்பார்கள்தானே! அப்படிச் சிலரின் ஆதரவில் மனம் கொஞ்சம் தேறிவர என்றும்போல் தன் வேலையைத் தொடர்ந்தார். வேலைக்குச் செல்ல வேண்டாமென்று மகன் சொல்லியும் கேட்கவில்லை.
வீம்புதான் பூவரசியை வாழவைக்கிறதோ!