காதலால் நெய்திடு..
அத்தியாயம்.. 11
தனது இருபத்து மூன்று வயது வரை பயிற்சி.. போட்டி.. நாட்டிற்காக பதக்கம் வெல்வது மட்டுமே குறிக்கோளாக இருந்த கலையரசனிற்கு.. எம்.ஏ முதுகலை படிப்பை முடித்த பின்னே தன்னை அங்கீகரித்து அரசாங்கம் தனக்கு கொடுத்த வேலைக்கு மதிப்பளித்து நேர்மையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் திண்ணமாக.. தனது பணியில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தான்.
முதல் இரண்டு மாதங்கள் காலை மாலை பயிற்சி நேரம் தவிர்த்து காவல் துறை அதிகாரிகளிடம் பணிபற்றிய விபரங்களை கேட்டறிந்ததில்.. பணியாற்றுவதில் உள்ள சிக்கல்கள் புரிய சவாலான இப்பணி கலையரசனிற்கு இன்னும் பிடித்தது.
இந்த நிலையில் குமார் கிடைத்து விட்டதாக கதிரவன் தகவல் சொல்ல.. குடும்பத்தை மிரட்டி குழந்தையை கடத்தும் அளவிற்கு அந்த ரங்கனிற்கு குமார் என்ன செய்துவிட்டான்.? சென்னையில் குமாரை தாக்கியவர்கள் பணத்திற்காக மட்டும்தானா.? இல்லை வேறேதும் பகையா.? என கதிரவனிடம் கேட்க.. இப்போதைக்கு குமாரை மீட்டிருக்கிறேன்.. மற்றபடி அவனின் தொழில் எதிரிகள் பற்றி எனக்கேதும் தெரியாதென கதிரவன் சொல்ல.. சரி அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றிருந்தான் கலையரசன்.
ம்.. முதல் கேசாக இதனை விசாரிப்போம் என முடிவெடுத்து சுவாதிக்கு அழைத்து குமாரிடம் பேசினான். சென்னையில் தன்னை அடித்தவர்கள் பணத்திற்காக மட்டும்தான்.. முன் விரோதம் ஏதும் இல்லை என குமார் சொல்லவே.. அடுத்து ரங்கனைப் பற்றி விசாரித்தான்.
ரங்கனுக்கும் எனக்கும் தொழில்முறை பழக்கம்தான்.. அவனும் ஃபைனான்ஸ் நடத்திட்டிருக்கான்.. எனக்கு தெரிஞ்சவர் அவசரமா முப்பது லட்சம் பணம் தேவைன்னு கேட்டார்.. அப்போ என்கிட்ட அவ்ளோ பணம் இல்ல.. நான் கஷ்டப்பட்ட காலத்துல எனக்கு உதவினவராச்சேன்னு எப்படியாவது ஏற்பாடு செய்து தரனும்னு ரங்கன்கிட்ட கடன் கேட்டேன்.. பெரிய தொகையா இருக்கு டாக்குமண்ட்ஸ் வேணும்ன்னான்.. என்னோட ஃபைனான்ஸ் ஆபீசோட இரண்டு கடையும் இருக்கிற இடத்தோட பத்திரத்தை கொடுத்து கடன் வாங்கினேன்..
மூனு மாசம் கழிச்சி என் ஃபிரண்டு பணத்தை திருப்பி கொடுத்தான்.. நானும் ரங்கன்கிட்ட பணத்தை கொடுக்கிறேன்.. பத்திரத்தை எடுத்துட்டு வான்னு சொன்னேன்.. எனக்கு பணம் வேணாம் இடத்தை கிரயம் செய்து கொடுன்னான்.. முடியாதுன்னுட்டேன்.. இப்படியே நாலு மாசம் போனது..
எனக்கும் பொறுமை போய்டுச்சி.. எனக்கு தெரிஞ்சவர்கிட்ட பிரச்சனையை சொன்னேன்.. குறுக்கு வழிதான் சொன்னார்.. ரங்கன் மாதிரி ஆளுங்களுக்கு அது தப்பில்லன்னு.. ரங்கன்கிட்ட வேலை செய்யிற அசோக்குக்கு பணம் கொடுத்து டாக்குமண்ட்ஸ் எடுத்து தந்தா இன்னும் நிறைய பணம் தரேன்னு சொன்னேன்.. முதல்ல அசோக் ஒத்துக்கல.. உன் முதலாளி பண்றது மட்டும் நியாயமான்னு நிறைய பேசியும் பணத்தை கொடுத்தும் அவனை சம்மதிக்க வச்சி டாக்குமண்டை தூக்கிட்டேன்..
அதுக்கப்புறம் கொஞ்ச நாள் அலைய விட்டுட்டு பணத்தை கொடுத்துடலாம்னுதான் இருந்தேன்.. அதுக்குள்ள சென்னை வசூல் போன இடத்துல இப்படி ஆகவும்.. பத்திரத்தை திருடிட்டு பணத்தை ஏமாத்திட்டேன்னு நினைச்சிட்டான்..
அதுக்கேத்த மாதிரி சுவாதி ஊரைவிட்டு போகவும் அவனை ஏமாத்திட்டேன்னு முடிவே செய்து என்னை வர வைக்க பார்த்திய கடத்துற அளவுக்கு துணிஞ்சிட்டான்.. “ என கோபத்தோடு ரங்கன் பற்றிய பகையை சொல்லி..
‘பையனை தூக்கினதுக்கும் உன்னை மிரட்டனுதுக்கும் அவனை வச்சி செய்யிலாம்ன்னா.. அவன் பணம் நமக்கெதுக்குன்னும்.. நம்மள பார்த்துதான் பசங்க வளருவாங்க.. ரௌடிசம் வேணாம்னு என் பொண்டாட்டி கெஞ்சுறா.. அதனால கொஞ்ச நாள் கழிச்சி அவன் பணத்தை கொடுத்துடலாம்னு இருக்கேன்..” என முடித்தான் குமார்.
என ரங்கன் பற்றிய பகையை சொல்ல.. சவாலான விசயத்தை விடவும் பிடிக்காது.. அதே நேரம் உப்பில்லாத விசயத்தின் பின்னே போகவும் பிடிக்காத கலையரசன்.. இதில் தான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதால்.. ‘சரிங்க.. உடம்பை பார்த்துக்கோங்க..” என இணைப்பை துண்டிக்க பார்க்க..
‘ஒரு நிமிசம்..” என இடைமறித்து.. மனைவி மக்களை தவிர்த்து தனக்கென இவ்வுலகத்தில் யாருமில்லை என தன் நிலையை விளக்கிய குமார்.. ‘என் உயிரை மீட்டுக்கொடுத்திருக்கிறீர்கள்.. உயிருள்ள வரை மறக்கமாட்டேன்..” என கலையரசனிற்கு ஆயிரமாயிரம் நன்றிகளை தெரிவித்து..
பிரபாகரனின் நம்பரை வாங்கி அழைத்தவன்.. தன்னை அறிமுகம் செய்து.. சுவாதியிடம் நகை பெற்றதற்கான மீதி பணத்தை தரவேண்டாம்.. தக்க சமயத்தில் என் மனைவி மக்களுக்கு இடமளித்து பாதுகாத்ததற்கு இன்னும் எத்தனை செய்தாலும் தகும் என பிரபாவிற்கும் நன்றி தெரிவித்து.. கலையரசனோடு ஒருமுறை வீட்டிற்கு வாங்க என அன்போடு பணித்து இணைப்பை துண்டித்தான் குமார்.
—– ——– ——– ——-
வீரானாக இருக்கும்போதே கண்முன் நடக்கும் அநியாங்களை கடந்து போகாத கலையரசன்.. தற்போது காக்கி உடையணிந்த பின்னே வீரத்தோடு அதிகாரமும் கையிலிருக்க.. இளங்கன்று பயமறியாது என்பதை தாண்டி.. இந்த இளஞ்சிங்கம் தவறு செய்வோர் மனதில் நடுக்கத்தை வர வைத்திருந்தது.
இதில் பெண்களை தொல்லை செய்யும் காளைகளுக்கு சிறப்பான கவனிப்பை கொடுக்க.. தவறிழைத்து மாட்டும் மைனர்களில் யாரேனும் நான் யார் மகன் தெரியுமா.? என சிலிப்பினால்.. கலையரசன் கைகள் மட்டுமே அவர்களிடம் பேசும். அதன் விளைவாக பல சிக்கல்களையும் மிரட்டல்களையும் சந்திக்க நேர்ந்தது.
அப்படிவரும் மிரட்டல்களை அஞ்சாமல் எதிர்கொள்ளும் போது நிறைய அடியும் பட்டிருக்கிறான்.. ஆனால் எது நடப்பினும் வீட்டிற்கு மட்டும் சொல்வது கிடையாது.. அங்கு அதிகம் செல்வதும் கிடையாது.. மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ மயில்சாமியும் கலாவும் மகனை வந்து பார்த்து செல்வர்.
அப்படியொருமுறை வந்திருக்க அந்த நேரம் கலையரசன் காலில் கட்டு போட்டு படுத்திருந்தான். பெற்றோர் பதறிட.. ‘ப்பா..” என வழக்கம்போல் சலிப்பாய் ராகமிழுத்தவன்..
‘ஒரு பொண்ணை நாலு பேரு சேர்ந்து கலாட்டா செய்து அந்த பொண்ணு காலேஜ்க்கே போகமாட்டன்னு சொல்ற அளவுக்கு கொண்டு வந்திருக்கானுங்க.. போய் கேட்டா வாலிப வயசுன்னு தெனாவெட்டா பதில் சொல்றானுங்க.. நாலு குடுத்து உள்ள தள்ளினேன்.. அடுத்த ஒரு மணிநேரத்துல அவங்கப்பனுங்க வக்கிலோட வராங்க..
இவனுங்க செய்ததை விளக்கினா.. பெத்த அப்பனுங்களும் பெரிய இடத்துல இதெல்லாம் சகஜம்.. கண்டுக்காம இருந்தா உனக்கு நல்லதுன்னு என்னை எச்சரிக்கை செய்துட்டு அவனுங்களை கூட்டிட்டு போய்ட்டாங்க.. இவனுங்களுக்கு லீகலை விட இல்லீகல்தான் சரின்னு பட்டது.. அதான் சின்ன மேட்ச் விளையாண்டேன்.. கிக் பாக்ஸிங்ல அடிபடறது சகஜம்தான்..” என்றான் அசால்ட்டாய்.
கலையரசன் கோபத்திலுள்ள நியாயம் உணர்ந்தாலும்.. ‘அது சரி.. உனக்குன்னு குவாட்டர்ஸ் கொடுத்திருக்காங்கள்ல.? அங்க போய் இருக்காம எதுக்கு இப்படி தனியா இருக்க.? இப்படி நேரத்துல யாராவது வந்தாங்கனா என்னடா ஆகுறது.?” என கலா பதட்டத்தோடு மிரட்ட..
‘ம்மா.. என் முன்ன வந்து அடிக்கிற அளவுக்கு அவனுங்களுக்கு தைரியம் கிடையாது.. பொண்ணுங்ககிட்ட வீரம் காட்டுற பேடிப் பசங்க.. நீங்க பயப்படாதிங்க..” என்றான் இலகுவாக.
மயில்சாமி.. ‘அம்மா சொல்ற மாதிரி குவாட்டர்ஸ்க்கு போய்டேன் கலை.. நாங்களாவது நிம்மதியா இருப்போம்..” என்றார் கெஞ்சலாய்.
‘எனக்காக எங்கப்பா வாங்கின வீடு.. எனக்கு இங்கதான்ப்பா பிடிச்சிருக்கு..” என்றான் நிறைந்த பாசத்தோடு.
‘சின்ன வயசுலயிருந்து எது நினைக்கிறியோ அதையே சாதிக்கனும்.. பெத்தவங்க பேச்சு ஒன்னு கூட கேக்குறதில்ல..” என கலா பிணங்கினார் பயத்தோடு. மகனின் வீரம் அறிந்தாலும் அவனின் காயம் பயப்பட வைத்தது அன்னையை.
‘எனக்கு ஒன்னும் ஆகாதும்மா..” என தைரியமூட்டி அனுப்பி வைத்தான் பெற்றோரை.. காயம் சரியாகும் வரையாவது வீட்டிற்கு வாவென அழைத்தனர்.. அங்கு போனால் புலம்பியே தம்மை சாகடிப்பார்கள்.. இவர்களோடு செல்விக்காவும் சேர்ந்துக்கும்.. யப்பா.. வலியை கூட சமாளிச்சிடலாம்.. இவங்க புலம்பலை யார் கேட்பது என தஞ்சை செல்ல மறுத்துவிட்டான்.
ஒருமாதம் ரெஸ்டில் இருந்தவன் மீண்டும் பயிற்சி பணி என அன்றாட வேலையோடு முக்கியமான போட்டிகளில் பங்கேற்பது என நாட்கள் இறக்கை கட்டி பறந்தது கலையரசனிற்கு.. ( ம்.. இப்படியாகத்தான் ஓடியது இரண்டு வருடம்..)
—– ——– ——– ——-
மயில்சாமி.. ‘இவனை இப்படியே விட்டா வேலைக்காகாது..” என்றார் கோபமாக.
கலையரசன்.. ‘என்னப்பா செய்யப் போறிங்க.?” என்றான் சிரிப்போடு.
‘கல்யாணம் செய்து வைக்கப் போறேன்..” என்றார் முறைப்பாக.
‘ப்பா..” என எழுந்தமர்ந்தான் அதிர்வோடு.
கலா.. ‘ஏய்.. பார்த்து கலை..” என பதறி தாங்கினார் மகனை. (https://prodavinci.com/)
‘ம்மா.. எனக்கு ஒன்னுமில்ல.. எதுக்கு இப்படி பயப்படுறிங்க.?” என சலிப்போடு அதட்டினான் அன்னையை.
மனைவியிடம்.. ‘நீ தாங்கினா இப்படித்தான் மிரட்டுவான்.. பொண்டாட்டின்னா அடங்கிப் போவான்..” என தரகருக்கு அழைத்தார் மயில்சாமி.
தரகர் அழைப்பை ஏற்க.. ‘ஆமா நான் மயில்சாமிதான் பேசுறேன்.. பையனுக்கு கல்யாணம் செய்யலாம்னு இருக்கேன்..” எனும்போதே அச்சோ நிஜமாவே தரகர்க்குதான் போன் செய்துட்டார் போல என தகப்பன் கையிலிருந்த மொபைலை பதறி பிடுங்கினாள் கீதாராணி.
‘மொபைலை கொடு கீதா.. அவர் லைன்ல இருக்கார்..” என்றார் மயில்சாமி.
‘அதெல்லாம் வேணாம் சொல்லி கட் பண்ணுக்கா..” என்றான் கலையரசன்.
‘ஏண்டா வேணாம்.? இல்ல ஏன் வேணாம்ன்னேன்.? இருபத்தைஞ்சு வயசுலதான் நான் கல்யாணம் செய்துகிட்டேன்.. நீயும் செய்துதான் ஆகனும்..” என்றார் கட்டளையாக.
தனக்கு அடிப்பட்ட கோபத்தில் பேசுகிறாறென..‘தான் பெற்ற துன்பம் மகனும் பெறுகன்னு.. பெத்த மகனை இப்படி பழிவாங்க கூடாதுப்பா..” என்றான் இலகுவாக.
‘டேய்..” என கலா முறைக்க.. ‘ம்மா.. அப்பா பண்றது ரொம்ப அநியாயம்.. அதை கேட்காம என்னை முறைக்கிறிங்க..” என்றான்.
கீதா.. ‘ஆமாம்மா.. கலைக்கு இப்போதானே இருபத்தஞ்சாகுது.. இன்னும் நாலஞ்சி வருசம் ஆகட்டுமே.. கல்யாண விசயத்துல அவனுக்கு அழுத்தம் கொடுக்க கூடாதில்ல..” என்றாள் மிகுந்த அக்கறையோடு.