இன்ப சலிப்போடு தன் தலையில் அடித்துக்கொண்ட அம்பிகா.. ‘அடி பைத்தியம்.. நீ பெரிய பொண்ணாகிட்டடி..” என சிரிக்க.. ‘ஹான்..” என வாய் பிளந்தவள்.. ‘வயசுக்கு வந்துட்டேனா.?” என்றாள் அதீத ஆவலோடு.
‘ம்..” என சந்தோசமாய் தலையசைத்து.. ‘இங்கையே இரு.. அப்பாக்கு சொல்லிட்டு வரேன்..” என வெளியேற.. ம்.. நமக்கு பங்சன் வைக்கப் போறாங்க.. என நிலவழகிக்கு பெருத்த சந்தோசம். பின்னே.? தனது ஏழாம் வகுப்பிலிருந்து என் ஃபங்சன் ஆல்பம் என எத்தனை தோழிகள் காட்டியிருக்கிறார்கள்.
தனக்கும் இப்படி எப்போ நடக்கும் என ஏங்கியிருந்தவளுக்கு தனது பத்தாம் வகுப்பு வரை அது நடவாமல் போக.. ஏய் அதுக்கெல்லாம் நீ சரிபட்டு வரமாட்டடி.. என சில தோழிகள் கிண்டல் செய்தும் இருக்க.. தனக்கு இப்படி நடக்காதோ என சிறு பயம் கூட வந்திருந்தது.
இப்பொழுது அன்னை சொன்ன செய்தியில் நிலவழகிக்கு நேற்று தான் வாங்கிய அடியெல்லாம் மறந்தே போயிருக்க.. அவளுக்கான விசேசத்தில் எப்படி தன்னை அலங்கரித்துக்கொள்ளலாம்.. புகைப்படத்திற்க்கு எப்படியெல்லாம் போஸ் கொடுக்கலாம் என்ற ஆராய்ச்சியில் இறங்கினாள்.
கணவனுக்கு அழைத்து அம்பிகா விசயத்தை சொல்ல.. நிலவழகி விசயம் கதிரவனுக்கும் புரிய சின்ன சிரிப்போடு தங்கை அறையை விட்டு வெளியேறினான்.
கடைத்தெருவிற்க்கு போன நாகராஜ் வீடு வந்ததும்.. ‘ஏங்க உங்க தங்கைக்கு போன் செய்ங்க.. நிலாவை குளிக்க வைக்கனும்..” என்றார் அம்பிகா.
‘ம்.. வரும்போதே சொல்லிட்டேன்.. உங்க வீட்டுக்கும் சொல்லிட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க.. நீ ஆக வேண்டியதைப் பாரு..” என்றார் நாகராஜ்.
அடுத்த ஒரு மணிநேரத்திற்க்குள் அம்பிகாவின் தாய் வீட்டினரும்.. நாகராஜின் தங்கையும் வர.. சின்ன சின்ன சாங்கிய சம்பிரதாயங்களோடு நிலவழகியை குளிக்க வைத்தனர். சுவாதிக்கு போல் வீட்டின் பின்புறத்தில் சின்ன குடில்போல் கட்டலாம் என அம்பிகாவின் அம்மா சொல்ல..
‘அதெல்லாம் எந்த சாங்கியமும் வேணாம்.. நிலா அவ ரூம்லயே இருக்கட்டும்.. உடம்பு சுத்தம் ஆனதும் ஐயரை அழைச்சி ஒரு பூஜை மட்டும் செய்துக்கலாம்.. விசேசம் போலவும் எதுவும் வேணாம்..” என்றார் நாகராஜ்.
‘மாப்பிள்ள.. ஒரு புள்ளைக்கு அப்படி செய்துட்டு நிலாக்கு மட்டும் எப்படி செய்யாம இருக்கிறது..?” என அம்பிகா சொல்ல.. அம்பிகாவின் அம்மாவும் அதை ஆமோதித்தார்.
‘அப்படில்லாம் செய்ததாலதான் இப்படி தறிகெட்டு போய்ட்டா..” என சுவாதி நினைவில் முகம் இறுகியவர்.. ‘நிலாக்கு அதுபோல எதுவும் வேணாம்.. உடம்புக்கு நல்லதா என்ன சாப்பிடனுமோ அதெல்லாம் செய்து கொடுங்க.. மத்தபடி விசேசம் அப்படில்லாம் எதுவும் கூடாது.. எல்லாம் கல்யாணத்துக்கு பார்த்துக்கலாம்..” என திட்டவட்டமாய் மறுத்தார் நாகராஜ்.
தனதறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த நிலவழகிக்கு.. தன் அக்காள் இப்படி செய்ததால்தான் தனக்கு ஃபங்சன் வேணாம் என்கிறார் என்பதெல்லாம் புரியவில்லை.. மாறாக நேற்று அவங்களுக்கு முத்தம் கொடுத்ததால் பெல்ட்டில் அடித்தும் தன் மீதுள்ள கோபம் குறையாமல் இப்படி சொல்கிறார் என மனம் எடுத்துரைக்க.. பொங்கிக்கொண்டு வந்த அழுகையை சிரமப்பட்டு உள்ளடக்கினாள்.
இங்கே வெளியே அனைவரும் பேசிக்கொண்டிருக்க.. ‘அம்மா.. மணி பதினொன்னாகுது.. நிலாக்கு எதாவது சாப்பிட கொடுங்கம்மா.. நேத்து நைட்டும் சாப்பிடல..” என்றான் கதிரவன்.
‘கொடுத்தேன் கதிரவா.. அவதான் சரியா சாப்பிடல.. உங்கப்பா சமாதனம் செய்தாதான் சரியாவா போல.. முகத்தை என்னவோ போல வச்சிட்டிருக்கா..” என்றார் அம்பிகா.
என்றும் அடித்திராத தந்தை நேற்று அடித்தால் இன்னும் அதிலிருந்து வெளிவராமல் இருக்கிறாள் என நினைத்திருந்தான். மதியம் இரண்டு மணிபோல் தங்கை அறைக்கு சென்றான். சோர்ந்த முகத்தோடு தரையில் படுத்து நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்.
தலையணையை சுற்றி நிலவழகியின் கேசம் படர்ந்திருக்க.. அவளின் நீண்ட கேசம் இன்னும் காயாமல் இருப்பது புரிய டேபிள் பேனை எடுத்து தங்கைக்கருகே வைத்து சுழலவிட்டான். திக்கென விழித்த நிலவழகி அண்ணனைப் பார்த்ததும் கண்கலங்கி..’அண்ணா.. “ என்றாள் ஏக்கமாக.
‘ஏய் லூசு.. எதுக்கு இப்படி அழற.?அப்பா எதோ கோபத்துல அடிச்சிட்டார்.. அதையே இன்னும் நினைச்சிட்டிருப்பியா.?” என்றான்.
இல்லையென்பதாய் தலையசைத்தவள்.. ‘ஆனா அப்பாக்கு என்னை பிடிக்கல..” என கண்ணீர் வடித்தாள்.
‘ஏய்.. ச்சு மண்டு.. அப்படில்லாம் ஒன்னும் இல்ல.. அப்பாக்கு உன்னை பிடிக்கலன்னா எக்கேடோ கெட்டுபோன்னு விட்டுருப்பார்.. அந்த பையனுக்கு முத்தம் கொடுத்தது தப்புன்னு அடிச்சிருக்கமாட்டார்.. நம்ம நிலாக்குட்டிக்கு எதுவும் விபரம் தெரியாதே.. எதுவும் தப்பாய்ட்டா என்ன செய்றதுன்ற பயத்துலயும் பாசத்துலயும்தான் அப்பா உன்னை அடிச்சிட்டார்.. புரியுதா.?” என்றான் பாசமாக.
‘ம்..” என இரு மனதாய் தலையசைத்தாள். நிலா இன்னும் தெளிவாகவில்லை எனப்புரிந்தவன்.. ‘மாணவியிடம் வாத்தியார் சில்மிசம்.. பக்கத்து வீட்டுக்காரன் சிறுமியை கடத்தி பலாத்காரம்ன்னு எத்தனை டிவி சேனல்ல பார்க்கிறோம்.. சும்மா விளையாடிட்டிருக்க குழந்தைகளையே மனசாட்சியில்லாம நாசம் செய்துடறானுங்க.. இதுல நீ முன்ன பின்ன தெரியாவனுக்கு அவன் சொன்னான்னு முத்தம் கொடுத்திருக்க.. அப்போ கோபம் வராம என்ன செய்யும்.?” என தந்தை நிலையை எடுத்துரைத்தான்.
தற்போதுதான் நிலாவின் முகம் குற்றவுணர்வைக் காண்பித்தது.. தங்கை புரிந்துகொண்டாள் என்ற நிம்மதியில்.. ‘காலைல சரியா சாப்பிடலன்னு அம்மா சொன்னாங்க.. இப்போ போய் சாப்பிட எடுத்து வரேன்..” என என்று வெளியே வந்தவன்.. தந்தையிடம் நிலாவின் மனநிலை சொல்லி..
‘எதோ தெரியாம செய்துட்டா.. நான் எடுத்து சொன்னதும் புரிஞ்சிக்கிட்டா.. நிலாகிட்ட கொஞ்சம் இயல்பா இருங்கப்பா.. நீங்க இப்படி இருக்கவும் அவ ஏதேதோ தப்பா கற்பனை செய்துட்டு ரொம்ப அழறா..” என எடுத்துரைக்க.. சரி என்பதாய் நாகராஜ் தலையசைத்த பின்னரே தங்கைக்கு சாப்பிட கொடுக்க போனான்.
நிலவழகி பெரிய பொண்ணாகி இன்றோடு ஒன்பது நாட்கள் முடிந்திருக்க.. இன்று புன்னியாதனம் செய்யவிருந்தனர்.. நாகராஜ் சொன்னது போல நெருங்கிய உறவினர்களோடு மிக எளிமையாக பூஜையை முடித்தனர்.
கடந்த ஒன்பது நாட்களும் நிலவழகியின் முகத்தில் சிரிப்பென்பதே இல்லை. ம்.. கதிரவன் சொன்னதுபோல கரிசனையாக மகளிடம் எதுவும் நாகராஜ் பேசவில்லை. அதிலும் மகளின் முகம் பார்த்தே ஒன்பது நாள் ஆகியிருந்தது. இன்று பூஜையில்தான் பார்த்தார்.
இப்படி உக்காரு.. ஐயர் சொல்வதுபோல் செய்.. என்பதுபோல ஒரு சில வார்த்தைகள் மகளிடம் பேசினார்.. அதுவும் கூட சிறு இறுக்கத்தோடேதான் பேசினார். இத்தனை வருடங்களில் இல்லாமல் தந்தையின் இந்த பாராமுகத்தை நிலவழகியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தாய்மாமன் வாங்கிவந்த பட்டில் ஜொலித்த நிலவழகியின் முகம் மட்டும் சோர்வையே காட்டியது. பூஜை முடித்து அனைவரும் பேசிக்கொண்டிருக்க.. நிலவழகியின் பார்வை தந்தையிடமே நொடிக்கொருமுறை சென்று மீண்டது. அண்ணன் சொன்னதுபோல முன்பின் தெரியாதவர்களுக்கு முத்தம் கொடுத்தது பெரும் தவறோ என தற்போதுதான் யோசிக்கலானாள்.
‘என்னடா யோசிச்சிட்டிருக்க.?” என்றான் கதிரவன்.
‘ஒன்னுமில்லண்ணா..” என தவறிழைத்த பாவனையோடு பலமாய் தலையசைத்தாள்.
‘நீ எவ்ளோ அழகா இருக்கன்னு பாரு..” என தனது மொபைலை காண்பிக்க.. ‘ஃபோட்டோ எடுத்தியாண்ணா..?” என்றாள் ஆர்வமாக.
‘ம்..” என கதிரவன் தன்னிரு புருவம் உயர்த்த.. ஆசையாய் பார்த்தவள்.. ‘அண்ணா.. ஸ்கூல் திறந்ததும் இந்த ஃபோட்டோல்லாம் என் ஃபிரண்டுங்ககிட்ட காட்டனும்.. “என்றாள் ஆசையாக.
‘ஸ்கூலுக்கும் போகவேணாம் எங்கையும் போகவேணாம்.. இனி வீட்லயிருந்து சமையல்.. வீட்டு வேலையெல்லாம் கத்துக்கோ.. அப்போதான் ஒரு ரெண்டு மூனு வருசம் கழிச்சி கல்யாணம் செய்ய சரியா இருக்கும்.” என்றார் நாகராஜ்.
தந்தையின் பேச்சில் அதிர்ச்சியான நிலவழகி சிலையாய் நிற்க.. கதிரவன்.. ’ப்பா.. சின்ன பொண்ணுகிட்ட என்ன பேச்சு பேசுறிங்க.?” என்றான் கோபமாக.
‘இப்படித்தாண்டா அந்த தறுதலையையும் சின்னபொண்ணுன்னு நினைச்சேன்.. அவகிட்ட ஏமார்ந்த மாதிரி இவகிட்டயும் ஏமாந்தேன்னா என் உயிர் உடம்புல தங்காதுடா..” என்றார் வேதனையாக.
கதிரவன்.. ‘நம்ம நிலா அப்படி செய்யமாட்டாப்பா..” என்றான் உறுதியாக. நாகராஜிடம் பதிலில்லை. பிறகு மற்றவர்களும் நிலா பள்ளிக்கு போகவேண்டும் என எடுத்துரைக்க.. நாகராஜ் இறுக்கமாகவே இருக்க..
தந்தை முன் வந்தவள்.. ‘நான் படிக்கலப்பா.. உங்க விருப்பம்போல வீட்லயே இருக்கேன்.. வீட்டு வேலையெல்லாம் கத்துக்கிறேன்.. அவங்களுக்கு முத்தம் கொடுத்ததுபோல இனி எந்த தப்பும் செய்யமாட்டேன்.. என்னோட பேசுங்கப்பா..” என்றாள் பாவமாக.
நான் படிக்கபோறேன் என அடம்பிடித்திருந்தால் நாகராஜ் என்ன செய்திருப்பாரோ..? ஆனால் நிலவழகியின் இந்த பேச்சு தகப்பனின் இறுக்கத்தை மொத்தமாய் உடைத்தெறிய.. ‘என் தங்கமே..” என மகளைத் தழுவியவர்.. ‘நீ நல்லா படிச்சி பெரிய ஆளா வரனும்னுதாண்டா எனக்கும் ஆசையா இருக்கு.. ஆனா பயமாயிருக்குடா..” என்றார் தானும் பாவமாக.
பத்து நாட்களாக தன்னோடு பேசாத தந்தை தற்போது பேசியதில் மிகுந்த சந்தோசமடைந்தவள்.. ‘நீங்க என்ன சொன்னாலும் செய்வேன்.. பயப்படாதிங்கப்பா..” என்றாள் பெருமையோடு.
மகளின் கைகளை தன் கைக்குள் அடக்கி சிறு அழுத்தம் கொடுத்து.. ‘நிஜம்மா..??” என்றார் பாசத்தோடு. சந்தோசத்தோடு ஆமாம் என்பதாய் நிலவழகி வேகமாய் தலையசைக்க.. ‘நீ நல்லா படிச்சி பெரிய வேலைக்கு போனதும்.. உன் மனசுக்கு பிடிச்ச மாப்பிள்ளையை அப்பாவே தேடிப்பிடிச்சி உன் கண் முன்ன நிறுத்துவேன்.. அதுவரைக்கும் இந்த காதல் கத்திரிக்கால்லாம் கூடவே கூடாது.. சரியா..?” என கெஞ்சலும் கண்டிப்பும் கலந்த குரலில் கேட்டார்.
நிலவழகி..‘உங்க விருப்பப்படியே நல்லா படிச்சி பெரிய வேலைக்கு போவேன்ப்பா.. எங்கப்பாக்கு பிடிக்காத எதையும் செய்யமாட்டேன்..” என்றாள் உறுதியோடு. தகப்பனின் மனம் பெரும் நிம்மதிகொண்டது.