வெற்றி , முதலில் மனைவியையும், அம்மாவையும் வீட்டில் கொண்டு வந்து தள்ளிய பின் தான் ஓய்ந்தான். தனம் மகனை பார்த்து ஒன்னும் அசரவில்லை. சரண்யா உள்ளே சென்று விட்டாள். பக்கத்திலே இருந்தால், மாமியார் மேல் விழுவதற்கு பதில் தன் மேல் தான் விழுவான்.
“அறிவு இல்லையாம்மா உனக்கு…?”
“ எனக்கு என்ன… உனக்கு ஒரு வாரிசு வேணாமா?… நானும் நல்ல சேதி சொல்லுவன்னு காத்திருந்து ஒன்னையும் காணோம். பிள்ளை பெறாத மலடியா இருந்தா, டாக்டர்கிட்ட போகலாம். இவ ரெண்டு பிள்ளை பெத்தவ தான, அதான் ஜோசியம் பார்த்தேன்…”
“எனக்கு பிள்ளை இல்லன்னு டாக்டர், ஜோசியம்ன்னு அலைஞ்சா கூட நான் சரின்னு சொல்றேன். முத்து மாதிரி ரெண்டு பிள்ளை வீடு நெறைய இருக்கே. அப்புறம் என்ன…”
“ஆசைக்கு வரிசையா பெத்து போட கோடி கோடியா சொத்தா சேர்த்து வச்சு இருக்கேன். வீட்டுக்கு மூத்தவன பொறந்து இன்னும் ஓஞ்சு உக்காரல…”
“உனக்குன்னு வாரிசு வேணாமா… பொம்பளை பிள்ளைக ரெண்டும் அடுத்த வீடு போறவங்க. என்ன தான் தோல்ல, நெஞ்சுல போட்டு வளத்தாலும் நம்ம கைய காத்து நிக்காது. எம் மகனுக்கு என்ன குறை. அதெல்லாம் ராசா தான், சம்பாத்தியம் தன்னால வரும். அதை விட்டு இந்த வீடு, இடம், நகை, தொழில் எல்லாம் எவனோ ஒருத்தனுக்கு போக நான் விடவே மாட்டேன். என் பேரனுக்கு தான் எல்லாம்…”
“எவன்?… யார் அவன்?…”
“யார, உன் மருமகன் தான். எங்கயோ பொறந்த அவங்க இந்த வீட்டை ஆளனுமா… இங்க பாரு வெற்றி, எனக்கு பேரன் வந்தே ஆகணும்…”
சரண்யா வாசல் வந்து நின்று விட்டாள். வெற்றியின் மனைவியாக எல்லா பணிவிடையும் செய்தாலும், அடுத்த வீட்டு பெண் என்று தான் ஒதுக்குவார். இவரை பொறுத்த வரை ஆண் வாரிசுக்கு மட்டும் தான் சொத்து.
“மூணாவதும் பொண்ணா இருந்தா?…”
“நான் தான் சொன்னாலே வெற்றி, எத்தனை பிள்ளை பாத்தாலும் ஒத்த ஆம்பிளை பிள்ளை வேணும். உனக்கு இன்னைக்கு புரியாது, பின்னாடி புரியும்…”
கோபம் தான் வெற்றிக்கு கொஞ்சம் தன்னை நிதானபடுத்தி கொண்டு புரிய வைக்க முயன்றான்.
“அம்மா, உட்காருங்க. உங்க மகன் ஒன்னும் பெரிய வீர புலி கிடையாது. நிதர்சனம் வேற… எல்லாமே என் கிட்ட இருக்கு, ஆனா எதுவுமே என் கிட்ட இல்லை. இந்த வீடு மட்டும் தான் என் சொந்தம். எம் பிள்ளைகளுக்கு நான் வச்சு இருக்குறதும் இது ஒன்னு தான்…”
சரண்யா கண்களில் நீர் நிறைந்து நின்றது. “ரெண்டும் பொம்பளை பிள்ளையா?… உனக்கு பாவம் பார்த்தாவது கடவுள் ஒரு ஆம்பிளை பிள்ளையை கொடுத்து இருக்கலாம்…” பலர் சொன்ன இந்த வார்த்தை அவளை முடக்கி விடும். அலரும் மனதை அடக்கி கொண்டு கணவனை பார்த்து இருந்தாள்.
“சரண்யாக்கு, அவ நகையை தாண்டி எதுவும் எடுக்கலை. இப்ப தான் கொஞ்சம் பணம் பிள்ளைக பேருல போட்டு வாரேன். வீட்டுக்கு மூத்தவனா குடும்பத்துல வார பெரிய செலவுகளை நான் பார்க்கணும். கஷ்டப்படும் போது தம்பி, தங்கச்சிக்கும் கொடுக்கணும், எம் பிள்ளைக படிப்பையும் தாண்டி எதிர்காலத்துக்கும் சேர்க்கணும், சாகுற வரைக்கும் உங்களை பார்க்கணும், நாங்க சாகுற வரைக்கும் எங்களையும் பார்த்துக்கணும். நானே இல்லாம போனாலும், பெத்த பிள்ளைக கிட்ட கூட எம் பொண்டாட்டி நிக்க கூடாது. குடும்ப தலைவனா எம் மனசுல ஆயிரம் யோசனை ஓடுது…”
சரண்யாக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது. ஆனாலும், கணவனை நெருங்க வில்லை. அடுப்படி வாசலிலே நின்று விட்டாள்.
“நிதர்சனம் ஒன்னு இருக்குமா… நான் நல்லா படிப்பேன். என்னை ஏன் உங்களால படுக்க வைக்க முடியலை…”
தனம் மெளனமாக மகனை பார்க்க,
“வறுமை, வசதியில்லை… பதினஞ்சு வயசுல அப்பா கூட சேர்ந்து குடும்ப பாரத்தை தூக்கி சுமந்தேன். வண்டில கிலினரா சேர்ந்தேன். டிரைவர் வாங்கி குடுக்குற பதினஞ்சு ரூபாய் தக்காளி சோத்துக்கு வாய் பார்த்த நிக்கணும். உன் தம்பி ஏன் எனக்கு பொண்ணு தரலை?… வசதியில்லைன்னு தான். எனக்கு முப்பாதாறு வயசாச்சு, இதுக்கு அப்புறம் ஒரு பிள்ளை பெத்து… அதுக்கு பத்து வயசு வரும் போது எனக்கு நாப்பத்தாறு. ஐம்பது வயசுல நான் தளர்ந்து போயிடுவேன். அப்ப என் குடும்ப பாரத்தை நான் யார் தலையில வைக்க. எம் பொண்டாட்டி, எம் மக… வேணாம், எம் பாரத்தை நான் தான் சுமப்பேன். அதுவும் சந்தோசமா… கடவுள் புண்ணியத்துல அடுத்தவங்க கையை எதிர்பார்க்காம லோனுக்கு வருமானம் வருது. நான் டிரைவர் என் உயிருக்கு உத்திரவாதம் சொல்ல முடியாது. ஆசைக்கு பிள்ளை பெத்து ரோட்டுல விட முடியுமா…”
“என்னங்க…” தாங்க முடியவில்லை சரண்யாக்கு.
“எனக்கு ஆண் வாரிசு மோகம் இல்லைம்மா. எம் பொண்டாட்டி கூட நிறைவா வாழ்ந்து தான் ரெண்டு பிள்ளை பெத்தேன். எனக்கு வேற என்ன வேண்டும். கண் நிறஞ்சு பொண்டாட்டி, முத்து மாதிரி ரெட்டை பிள்ளைக. கடவுள் நல்ல வாழ்க்கையை தான் தூக்கி கொடுத்து இருக்கார். அதை சந்தோசமா நான் வாழ நினைக்கிறேன். திருப்தி இல்லாமா வேற எதையோ தேட நினைக்கல… எம் பிள்ளைகளுக்கு நாலு வயசுல நான் ஹீரோ, நாப்பது வயசுலையும் நான் தான் ஹீரோவா இருக்கணும். எங்கப்பா எங்களுக்காக நின்னாருன்னு எம் பிள்ளைக சொல்லணும். ஆண் பிள்ளை என்ன ஆண் பிள்ளை. ஆண்பிள்ளை பிறந்த தான் பேர் சொல்லுமா. எம் பிள்ளைக கிட்ட கேளும் உங்கப்பன் யாருன்னு?… அவங்களும் வெற்றிவேல்ன்னு எம் பேரு தான் சொல்லுவாங்க. இந்த வீட்டை, தொழிலை எம் பிள்ளைக கையில தான் கொடுப்பேன். அவங்க என் இளவரசி கிடையாது. ராணிக, அவங்க அப்பா உருவாக்கி வச்ச சின்ன சாம்ராஜ்யத்தில் ராணிக… எனக்கு ஆண் பிள்ளைகளுக்கான தேவை இல்லை…” வெற்றி சொல்ல, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தார் தனம். ஊரில் எல்லோரும் சொல்வது தானே…
“அம்மா, இது உங்க மகன் வீடு. நீங்க எப்பவும் வாங்க, போங்க, இங்கேயே கூட இருங்க. உங்க மரியாதை குறைஞ்சா என்னன்னு கேளுங்க. அதை விட்டு…” சொல்லவில்லை எழுந்து சென்று விட்டான்.
சரண்யா மாமியாருக்கு மோர் கொண்டு போய் குடுக்க, “உனக்கு அப்படியே குளு குளுன்னு இருக்குமே… காரியம் சாதிச்சுட்டா…” என்று எழுந்து செல்ல,
எங்கயோ போற மாரியாத்தா, எம் மேல ஏறி போயிருச்சு…
சரண்யா கணவனிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்தாள். அன்றிரவு பிள்ளைகள் உறங்கிய பின், “என்னங்க…”
“என்ன சரண்யா?…”
“உங்களுக்கு ஏன் மூணாவது குழந்தை வேணாம்?…”
“எனக்கு தேவைன்னு தோணலை…”
“எனக்கு உண்மை வேணும்…” அவனருகே நெருங்கி அமர்ந்தாள்.
மெல்ல சிரித்தான், “எம் பிள்ளைக இடத்தை என்னால யாருக்கும் விட்டு குடுக்க முடியாது…”
அவள் கணித்தது தான். “இது முட்டாள் தனம்…”
“எனக்கான தண்டனை…”
“என்ன சொல்றீங்க…” புரியாமல் கணவனை பார்க்க.
“அகிலா எல்லாம் சொல்லுச்சு…”
“பழசு வேணாம்ங்க…” அவளுக்கும் வலி தானே.
“நான் சரியா இருந்துருக்கணும் சரண். என் சுயநலம், என் பிள்ளைக தான கஷ்டபட்டாங்க. சரியில்லாத கணவனா இருக்கலாம் ஆனா, சரியில்லாத தகப்பனா நான் இருந்துருக்கேன். உனக்கு பத்து வருசம் மூத்தவன், நீயே சண்டை போட்டு ஒதுங்கி போனாலும் நான் உன்னை இழுத்து போயிருக்கனும். நான் என்ன பண்ணேன். ஊரை விட்டு ஓடி போனேன். உங்க அம்மா பிள்ளையை கழிக்க சொன்னப்ப உண்மையான தகப்பனா தடுத்து உனக்கு புரிய வச்சு கூட்டி வந்துருக்கணும். நான் செய்யலை தானே, அப்ப எம் மனசுலையும் ஏதோ ஒரு மூலையில அதை நான் ஆதரிச்சுருக்கேன். அசிங்கமா இருக்கு… மை டாடி, மை ஹீரோன்னு சொன்ன பிள்ளைகளை கை விட்டவன் நான்… என்னை நம்பி வந்த பொண்டாட்டிக்கும் உண்மையா இல்லை. முதல் குழந்தைக்கு இழந்ததை ரெண்டாவது குழந்தை கிட்ட ஈடு காட்டலாம். எம் பிள்ளைக இழந்ததை என்னால ஈடு கட்ட முடியாது. அறியாத வயசுல கஷ்ட பட்டாலும் அந்த கஷ்டம் யாரால. அவங்களை பெத்த தகப்பனால…”
“நம்ம வாழ்க்கையை பார்ப்போம், பழசு வேணாம்…” சரண்யா எடுத்து சொல்ல
“அவங்களுக்கு உரிய பாசத்தை நான் யார் கூடவும் பங்கு போட விரும்பலை. வெற்றி அவங்களுக்காக மட்டும் தான்… எம் பிள்ளைக குழந்தை பருவத்தை நான் இழந்துட்டுடேன். அந்த வலி எனக்கான தண்டனை. நம்ம நாலு பேராலையும் அந்த காலத்துக்கு போக முடியாது. ஆனா, எனக்கு உன் கூட வாழ ரொம்ப ஆசை. உன் கூட ஒரு நிறைவான வாழ்க்கை வாழணும் சரண். என் குடும்பத்துக்காக தான் நான் ஓடுறேன். ஆனாலும், மடி சாய மனைவி தான் வேணும். என் வாழ்க்கையை சரி செஞ்சு குடுத்துருக்க…”
“நிச்சயமா இல்லை. நீங்க அவ்வளவு மோசம் இல்லை. எங்களை தேடி வந்தீங்க. என் புருசனாவே தேடி வந்தீங்க. எல்லோரும் சொல்ற மாதிரி ஒரு வாய்ப்பு தான் கொடுத்தேன். கொஞ்சம் இறங்கி வந்து விட்டு கொடுத்தேன். என் வாழ்க்கைய மாத்தி போட்டீங்க. நிறைவா இருக்கு… நல்லா சாப்புடுறேன், நால்லா தூங்குறேன் என் புருசன் இருக்குற தைரியத்தில் தான். எதிர்கால பயமே கிடையாது…”
“ஆனா, எனக்கு இருக்கு. என் குடும்பம் எப்பவும் கஷ்ட பட கூடாதுன்னு, அவங்களுக்கு எல்லாம் சரியா செய்யணும்ன்னு… நான் இன்னைக்கு சொல்றேன் சரண். எனக்கான துணை நீ தான். வேற யார் வந்தாலும் இவ்வளவு நிறைவு வருமான்னு தெரியலை. ஆனா, எனக்கு நீ தான் சரி…”
“நிஜமாவா…” கண்கள் விரிந்தது.
“நிஜம். புருசன், பொண்டாட்டி ஒரு அஞ்சு வருசம் பல்லை கடிச்சு சேர்ந்து வாழ்ந்த போதும்… புரிதல் இல்லைன்னு ஒரு வார்த்தையே வராது. எவ்வளவு முரண்பாடு நமக்குள்ள, இப்போ பாரு… என்னை சரிகட்ட எம் பொண்டாட்டியால மட்டும் தான் முடியும்…”
தன் தோல் சாய்ந்து இருந்தவள் மூக்கில் ஒரு முத்தமிட, “நான் பீரியட்…”
“நானும் சொல்வேன் உங்களை தவிர வேற யாரும் என்னை இவ்வளவு தாங்க முடியாது…” நெஞ்சில் சாய்ந்து முகம் நிமிர்த்தி சொல்ல, அவள் முகம் நோக்கி குனிந்தான் வெற்றி.
பிள்ளைகள் விடுமுறை ஆரம்பிக்க, வெற்றியோடு ஒரே ஆட்டம் தான். அதுவும் வெற்றி, காதல் மன்னன் போல, பொண்டாட்டிய பார்க்கும் போது எல்லாம் ஒரே பாட்டு தான்.
வெற்றி சில நேரம் அபிராமியை பார்க்க நேர்ந்தாலும், கண்டு கொள்ளாமல் கடந்து விடுவான். அவளை சோகமாக கூட பார்க்க மாட்டான். தன் பார்வை அவளை தடுமாற செய்து விட கூடாது. ரோச பட்டு கூட அவள் வாழ்க்கையை பார்க்கட்டும். அபிராமி வைத்து தன் வாழ்க்கை இல்லை. சரண்யாவோடு தன் உலகம் தனி.
“ஏய்! சரண்யா, உனக்காக எம்புட்டு பாட்டு நான் எடுத்து விடுறேன். என் பாட்டுக்கு ஒரு எதிர் பாட்டு பாடுனா என்னவாம்…”
“பாட்டு தானே, பாடிட்டா போச்சு…” அவனை குறும்பாக பார்த்த சரண்.
“ எட்டாத கொம்பு பழம்
கிட்டாத குள்ள நரி
அந்நாளிலே…
சீ சீன்னு சொல்லி
சொல்லி புட்டு வாலாட்டா
வந்துருக்கு இந்நாளிலே…”
பாட்டுலே மூஞ்சிலே குத்திட்டா ஒரு குத்து, விடுவேனா நானு…
விக்காத வத்திகுச்சி
பக்குன்னு பத்திகிச்சு
பெண்ணாசை தான்….
பொண்டாட்டி வேணும்
இப்போ கொண்டான்னு
கேக்குதடி என்னாசை தான்
என்று அவன் பாட, “அட போயா, பொண்டாட்டி வேணுமாம்…” ஓடி விட்டாள்.
அன்று காலையில் இருந்தே வெற்றி சில்மிசம் தான் செய்து கொண்டு இருந்தான். பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று தடுத்தாலும் கேட்க வில்லை. மதிய சமையலில் சரண் பிஸி, பிள்ளைகள் டிவி பார்க்க, பூனை போல வந்து விட்டான். மெல்ல ஹாலில் எட்டி பார்த்து விட்டு, பின்னாடி சென்று அணைக்க,
“ ஐயோ! பிள்ளைக…”
“ஆர்வமா டிவி பாக்குறாங்க…”
“உங்க அம்மா வர நேரம்…”
“ தெருவுல நுழையும் போதே சத்தம் வந்துடும்…” என்றவன்,
“இந்த சேலை, ஆளை தூக்குது போ…” என்று மனைவியை இரு கைகளிலும் தூக்க
“எட்டி, ஹாலை ஒரு தடவை பாருங்க…”
“ அவங்க வர மாட்டாங்கடி….”
“அப்பா….”
“கிழிஞ்சது போ…”
“அம்மாவா ஏன் தூக்குன. அவங்க பிக் கேர்ள் தான…” பட்டு குட்டி கேட்க.
“அது வந்து… ஆங், உங்க அம்மா உன்னை தூக்கி இருக்காங்களா, நான் உங்களை தூக்கி இருக்கேனா, அதே போல அம்மாவையும் தூக்குனேன். இது ஒன்னும் பெரிய விசயமில்லை. யார்டையும் சொல்ல தேவை இல்லை…”
“ சொல்லுவேன், எங்க க்ளாஸ்ல கிஷோர் இருக்கான்ல, அவங்க அப்பா அரிசி மூட்டை தூக்குவாராம். அரிசி மூட்டை விட அம்மா பிக் தானே, நானும் சொல்லுவேன். எங்க அப்பா எங்கம்மாவவே தூக்குவாருன்னு…”
“ஐயோ அப்படி எல்லாம் சொல்லிராத தங்கம். பேரண்ட்ஸ் மீட்டிங்க்கு அப்பா தலை காட்ட முடியாது…” மகளை தாஜா செய்ய பின்னாடியே சென்றான் வெற்றி.
வெற்றியின் அலப்பறையில் சரண்யாக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்க, அன்றிரவு ஒரு சவாரி வந்து விட்டது.
“நீங்களே தான் போயாகணும்மா…” முகத்தை தூக்கி வைத்து மனைவி கேட்க.
“நமக்கு வேண்டியவங்க சரண். தட்ட முடியாது. என் மேல ரொம்ப நம்பிக்கை. நல்ல கஸ்டமர் விட முடியாது செல்லம். போய்டு வந்து உம் மாமன் பெர்பமென்ஸ் பாரு…”
“அட போயா, வெறும் வெத்து வாய் தான்…” அவள் ஏமாற்றம் அவளுக்கு…
“என்னடி, பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டா… எப்பவாவது தான் பேசுற, ஒரேத என்னை ஆப் பண்ணிடுறா…” அவனுக்கும் ஏமாற்றம் தான். என்ன செய்ய தொழில்.
ராத்திரிக்கு மாமியார் மட்டும் தான் துணை. சுகந்தி அழைத்தும் போக வில்லை. சரண்யாக்கு கணவன் வரும் போது தான் வீட்டில் இருக்க வேண்டும் என்று ஒரு எண்ணம். அவனுக்காக காத்திருந்தா, அவன் முகம் சந்தோசத்தில் மலரும்…
இன்று காலையிலே வெற்றி வர வேண்டியது. இன்னும் காணம், போன் எடுக்க வில்லை. சரி வரட்டும் சமையல் பார்ப்போம். பதினொரு மணி ஆகியும் காணம். மனதில் ஒரு பதட்டம், என்றும் வெற்றி அப்படி கிடையாது. நேரம் கிடைக்கும் போது எல்லாம் போன் செய்து பேசி விடுவான். மூணு மணி ஆனா பின், மனதில் பயம். விளக்கு போட்டு வைத்தாள். அடுத்து அழுகை தான். நிற்காமல் கண்ணீர் வடிந்தது. போனும் ஸ்விட்ச் ஆஃப். ஏதேதோ எண்ணம், வாசல் படியில் தலை வைத்து சாய, அவன் இல்லா வாழ்வு நரகம்…
ஐந்து மணிக்கு வந்து விட்டான் வெற்றி. அழுது வீங்கி போன முகமாக மனைவி இருக்க, பதறி போன வெற்றி.
“என்ன சரண்?…”
அவனை கட்டி கொண்டு அழுகை தான். வெற்றிக்கு புரிந்தது. முதுகை தட்டி கொடுத்து ஆறுதல் சொன்னான்.
“ சீக்கிரம் கிளம்புடி…”
“எங்கங்க…”
“ ஹனிமூன்…”
“ பிள்ளைக கூட வா…”
“இல்லாதவன் தனியா போவான். இருக்கவன், கூட்டி தான் போகணும்… பிள்ளைக கூட தான் போறோம். பிள்ளைக இருக்கும் போது வெகேசன், பிள்ளைக உறங்கும் போது ஹனிமூன்… சீக்கிரம் கிளம்டி வேற எதுவும் வந்துர போகுது…”
அடுத்து சரண்யா நிற்க வில்லை. பிள்ளைகள் உடன் கிளம்பி காரில் ஏறி விட்டார்கள். பிள்ளைகள் அரவம் ஓய்ந்து பின் சீட்டில் உறங்க, மனைவி முன்னே வந்தாள்.
அவள் கையோடு தன் கையை சேர்த்து கொண்டான். கணவனை நெருங்கி அமர்ந்தாள் சரண்யா.
நீ ஒரு காவியம்…
“என்னங்க கவிதை…”
“இல்லா பாட்டு…”
எந்நாளும் நீ தாண்டி
என்னோட ராசாத்தி
பொண்ணாட்டம் நெஞ்சோடு
வச்சேன்னே காப்பாத்தி
எங்கே நான் போனால் என்ன
எண்ணம் யாவும் இங்கே தான்…
உன் பேரை மெட்டு கட்டி உள்ளம் பாடும் அங்கே தான்..
என் ஆசை காத்தோடு போகாது…
எந்நாளும் என் வாக்கு பொய்காது…
வெற்றி வேல், சரண்யா வெற்றி வேல், அஜிதா வெற்றி வேல், விஜிதா வெற்றி வேல்…