காதலால் நெய்திடு..
அத்தியாயம் .. 1
சித்தி தந்திடு ஸ்ரீ துர்கா..
சக்தி தந்திடு.. ஸ்ரீ துர்கா..
சாந்தம் தந்திடு.. ஸ்ரீ துர்கா..
செல்வம் கொடுத்திடு.. ஸ்ரீ துர்கா..
ஸ்ரீ துர்கா.. ஸ்ரீதுர்கா.. ஸ்ரீ துர்கா.. என்ற பாடலை மனமுருகி கேட்டுக்கொண்டிருந்தார் அம்பிகா. சித்தி சக்தி சாந்தம் செல்வம் என அனைத்தையும் தன் பெரிய மகளுக்கு அளித்திடு என கடவுளின் முன் நின்று உள்ளுக்குள் உருகி வேண்டுவதே கடந்த எட்டு வருடங்களாக வழக்கமாக்கியிருந்த அம்பிகா.. இன்று தனது இளைய மகளுக்கும் சேர்த்து வேண்டும் நிலை வரவே வெகு நேரம் கடவுள் முன் நின்றிருந்தார்.
‘அம்மா இன்னும் நிலா எழுந்துக்கலையா..?” என கேட்டபடி வந்தான் கதிரவன்.
அம்பிகா.. ‘நைட் ரொம்ப நேரம் அழுதிட்டிருந்தாடா.. அதான் தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன்..” என்றார் வேதனையோடு.
‘ஒன்பது மணியாகுதும்மா.. எழுந்தான்னா பல்லு தேய்க்கிற வரைக்கும் கூட பசிதாங்கமாட்டா.. நான் போய் எழுப்பறேன்.. நீ அவளுக்கு பால் ஆத்து..” என்று தங்கையிடம் சென்றான் கதிரவன்.
‘நிலா..” என்றான் மென்மையாக.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளுக்கு கதிரவனின் மென்மையான அழைப்பு கேட்கவில்லை போலும்.. ‘நிலா..” என சற்று உரக்க அழைத்தவன் அவளின் தோள் தொட.. திக்கென பதறி எழுந்தமர்ந்தாள் அதீத பயத்தோடு.
‘ஹேய்.. நான்தான்.. நான்தான்..” என தங்கையின் கேசம் நீவ.. மளமளவென கண்ணீரைக் கொட்டியவள்.. ‘வேணாம்.. என்னோட பேச வேணாம்.. நேத்து அப்பாக்கு சப்போர்ட் செய்திங்க..” என வெம்பி உதடு பிதுக்கியவள் மீண்டும் கவிழ்ந்தாள் மெத்தையில்.
‘நல்லா படிச்சா மட்டும் போதுமா.? பதினொன்னாவது போகப்போற.. அறிவு வேணாம்..? முன்ன பின்ன தெரியாதவனுக்கு முத்தம் கொடுத்தா அடிக்காம பின்ன கொஞ்சுவாங்களா.? அந்த வீட்டுக்குள்ள உனக்கென்ன வேலை..?” என்றான் நேற்றைய கோபத்தோடு.
‘ரொம்ப நாள் கழிச்சி நம்ம அக்கா வீடு திறந்திருந்தது.. அக்கா ஏது வந்திருப்பாங்களோன்னு எட்டிப் பார்த்தேன்.. அங்க ஒருத்தர் பீரோவில எதோ பார்த்திட்டிருந்தாங்க.. திருடன் திருடன்னு கத்திட்டே வெளில இருக்க சல்லை குச்சி எடுத்து அடிச்சிட்டேன்.. இரண்டாவது முறை கத்தும்போது அவ்ளோ பெரிய குச்சியை ஈசியா என்கிட்டயிருந்து பிடிங்கி போட்டுட்டு என் வாயைப் பொத்தி வீட்டுக்குள்ள இழுத்துட்டாங்கண்ணா..” என்றாள் பாவமாக.
‘உன்கிட்ட எதாவது பேட் டச் செய்தானா..? முத்தம் கொடுக்க சொல்லி மிரட்டினானா.? நீ எதுக்கு அவனுக்கு முத்தம் கொடுத்த.?” என்றான் குறையாத ஆத்திரத்தோடு.
‘இல்லயில்லண்ணா அப்படில்லாம் ஒன்னும் செய்யல.. எனக்குதான் உள்ள இழுத்ததும் நான் அடிச்சதுக்கு என்னை அடிப்பாங்களோன்னு பயமாகிடுச்சி.. என்னை விட்ருங்க.. நான் சத்தம் போட மாட்டேன்னு அழுதேன்..
இப்போ நான் கதவை திறந்துவிட்டதும் ஒழுங்கா சத்தம் போடாம வீடு போய் சேரனும்.. அதை விட்டு வெளில போனதும் திருடன் அது இதுன்னு கத்தின.. திரும்ப உள்ள இழுத்து வந்து குரவலையை கடிச்சிடுவேன்னு மிரட்டினாங்க..
பயந்துட்டே சரின்னு தலையாட்டினேன்.. அவங்களும் சொன்னதுபோலவே கதவை திறந்து விட்டாங்க.. கொஞ்சம் நல்லவங்க மாதிரி தோணுச்சி.. அதனால வெளில வந்ததும்.. நீங்கதான் இவ்ளோ பெருசு இருக்கிங்கள்ல.? வேலைக்கு போகலாமில்ல.? திருடறது தப்பில்லையா.? எங்கக்கா ரொம்ப பாவம்.. இப்போ ஏழு மாசமா எங்க இருக்காங்கன்னே தெரியலன்னு சொன்னேன்.. சொல்லும்போது எனக்கு அழ வந்திடுச்சிண்ணா..” என கண்ணீர் வடித்து..
‘சரி சரி இப்படி அழுதுட்டே போகாத.. நானொன்னும் உங்கக்கா வீட்டுக்கு திருட வரல.. அவங்களுக்கு தேவையான டாக்குமென்ட்ஸ் இங்க இருக்கிறதாவும் அதை எடுத்துட்டு வரசொல்லியும் என்கிட்ட சாவி கொடுத்து அனுப்பினாங்க.. இங்க பாரு சாவின்னு வீட்டு சாவி பீரோ சாவி எல்லாம் காட்டினாங்க..
எங்கக்காக்கு நீங்க ஹெல்ப் பண்ண வந்திங்களா.? என்னை மன்னிச்சிடுங்க.. உங்களை திருடன்னு நினைச்சிட்டேன்னு சாரி கேட்டேன்..
ஆனாலும் நீ என்னை திருடன்னு கேவலமா நினைச்சதோட இல்லாம.. அடிக்கவும் செய்துட்டல்ல..? உன்னை மன்னிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்.. நீ அடிச்ச மாதிரி ஆம்பிள பசங்க யாராச்சம் அடிச்சிருந்தா மூஞ்சு முகரையெல்லாம் பேத்திருப்பேன்.. நீ பொண்ணா போய்ட்ட.. அதுவும் ரொம்ப சின்ன பொண்ணா வேற இருக்க.. இங்க ஒரு முத்தம் கொடு.. போனா போகுது உன்னை மன்னிச்சிடறேன்னு சொல்லி அவங்க கையை நீட்டினாங்க..
அப்போதான் அவங்க கையில ரத்தம் வரதை பார்த்தேன்.. கொடுக்காபுளி அடிக்கிற குச்சின்றதால முனையில கட்டியிருந்த கத்தி பட்டு நல்லா கிழிச்சி விட்டுருச்சி.. எனக்கு ரத்தத்தை பார்த்ததும் நம்ம அக்காக்கு ஹெல்ப் பண்ண வந்துருக்காங்க.. அவங்களை போய் திருடன்னு நினைச்சி அடிச்சிட்டமேன்னு பாவமாய்டுச்சி.. அதான் அவங்க கேட்டதும் முத்தம் கொடுத்தேன்..” என்றாள் பாவமாக.
‘எப்படின்னாலும் நீ முத்தம் கொடுத்தது ரொம்ப பெரிய தப்பு.. அதோட அவன் சொன்னதெல்லாம் உண்மையாத்தான் இருக்கனும்னு என்ன இருக்கு.? பொய் கூட சொல்லியிருக்கலாமில்ல..? முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட இனி பேசக்கூடாது சரியா.? நல்லவனுங்க மாதிரியே இருப்பாங்க.. ஆனா பழிவாங்கிடுவானுங்க.. ” என பொறுமையாய் எடுத்துரைத்தவன்.. ‘பிரஸ் செய்துட்டு வா.. சாப்பிடுவியாம்..” என்றான் கனிவாக.
‘ஒன்னும் வேணாம்..” என உதடுபிதுக்கினாள் மீண்டும்.
‘ப்ச்.. அக்காவை போல உன் வாழ்க்கையும் தப்பாகிடுமோன்ற பயத்துலயும் உன்மேல உள்ள பாசத்துலயும்தான அப்பா அடிச்சிட்டார்.? நீ சாப்பிடலன்னா அவர் மனசு தாங்காது.. வா..வா..” என தங்கைக்கு கைகொடுத்து இழுக்க.. இவள் மாட்டேன் என அழுகையோடு போராட..
‘என் நிலா இல்ல.. என் செல்லம் இல்ல..” என கொஞ்சி தூக்கியவன் பாத்ரூமினுள் விட்டு.. ‘சீக்கிரம் பிரஸ் செய்துட்டு வா.. இரண்டு பேரும் சாப்பிடலாம்.” என்று கட்டிலில் அமர்ந்தான் கதிரவன்.
நாகராஜன் அம்பிகா தம்பதியின் முத்த மகள் சுவாதி.. சுவாதியை விட நான்கு வயது இளையவன் கதிரவன்.. கதிரவனை விட நான்கு வயது இளையவள் நிலவழகி.
எட்டு வருடங்களுக்கு முன் தனது கல்லூரி படிப்பின் முதலாம் ஆண்டிலேயே குமாரோடு காதல் வயப்பட்ட சுவாதி வீட்டிற்க்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள.. அதனால் நாகராஜனும் அம்பிகாவும் பட்ட அவமானத்தை இன்று வரை இவர்களால் மறக்க முடியவில்லை.
தன் மகளுக்கு இன்னும் பதினெட்டு வயது தொடங்கவில்லை.. அவள் தெரியாமல் செய்துவிட்டாள்.. குமாரிடமிருந்து தன் மகளை மீட்டு தாருங்கள் என்று நாகராஜன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க..
என் அப்பாவோடு போக அனுமதிக்காதீர்கள்.. எனக்கு அவங்களோட போக பிடிக்கல என்று சுவாதி வாதம் செய்ய.. குன்றிப்போனார் நாகராஜன்.
எதோ சின்னபொண்ணா இருக்காளேன்னு பேசி புரியவச்சி உங்களோட அனுப்பி வைக்கலாம்னு பார்த்தா.. உங்க பொண்ணு உங்களை புரிஞ்சிக்கிற மாதிரி தெரியலயே.. இன்னும் நாலு மாசம் கழிச்சி மேஜரானதும் திரும்பவும் இவனோட வந்துட்டாள்ன்னா.. நீ என்ன..? நானே நினைச்சாலும் இவங்களை பிரிக்க முடியாது..
புள்ளைய வளர்க்கும்போது என்ன பண்றா.? ஏது பண்றான்னு கவனிக்காம விடறது.. அப்புறம் இங்க வந்து என் பொண்ணுக்கு ஒன்னுமே தெரியாது.. இவன்தான் கூட்டிட்டு வந்துட்டான்னு சத்தம் போடறது..” என நாகராஜனை காவல் துறையினர் சாடும்போதும் கூட சுவாதி தன் எண்ணத்தில் வலுவாய் நிற்ப்பது புரிய வெறுத்தே போனார் மகளை.
நாகராஜனின் முகவாட்டம் அறிந்த காவல் ஆய்வாளர்.. ’ஆனது ஆகிடுச்சி.. எப்படியும் உன் சொந்தங்களுக்கெல்லாம் உங்க பொண்ணு இந்த பையனோட வந்துட்டான்னு தெரிஞ்சிருக்கும்.. இனி வீட்டுக்கு கூட்டிட்டு போனாலும் கூட்டிட்டு ஓடினவளை பிரிச்சி கூட்டிட்டு வந்துட்டாங்கன்னுதான் பேர் வரும்.. உங்க பொண்ணும் குமாரை விட்டு பிரியறதா இல்ல போல.. இப்படியே விட்டுட்டிங்கனாவாவது பரவால்லயா இருக்கும்..
இல்ல என் பொண்ணை கூட்டிட்டுதான் போவேன்னாலும் சொல்லுங்க.. அனுப்பி வைக்கிறேன்..” எனும்போதே.. ‘இல்ல நான் அவங்களோட போகல..” என சுவாதி திடமாய் மறுக்க.. அதற்கு குமார் பார்த்த வெற்றிப்பார்வை நாகராஜனிற்க்கு தாளமுடியாத அவமானத்தை பெற்றுத்தர.. நாகராஜனின் நிலையறிந்த ஆய்வாளருக்கும் சுவாதி மீது கோபம் வர..
‘இப்படி பொண்ணு உங்களுக்கு தேவையா.? எக்கேடோ கெட்டு போகட்டும்னு பேசாம விட்டுட்டு போவிங்களா..?” என காவல் துறையினர் நாகராஜனுக்கு எடுத்துரைக்க.. இதுக்குத்தான் பெத்து வளர்த்ததா என்பதுபோல் நாகராஜன் மகளை வெறுப்போடு பார்க்க.. அப்பொழுதும் மனமிறங்காத சுவாதி குமாரின் பின்னே மறைய..
‘இனி அப்பாம்மான்னுட்டு வீட்டுப்பக்கம் வந்த.. வகுந்திடுவேன்..” என வெறுப்போடு கூறி வெளியே வந்தார்.
வீட்டிற்கு வந்த நாகராஜன் காவல் நிலையத்தில் நடந்தை அம்பிகாவிடம் கூறி அழ.. அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த கதிரவனுக்கு நிலைமை புரிந்தாலும்.. மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நிலவழகிக்கு தன் தகப்பன் எதற்கு அழுகிறார் என ஏதும் புரியவில்லை.
இப்படி அவமானம் தேடித்தந்துட்டாளே என்று நாகராஜன் அம்பிகா மிகுந்த வேதனைக்குள்ளாக.. வீட்டில் அனைவரும் நிம்மதி சந்தோசம் சிரிப்பு என அனைத்தையும் தொலைத்திருந்தனர்.
மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பெற்றோரின் வேதனையெல்லாம் புரியவில்லை.. மாறாக தனக்கு பள்ளி சீருடை அணிவித்து தலைவாரி உணவு ஊட்டிவிடும் தமக்கையை காணாமல் நிலவழகி சோர்ந்து போனதோடு மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளானாள் என்பதே உண்மை.
அடுத்தடுத்த நாட்களில் அக்காள் வேணும் என அழுது ஓய்ந்தவளுக்கு காய்ச்சல் வந்திட.. ‘அக்கா செத்துட்டா.. இனி வரமாட்டா..” என்று பெற்றோர்களும் கண்ணீர் விட..
சுவாதி இல்லாமல் தவிக்கும் தங்கையிடம்.. ‘இனி உனக்கு நானிருக்கேன்.. நான் ஸ்கூல் கூட்டிட்டு போறேன்.. ஊட்டி விடறேன்..” என ஆறுதலளித்த கதிரவன் சொன்னதுபோலவே இன்று வரை இருந்து வருகிறான்.
ஆனால் இன்று வரை தன் அக்காள் செய்தது தவறென நிலவழகிக்கு புரியவில்லை என்பதுதான் கதிரவனின் மிகப்பெரிய வேதனையாகும். ம்.. பெற்றோர்க்கு தெரியாமல் அக்கா குழந்தைகளைப் பார்த்தேன்.. என்னப் பார்த்து சிரிச்சாங்க.. அப்பாக்கு பிடிக்காதுன்னு நான் சிரிக்கல.. ரொம்ப அழகா இருக்காங்கண்ணா என தன் அண்ணனிடம் அனைத்தும் பகிர்வாள். கதிரவன் என்ன எடுத்துரைத்தாலும் பள்ளிவிட்டு வரும்போது குழந்தைகளை பாராமல் நிலவழகி வீடு வருவதில்லை.
கடந்த எட்டு வருடங்களாக இவர்களின் வீட்டிற்க்கு இரண்டு தெரு தள்ளி கணவனோடு வசித்து வந்த சுவாதி.. ஆறு மாதம் முன்தான் வேறு ஊருக்கு குடிபெயர்ந்தாள். ஆறு மாதமாக பூட்டியிருந்த அக்கா வீடு நேற்று திறந்திருக்கவும் ஆர்வம் தாளாமல் உள்ளே சென்றதால் வந்த சோதனையின் விளைவால் என்றுமில்லாமல் தன் தந்தையிடம் பெல்ட்டில் அடிவாங்கியவளுக்கு வலிதாளமுடியாமல் போக நள்ளிரவுவரை அழுது கரைந்தாள்.
‘கதிரு..” என அழைத்தபடி உள்ளே வந்த அம்பிகா.. ‘தங்கையை சாப்பிட கூட்டிட்டு வரன்னு உள்ள வந்து அரைமணி நேரமாகுது.. என்ன யோசனையில உக்கார்ந்திருக்க.? நிலா எங்க.? குளிக்கிறாளா.?” என கேட்டு.. ‘நிலா..” என உரக்க குரல் கொடுக்க..
அரைமணி நேரமாவா உக்கார்ந்திருக்கோம் என நினைத்தவன் தானும் தங்கையை அழைக்க.. ‘எனக்கு சாப்பாடு வேணாம்.. ஒன்னும் வேணாம்.. போங்க..” என உள்ளிருந்து வெம்பிக் குரல்கொடுத்தாள் நிலவழகி.
வயசுக்கு வந்திருந்தாளாவது கொஞ்சம் விபரம் வந்திருக்குமோ என்னவோ..? அடுத்த மாசம் பதினாறு பொறக்கப்போகுது.. கொஞ்சம் கூட விபரமில்லாம இன்னும் சின்ன புள்ளையாட்டமே இருக்காளே என வேதனையோடு நினைத்த அம்பிகா.. ‘கதவ திற நிலா..” என சலிப்போடு குரல் கொடுத்தார்.
‘போங்க..” என மீண்டும் வெம்பவே.. ‘நைட்டும் சாப்பிடல.. வம்பு செய்து பால் மட்டும் குடிக்க வச்சேன்.. பசிதாங்க முடியாமத்தான் அழுதிட்டிருப்பா..” என மகனிடம் தவிக்க..
உள்ளிருந்தவளுக்கு அன்னையின் குரல் கேட்கவும்.. நேத்து அப்பா அடிக்கும்போது அமைதியா இருந்துட்டு.. இப்போ மட்டும் என்ன.? என்ற கோபத்தோடு கதவைத் திறந்தவள்.. ‘அப்பா அடிச்சு எவ்ளோ ரத்தம் வந்துருக்குன்னு பாருங்க..” என சுடிதாரின் டாப்சை தூக்கி பேண்ட்டை காண்பித்தாள் கண்ணீரோடு.
‘நிலா.. நிலாம்மா..” என அம்பிகாவிற்க்கு கண்கலங்க.. ‘இது எப்போ.? இப்படி.?” என வார்த்தைகள் சந்தோசத்தில் தந்தியடிக்க.. ‘நேத்து அப்பா அடிச்சதும் தான் இப்படி ஆகிடுச்சி.. இங்கெல்லாம் ரொம்ப வலிக்குது..“ என இடுப்பைக் காட்டியவள்.. ‘ரத்தம் வர அளவுக்கு எதுக்கு இப்படி அடிச்சிங்கன்னு யாரும் எனக்காக கேக்கல..” என்றாள் மீண்டும்.
‘அப்பா அடிச்சதால இப்படி ஆகல.. இங்க வா..” என மீண்டும் பாத்ரூமினுள் அமரவைத்து.. ‘இங்கையே இரு.. இதோ வந்திடறேன்..” என வெளியேற.. அன்னையின் சந்தோச முகத்தில் வெம்பி பின்னோடு வந்தவள்.. ‘அப்பா என்னை அடிச்சதுல இத்தனை சந்தோசமா உனக்கு..?” என்றாள் ஆற்றாமையோடு.