‘ப்ளானா..?” என மயில்சாமி தடுமாற.. ‘எனக்கென்னவோ கீதாக்கா எதோ ப்ளான் செய்திருக்க மாதிரி தெரியுது.. நீங்க கல்யாணம் செய்யனும்னு சொல்லும்போது இரண்டு வருசம் போகட்டும்னு நான் சொன்னேன்.. கீதாக்காவும் அதை அக்சப்ட் பண்ணும்போது நமக்கா சப்போர்ட் செய்றாங்கன்னு அப்பவே ஒரு சந்தேகம் வந்தது.. நிலா வீட்டுக்கு போனதுக்கப்புறம் அது உறுதியாயிடுச்சி..
நானே இவ்வளோ யோசிக்கிறேன்னா நீங்க யோசிக்காம இருந்திருக்க மாட்டிங்க.. கீதாக்கா என்ன நினைக்கிறாங்கன்னு உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்.. என்கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு அப்படி என்ன பிரச்சனை அவங்களுக்கு..? எதுக்கு என் கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறாங்க..?” என்றான் தீவிரமான குரலில்.
‘அப்படியொன்னும் இல்லப்பா.. அவ கொஞ்சம் ஸ்டேட்டஸ் பார்க்குறா.. இன்னும் பெரிய இடமா பார்க்கலாம்னு யோசிப்பாளாட்டங்குது.. அவ்ளோதான்..” என்றார் பொறுமையாக.
ம்.. சிறுவயதிலிருந்தே மாப்பிள்ளை கலையரசனை கேவலமாக பார்த்தது.. அதை கீதாவும் அனுமதித்தது என செய்துவிட்டு.. தற்போது கலையின் நிலை உயர்ந்த பின்னே சிறு பெண்ணென்றும் பாராமல் தம்பிக்கு மனம் முடிக்க நினைப்பது தெரிந்தால் மிகக் கேவலமாக நினைப்பதோடு அக்காள் மாமா உறவே தேவையில்லையென ஒதுங்கிடுவான்.. ஆகவே கலையிடம் எதையும் சொல்லாமல் கீதாவிற்கு புரிய வைத்திடலாம் என நினைத்தார்.
அனைத்திற்கும் மேலாக.. மனதிற்கு பிடித்தவளாக இருந்தபோதும்.. கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் பெண்ணை திருமணம் செய்யவே சிறு பெண் என்கிறான்.. இதில் பதினொன்னாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மகளுக்காக கீதா இவ்வாறு நடக்கிறாள் என தெரிய வந்தால் கலையரசனால் தாளமுடியாததோடு கீதாவை மொத்தமாய் வெறுத்திடுவான் என மகனைப் புரிந்தவராக கலையிடம் சொல்ல மறுத்தார் மயில்சாமி.
‘நான் இப்படி கேட்டு நீங்க இவ்வளோ பொறுமையா பதில் சொல்லும்போதே எதோ இருக்குன்னு நல்லா தெரியுதுப்பா.. நீங்க மறைச்சாலும் வெளில வராமலா போய்டும்.. விடுங்க பார்த்துக்கலாம்..” என்றான் அழுத்தமாக.
கீதாவை அறிய வேண்டும் என முடிவெடுத்தான் என்றால் இங்கு வந்து ஒரு நாள் தங்கினாலே வெகு சுலபமாக அதை செய்திடுவான் எனப்பதறியவர்.. ‘கலை.. என் காலத்துக்கு பின்னாலும் எங்களுக்கு இணையா செல்விக்கும் கீதாக்கும் நீ இருக்கனும்.. குடும்பம்ன்னா சிலது இருக்கத்தான் செய்யும்.. அதுக்காக கண்டிக்கலாமே தவிர யாரையும் வெறுத்துடக் கூடாது..” என்றார் தவிப்பாக.
‘ஆக.. எதோ தப்பு நடக்குது..” என்றான் அழுத்தமாக.
இந்த பேச்சை வளர்த்த பிடிக்காதவராய்.. ‘ப்ச்.. அதை விடு.. எனக்கு அம்மாக்கு செல்விக்கெல்லாம் நிலாப்பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு.. இப்போ நடந்த சண்டையை காரணம் காட்டி கல்யாணத்தை ரொம்ப தள்ளிப் போட்டுடாத.. முன்ன பேசுன மாதிரி ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் முடிச்சாகனும்..” என்றார் செல்ல கண்டிப்போடு.
‘எதுக்கு.? திரும்பவும் நான் அசிங்கப்படவா.? முதல்ல கீதாக்காகிட்ட பேசிட்டு அப்புறம் பார்த்துக்கலாம்..” என்றான் முடிவாக.
‘கலை.. கீதாகிட்ட நான் பேசிக்கிறேன்.. பொண்ணு பார்க்க போய்ட்டு ரொம்ப நாள் கல்யாணத்தை தள்ளி போடக்கூடாது.. அக்கம் பக்கம் என்னயேதுன்னு விசாரிப்பாங்க.. அது சம்பந்திக்கு சங்கடமாய்டும்..” என்றார்.
‘உங்க சம்பந்திக்கு சங்கடம் வராம இருக்கனும்னா கீதாக்காகிட்ட சீக்கிரம் பேசுங்க.. கீதாக்காவும் கல்யாணத்துக்கு சம்மதிச்சதும் நான் கல்யாணம் செய்துக்கிறேன்..” என்றான்.
மயில்சாமி.. அச்சோ.. இப்படி செக் வைக்கிறானே எனப்பதற தன் அக்காள் எதோ பெரிய திட்டம் வைத்திருக்கிறார் என தந்தையின் அமைதியே மீண்டும் காட்டிக்கொடுக்க.. ‘சரிங்கப்பா.. அக்காகிட்ட பேசிட்டு எனக்கு கால் செய்ங்க.. நான் வைக்கிறேன்..” என இணைப்பை துண்டித்தான்.
தன் அக்கா இப்போதைக்கு திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டார்கள் என கலையரசனிற்கு புரிந்திருக்க.. தந்தை ஆறு மாதத்திற்குள் திருமணம் செய்யவேண்டும் என்றதால் திருமணத்தை தள்ளிப்போடவே இப்படி சொன்னான்.
—— ——- ——-
நான்கு மாதங்கள் கடந்திருக்க.. நாட்கள் மிகக் கடுமையாகவே நகர்ந்தது கலையரசனிற்கு. பள்ளி கல்லூரிகள் மூடியிருக்க நிலா வீட்டை விட்டு வெளிவருவதில்லை.. சுவாதிக்கு அழைத்து தகவல் அறிந்திருந்தான். கோவிட் காரணமாக அனைத்து போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டிருக்க.. தன் கவனம் முழுவதையும் பணியில் செலுத்தினான்.
தினமும் கதிர் கலைக்கு அழைப்பான்.. பத்திரமா இருங்க என்பான்.. யார்கிட்ட பேசுற என்ற நிலாவின் குரல் கேட்கும்.. ஆரம்பத்திலிருந்த கோபக்குரல்தான்.. நான்கு மாதங்களாகியும் நிலாவின் கோபம் தணியவில்லை என்பது அவளின் பேச்சு தோரணையிலேயே புரிந்தது.
இன்றும் அதேபோல் நிலாவின் குரல்.. ஆனால் சற்று உரக்க கேட்க.. ‘ஃபோன் ஸ்பீக்கர்ல இருக்கா கதிர்..?” என்றான்.
‘ஆமாம் கலை.. நிலா சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சி தர சொன்னா.. அது செய்துகிட்டே உங்கள்ட்ட பேசிட்டிருக்கேன்..” என்றான்.
‘உன் தங்கை நல்லா படிக்கிறாளா.? இல்ல ஆன்லைன் கிளாஸ்தானன்னு ஓபி அடிக்கிறாளா.?” என்றான்.
‘நம்ம அப்பாவை அழ வச்சவங்களோட நீ பேசுறதே தப்பு.. இதுல என்னை விசாரிக்க அவர் யாரு..?” என நிலா கடுப்போடு முனுமுனுக்க.. அது தெளிவாய் கலையின் காதில் விழ.. நான் யாரா.? என பல்லை நெறித்தவன்..‘சரிங்க கதிர்.. நான் அப்புறம் பேசுறேன்..” என்று இணைப்பை துண்டிக்கப் பார்க்க..
கலையின் கோபம் உணர்ந்தவனாய்.. ‘ஊருக்கே ஏ.சி.பியா இருந்தாலும் வீட்டுக்கு..” என சிரித்தவன்.. ‘இதுக்கே கோபப்பட்டா எப்படி..? இன்னைக்குத்தான அவ பேசி நீங்க கேக்குறிங்க.. இதெல்லாம் ரொம்ப கம்மி.. இன்னும் நிறைய திட்டுவா.. என் நிலாக்கு இல்லாத உரிமையா..?” என்றான் கதிரவன்.
சட்டென இலகுவான கலையரசன்.. ‘ஓஹ்.. இப்படி ஒன்னு இருக்கா..?” என சின்னதாய் சிரித்து..’ஆன்ட்டி அங்கிள்லாம் நல்லாயிருக்காங்களா.?” என்றான் இலகுவாக.
‘நல்லாயிருக்காங்க.. கவிம்மாவும் பார்த்தியும் மாடில செட்டில் விளையாண்டுட்டிருக்காங்க.. அவங்களுக்கு கார்க் எடுத்து போட்டுட்டிருக்காங்க..”
‘ஸ்பீக்கரை ஆஃப் பண்ணுங்க..” என்றான் கலை.
ஆஃப் செய்தவன்.. ‘ம் சொல்லுங்க கலை.. “ என வெளியே வந்தான்.
‘நிலா டிகிரி முடிச்சதும் கல்யாணம் வச்சிக்கிலாம்னு இருக்கேன்.. நீங்க என்ன நினைக்கிறிங்க.? அங்கிள் எதாவது சொல்வாரா.?”என்றான்.
‘ம்.. அவங்க வந்து போய் நாலுமாசமாகுது.. எதாவது முடிவெடுத்தாங்களான்னு இரண்டு நாள் முன்னதான் கேட்டார்.
அவங்களோட கல்யாணமே வேணாம்னு சொல்றேன்.. அப்புறம் எதுக்குப்பா அவங்களைப் பத்தி பேசுறிங்கன்னு நிலாதான் ரொம்ப கோபப்பட்டா.. நிலாக்கு புரிய வச்சிட்டு உங்கள்ட்ட பேசலாம்ன்னு இருந்தேன்.” என்றான்.
கலை அமைதியாய் இருக்க.. ‘முறைப்படி வந்து பொண்ணு கேட்கலன்னா பிரச்சனையில்லை கலை.. நீங்க வந்துட்டு போனது இங்க அக்கம்பக்கம் எல்லாருக்கும் தெரியும்.. ஏன் என்னாச்சுன்னு நச்சுறாங்க.. அன்னைக்கு நடந்த பிரச்சனையால இங்கதான் கட்டி கொடுப்போம்னும் உறுதியா சொல்ல முடியல.. அப்பாம்மாக்கு அதுவே பெரிய டென்சனா இருக்கு.. கல்யாணத்துக்கு பேசுறாங்கன்னு தெரிஞ்சதும் வேற இடத்துலயும் கேக்குறாங்க.. நிலா படிக்க ஆசைப்படுறான்னு சொல்ல சொல்லியிருக்கேன்..” என இங்கு நிலையை விளக்கினான்.
கலையரசன்.. ‘அப்பாவும் இப்படி யோசிச்சார் கதிர்.. அடுத்த வாரத்துல கல்யாணம் வச்சிக்கலாம்னு சொன்னாலும் எங்கப்பா ஏற்பாடு செய்துடுவார்.. ஆனா செத்தாலும் சாவேன்.. என்னை மட்டும் கல்யாணம் செய்துக்கமாட்டேன்னு சபதம் போட்டிருக்கா உன்தங்கை.. இப்படி மனநிலைல கட்டாயப்படுத்தி என்னால கல்யாணம் செய்துக்க முடியாது..” என்றான்.
‘எத்தனை வருசம் ஆனாலும் உங்கக்கா வந்து எங்கப்பாகிட்ட பேசினால் தவிர நிலா கல்யாணத்துக்கு சம்மதிக்கமாட்டா கலை.. அவங்க இறங்கி பேசுவாங்களா.?” என்றான் தவிப்பாக.
எங்கக்காவ யோசிச்சா என்னை கல்யாணம் செய்ய சம்மதித்தா என்று நிலாவின் மீது கோபம் வந்தபோதும்.. கதிரவனின் தவிப்பிற்காகவும்.. நாகராஜின் மரியாதைக்காகவும்..‘ம்.. எங்கக்காகிட்ட அப்பா பேசுறேன்னு சொல்லியிருக்கார்..” என்றான் தன்மையாக.
‘சரிங்க கலை..” என்று கதிர் மனநிறைவோடு சொல்ல.. தன் அக்கா இறங்கி பேசுவது சாத்தியமில்லை என்றுணர்ந்தவன்.. ‘கல்யாணம் முன்ன பின்ன தள்ளிபோனாலும் எப்போவும் நாம ஃபிரண்ட்ஸ்.. உங்க தங்கைகிட்ட சொல்லி வைங்க.. நீங்க யார்கிட்ட பேசனும் அவ முடிவு செய்ய கூடாது..” என சொல்லி கட் செய்தான்.
——- ——— ———-
ஆறு மாதங்கள் கடந்ததே அன்றி கீதாவிடம் பேசினேன் என்று மயில்சாமியிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. வாரம் இரண்டு மூன்று முறை கதிருக்கு அழைத்து பேசும் கலையும் திருமணம் பற்றி எதுவும் பேசாமலிருக்க கதிருக்கும் கூட மனதை அறுக்க செய்தது.
இந்நிலையில் நாகராஜ் சொந்தத்திலிருந்து நிலாவை பெண்கேட்டு வர.. நான் படிக்கனும் என நிலா சொல்ல.. எனக்கும் இந்த சம்பந்தத்துல விருப்பமில்லடா.. ஆனா சொந்தபந்தமா போய்ட்டாங்க.. சும்மா வந்து டீ மட்டும் கொடுத்துடு.. நிலா படிக்கனும், ஜாதகம் சரிவரலன்னு இப்படி எதாவது சொல்லிக்கிறேன்.. என்று மயில்சாமி எடுத்துரைக்க..
என்ன முயன்றும் நிலவழகியால் தனதறைவிட்டு வெளிவர முடியவில்லை.. தற்போதுதான் தன் மனம் உணர்ந்தவள் எனக்கு யாரையும் பார்க்கப் பிடிக்கலப்பா என கண்ணீர் விட.. நிலாக்கு இன்னும் இரண்டு வருசம் கழித்து திருமணம் செய்யனும்னு ஜாதகத்துல சொல்லியிருக்காங்க.. அதனால படிப்பு முடியட்டும் என்று மயில்சாமி சொல்ல.. பெண்பார்க்க வந்தவர்கள் ஆளுக்கொரு முனுமுனுப்போட சென்றனர்.
மேலும் ஐந்து மாதங்கள் கடந்திருக்க.. ஆபத்தில் காப்பாற்றிய நித்தியா பெண்ணோடு முன்னால் குத்து சண்டை வீரர் காதலா..? நெருக்கமான புகைப்படத்தோடு எட்டாம் பக்கம் பார்க்க என்ற கிசுகிசுப்பை பத்திரிக்கையில் பார்த்ததும்.. தாள முடியாத நிலவழகி உள்ளே என்ன செய்தி என்று முழுதாய் கூட ஆராயாமல் முட்டாள் தனமான காரியத்தை செய்யத் துணிந்தாள்.