காதலால் நெய்திடு..
அத்தியாயம்.. 10
மதியம் ஒரு மணிபோல் அனைவரும் வீட்டிற்கு வர.. நாகராஜனைப் பார்த்த கவிப்பிரியா ‘ம்மா.. இது நிலா வீடு.. நாம நம்ம வீட்டுக்கு போலாம்..” என்றாள்.
‘உங்கம்மா வீடும் இதுதான்..” என ஆரம்பித்த அம்பிகா, கணவனின் முறைப்பில் பேச்சை மாற்றி.. ‘உனக்கு நிலா பிடிக்கும்தான.? இங்க இருந்தாதான எப்பவும் நிலாவோட விளையாட முடியும்.?” என பேத்தியிடம் சொல்லி.. ஆசையோடு பேரனை தூக்கினார்.
‘ம்மா..” என பார்த்திபன் இறங்கப் பார்க்க.. ‘அப்பா வீட்டுக்கு போனா ரௌடி பசங்க டிஸ்யூம் செய்ய வந்திடுவாங்க.. உன்னை தூக்கிட்டு போய்டுவாங்க.. அதனால அப்பா வரவரைக்கும் மாமா வீட்ல இருப்பிங்களாம்..” என கதிர் பொறுமையாய் எடுத்துரைத்துக் கொண்டிருக்க..
‘எந்த மாமா வீட்ல.?” என்றான் பார்த்திபன்.
‘நான்தான் உன்மாமன்..” என முடிக்கும் முன்னே.. ‘இல்ல.. நீங்க நிலாவோட அண்ணன்..” என்றான் பார்த்திபன்.
கதிர்..‘நிலா நல்லவளா.?” என்றான்.
பெரிதாய் புருவம் உயர்த்தி..‘ம்.. ரொம்ப நல்லவ..”என்றான்.
‘அப்போ நிலாவோட அண்ணனும் நல்லவன்தான.?” என்றான் கொஞ்சலாக.
பார்த்திபன் நிலவழகியைப் பார்க்க.. ‘எங்கண்ணா ரொம்ப ரொம்ப நல்லவங்க..” என பார்த்திபன் போலவே பெரிதாய் புருவம் உயர்த்தி சொன்னவள்.. ‘இங்க இருந்தா யாரும் உன்னை கடத்த மாட்டாங்க.. மாமா எல்லாரையும் பத்திரமா பார்த்துப்பாங்க.. பாட்டி நிறைய ஸ்நாக்ஸ் கொடுப்பாங்க.. கதை சொல்லுவாங்க.. நாம ஜாலியா விளையாடலாம்..” என குழந்தைகளுக்கு உறவு முறைகளை சொல்லிக் கொடுத்ததோடு.. கொஞ்லோடும் கெஞ்சலோடும் இருவரையும் சமாதானம் செய்த தங்கையை ஆச்சர்யமாய் பார்த்தான் கதிரவன்.
சுவாதி உள்ளே வந்ததும் அர்ப்ப பார்வை பார்த்து தொலைகாட்சியை உயிர்ப்பித்த நாகராஜன் அரைமணிநேரமாக யாரையும் கண்டுகொள்ளாமல் இறுகிய முகத்தோடு செய்தி பார்த்திருந்தார்.
சுவாதியின் முகத்தை கடைசியாய் காவல் நிலையத்தில் பார்த்த பின்னே இன்றுதான் நீண்ட வருடம் கழித்து முகம் பார்த்தார்.. காவல் நிலையத்தில் தன்னை கண்டு குமார் பின்னே ஒளிந்தது நினைவில் வர.. தற்போது எந்த முகத்தோடு வந்திருக்கிறாளென வெட்டி பொலிபோடும் கோபம் வந்தது நாகராஜிற்கு.
ஆனால் தற்போது குமார் காணாமல் போயிருக்க.. மகன் சொன்னது போல் தன்மீது சந்தேகம் வந்து காவல்துறையினர் விசாரணை என வந்தால்.. பழைய விசயங்களை மீண்டும் கிளறுவார்கள்.. அது அசிங்கத்தை நாமே கைவிட்டு கிளறுவது போலாகிடும் என அருவருத்து.. புருசன் கிடைக்கும் வரை அகதிபோல் தங்கி கொள்ளட்டும்.. என்ன செய்வது.? பெத்து தொலைச்சிட்டோமே என்ற ஆற்றாமையோடு அமர்ந்திருந்தார்.
——- ——— ———– ———
சுவாதி வந்து ஒரு மாதம் முடிந்திருக்க.. மகளிற்கு பார்வையில் கூட கரிசனம் காட்டியதில்லை நாகராஜன்.. தன் இளைய மகள் சாயலில் இருக்கும் பேத்தியிடம் மனம் லயித்தபோதும்.. மனதை கல்லாக்கி குழந்தைகளிடத்திலும் பாராமுகத்தையே காட்டினார்.
பணி முடித்து வரும்போது ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் ஏதேனும் வாங்கி வரும் கதிரவனிடம் குழந்தைகள் நன்றாக ஒட்டிக்கொண்டனர். குழந்தைகளிடம் இணக்கமாய் இருக்கும் கதிரவன் தேவைக்கு மட்டுமே சுவாதியிடம் பேசுவான்.
சுவாதியிடம் நிலவழகி பேசுவது நாகராஜனிற்கு பிடிக்கவில்லை என்பதோடு.. தன் இளைய மகளுக்கு முன்னுதாரணமாக இருந்திடுவாளோ என்ற பயம் வந்திருக்க.. சமயம் வரும்போதெல்லாம் நாகராஜன் சுவாதியால் பட்ட அவமானங்களை நிலாவிடம் எடுத்துரைத்தார்.
தந்தையின் வேதனையோடு அவரின் பயத்தையும் உணர்ந்த நிலவழகி.. ‘அக்காகிட்ட பேசினாலும் அவங்களை போல நான் செய்யமாட்டேன்ப்பா.. நான் அப்பா பொண்ணு.. எப்பவும் உங்க பேச்சை மீறமாட்டேன்..” என தேற்றினாள் தந்தையை.
நிலாவின் பேச்சில் நிம்மதியடைந்தவராய்.. ‘என் தங்கம்..” என மகளின் நெற்றியில் நாகராஜன் கண்ணீரோடு முத்தமிட.. இதை பார்த்திருந்த சுவாதிக்கு பழைய நினைவுகள் வந்தது.
ம்.. தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தந்தை தன்பெயர் சொல்லி அழைப்பது மிக அரிது.. தங்கம் பட்டு செல்லம் எனதான் அதிகம் அழைப்பார். சிறு சிறு தவறுகள் இழைத்தாலும் பொறுமையாய் எடுத்துரைப்பாரே அன்றி ஒருநாளும் கடிந்து பேசியதில்லை.. நடுத்தர குடும்பம் என்றாலும் உணவு உடை என ஆசைப்பட்டது அனைத்தும் தந்தையிடம் கிடைக்கும். பதிமூன்று வயதில் பெரியவளானதிலிருந்து அன்னை சில வரைமுறைகளை வகுத்த போதிலும் தந்தையிடம் முறையிட அது சுலபமாய் தளர்ந்திடும்.
பழைய நினைவிலிருந்து மீண்டவளுக்கு.. தந்தை வீட்டில் தனது தற்போதைய நிலையை எண்ண.. கண்ணீர் தானாய் பெருக்கெடுத்தது.
‘அம்மா.. அப்பாவை மாமா கண்டு பிடிச்சிடுவாங்க.. அழாத..” என பார்த்திபன் சொல்ல.. தன் கண்களை துடைத்து குழந்தையிடம் கவனம் செலுத்தினாள்.
இப்படியே மேலும் இரண்டு மாதங்கள் முடிந்திருக்க.. வெளியூர் செல்வதாக சென்றிருந்த கதிரவன் காலை எட்டு மணிபோல் வீடு வந்திருந்தான்.
மாமனை காணாத ஏக்கத்தில் ‘மாமா.. எங்க போனிங்க..?” என கவிப்பிரியா கோபிக்க.. ஆறு நாட்களாய் கதிரவனை காணாத கோபத்தில் முறைத்து பார்த்திருந்தான் பார்த்திபன். ம்.. இனி இவர்களை பிரிந்திருப்பது அத்தனை சுலபமில்லை என நினைத்தபடி குழந்தைகளை ஆசையோடு பார்த்திருக்க.. ‘போன விசயம் என்னாச்சு கதிர்..?” என பதட்டத்தோடு கேட்டார் அம்பிகா.
‘ம்.. கூட்டிட்டு வந்துட்டேன்ம்மா.. மத்தது வந்து சொல்றேன்..” என்றவன்.. சுவாதியிடம் ‘குழந்தைகள் இங்க இருக்கட்டும்.. நீ வா..” என்றான்.
‘யாரை கூட்டிட்டு வந்திருக்க.? என்னை எதுக்கு கூப்பிடற.? அவருக்கு எதாவது..” என பதறினாள்.
‘ப்ச் முதல்ல கிளம்பு.. போகும் போது சொல்றேன்..” என குழந்தைகள் அறியாவண்ணம் சிடுசிடுத்தான்.
‘இரு சாவி எடுத்துட்டு வரேன்..” என உள்ளே போக.. ‘கவிம்மா அம்மாக்கு காய்ச்சல்.. டாக்டர்கிட்ட போய்ட்டு வரவரைக்கும் சமத்தா நிலாவோட இருக்கனும்..” என சொல்லி.. ‘ம்மா.. பார்த்துக்கங்க.. அரைமணி நேரத்துல வந்துடறேன்..” என அம்பிகாவிடம் சொல்லி சுவாதியோடு கிளம்பினான்.
பைக் பின்னே உக்கார்ந்தவள்.. ‘அவரை கண்டு பிடிச்சிட்டியா.? அவரைத்தான் பார்க்க போறேன்னு ஏன் என்கிட்ட சொல்லலை.? எங்கயிருந்தார்.? எப்படி கண்டுபிடிச்ச.?” என கேள்விகளை அடுக்கினாள்.
‘ப்ச்.. எல்லாம் சொல்றேன்..” என அமைதியாய் பயணித்தவன் ஐந்து நிமிடத்தில் சுவாதியின் வீட்டிற்கு வந்திருந்தான்.
‘குமார் சாவி கொடுத்தாப்ல.. வா..” என இருவரும் உள்ளே போக.. பாதிக்கு பாதியாய் இளைத்திருந்த குமாரைப் பார்த்தவளுக்கு கண்ணீர் பெருக்கெடுக்க.. ‘என்னாச்சு.?” என்றாள் திணறிய குரலில்.
மனைவியை கண்டதும் குமாருக்கும் கண்ணீர் பெருக்கெடுக்க.. ‘ச்சு.. டாக்டர் ஸ்டிரெய்ன் பண்ணக் கூடாதுன்னு சொல்லிருக்காங்கல்ல.?” என தன்போல் அதட்டியவன்.. சுவாதியிடம்.. ‘திருச்சியிலயிருந்து வந்ததும் குமாரை காணோம்னு போலீஸ் கம்ப்ளைன் செய்திருந்தேன்.. கம்ப்ளைன் செய்த அடுத்த நாளே உன் நம்பருக்கு கால் வந்தது.. நான் பாஸ்கர் பேசுறேன் சுவாதின்றவங்க இல்லைங்களான்னு கேட்டாங்க.. நான் அவங்க தம்பிதான் நீங்க யாருன்னு விசாரிச்சேன்.. நான் குமாரோட ஃபிரண்டுன்னு அறிமுகம் செய்துட்டு நடந்ததை சொன்னார்..
ரொம்ப நாளா பணம் தராம இழுக்கடிச்சிட்டிருந்தவனுங்க பணம் செட்டில் செய்யிறேன்னு சொன்னதும் வழக்கம்போல பாஸ்கரை கூட்டிட்டு சென்னை போயிருக்காப்ல. பணம் வாங்கினவனுங்க நாலு நாள் கழிச்சி தரன்னு சொல்லவும் அங்கயே ரூம் புக்செய்து தங்கியிருக்காங்க..
நாலு நாள் கழிச்சி.. பணத்தை செட்டில் செய்யிறோம் பிரிட்ஜிகிட்ட வந்திடுங்கன்னு சொல்லவும் குமாருக்கு சந்தேகம் வந்திருக்கு.. பாஸ்கர்கிட்ட நீ தூரயிருந்து என்ன நடக்குதுன்னு கவனின்னுட்டு பணத்தை வாங்க போயிருக்காப்ல..
பெரிய அமௌண்ட் வசூல் செய்யும் போது குமார் எப்பவும் இப்படித்தான் சொல்லுவாப்லன்னு பாஸ்கர் அசால்ட்டா இருந்திருக்கார்.. ஆனா அன்னைக்கு குமார் நினைச்ச மாதிரியே வந்தவனுங்க டாக்குமண்ட்ஸ் கைக்கு வந்ததும் கொடுத்த பணத்தையும் புடுங்கிட்டு கண்ணிமைக்கிற நேரத்துல அடிச்சி போட்டுட்டு போயிருக்கானுங்க..
பாஸ்கர் பக்கத்துல வரதுக்குள்ள குமார் மயங்கிட்டாப்லயாம்.. ஆம்புலன்ஸ்க்கு கால் செய்துட்டு வீட்டுக்கு தகவல் சொல்ல குமார் போனை தேடியிருக்கார்.. அவனுங்க போனை எடுத்துட்டு போய்ட்டானுங்களா.? இல்ல வேற எங்கையும் விழுந்துடுச்சான்னு பதட்டத்திலயே தேடிட்டிருந்திருக்கார்.. ஆம்புலன்ஸ் வரவரைக்கும் போன் கிடைக்கலயாம்.. பாஸ்கர் கையிலயும் காசில்லாததால ஜி.ஹெச்லதான் அட்மிட் செய்திருக்கார்.
மண்டையில அடின்றதால போலீஸ் எப்ஃபையார் ஃபைல் செய்து.. குமார் தங்கியிருந்த ஹோட்டல்ல விசாரணைன்னு பாஸ்கரும் ரொம்ப அவஸ்த்தை பட்டுருக்காப்பில.. இங்க வீடு பத்தி பாஸ்கருக்கு எதுவும் தெரியாதாம்.. குமாரோட சொந்த ஊர்தான் தெரியுமாம்.. ஆனா அதுனால ஒரு யூசும் இல்ல.. குமாருக்குன்னு இருந்த ஒரே சொந்தம் அவங்க பாட்டி மட்டும்தானாம்.. அவங்களும் ஐஞ்சு வருசம் முன்ன இறந்துட்டாங்களாம்.. பாஸ்கர்கிட்ட உன் நம்பர் இல்ல.. என்ன செய்யிறதுன்னு புரியாமலே ஆறு மாசம் ஓடிருச்சி, ஆறு மாசமா கோமாவிலயே இருந்திருக்காப்பில..
இப்படியே இருந்து குமாருக்கு எதாவது ஆகிடுச்சினா நாம கொலகேசுல உள்ள போய்டுவோம்ன்ற பயத்துல பாஸ்கர் அவங்க பொண்டாட்டி நகையை வித்துட்டு பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல மூனுமாசம் முன்ன அட்மிட் செய்து வைத்தியம் பார்த்திருக்கார்.. ஆப்ரேசன் செய்ய சொல்லியிருக்காங்க.. ஆப்ரேசன் செய்து இருபது நாளுக்கப்புறம் கண்திறந்தாப்லயாம்..
கண்திறந்து பத்து நாளுக்கப்புறம்தான் ஆறுமாசமா கோமாவுல இருந்ததுன்னு எல்லாத்தையும் பாஸ்கர் சொல்லியிருக்காப்பில.. இந்த வீட்டு அட்ரஸ் சொல்லி உன்னை பார்த்துட்டு வர சொல்லவும் பாஸ்கர் இங்க வந்திருக்காப்பில.. வீடு பூட்டியிருக்கவும் அக்கம் பக்கத்தில விசாரிச்சதில ஒன்பது மாசமா நீங்க இங்க இல்லன்ற விசயத்தை பாஸ்கர் சொல்லவும் குமாருக்கும் ரொம்ப பயமாகி அந்த டென்சன்லயே திரும்பவும் உடம்பு முடியாம போயிருக்கு..
உங்களுக்கு என்னாச்சோன்ற பதட்டத்துல டிஸ்சார்ஜ் செய்ய கேட்டிருக்கார்.. இந்த நிலையில செய்தா ஜன்னி வர வாய்ப்பிருக்கு.. உங்க உயிருக்கு உத்திரவாதம் தரமுடியாதுன்னு டாக்டர் சொல்லவும் வேற வழியே இல்லாம அங்கையே இருக்கவேண்டிய சூழல்ல மாட்டிக்கிட்டார்.. உன் நம்பர் தவிர வேற நம்பரும் தெரியாதாம்..
உனக்கு போன் செய்தா சுட்ச் ஆஃப்னு வந்திருக்கு.. ஒரு மாசமா சுட்ச் ஆஃப்னே வரவும் உனக்கு எதோ பிரச்சனை இருக்கப்போகுதுன்னும்.. நீ என்ன சூழல்ல இருக்கன்னு தெரியாம உன் நம்பரை கொடுத்து விசாரிக்க சொல்லவும் பயமா இருந்ததாம்..
ஒரு மாசத்துக்கப்புறம் எதுக்கும் ஒருமுறை செய்து பார்க்கலாமேன்னுதான் அன்னைக்கு பாஸ்கர் கால் செய்தாராம்.. நான் அட்டன் செய்யவும் விசயம் தெரிஞ்சி குமாரை போய் பார்த்தேன்.. மண்டையில ஆப்ரேசன் செய்திருக்கு.. இன்னும் ஒருமாசம் பக்கம் அட்மிஷன்ல இருக்கிறதுதான் நல்லதுன்னு டாக்டர் சொன்னாங்க..
இங்கயும் ரங்கன் வேற இவரை தேடிட்டிருக்கவும்.. ரங்கன் மாதிரி இன்னும் எத்தனை பிரச்சனை இருக்கோன்னும் இப்போதைக்கு அங்க இருக்கிறதே சேஃப்ன்னு சொல்லி.. நீயும் குழந்தைகளும் பத்திரமா எங்க வீட்ல இருக்கிங்க கவலைப்படாதிங்கன்னு சொன்னேன்..
அப்போ இருந்த சூழல்ல இதெல்லாம் உன்கிட்ட சொல்லியிருந்தா புருசனை பார்க்கனும்னு கிளம்புவ.. உன்னை கூட்டிட்டு வர நானும் உன்கூட வந்தாகனும்.. நாம இரண்டு பேரும் இல்லாம குழந்தைகள் இருந்துக்குவாங்களா தெரியாது..
குமாரையும் போனதும் கூட்டிட்டு வர முடியாது.. இங்க லோக்கல் ஸ்டேசன்ல குமார் கிடைச்சிட்டாப்பிலன்னு தகவல் கொடுத்துட்டு.. அங்க பாஸ்கரை கேசுலயிருந்து விடுவிக்கிறதுன்னு நிறை பிரச்சனை.. அதான் உன்கிட்ட எதுவும் சொல்லலை..” என்றான் சோர்வாக.