வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்தும் அளவு ஒரு பெரிய விளம்பர ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. அதன் வேலைகளில் அஜய் மும்மரமாய் இருக்க,
“இந்தா… அம்மா பேசுறாங்க!” என்று அலைபேசியை நீட்டினாள் சுவாதி.
நிமிர்ந்து அவளை முறைத்தான்.
அதையெல்லாம் கணக்கில் கொள்ளாதவள், “பேசு, லைன்ல இருக்காங்க!” என்று சொல்ல, கைபேசியை வாங்கியவன் பட்டென அழைப்பை துண்டித்து தூக்கி போட்டான். அது சோபாவில் சென்று படுத்துக்கொண்டது.
“அம்மா பேசனும்ன்னு சொன்னாங்க அஜய்!” சுவாதி சொல்ல,
“என்ன ப்ளான் பண்றீங்க நீங்க எல்லாரும்? எனக்கு புரியல! நீங்க எல்லாம் வேண்டாம்ன்னு சொல்லிட்டா நான் சரி’ன்னு கேட்டுப்பேன்னு நினைக்குறீங்களா?” அஜய் கோபமாய் கேட்க,
“அது இல்லன்னு எங்களுக்கே தெரியும்! நாளைப்பின்ன, கூடவே இருந்துட்டு நீங்க கூட ஒரு வார்த்தை சொல்லலயேன்னு அம்மா எங்களை திட்டக்கூடாது பாரு… அதான் எங்க வரைக்கும் நியாயமா இருக்க பாக்குறோம்!” என்றான் விவேக்.
ஏளனமாய் உதடு பிதுக்கினான் அஜய்.
‘ரொம்ப நல்லவனுங்க தான்!’ என்ற நினைப்போடு!
மீண்டும் அலைப்பேசி ஒலித்தது. அவன் அன்னை தான் அழைத்தார். அஜய் கண்டுகொள்ளாமல் இருக்க,
“அஜய், நீ பேசிதான் ஆகணும்! என்னைக்கா இருந்தாலும் பேசுறது தானே?” குரு தன்மையாய் சொன்னதற்கு பலனாய் ரீனா கரத்தில் இருந்த போனை பிடுங்கியவன், அட்டென்ட் செய்து காதில் கூட வைக்காமல்,
“எனக்கு அவ தான் வேணும்! இந்த ஜென்மத்துல எனக்கு கல்யாணம்’ன்னு ஒன்னு நடக்கனும்ன்னா அது அவக்கூட மட்டும் தான்! மீறி செத்து போவேன், தலை முழுகுவேன்னு எதாவது ட்ராமா பண்ணி என் மனச மாத்தலாம்ன்னு நினைச்சு கனவு காணாதீங்க! அதுக்கெல்லாம் அடங்குற வயசுல நான் இல்லை!” என்று மூச்சு விடாமல் சொன்னவன்,
“இஷ்டம் இருந்தா சொல்லி அனுப்புறேன் கல்யாணத்துக்கு உங்க புள்ளைங்களை கூட்டிட்டு வந்து சேருங்க!” என்றுவிட்டு நொடியும் தாமதிக்காமல் துண்டித்தான் அழைப்பை.
“போதுமா… பேசிட்டேன்…”
சுவாதி, “அஜய்… திஸ் இஸ் நாட் ஃபேர்!” எனும்போதே மீண்டும் அவன் அன்னை அழைத்தார்.
‘எதையோ சொல்லாம விட்டுடேனோ?’ என்ற சிந்தையிலே எடுத்தவன்,
“ஏற்கனவே கல்யாணம் ஆகி புள்ளை பெத்தவளை எல்லாம் மருமகளா ஏத்துக்க முடியாதுன்னு நினைச்சீங்கன்னா, பரவால்ல! உங்களுக்கு ஒரே ஒரு மருமக… மூத்த மருமக போதும்’ன்னு அண்ணி’யை மட்டும் வச்சுக்கோங்க!” என்றுவிட்டு மீண்டும் துண்டித்தான்.
ஒருசேர மூவர், “டேய்…..” என்றிட, “அவங்க என்ன தான் சொல்றாங்கன்னு தான் கேட்டு தொலையேன்டா” என்றான் விவேக் ஆயாசமாய்.
“இருந்தாலும்…” அவர்கள் பேச, இவன் மறுக்க, சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பு! இம்முறை அவன் எண்ணிற்கு…!
சலிப்புடன் எடுத்து காதில் வைத்தவன், “என்னமா வேணும்? சொல்றதெல்லாம் சொல்லிட்டேன்! இனிமே சொல்ல ஒன்னுமே இல்லை” என்று கத்த,
“அஜய்….!” என்றது மறுமுனை.
அந்த ஒரு வார்த்தை அவன் அவயங்கள் அத்தனையிலும் தீமூட்ட, “மாது…?” என்றான்.
முழுதாய் மூன்று நாட்கள் கழிந்திருந்தது அவள் வீட்டில் இருந்து திரும்பி!
இன்று தான் அழைக்கிறாள்!
மறுமுனையில் அவள் பேச பேச தலையாட்டிக்கொண்டே எழுந்து கிளம்பியவன், அவசரகதியில் வெளியே ஓடினான்.
அவனை பார்த்த நால்வருக்கும் சிரிப்பதா? அழுவதா? என்றே புரியாத நிலை!!!
குரு, “அவனுக்கே ஓகே’ன்னும் போது நம்ம ரொம்ப மூக்கை நுழைக்கிறது தப்பு! தேவையில்லாத விரிசல் விழும்! அவன் சந்தோசமா இருந்தா அதுவே போதும் நமக்கு!” என்று சொல்ல, அதை மூவருமே ஆமோதித்தனர்.
ஊழியர் ஒருவரின் பைக்கை எடுத்துக்கொண்டு அவள் சொன்ன திறந்தவெளி உணவகத்துக்கு விரைந்தான் அஜய்.
அவளை பார்க்கப்போகும் பரபரப்பு அவனிடம் அப்பட்டமாய் தெரிந்தது.
அவன் கேட்டதற்கு ‘சரி!’ என்று சொல்ல போகிறாள் என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை! அதற்கு ‘வாய்ப்பில்லை’ என்றும் அவனறிவான்!
ஆனாலும், எதற்கு அழைத்திருப்பாள்? என்ற ஆர்வம்!
பார்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவனின் கண்கள் நாலாபுறமும் அவளைத்தேட, ஒரு ஓரமாய் இருந்த மேசையில் தன்னந்தனியே அமர்ந்திருந்தாள் மாதங்கவதனா.
நேரே அவள் முன் சென்று நின்றவன் கேட்ட முதல் கேள்வியே, “பிரசன்னா எங்க?” என்பது தான்!
“பக்கத்து வீட்டு ஆன்ட்டிக்கிட்ட விட்டுட்டு வந்தேன்!” மெலிதான குரலில் பதில் வந்தது.
அவள் எதிரே இருந்த சேரை அவளருகே இழுத்துப்போட்டு அமர்ந்தவன், “சேஃப் தானே?” என்று சந்தேகமாய் கேட்க,
“அவளுக்கு ‘டே கேர்’ செட் ஆகலன்னு, ஆறு மாசமா இவங்கக்கிட்ட தான் பாத்துக்க சொல்லி விட்டுட்டு வரேன்! இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல!” என்றாள்.
“ம்ம்ம்” என்றவன், ‘ம்ச்… கூட்டிட்டே வந்துருக்கலாம்!’ என்று முனக, அவள் செவிகளில் அது விழத்தான் செய்தது.
“சரி, சொல்லு… என்ன விஷயம்? என்ன ஆச்சு!?”
“ஒன்னும் ஆகலையே!” உடனடியாய் மறுத்தாள் அவள்.
“ஒன்னும் ஆகலன்னா எதுக்கு இப்படி மூஞ்சி முகரை வீங்குற அளவுக்கு அழுது வச்சுருக்க?”
அவன் அப்படி கேட்டதும் கண்களில் கண்ணீர் புரள ஆரம்பித்தது. உதடுகளோ, “அதெல்லாம் ஒன்னும் இல்ல!” என்று பொய்யுரைக்க,
“சரி ஒண்ணுமே இல்லாமயே இருக்கட்டும்! எதுக்கு இந்த அழுகை இப்போ?” என்றான்.
கர்சீஃப் கொண்டு முகத்தை அழுந்த துடைத்தவள், “எதுக்கு அன்னைக்கு அப்படி கேட்டீங்க?” என்றாள்.
‘எப்போ?’ ‘என்ன கேட்டேன்?’ என்றெல்லாம் இழுக்காமல்,
“என் மனசுல இருக்குறதை சொன்னேன்! அதுல என்ன இருக்கு?” என்றான் இயல்பாய்.
“எல்லா ஆம்பளைங்களும் இப்படிதான்… இல்ல? ஒரு பொண்ணுக்கு புருஷன் இல்லன்னு தெரிஞ்சுட்டா உடனே அட்வான்டேஜ் எடுத்துப்பீங்க?” குற்றம் சாட்டினாள்.
சாய்ந்து அமர்ந்தவன், “புருஷன் இல்லாத பொண்ணுக்கிட்ட ‘என்னை கல்யாணம் பண்ணிக்குரியா?’ன்னு கேட்கிறது தப்பில்லை! புருஷன் இருக்குற பொண்ணுக்கிட்ட தான் போய் ‘என்னை கல்யாணம் பண்ணிக்குரியா?’ன்னு கேட்கக்கூடாது!” என்றான்.
“ஸ்மார்ட்டா பேசுறதா நினைப்பா?!”
“அப்கோர்ஸ் நாட்!!!” என்றான்.
ஆயாசமாய் தளர்ந்து அமர்ந்தவள், “நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை!” என்றாள் உள்ளே போன குரலில்.
“நானும் நீ இப்படி பண்ணுவன்னு நினைக்கல மாது” என்றவன்,
“முடியாதுன்னு கத்துவ, அவாய்ட் பண்ணுவ, கோவப்படுவ எதுவுமே இல்லையா வழக்கம் போல சுத்தி இருக்குற ஆளுங்களை விட்டு என்னை ரவுண்டு கட்டி அடிப்ப! இப்படியெல்லாம் நினைச்சா, நாலு கர்சீஃப் நனையுற அளவுக்கு புழிஞ்சு புழிஞ்சு அழுதுட்டு இருக்க!” என்றான்.
ரோசமாய் முகத்தை துடைத்துக்கொண்டவள், அழுகையை அடக்கிக்கொண்டு, “‘போங்க’ ‘வாங்க மரியாதை எல்லாம் போயே போச்சு!” என்றாள் முறைப்பாய்.
நொடிக்கு நொடி மாறும் அவள் பாவனைகளை ரசித்துக்கொண்டே, “பொண்டாட்டியை போங்க வாங்கன்னு பேசுனா என்னவோ ரொம்ப தள்ளி நிக்குற மாதிரி ஒரு ஃபீல்… அதான்” என்றான்.
‘ஹும்!’ இந்த பேச்சு இப்படியே தான் போகும் என்றறிந்தவன், அவள் இப்போது சற்று தேறிவிட்டதை உணர்ந்து,
“இப்போவாது சொல்லுங்க, என்ன தான் ஆச்சு!?” என்றான்.
அவளும் சொல்வதற்கு தயாராய் இருந்தாள்.
“நேத்து ஹியரிங் இருந்துச்சு… கோர்ட்டு போனேன்! போற வழில அம்மா ஃபோன் பண்ணாங்க! வழக்கம் போல திட்டு!” என்றவள், அப்போது நடந்த சம்பாஷணையை சொல்லலானாள்.
“உன்னை மட்டுமே வச்சு முடிவெடுக்காத மாது… உன்னை நம்பி ஒரு புள்ளை இருக்கு… அதோட எதிர்காலத்தையும் பாக்கணும்! அந்த புள்ளைக்காகவாது நீ மாப்பிள்ளையோட அனுசரிச்சு வாழப்பழகு…” என்றார் அவள் அன்னை.
“குழந்தைக்காக வாழனுமா? எனக்கு புரியல ம்மா! நான் ஏன் குழந்தைக்காக அந்தாளோட வாழனும்? என்னால பிரசன்னா’க்கு சோறு போட முடியாதா? படிக்க வைக்க முடியாதா? நல்ல பொசிஷன்’ல அவளை நிறுத்த முடியாதா? எதுக்காக நான் அந்தாளோட போகணும்… சொல்லு?”
“திமிருத்தனமா பேசாத மாது! பக்கத்துல இருந்தன்னா இழுத்து வச்சு அறைஞ்சுடுவேன்!” என்றார்.
“நியாயமா கேள்வி கேட்டா அடிக்க தான்ம்மா செய்வீங்க! ஏன்னா உங்ககிட்ட பதில் இல்லல?”
மறுபுறம் லேசான அமைதியுடன் பொறுமையாய் ஆரம்பித்தார்.
“உன் வாழ்க்கை, உன் விருப்பம்’ன்னு மட்டும் யோசிக்காத மாது! நாளைக்கு புள்ள வளர்ந்து நின்னு அப்பா வேணும்ன்னு கேட்டா என்ன செய்வ? அவளுக்காகவாது நீ அவரோட போய்தான் ஆகணும்” இறுதியில் அழுத்தமாய் முடித்தார்.
“அவளுக்காக… அவளுக்காக’ன்னா… அதுல என் வாழ்க்கை எங்கம்மா இருக்கு?” என்றாள் மாது.
“அவதானே டி உன் வாழ்க்கையே!”
“இல்ல ம்மா! அவ எனக்கு முக்கியம் தான்! என் உசுரை விட உசத்தி தான்! ஆனா, அவ மட்டுமே என் வாழ்க்கை இல்லை!” என்றவளின் பேச்சை அதிர்வோடு உள்வாங்கினார் அவள் அன்னை.
“எனக்குன்னு தனிப்பட்ட ஆசை, விருப்பு, வெறுப்பு, சந்தோஷம், லட்சியம், கனவு எல்லாமே இருக்கு! என்னைக்கோ ஒரு நாள் ‘அப்பா வேணும்!’ அவ கேட்கப்போறதுக்காக பிடிக்காத ஒரு மனுஷனோட என்னால ஒரு நிமிஷம் கூட வாழ முடியாது ம்மா!” என்றாள் திண்ணமாய்!
“அப்பா வேணும்’ன்னு சொன்னா ‘போய் பாரு’ன்னு அனுப்பி வைப்பேன்! பாக்கவே கூடாதுன்னு தடுக்க மாட்டேன்” என்றாள்.
“அந்தாள் ஒரு கேடுக்கெட்டவன்’ம்மா! எனக்கு தெரிஞ்சே மூணு பொண்ணுங்க தொடர்பு இருந்துச்சு! இப்போ இன்னொருத்தி…
அவனை பார்த்தாலே அருவெறுப்பா இருக்கு! எப்படிம்மா அவன்கூட இருப்பேன்?” அழுதுக்கொண்டே கேட்க, அவள் அன்னைக்கும் கண்கள் முட்டியது.
ஆயினும், “கண்ணு, அம்மா சொல்றதை கேளுடா… ஆம்பளைங்க ஆரம்பத்துல அப்டி இப்படிதான் இருப்பாங்க! கொஞ்ச வருஷம் போச்சுன்னா, பொண்ணு வளர்ந்துருச்சுன்னா எல்லாம் மாறிப்போய்டும்! அவசரப்படாத!” என்று சொல்ல, மாதுவுக்கு தெள்ளத்தெளிவாய் புரிந்துப்போனது அவள் பேச்சும், நியாயமும் என்றுமே அவருக்கு விளங்கப்போவதில்லை என்று!!!