மனைவியின் பார்வையறிந்தவனாய்.. ‘சுவாதி.. உன்தம்பி நல்லா தூங்கி மூனு நாளாகிடுச்சி.. போய் ரெஸ்ட் எடுக்க சொல்லு..” என்றான் குமார். இத்தனை நேரம் கதிரவன் பேசியதில் இருவரும் சமாதானமாகியிருக்கிறார்கள் என சுவாதி நினைத்திருக்க.. தற்போது கணவனின் ஜாடைப் பேச்சில் அதிர்வாய் விழிவிரித்தாள்.
சுவாதியின் அதிர்வை புறக்கணித்த கதிரவன்.. ‘கவிம்மாவும் பார்த்தியும் இங்க வந்தா குமார் ரெஸ்ட் எடுக்க முடியாது.. அவங்க அங்கையே இருக்கட்டும்.. உன்னை ரொம்ப கேட்டாங்கனா நானே கூட்டிட்டு வரேன்..“ என்றவன் பதிலுக்கு காத்திராமல் கிளம்பினான்.
கதிரவன் கிளம்பியதும்.. ‘கதிர் சொல்றதெல்லாம்..” என குரல் கமற.. ‘அத்தனையும் உண்மை..” என ஆமோதித்தவன்.. நீங்க இங்க இல்லன்னதும் உசிரே போய்டுச்சி..” என கண்கலங்கினான் குமார்.
சுவாதி இங்கு நடந்ததை சொல்ல ஆரம்பிக்க.. இடைமறித்த குமார்.. ‘ம்.. எல்லாம் கதிர் சொன்னான்.. ஆனா என்கிட்ட இல்ல.. பாஸ்கர்கிட்ட..” என்றான்.
சுவாதி முகம் வாடிச்சுருங்க.. ‘கதிர் அங்க வருவான்னு நான் நினைச்சே பார்க்கல.. என்மேல எத்தனை கோபம் இருந்தாலும் பாஸ்கர் சொன்னதும் உடனே கிளம்பிட்டான்ல..? அதுவே பெரிய விசயம்..” என உணர்ந்து சொன்னவன்..
அதுவும் சும்மா வரல பணத்தோட வந்தான்.. பாஸ்கர்கிட்ட இவ்ளோ கஷ்டத்துலயும் உதவி செய்ததில்லாம கூடவே இருந்திருக்கிங்கன்னு நன்றி சொல்லி.. பணம் எடுத்து வந்துருக்கேன் எவ்ளோ செலவானதுன்னு கேட்டான்..“ என பெருமையோடு விளக்கி..
‘ஐஞ்சு லட்சம் எடுத்துட்டு வந்திருக்கானே.? எங்கெங்க அலைஞ்சி கடன் வாங்கினானோன்னு.. என் அக்கௌண்ட்ல பணமிருக்கு கார்டு தொலைஞ்சதால பணமெடுக்க முடியல.. வீட்டுக்கு போனதும் பாஸ்கர்க்கு நான் செட்டில் செய்துடறேன்னு சொன்னேன்..
இப்போ என்கிட்ட பணத்தை வாங்கிக்குங்க.. வீட்டுக்கு வந்ததும் உங்க ஃபிரண்டை எனக்கு செட்டில் செய்ய சொல்லுங்கன்னு பாஸ்கர்கிட்ட பணத்தை கொடுத்தான்.. இப்படி எல்லா பேச்சும் பாஸ்கரோட மட்டும்தான்..
சென்னையில இருந்து வரும்போதுதான் எதாவது சாப்பிடுறிங்களா.? பாத்ரூமேது போகனுமான்னு அவன் மொபைலை நோண்டிகிட்டே கேட்டான்.. எதுவும் வேணாம்னு சொல்லிட்டு ரொம்ப நன்றின்னேன்.. அமைதியாவே இருந்தான்.. குழந்தைங்களை விசாரிச்சேன்..
உங்களோட நன்றிக்காக நான் எதையும் செய்யல.. சுவாதி உங்க பொண்டாட்டின்னாலும்.. நாகராஜன் மகள் யாரோடவோ ஓடிப்போய் கல்யாணம் செய்துக்கிட்டாளாம்னுதான் அன்னைக்கும் சொன்னாங்க.. இனி வரும் காலங்கள்லயும் அப்படித்தான் சொல்வாங்க.. நீங்க செய்த எதையும் என்னாலயும் எங்கப்பாவாலயும் மறக்கவும் முடியாது.. மன்னிக்கவும் முடியாது.
வீட்டுக்கு தெரியாம கல்யாணம் செய்யிறது உங்களுக்கு சாதாரணமா இருக்கலாம்.. எங்களுக்கு அப்படியில்ல.. சொன்னாலும் அதெல்லாம் உங்களுக்கு இப்போ புரியாது.. எங்கப்பா வயசு வரும்போது உங்க மக வளர்ந்து நிற்பா பாருங்க அப்போ புரியும்னு கோபமா சொல்லி..
நமக்காக இவ்ளோ தூரம் வந்துருக்கனே.. பொண்டாட்டி புள்ளைங்களையும் வீட்ல சேர்த்துக்கிட்டாங்களே.. இனி எல்லாம் சரியாகிடும்னு நினைச்சிடாதிங்க..
பாசம் வேற கடமை வேற.. இப்போ நான் செய்துட்டிருக்கிறது கடமை.. கூடப்பிறந்தவளாச்சேன்ற கடமைக்காக மட்டும்தான் இதெல்லாம்.. வீட்டுக்கு போனதும் சுவாதியை கூட்டிட்டு வந்துடறேன்.. இந்த எட்டு வருசமா எப்படி இருந்திங்களோ அப்படியே இருந்துக்கோங்கன்னு ஜென்ம விரோதிட்ட பேசுறமாதிரி பேசினான்..” என்றான் வேதனையாக.
சுவாதிக்கும் வேதனைதான் என்றாலும்.. ‘ஆனா குழந்தைங்ககிட்ட ரொம்ப அன்பா இருக்கான்..” என்றாள் தேறுதலாக.
தெரியும் என்பதாய் ஆமோதித்தவன்.. ‘பிடிக்காத இடத்துல நம்ம குழந்தைங்க இருக்கமாட்டாங்க.. உன்னை தனியா கூட்டிட்டு வந்திருக்கான்னா பசங்க அங்க பயமில்லாம சந்தோசமா இருக்காங்கன்னுதான அர்த்தம்..” என்றான் மனம் நிறைந்த நிம்மதியுடன்.
ம்.. ஒன்பது மாதங்களாய் தன்னிலை இப்படியிருக்க இதில் மனைவி மக்களின் நிலையறியாமல் தவித்ததென.. தாளமுடியாத சிக்கலில் சிக்கிய பின்தானே உறவுகளின் வலி என்னவென்பது புரிய ஆரம்பித்திருக்கிறது..
———- ——– ———
வீடு வந்து குளித்து சாப்பிட அமர்ந்த கதிரவனிடம் அம்பிகா மருமகனின் நிலையை விசாரிக்க.. குழந்தைகளின் கவனம் தொலைகாட்சியில் இருக்கவே.. நடந்ததனைத்தும் அன்னைக்கு சொல்ல.. ‘கடவுளே மருமகனுக்கு எதாவது ஆகியிருந்தா மகள் நிலை என்னவாகியிருக்கும்..” என கடவுளுக்கு நன்றி சொன்னார்.
மருமகன் என உறவுமுறை சொன்னதும் கோபமானவன்..‘ம்மா.. இந்த மருமகன்னு உறவு கொண்டாடுற வேலையெல்லாம் வச்சிக்காத..” என்றான் கடுமையாக.
‘கதிர்.. அவங்களுக்கு நம்மைவிட்டா வேற யாருடா இருக்கா.?” என பதறினார் அம்பிகா.
‘எதோ ஆபத்துல சிக்கிட்டாங்கன்னு கூட பிறந்த பாவத்துக்கு என்னால முடிஞ்சதை செய்தேன்.. இப்போதான் புருசன் வந்துட்டானில்ல.? அவனை நம்பித்தான போனா.?” என்றான் கோபமாக.
‘குழந்தைகளுக்காகவாது பார்க்கனுமில்ல..? குழந்தைகளும் இங்க நல்லா பழகிட்டாங்க.. ” என்றார் தவிப்பாக.
‘இருக்கிற லிமிட்டோட இருந்துட்டா அவளுக்கும் நல்லது.. குழந்தைகளும் இங்க வரப்போக இருக்கலாம்.. ஆனா குழந்தைகளை சாக்கா வச்சிக்கிட்டு உரிமை கொண்டாடறதோ.. மெல்ல மெல்ல புருசன் பேச்செடுக்கிறதுன்னு ஆரம்பிச்சாள்ன்னா குழந்தைகளையும் இங்க வரக்கூடாதுன்னு சொல்லிடுவேன்..” என மனதை கல்லாக்கி மிரட்டினான் அன்னையை.
‘கதிர்..” என அம்பிகா கண்ணீர் விடவே.. ‘ம்மா..” என எரிச்சலடைந்தவன்.. ‘இப்பவரைக்கும் நம்ம செய்த காரியத்தால குடும்பத்துக்கு எத்தனை தலைகுனிவுன்னு ரெண்டுபேருமே உணரல..” என பல்லை நெறித்தான்.
‘அதெல்லாம் உணர்ந்துட்டாடா.. என்கிட்ட சொல்லி ரொம்ப அழுதா..” என்றார்.
இத்தனை நடந்த பின்னும் ஒரு வார்த்தை தாய்தந்தையிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்ற ஆற்றாமையில்.. ‘ஆமாமா நல்லா உணர்ந்தா.. அதான் அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டாளா..?” என்றான் கோபமாக.
‘அப்பாமேல உள்ள பயத்துலதாண்டா மன்னிப்பு கேட்கல.. உண்மையா என்கிட்ட சொல்லி ரொம்ப அழுதாடா..” என்றார். ம் அது கதிருக்கும் தெரியும்தான்.. அப்பாதானே.. அதிகபட்சம் திட்டுவதை தவிர்த்து வேறென்ன செய்திடுவார்.? இரண்டு திட்டு வாங்கினால் என்னவென்று பேசியிருக்கலாமல்லவா.. என்ற ஆற்றாமை இவனிற்கு.
‘தப்பு செய்யும்போது இல்லாத பயம்.. மன்னிப்பு கேக்கும்போது வருதா.?” என்றான் கடுப்போடு.
மகனின் கோபத்தோடு மிகவும் சோர்ந்தும் காணப்படவே.. தற்போது இப்பேச்சை விடலாம் என நினைத்து.. ‘சரி சரி.. முதல்ல சாப்பிடு..” என்றார் அம்பிகா.
கதிரவன் சாப்பிட.. தொலைகாட்சியிலிருந்து கவனம் கலைத்த பார்த்திபன்.. ‘மாமா.. அம்மா எங்க.?” என்றான்.
‘சாப்பிட்டாயா.? ” என கேட்க, இல்லையென உதடு பிதுக்க, ‘சாப்பிட்டாதான் அம்மா எங்க சொல்லுவேன்..” என அவனிற்கும் ஊட்டி தானும் சாப்பிட்டு முடித்தவன்.. ‘அம்மா வருவாங்க.. நீ போய் நிலாவோட விளையாடு..” என பணிக்க பார்த்திபன் நிலாவிடம் போனான்.
‘அம்மா நான் கொஞ்நேரம் படுக்கறேன்..” என தனதறைக்கு சென்ற படுத்தவன்.. பிறகுதான் நியாபகம் வந்தவனாய் கலையரசனிற்கு அழைத்தான்.
அழைப்பது கதிரவன் என தெரிந்தும் கலையரசன் அழைப்பை ஏற்கவில்லை.. முதலமைச்சரோடு சந்திப்பு டி.வியில் பார்த்ததாகவும்.. இப்படிபட்ட கலையரசன் என் நண்பன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை என வாழ்த்துக்கள் சொல்லவும் கதிரவன் அழைத்து பேச..
அதன்பின் குமாரை கண்டுபிடிக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிங்க என கேட்க தான் அழைத்தாக கலையரசன் சொல்ல.. இதுபோல் கடந்த இரண்டு மாதத்தில் நான்கைந்து முறை கதிரவனோடு பேசியிருக்கிறான்..
நிலவழகியிடம் தன்னை நியாபகப்படுத்திக்கொள்ள பேசும்போதெல்லாம் பார்த்திபனிடம் பேச கலையரசன் கேட்க.. தான் வெளியில் இருப்பதாக கதிரவன் கூறிட.. தற்போது பேசினால் நண்டு பக்கத்தில இருக்குமோ என்னவோ.. இரவு பேசிக்கலாம் என உல்லாசமாய் நினைத்தபடி அழைப்பை ஏற்காமல் கல்லூரிக்கு கிளம்பினான்.
இரவு எட்டரை மணிபோல் கலையரசன் அழைக்க.. கதிரவன் அழைப்பை ஏற்க.. ‘சாரி கதிர் கொஞ்சம் பிஸியாயிருந்தேன்.. அதான் உங்க கால் அட்டன் செய்ய முடியல..” என்றான்.
‘பராவல்ல கலை..” என குமார் விசயம் சொல்லி முடித்தவன்.. ‘இதை சொல்லத்தான் கால் செய்தேன்..” என்றான் கதிரவன்.
‘தேங்க் காட்.. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல..” என சில மணித்துளிகள் குமாரை பற்றி பேசி முடித்து பார்த்திபனை கேட்க.. ‘இதோ கொடுக்கிறேன்..” என்றவன் பார்த்திபனிடம் கொடுத்து.. ‘உங்கண்ணாடா.. பேசு..” என்றான்.
‘டிஸ்யூம் அண்ணாவா.?” என ஆர்வமாய் வாங்கிய பார்த்திபனிடம்.. ‘நல்லாயிருக்கியாடா.? மாமா வீட்ல ஜாலியா இருக்கா..? அக்க நல்லாயிருக்காளா.?”என சில நிமிடம் பேசியவன்.. ‘சாப்டியாடா.?” என்றான்.
‘ம்..” என்க.. ‘என்ன சாப்பிட்ட.?” என கலை கேட்க.. ‘நிலா.. நான் என்ன சாப்பிட்டேன்..?” என பார்த்திபன் நிலவழகியிடம் கேட்டான்.
‘தோசை..” என நிலா கிசுகிசுக்க.. ‘ம்.. நண்டு இங்கதான் இருக்காளா.? என உல்லாசமாய் நினைத்தவன்.. ‘வெறும் தோசையா.?” என பேச்சை வளர்த்தான்.
‘ஆனியன் தோசை.. சட்னி சாம்பார்ன்னு சொல்லு…” என நிலவழகி மீண்டும் கிசுகிசுப்பாய் சொல்லித்தர.. குழந்தையும் நிலவழகிபோலவே கிசுகிசுப்போடு சொல்ல..
சிரித்தவன்.. ‘எனக்கு..” என பாவமாய் கேட்க.. ‘இங்க வாங்க.. அப்போதான் கிடைக்கும்.” என பார்த்தி சொல்ல.. இன்று இதுபோதும் என நிறைவாய் நினைத்தவன்.. ‘மாமாகிட்ட கொடு..” என கதிரவனிடம் சற்று நேரம் பேசி இணைப்பை துண்டித்தவன், இனி மாசத்துக்கு ஒருமுறையாவது இந்த டைம்ல கதிர்கிட்ட பேசனும் என சந்தோசத்தோடு நினைத்து, அதை இரண்டு வருடமாக செயல்படுத்தியும் வந்தான்.