ஆதி சிவன் தான் பவி குட்டியின் தம்பி பெயர். மகளின் விருப்பத்தோடு, கடவுள் பெயரையும் இணைத்து தம் புதல்வனுக்கு தேர்வு செய்தான் வேலு.
பெரியாத்தாவுக்கு எப்பவும் ஐயனார் தான். அவரை பார்க்கும் நேரமெல்லாம் கையில் பேரனோடு தான் தென்படுவார். அந்த கால மனுசி அல்லவா! தங்கள் தலைமுறை காப்பது ஆண் வாரிசு தான் என்பதில் அவ்வளவு திண்ணம்.
அதுவும் பனிரெண்டு வருடம் சென்று வாய்த்த தவம் அல்லவா! நொடியும் கையில் இருந்து இறக்க மாட்டார். அத்தோடு யார் கையிலும் தரவும் மாட்டார்.
“என்னவோ காணாததா கண்ட மாதிரி, இந்த பெரியாத்தாவா கையிலே புடிக்க முடியலையே! நாம்மல ஆம்பளை பிள்ளை பெத்துகவே இல்லையா என்ன!” என்று குழந்தையை பார்க்க வந்தவர்கள் முணுமுணுத்தாலும் எதையும் சட்டை பண்ணாமல், அவர்கள் சொல்வது போல, காணாமல் கண்ட தங்கம் என்று தான் கொஞ்சுவார்.
வேலு தம்பதிகளுக்கு நாட்கள் நில்லாமல் ஓட்டம் கண்டது. கலங்கிய குட்டையில் தேங்கி நிற்கும் சேறு போல புதைந்து கிடந்த வாழ்வில் செந்தாமரை மலர், முழுதாக அனுபவிக்க தொடங்கினர்.
தங்களின் அழகிய குருவி கூட்டில் புது வரவான மகனையும் உள் இழுத்து, வாழ்வில் பட்ட பக்குவத்தை பாடங்களாக்கி பிள்ளை வளர்ப்பை கையாண்டனர்.
சம் பூர்ணா எப்பவும் போல தான் நில்லாமல் ஓடி கொண்டிருந்தாள். வீடு, தோட்டம், கணவன், பிள்ளை என்று எல்லாம் ஒரு ஒழுங்கு, கட்டமைப்பு தான். பிள்ளை பெற்ற ஒரு வாரம் தான் ஓய்வு. அதன் பின் வீட்டளவில் வேலையை தொடங்கி விட்டாள்.
வேலு தோட்டம், கடையை பார்க்கவே நேரம் இல்லாமல் இருக்க, வயதான மாமியார், சிறு பெண் பிள்ளையை வைத்து கொண்டு தனக்கு எங்கு தனிப்பட்ட ஓய்வு கிட்டும் . சுக பிரசவம் என்பதால் ஒரு வாரத்தில் வீட்டு வேலை செய்ய, கண்டிப்பாக தடுத்துவிட்டான் வேலு. பெரியாத்தாவும் வெளியே ஆள் வைத்து கொள்ளாலாம் என்று சொல்லி விட. பூர்ணாக்கு தான் மனம் ஒப்பவில்லை.
சிலர் இருப்பார்களே! தங்கள் வீட்டு வேலையை தாங்கள் செய்தால் தான் திருப்தி என்று. அந்த ரகம் தான் பூர்ணா. எவ்வளவு நேர்த்தியாக வெளி ஆட்கள் கொண்டு வீட்டு வேலை செய்தாலும், பூர்ணாக்கு திருப்தி மட்டும் வரவே இல்லை. அதுவும், அடுப்படியில் அவர்கள் தோதுக்கு மாற்றி வைக்கும் பாத்திரம், பொருட்கள் எல்லாம் இவளிடம் அழுவதை போல் இருக்க. கணவனிடம் சண்டை போட்டே, வீட்டை தனதாக்கி கொண்டாள்.
“நாளைக்கு மருமக வந்து, வெளி திண்ணையில குத்த வச்சு கஞ்சி ஊத்துவா!…” என்று பெரியாத்தா கேலி பேசினாலும் கண்டு கொள்ள மாட்டாள்.
குழந்தை பிறந்த பின், வாணி அத்தையாக தம் கடமையை நிறைவாக செய்தாள். ஆனால், பெரியாத்தாவுக்கு தான் மன சுணக்கம் போக வில்லை. மகளிடம் நேராகவே சொல்லி விட்டார்.
“உம் சின்ன மாமியார் மகளுக்கு ஒரு வாரம் முன்னவே போய் நிக்குறவ, சொந்த தம்பி மகன காண ஒரு வாரம் தள்ளி வார. நான் சொல்றதுக்கு ஒன்னுமில்லை பார்த்து இரு, உனக்கும் ஒரு பொம்பளை பிள்ளை இருக்கு. கடமையா செய்றது வேற, உரிமையா வந்து நிக்குறது வேற…. சம்மு உரிமையா வந்து நிப்பா!”
“ அம்மா! நான்” என்று ஆரம்பித்த வாணியை தடுத்தவர்.
“ உமக்கு இருக்கும் ஆயிரம் சோழி, உம் தம்மின்னு நேரம் ஒதுக்க கூடாதா?… யாரும் என்னை காங்கலன்னு குறை சொன்ன மட்டும் பத்தாது, நீயும் சொந்தத்தை கட்டி இழுக்கணும். எனக்கு யாரும் தேவை இல்லைன்ற காலம் இன்னும் உனக்கு வரல. சம்மந்தம் பண்ணனும் பொறுப்பா இரு, பொறந்த வீடு தானன்னு நினைக்காத, அந்நியமாகி நாள் ஆச்சு!” என்று குட்டி தான் விட்டார்.
அதன் பிறகு வாணி, ஒரு மாத காலம் கூடவே இருந்து தம்பி மனைவியை கவனித்து கொண்டாள்.
வேலு இப்போதும் மல்லிகை பூ, அல்வாவோடு வர, பெரியாத்தவுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது.
“இது என்ன கூத்து மகனே! பிள்ளை பெத்து முழுசா மூணு மாசம் கூட செல்லாலயே. இவள சொல்லணும், வேலு – வேலுன்னு அவன் பின்னாடியே தான் திரியிரா! அப்புறம் ஆம்பிளை புத்தி, வேற என்னத்தை சொல்ல…!” என்று புலம்பலாக சொல்லி உள்ளே சென்று விட்டார்.
வாணியும் சத்தமாக சிரித்து விட, பூர்ணாவிற்கு தான் முகத்தை எங்கு கொண்டு வைப்பதென்றே தெரியவில்லை. கடை, தோட்டம், பிள்ளை என்று பேச்சு அவர்களுக்குள் நீளும் தான். அதற்கு, வேலு இந்த கூத்தை எடுப்பான் என்று அவள் என்ன கனவா கண்டாள்.
கணவனையே உக்கிரமாக பூர்ணா முறைத்து கொண்டிருக்க, வாணி பிள்ளைகள் இருவரும் உறங்கும் அறைக்கு சென்று கதவடைத்து கொண்டாள். அவர்களுக்கான தனிமையை கொடுக்கும் விதமாக அமைந்ததில், கோபம் கூடி போனது மனைவிக்கு.
திருட்டு முழி முழித்து கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்த கணவனை நோக்கி சென்றவள்.
“ இந்த ஊருல வேற இல்லை சம்மு இது தான் இருக்கு. நம்மூர் பொண்ணுகளுக்கு இது தான் புடிக்கும் போல” என்று சலித்து கொண்டான் கணவன்.
“ ஊமை ஊர கெடுக்கும்ன்றது சரியாத்தான் இருக்கு” என்று சாடியதோடு
“இங்காரு வேலு! உம் மல்லிகை பூ வுக்கும், அல்வாவுக்குமான கணக்கு முடிஞ்சு மூணு மாசம் ஆச்சு. கட்டில்ல ஒன்னும், தொட்டில ஒன்னுமா ரெண்டு இருக்கு வீட்டுல. போதும் சாமி நம்ம பொழப்புக்கு. இனிமெல்லாம் வெளி திண்ணையில தங்கி பழகு” என்று சொன்னதோடு நடையை கட்ட.
எட்டி மனைவியின் கை பிடித்தவன், “ சம்மு, அப்படிலாம் அவசரப்பட்டு எதுவும் சொல்லாத! எனக்கு நெஞ்சு வலியே வந்துரும்”… என்றான் பாவமாக.
“எடு அந்த விளக்கமாத்த! பிள்ளை இல்லாத வீட்டுல கெழவன் துள்ளி விளையாண்டானாம்!… கூறுகெட்டவன். நானும் கொஞ்ச நாளாக பார்த்துக்குதான் தான் இருக்கேன். ராத்திரி பத்தானா போதும் துரைக்கு, பால் சட்டிய சுத்தி வார பூனை மாதிரி, கண்ணு ரெண்டும் என்னையவே உத்து பாக்குது, பார்த்து வேலு வாய் வெந்து போகும். மரியாதையா பெரிய மனுசன் மாதிரி நடந்துக்க!..” என்று கோபமாக பூர்ணா பதில் பேச.
“ சூடு கண்ட பூனைக்கு தான் வாய் வெந்து போகும், இது ருசி கண்ட பூனை, பால் சட்டிய விட்டு போகாது” என்று உல்லாச குரலில் கணவன் பதிலுக்கு பதில் பேச,
“பேசுலே வாய் பேசுலே சட்டி சோறு…, உம் உடம்பு புண்ணாகாம போகமாட்டா….” என்று பூர்ணா நக்கல் பேச,
“அடி சொம்பு! நான் உம் உடம்புல புண்ணா போகும்ன்னு தள்ளி நின்னேன்” என்று எகத்தாளம் பேசியவன். தன் பேச்சில் இருந்த அந்தரங்கத்தில் உல்லாச சிரிப்பும் வந்து தொலைத்தது.
கையில் இருந்த சொம்பை தூக்கி அவன் முகத்துக்கு நேரே விட்டவள்.
“ நியெல்லாம் எப்படி தான் பத்து வருசம் பொண்டாட்டி இல்லாம இருந்தையோ…! இந்த பெருச்சாளி வீட்டை கெடுத்து புடுச்சே!… ஏலே வேலு! நீயாலே இது. உமக்கு ஒத்த பிள்ளை பெத்தும், என்னால இன்னும் நம்ப முடியல போ…” என்று அங்கலாய்க.
“பிள்ளை பெத்தும் நியி நம்பலையா; நான் எதுக்கு இருக்கேனாம் நம்ப வைக்க தானே!” என்று மனைவியை லேசாக அணைக்க.
“குடி கெட்டுச்சு போ…” என்று பூர்ணா தள்ளி விட.
தளராத வேலு, மெல்ல மெல்ல மனைவியை தளர செய்து தன்னுள் இழுத்து கொண்டான்.
மறுநாளே வாணியின் துணை கொண்டு குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டாள் பூர்ணா.
“வெட்கம் கெட்டு போகும் மதினி, உங்க தம்பி ராசி அப்படி” என்று முறுக்கி கொண்டாள்.
மூணாவது காங்கணும் என்று மாமியார் முனங்கிய போதும்.
“ காடு, கரை கோடி கொண்டாலும், உழைச்சா தான் வருமானம் அயித்த உங்க மகனுக்கு. எங்க வருமானத்துக்கு ரெண்டு புள்ளை தான் காங்கும்” என்று சொன்னவள், கையோடு காரியத்தை முடித்து கொண்டாள். தம்பி மனைவிக்கு உடன் நின்று தான் உறவை பேணி கொண்டாள் வாணி. பிறந்த வீட்டில் உரிமையை எதிர்பார்க்கும் பெண்கள், கடைமைக்கும் தயாராக தான் நிற்க வேண்டும்.
“அத்தோடு, கணவனிடம் இங்காரு வேலு! நாப்பது தொட்டாச்சுன்னா எல்லாத்திலும் சுதானமா இருக்கணும். இன்னமும் இளந்தாரி மாதிரி துள்ளிக்கிட்டு திரிய கூடாது. அடுத்த வீட்டுல எல்லாம் சத்தமில்லாமல் குடும்பம் நடத்தல, உனக்கு மட்டும் என்னாலே? பொம்பளை பிள்ளைக்கு அப்பன் மாதிரி நட” என்று பூர்ணா சாடுவது போல், பேஅவன் வெளி தூக்கத்திற்கு விடுமுறை விட்டாள்.
வேலு அருகில் வந்தாள் உருகி விடும் பெண் தான் பூர்ணா. கணவனின் அன்பை, அரவணைப்பை, காதலை, மனைவிக்கு மட்டுமே உரிய அந்தரங்க உறவை எந்த பெண் தான் மறுப்பாள். இருந்தும் வெளியில் தன் நிலை இறங்காமல் காத்து கொள்வாள். எனக்கு ஒன்றும் இல்லை இவனுக்கு தான் பித்து என்பது போல். தான் வாழ்ந்த கிராம நடைமுறை வெட்கத்தை விட்டு காதலை சொல்ல விடவில்லை.
ஆனால், அனுபவிப்பாள், தன்னை ஒப்பு கொடுப்பாள், ஆராதிப்பாள், தன்னை வெளிப்படுத்தவும் செய்வாள் தான், நள்ளிரவில் மட்டும். வேலுக்கு, தன் மீதான மனைவியின் அன்பு நன்கு தெரியும். அதனால் தான், அவள் அடாவடிக்கு எல்லாம் அடங்கி கொள்வான்.
ஆதி சிவனின் எட்டு மாதத்தில் குல தெய்வக் கோவிலில் கெடா வெட்டி மொட்டை எடுக்க ஏற்பாடு செய்தனர். பெரியாத்தா உறுதியாக சொல்லிவிட்டார் தன் உடன் பிறப்பு உடன் நிற்க வேண்டும் என்று.
அதற்கு வேலுவும் சரியென்று சொல்லிவிட, அதிர்ந்து போய் பார்த்தாள் பூர்ணா. அவளால் நம்பவே முடியவில்லை கணவன், மாமியாரின் வார்த்தைகளை. இரத்த சொந்தம் தான். ஆனால், சண்டை போட்டு சேரும் உறவல்லவே இது!… மீண்டும் சேரும் போது எத்தகைய மனகசப்பு வரும் என்று அறியாததா! பின் ஏன் இந்த ஏற்பாடு. அதை கேட்கவும் செய்தாள்.
“புள்ளைக நல்லா வாழ்றாங்க தான். மன நிறைவா தான் இருக்கு. இருந்தும் பொம்பளை புத்தி பொறந்த வீட்டை எண்ணுது. எம் மகனும், மகளும் எத்தனை ஆயிரத்துக்கு சேலை எடுத்தாலும், ஒத்த பொறந்த வீட்டு சேலையை காங்கணும் தாயி!. காடு செல்ற வயசு வந்தாச்சு, அதான் வைராக்கியம் உடைக்கிரேன். எம் இடுப்புல தூக்கி வச்ச பையன் நெஞ்சு வலி வந்து சுருண்டு கெடக்கான். காயத்தை எண்ணி விட்டு தள்ள மனசு வரல. நான் உசுரோட நிக்க தான் உம் பெரிய மாமனார், மாமனார், எம் கூட பொறந்தவன்னு எல்லாரையும் முன்ன அனுப்பி வச்சேன். இனி, நீங்க நின்னு எனக்கு நல்லது செஞ்சு, சீரும் சிறப்புமாக அனுப்பி விடுங்க” என்று மன்றாடலிடு பெரியாத்தா கேட்க, யார் மறுப்பது.
வேலுவும் ஒளிவு மறைவு இன்றி மனைவியிடம் பேசி விட்டான்.
“என்னை தூக்கி வளத்த மனுசன், விட்டுட தெரியலை சம்மு. எனக்கு நல்லா தெரியும், எம் வாழ்க்கை நல்ல முறையில அமைச்சு போச்சு. அதுனால தான் ஏத்துக்கிற பக்குவம் வந்துருக்கு. இல்லாமா, இவங்களை எதிர்கொள்ற தைரியம் என்னைக்கும் வராது தான். உம்மை தாண்டி போக மாட்டேன், நீதான் வழி விடனும்” என்றான் கணவன். அடுத்த ஒரு மன்றாடல்.
எப்போதும் மனைவியின் சொல்லில் அடங்கி நிற்கும் கணவன் தான் வேலு. தற்போது தனித்து ஒரு முடிவு எடுக்க, இழுத்து பிடித்தால் கசந்து போகும் என்று உணர்ந்தவளாக வழி விட்டாள் வேலுவின் மனைவி.
“ வேற எதுவும் இருக்க வேலு?” இடை சொருகளாக கேள்வி வர.
மனைவி கண்டு கொண்டாள் என்று அறிந்தவன், சின்ன சிரிப்போடு, “ தப்பு செஞ்சவங்க யாரும் தப்பை உணராமல் அவங்க வாழ்க்கை முடியிறது இல்லைலே. அதை ஒப்பு கொள்ள தான் நிறைய பேருக்கு மனசு இல்லை. அப்படி ஒப்பு கொள்றவங்களுக்கு சந்தோசமாக மன்னிப்பை கொடுப்போம் சம்மு. நாம நிம்மதியா வாழ இது தான் வழி” என்று அர்த்தமாக வேலு பேச.
“ தாமரை” என்று முடித்தாள் பூர்ணா.
ஆமாம் என்று தலையசைத்தவன், “ எதையும் தூக்கி சுமக்க எனக்கு வேணாம் சம்மு. எனக்கும் நிம்மதி வேணும் தான!” என்று கணவன் முடிக்க.
“ ஒருத்தர் மட்டுமே உறவை இழுத்து புடிக்க முடியாது வேலு” என்றால் நிதர்சனமாக.
“யாரும் இழுத்து பிடிக்கலை சம்மு. ஆதரிப்போம்; வேலு பொண்டாட்டியா நியும் தான். எல்லாரையும் ஆதரிப்போம், ஆனா நம்ம குடும்பன்னு ஒரு அடி தள்ளி நிப்போம்” என்றான் வேலு.
பூர்ணாக்கு உடன் பாடு இல்லை என்றாலும், கணவனை வற்புறுத்த வில்லை. தன்னால் கதிரவன் குடும்பத்தோடு ஒன்ற முடியுமா என்றால் முடியாது என்பது தான் பதில்.
இப்பவும் மதுரை செல்லும் போது பார்க்க நேர்ந்தால் திமிராக, கெத்தாக தான் பார்ப்பாள். “எங்கே என்னை தொட்டு பார், ஒரு வார்த்தை சொல்லி தான் பாரேன்” என்பதாக தான் அவள் வெளிப்பாடு இருக்கும்.
கதிரவன் இறந்திருக்க, பூர்ணா தனக்கென கணவன், குழந்தை என்று வலம் வருவதை காண்கையில் “கெட்டவர்களுக்கு தான் காலம் போல, கண்டிப்பாக கடவுள் கூலி கொடுப்பார்” என்று மனதோடு புலம்புவர் கதிரவன் உடன்பிறப்புகள்.
“கடவுள் குடுத்த கூலி தான் இது” என்று கர்வமாகவே பார்ப்பாள் பூர்ணா.
கோவில் கிடா வெட்டில் தாய்மாமனாக சிவத்தை,வேலு முன் நிறுத்த. அழுதே விட்டார் மனிதர். காலம் கடந்த பாசம், தூக்கி வளர்த்த பிள்ளை மீது. எதையும் மாற்றவோ, மாற்றி அமைக்கவோ முடியாதே, ஏற்று கொள்ள தான் வேண்டும்.
பொதுவாகவே அனுசரித்து செல்லும் பெண் தான் பூர்ணா என்பதால். இயல்பாகவே சொந்தத்தை இழுத்து கொண்டாள். முதன்மையாக பூர்ணா நிக்க, பொறுக்க வில்லை மணிக்கு. அவள் உரிமையும், மரியாதையும் புகைச்சல் கொடுத்தது.
“எங்க கொடி மதினி இருந்தா! இவ எல்லாம் உள்ள வர முடியுமா. எட்டு அடி தள்ளி நிக்குறவ, இன்னைக்கு உரிமை காரியா போன” என்று மணி சாடை பேச.
“உங்க குடிமுடி சண்டை நான் அறியாததா” என்று நக்கலாக ஒரு பார்வை பார்த்து நகர்வாள் பூர்ணா.
தாயை சுற்றியே வலம் வரும் பவித்ராவை தான் பார்த்து நின்றாள் தாமரை. பவியின் தாயாக தான் இல்லை என்பது அறிந்தது தான். அத்தோடு தன் வாழ்வும் அருண் மற்றும் ராகுலோடு தான். அதை உடைத்து மீறி வர முடியாது என்பதும் நன்கு அறிவாள். உறவாகவாது மகள் உடன் நிக்க வேண்டும், அவளோடு உறவாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் தாமரையை தள்ளி கொண்டு வந்தது. இங்கு வந்தால் எத்தகைய சங்கடங்களை ஏற்க நேரிடும் என்று அறிந்தும் மகளின் பொருட்டே வந்தாள். தன்னை பார்த்து மகள் சின்ன சிரிப்போடு கடந்து செல்ல, ஏக்கத்தோடு பார்த்தாள் தாமரை. இந்த ஏக்கம் வாழ் நாள் முழுவதும் தொடரும் போல.
குட்டி ஆதிக்கு மாமன் கலைவாணன் மடியில் அமர்த்தி முடி எடுத்து, காது குத்தி, கிடா வெட்டு சிறப்பாக நடந்தேறியது. அக்கா போல் ஆதி குட்டி அம்மா பையன் கிடையாது. அவனின் நேரம் எல்லாம் அப்பத்தாவுடன் தான். யாரிடமும் சட்டேன்று ஒட்டி கொள்ளும் ரகம் என்பதால், பூர்ணாக்கு ரொம்ப எல்லாம் தொந்தரவு இல்லை.
ஆட்டம் ஓய்ந்து,இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர் வேலு தம்பதிகள். அன்று விடுமுறை நாள் என்பதால் மகள், மகனோடு தான் தோட்டம் சென்றனர். எப்பவும் போல பூர்ணா தலையில் உணவு கூடையுடன், மகள் கை பிடித்து முன்னே செல்ல. மகனை தோளில் சுமந்து மனைவியை பின் தொடர்ந்தான் வேலு.
அங்கிருந்த வேப்ப மர நிழலில் தம்பியுடன் பவித்ரா அமர்ந்து கொள்ள. மகளை ஒரு பார்வை பார்த்தவாறு கடலைக்கு உரம் வைத்தார்கள் தம்பதிகள்.
மதிய உணவு முடியவும், உறக்கத்திற்கு சொக்கிய மகளை பூர்ணா மடியில் கிடத்த, மகனை நெஞ்சில் சாய்த்து மனைவியை ஒட்டி படுத்தான் வேலு. பிள்ளைகள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க. வேலு,
“ நிம்மதியா இருக்கியா சம்மு?”
“சந்தோசமாக இருக்கேன் வேலு. மனசுல நிம்மதி நிக்க, காலம் சந்தோசமா இருக்குலே!. மொதல்லாம் படுத்தா உறக்கமே வராது, விட்டம் இருட்டா இருக்கும், எதிர்காலம் பயம் கொடுக்கும். இப்போ அந்த தவிப்பு இல்லவே! படுத்தா நிம்மதியா தூங்குறேன். எத்தனை பேருக்கு கிடைக்கும் மன அலைப்பு இல்லாத தூக்கம். வாழ்க்கை ஏதோ ஒரு இடத்தில நமக்கு வழி காட்டிடுச்சுலே!” என்றால் மனைவி.
ஆமோதித்தான் கணவன், “பாரு இந்த கிணத்துல தான் நாம நீச்சல் பழகுணம், இந்த காட்டுல நாம சுத்தாத இடமே இல்லை, இந்த வேப்ப மரத்தில தான் போட்டி போட்டு உச்சி ஏறுவோம். நீதான் வேகமா ஏறி என்னை கை பிடிச்சு தூக்கி விடுவ! காலத்துக்கும் கை பிடிப்போம்ன்னு கனவுல கூட நினைக்கல” என்று சொன்ன வேலு.
“ காலத்துக்கும் உன்னை தாங்குவேன் சம்மு” என்று கணவனாக வாக்கு கொடுக்க.
“ஆயுசுக்கும் உமக்கு துணை நிப்பென் வேலு” என்று உறுதி அளித்தால் மனைவி.
இது தானே தாம்பத்திய வாழ்வும். தன்னை தாங்க கணவன் இருக்கான் என்ற நம்பிக்கையும், தனக்கு துணை நிக்க மனைவி இருக்கிறாள் என்ற தைரியமும் தான் திருமண வாழ்வை வழி நடத்துகிறது. எத்தனை பேர் உணர்ந்து வாழ்கிறார்கள், இவர்கள் உணர்ந்து கொண்டு, வாழ்வை வசப்படுத்தி கொண்டார்கள்.