‘நீ நினைக்கிற மாதிரி இல்ல என் மச்சான்.. எங்க அடங்குனுமோ அங்கதான் அடங்குவான்.. எங்க அடக்கனுமோ அங்க அடக்கி ஒடுக்கிடுவான்..” என ஆனந்தன் கலையரசன் பக்கம் நின்றான்.
செல்வராணி.. ‘ஏங்க நீங்க சும்மாயிருங்க.. அந்த நித்யா பொண்ணை காப்பாத்துனதுலயிருந்து எல்லா பொண்ணுங்களுக்கும் என் தம்பி மேலதான் கண்ணு.. எவளாவது வளைச்சி போடுறதுக்கு முன்ன நாம சுதாரிக்கிறதுதான் நல்லது.. அப்பா நீங்க பாருங்கப்பா..” என்றாள் மீண்டும்.
‘அக்கா.. அப்பா ஏற்கனவே பொங்கிட்டிருக்கார்.. நீ வேற ஏத்திவிடாத..” என்றான் சின்ன முறைப்போடு.
‘நான் ஏத்தி விடல கலை.. அப்பா நினைக்கிறது எனக்கும் சரின்னுதான் படுது.. இப்போல்லாம் வேலை கிடைச்சி செட்டில் ஆகுறதுக்கு பசங்களுக்கு இருபத்திஏழு இல்ல இருபத்தொன்பது பக்கம் ஆகிடுது..
உனக்கப்படி இல்லல்ல.? கை நிறைய சம்பாதிக்கிற.. அப்புறமென்ன.? ஒழுங்கா அப்பா சொல்பேச்சு கேளு..” என அதட்ட.. ‘க்கா..” என கோபமாக கத்தினான் கலையரசன்.
‘என்னடா கத்துற.? இந்த இரண்டு வருசத்துல அம்மாப்பாவை பார்க்க எத்தனை நாள் வந்திருக்க.? இதை செய்தா அம்மாப்பாக்கு பிடிக்கும் பிடிக்காதுன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கியா.?”என்றாள் தானும் கோபமாக.
‘என் ஸ்கெட்யுல் அப்படி.. இதுக்கெல்லாம் கல்யாணம் செய்யனுமா.?” என்றான் கடுப்பாக.
‘பின்ன இல்லையா.? எந்த நேரத்துக்கு வீட்டுக்கு போனாலும் கேட்க ஆளில்லாததுனாலதான அவுத்துவிட்ட காளையாட்டாம் சுத்திட்டிருக்க.. ? வீட்ல ஒருத்தி காத்திருந்தா இப்படி தேவையில்லாத விசயத்துல மூக்கை நுழைச்சி அடிபட்டிருக்குமா.? கையேது உடைஞ்சிருந்தா என்னாகுறது.?” என்றாள் கோபமாகவே.
‘ம்ப்ச் க்கா.. இரண்டு வாரத்துல சரியாய்டப்போகுது.. அதுக்கு இத்தனை அலப்பறையா.? கை வலியை விட உங்க அலும்பு தாங்க முடியல.. இதுக்குத்தான் இங்க வரதே இல்ல..” என்றான் சலிப்பாக.
‘மூனு மாசத்துக்கு ஒருமுறை கூட அம்மாப்பாவை பார்க்க வரமுடியாதா.? எப்போப்பாரு இவங்கதான் அங்க வராங்க.. அப்படியே வந்தாலும் கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்பிடறயாம்..
பையனுக்கு நிக்க நேரமில்லாம ஓடிட்டிருக்கான்.. இத்தனை சம்பாதிச்சும் கவனிச்சு பார்க்க ஆளில்லாம மெஸ்ல சாப்டுட்டு தனியா கஷ்டப்படுறான்னு இங்க அம்மா ஒரே புலம்பல்.. எனக்கும் அது கஷ்டமா இருக்கு.. எப்படியும் இரண்டொரு வருசத்துல கல்யாணம் செய்துதான ஆகனும்..? அதை இப்பவே செய்துக்க.. உன்னை பார்த்துக்க பொண்டாட்டி இருக்கான்னு நாங்க எல்லாரும் நிம்மதியா இருப்போம்..” என்றாள் செல்வராணி.
ம்.. பொண்டாட்டி என்றது நிலவழகியின் முகம் கண்முன் தோன்ற.. ‘ஏண்டி.. இன்னும் ஒரு இரண்டு வருசம் முன்ன பிறந்திருக்கமாட்ட..” என மனதுக்குள் நினைப்பதாய் நினைத்து முனுமுனுக்க..
அரைகுறையாய் காதில் வாங்கிய கீதாராணி..‘கலை.. என்னடா சொன்ன.? இப்போ என்ன சொன்ன.?” என்றாள் ஆர்வமாக.
‘ஒன்னும் சொல்லல..” என்றான் மறுப்பாக.
‘கொஞ்சம் முன்ன பிறந்திருக்கமாட்டன்னு என்னவோ கேட்டதே..” என கீதா துருவ.. ‘ம் அப்படியா சொன்னான்.?” என்ற லோகேஷ்.. ‘சொன்னாப்பில..?” என அவசரமாய் திருத்தியமைக்க.. கலையரசன் சந்தேகத்தோடு நோக்கினான் தன் பெரிய மாமனை.
தற்போதும் அவர்கள் மகளிற்கு தன்னை நினைப்பார்கள் என்ற எண்ணம் சிறிதும் இல்லை கலையரசனிற்கு.. ம்.. எல்லாம் பணம் செய்யும் பாடு.. நாலு காசு சம்பாதித்ததும் மரியாதையும் பாசமும் தானாய் வருகிறது என எரிச்சலோடு நினைத்தவன்.. இந்த செல்விக்காக்கு என்னாச்சு.? எதுக்கு இப்படி அப்பாக்கு சப்போர்ட் செய்யிறாங்க என்ற யோசனையோடும் கோபத்தோடும் செல்வராணியை பார்த்திருந்தான்.
தான் சொன்னால் கேட்பான் என்ற நம்பிக்கையோடிருந்த மயில்சாமிக்கு.. தற்போது கல்யாணம் வேணாம் என மறுத்த மகன் மீது கோபம் வர.. மீண்டும் தரகருக்கு அழைத்து.. பெண் பார்க்கும் படலம் பற்றி தீவிரமாக பேச ஆரம்பிக்க..
‘அப்பா பொண்ணெல்லாம் பார்க்காதிங்க..” என இடைபுகுந்தான் சற்று உயர்ந்த குரலில்.
கலையரசன் சொன்னவிதம் மயில்சாமிக்கு கோபத்தை வரவழைக்க.. இணைப்பை துண்டித்து.. ’பார்த்தா என்னடா செய்வ.?” என எகிறினார்.
‘என்னால உங்களை என்ன செய்ய முடியும்..? உங்களை ஒன்னும் செய்யமாட்டேன்.. அதே நேரம் நீங்க பார்க்கிற பொண்ணுக்கு தாலியும் கட்ட மாட்டேன்..” என்றான் இலகுவாகவே.
மயில்சாமிக்கும் மகன் விருப்பமில்லாமல் திருமணம் செய்யும் எண்ணமில்லை.. பெரிய மகளின் எண்ணம் நிச்சயம் கலையரசனிடம் செல்லாது என அறிந்திருந்ததாலும்.. இதனால் சகோதரியோடு மனக்கசப்பு வருவதற்குள் மகனிற்கு வெளியில் பெண் பார்த்திட வேண்டுமென அவசரமாய் திருமண பேச்சை ஆரம்பித்திருந்தார்.
‘ப்ச் கலை.. அப்பாவும் நானும் உன் நல்லதுக்குத்தான் சொல்வோம்..” என கலா கெஞ்சலில் இறங்க.. ‘எதும்மா எனக்கு நல்லது.?” என அன்னையை முறைத்தான்.
‘ப்ச்.. கலை.. எதுக்கு எல்லார்கிட்டயும் கடுகடுக்கிற.?” என செல்வராணி ஆரம்பிக்க.. ‘அவன்தான் கல்யாணம் வேணாம்ங்கிறானில்ல.. இரண்டொரு வருசம் போகட்டுமே..” என இடைபுகுந்தாள் கீதாராணி.
கீதாவின் திட்டம் தெரிந்த செல்வராணி.. ‘அப்பாக்கு தெரியாதது உனக்கு தெரிஞ்சிடுச்சா.? அப்பா அவனுக்கு கல்யணம் செய்யிறதுல உனக்கென்ன பிரச்சனை.?” என காய்ந்தாள்.
‘இல்ல செல்வி.. கலைக்கு விருப்பமில்லாம..” என கீதா ஆரம்பிக்க.. ‘ஒரு வருசம் முன்ன காலை உடைச்சிக்கிட்டான்.. இப்போ கையில கட்டு போட்டுட்டிருக்கான்.. அடிபட்டா சொல்றதுகூட இல்ல.. அப்பா பார்க்க போகவும் தெரிஞ்சிருக்கு.. அநாதை மாதிரி படுத்துட்டிருக்கான்னு அம்மா ஒரே அழுகை.. இதே பொண்டாட்டின்னு ஒருத்தியிருந்தா நமக்கு சொல்லியிருப்பாள்ல.?
எல்லாம்போக, நல்ல வேலைல இருக்கான்.. கை நிறைய சம்பாதிக்கிறான்.. இத்தனையிருந்தும் எதுக்கு தனியா கஷ்டப்படனும்.? என்னதான் நாம பார்த்தாலும் பொண்டாட்டி பார்க்குற மாதிரி ஆகுமா.?” என கீதாவை பொறிந்து தள்ள..
கலையரசன்.. ‘என்னவோ கீதாக்காதான் என் கல்யாணத்தை நிறுத்துற மாதிரி ஏன்க்கா அக்காகிட்ட சண்டைக்கு போற..? அப்பா எனக்காக எப்படிபட்ட பொண்ணை பார்த்தாலும் நான் இப்போதைக்கு கல்யாணம் செய்துக்கிறதா இல்ல.. ஃப்ரீயா விடுங்க..” என்றான் கூலாக.
மயில்சாமி முறைப்பாய் பார்த்திருக்க.. அந்த நேரம் கதிரவனிடமிருந்து அழைப்பு வரவும்.. கதிரா.. இந்த நேரத்துல பண்ணமாட்டாரே என யோசித்தவாறு எழவும்.. ‘ஏய்.. பார்த்துடா.. ஏன் இங்க பேசினா ஆகாதா.? என்னவோ பொண்டாட்டிகிட்ட பேசுற மாதிரி ரூமுக்கு போறான்..” என கடுகடுத்தாள் செல்வராணி.
‘அபிஃசியல் கால் க்கா.. கையிலதான கட்டு போட்டிருக்கு..” என்று தனதறைக்குள் புகுந்து அழைப்பை ஏற்றான். ஒரு கையில் மொபைலும் இன்னொரு கையில் கட்டும் போட்டிருக்க கதவை தாழிடவில்லை.
‘இப்போ கை பரவால்லையா கலை..” என கதிரவன் கேட்க.. கதிரவனிடம் பேசினாலும் கலையரசன் நியாபகமெல்லாம் நிலவழகிமேல் இருக்க.. ம்.. ம்.. என பதிலளித்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில்.. ‘அண்ணா..” என்ற நிலவழகியின் சத்தம் கேட்கவும்.. ஓ.. கதிர் வீட்டில்தான் இருக்கிறாரா என சந்தோசித்தவன் குரலில் உற்சாகம் தொத்திக்கொள்ள..
‘என் கையை விடுங்க கதிர்.. இன்னும் ஒரு வாரத்துல சரியாகிடும்.. வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா.? பார்த்தி கவிபாப்பால்லாம் நல்லாயிருக்காங்களா.?” என விசாரிக்க.. அனைவர் நலனையும் சொன்ன கதிரவன் மீண்டும் கலையின் கை அடிப்பட்டதிலேயே வந்து நிற்க..
பேசுவது கலையரசனிடம் எனப்புரிந்த நிலவழகி.. ‘அண்ணா அவங்களுக்கு என்னாச்சி.?” என கேட்பது இங்கே கலையின் காதில் விழ.. ம்.. கேட்கவும் வேணுமா இவனின் நிலையை..? இரண்டு வருடங்களில் நிறைய முறை கதிரவனோடும் பார்த்தியோடும் பேசியிருக்கிறான்.. பார்த்திக்கு சொல்லி கொடுப்பாளே அன்றி ஒரு நாளும் தன்னை பற்றி பேச்சு வந்ததில்லை..
இன்று முதல்முறையாக தன்னவள் தன்நிலை விசாரிக்கவும் உடலெல்லாம் உற்சாக ஊற்றெடுக்க.. ‘யாரு கதிர் பக்கத்துல.? கவிபாப்பாவா.?” என்றான் உல்லாசமாக.
‘இல்ல கலை.. என் தங்கை..” என்றவன்.. ‘ஒரு பொண்ணை காப்பாத்தப்போய் கைல அடிபட்டுடுச்சாம்.. ஆப்ரேசன் செய்துருக்காங்க..” என தங்கைக்கு விளக்கமளிக்க..
‘அச்சோ..” என நிலவழகியின் குரல் பதட்டத்தோடு ஒலிக்க.. மகளின் பதட்டத்தில்..‘யாருக்கு என்னாச்சு.?” எனப் பதறிய அம்பிகாவிற்கு கதிரவன் விளக்கமளிக்க.. ஃபோனை வாங்கிய அம்பிகா கலையின் நலம் விசாரித்தார்.. ம் மகளுக்கு தஞ்சமளித்து பேரனை காப்பாற்றிய கலையரசன் மேல் மிகுந்த பாசம் உண்டு அம்பிகாவிற்கு. கதிரவன் பேசுகையில் அவ்வப்போது பேசுவார்.
பேசி முடித்த அம்பிகா.. கதிரவனிடம் போனை கொடுக்க.. ஏனோ இம்முறை நிலாவிடம் பேசியே ஆகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்க.. மிகுந்த தயக்கம்தான் என்றாலும்.. ‘உங்க தங்கைகிட்ட நான் பேசலாமா.?” என கேட்டேவிட்டான் கலையரசன்.
கலையரசன் மேல் அதீத மரியாதை கொண்ட கதிரவன்.. ‘பேசுங்க கலை..” என வெகு இயல்பாக நிலாவிடம் போனை நீட்டி.. ‘உன்கிட்ட பேசுறாராம்..” என்க.. ‘என்கிட்டயா.?” என நிலவழகி வெகுவாய் அதிர.. ‘ம்.. நீ விசாரிச்சது கலைக்கு கேட்டிருச்சி போல.. அதான் பேச நினைக்கிறார் பேசு..” என ஊக்கினான்.
ஃபோனை வாங்கிய நிலவழகி அமைதியாய் இருக்க.. ‘ம்கூம்..” என தன்னை சரிசெய்து.. ‘நல்லாயிருக்கியா..” என்றான் கரைந்த குரலில்.
‘ம்.. நல்லா இருக்கேன்.. உங்களுக்கு கை வலி பரவால்லையா.?” என்றாள் அக்கறையாக.
‘சாப்பிடதான் கொஞ்சம் சிரமமா இருக்கு.. அம்மா ஊட்டி விடுறாங்க..” என கதிரவனிடம் பகிராததை நிலவழகியிடம் தன்போல் பகிர்ந்தான் கலையரசன்.
நிலவழகி அமைதியாகிட.. ‘ஹே அழகி.. லைன் ல இருக்கியா.?” என்றான் ஏக்கத்தோடு. ‘ம் இருக்கேன்.. உடம்பை பார்த்துக்கோங்க.. அண்ணாகிட்ட கொடுக்கிறேன்..” என கதிரவனிடம் கொடுத்தாள்.
கதிரவனிடம் பேசி முடித்த கலையரசன் போனை பெட்டில் விசிறியடித்து உல்லாச விசிலடிக்க.. ‘டேய்.. யாருடா அது..?” என உள்ளே வந்தாள் செல்வராணி.
‘க்கா…” என கலையரசன் தடுமாற.. ‘ம்.. பேரே அழகியா..? இல்ல நீ வச்ச செல்ல பேரா.?” என பொய்யாய் மிரட்ட.. மாட்டிக்கொண்டோம் என நினைத்து.. ‘நிலவழகி..” என்றான் காதலாக.