மணி நான்காகவே.. ‘நிலா.. நிலா.. வா விளையாடலாம்..” என பார்த்தி கத்த.. ‘எனக்கு உடம்பு சரியில்ல.. நீங்க போய் விளையாடுங்க..” என அதீத சோர்வோடு சொன்னவளுக்கு பிறகுதான் உரைத்தது.. அச்சோ நிலா விளையாட வரலன்னு அண்ணாகிட்ட போய் சொல்வானே.. இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்திருந்து நைட் சாப்பிட்டிருக்கனும் என நினைக்க..
நிலா நினைத்தது போலவே நான்கைந்து முறை கூப்பிட்டவன் கதிரவனிடம் புகார் வாசிக்க கிளம்பினான். அச்சோ எனப்பதறிய நிலவழகியால் பார்த்திபனை தடுக்க இயலவில்லை.. தூக்கம் கண்களை சுழற்ற தொய்ந்து கண்மூடினாள்
‘ப்ச்.. நிலா வரலைன்னா தாத்தாவை கூட்டிட்டு போடா..” என்ற கதிரவன் தன் வேலையில் கவனமாக.. ‘மாமா.. நிலாக்கு உடம்பு சரியில்லையாம்.. வந்து பாருங்க..” என பார்த்திபன் கைப்பிடித்து இழுக்க.. ‘ப்ச்.. பார்த்தி.. மாமாக்கு ஒர்க் இருக்குடா.. ஆயாகிட்ட போய் சொல்லு..” என்றான்.
‘மா..மா… நிலாவ வந்து பாருங்க..” என்ற கவிப்பிரியா லேப்டாப்பை பிடுங்க முயற்சிக்க.. கதிரவன் முறைக்கவும்.. ‘ப்ளீஸ் மாமா.. ஒருமுறை வந்து பாருங்க..” என கெஞ்சினாள் கவிப்பிரியா. ம்.. பத்து வயதை நெருங்கப்போகும் கவிப்பிரியாவிற்கு நிலாவிற்கு ஏதோ முடியவில்லை எனப்புரிய கதிரவனை தொல்லை செய்தாள்.
‘நிலா..” என உரக்கக் குரல் கொடுக்க.. ‘ப்ச்.. மாமா நிலாவால எழுந்துக்க முடியல வாங்க..” என மீண்டும் கதிரவன் கைப்பிடித்து இழுக்க.. வேறு வழியின்றி தங்கையறைக்கு வந்தவன்.. ‘நிலா..” என எழுப்ப.. நிலா கண்விழிக்க வில்லையென்பதோடு அவளின் சோர்ந்த முகம் பதட்டத்தை கொடுக்கவும்.. ‘நிலா..” என தங்கையின் கன்னம் தட்ட.. எந்த அசைவுமின்றி கண்மூடியிருந்தாள்.
‘ஏய்.. நிலா..” என நிலாவை தூக்கவே தலை நிலையில்லாமல் துவண்டது. ‘என்னாச்சு நிலா..?” என பதட்டத்தோடு தங்கையை தூக்கிக்கொண்டு வெளியே வர.. ‘நிலாக்கு என்ன கதிரவா..?” என அம்பிகா பதற.. ‘தெரியலம்மா.. மயக்கத்தில இருக்கா.. மதியம் சாப்பிட்டது ஏது ஒத்துக்கலயோ என்னவோ.. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்.. நீங்க பசங்களைப் பார்த்துக்கங்க..” என்றவன் விரைந்தான் மருத்துவமனைக்கு.
நிலாவை பரிசோதித்த டாக்டர்.. ‘தூக்க மாத்திரை சாப்பிட்டிருக்காங்க.. அரை மணிநேரம் லேட்டா வந்திருந்தாலும்..” என பெருமூச்சிழுத்து.. ‘கொஞ்சம் முன்னதான் சாப்பிட்டிருக்காங்க.. உடனே கூட்டிட்டு வந்ததால உயிருக்கு ஆபத்தில்ல..” என்று சொல்ல.. தூக்க மாத்திரை சாப்பிடும் அளவிற்கு என்னவாகிற்று என உறைந்தே போனான் கதிரவன்.
தந்தைக்கு அழைத்து தகவல் சொல்ல.. கண்ணீரோடு வந்து சேர்ந்த நாகராஜனுக்கு பேச்சே வரவில்லை.. ‘ஒன்னும் இல்லப்பா.. இன்னும் கொஞ்ச நேரத்துல முழிச்சிக்குவா..” என ஆறுதல் சொன்ன கதிரவனின் கண்களிலும் நிற்கவில்லை கண்ணீர்.
விசயம் தெரிந்ததும் குழந்தைகளை சுவாதியிடம் விட்டு வரவே.. சுவாதிக்கு கவிப்பிரியா விசயத்தை சொல்ல.. பதறிய சுவாதி கணவனிடம் சொல்லியழ.. குமாரும் குடும்பத்தோடு வந்திருந்தான்.
ஏன் இப்படி செய்தாள்.? என விளங்காமல் தவித்துக்கொண்டிருந்தவர் சுவாதியைக் கண்டதும்.. ‘நிலாக்கு என்ன பிரச்சனைன்னு அவகிட்ட எதாவது சொன்னாளான்னு கேளு கதிரவா..” என கண்ணீர் விட்டார் நாகராஜன்.
சுவாதி..‘என்கிட்ட எதுவும் சொல்லலை கதிர்..” என தானும் அழுதாள்.
‘அன்னைக்கு பொண்ணு பார்க்க வந்தவங்களை பார்க்கமாட்டன்னு சொன்னப்ப கூட சொந்த பந்தம் கோவிச்சாலும் பரவால்லன்னு நிலா விருப்பப்படிதான நடந்துகிட்டேன்..” என கண்ணீர் விட்டவர்..
‘பத்து மாத்திரைக்கு மேல வச்சிருந்தேன் கதிரவா.. எல்லாத்தையும் குடிச்சிருக்கா.. அந்தளவுக்கு என்ன நடந்துடுச்சி..?”எனப் புலம்ப.. ‘எனக்கும் என்னன்னு தெரியலப்பா..” என்று கதிரவன் சொல்ல.. மதியம் சாப்பிடும்போது கூட நன்றாக சிரித்து பேசிக்கொண்டிருந்தாளே.. அதற்குள் என்னவாகியிருக்கும் என மகளின் இச்செய்கைக்கு விடை தெரியாமல் திண்டாடினார்.
கலையை காதலிப்பாள் என ஒருவருக்கும் சிறு சந்தேகம் கூட வரவில்லை. நிலா கலையை விரும்பவில்லையென்றாலும் கலை நிலாவை விரும்புவதை நினைத்த சுவாதி.. ‘நிலா கலையை விரும்பலைன்னு கலையேது எதுனா சொல்லியிருப்பாரா.?” என்றாள்.
‘ச்ச..ச்ச.. கலைக்கு நிலாவோட நம்பர் கூட தெரியாது.. எனக்கு தெரியாம பேச வாய்ப்பே இல்ல..” என்றான் உறுதியாக.
இவர்கள் கலையைப் பற்றி பேசவும் சுவாதியின் மொபைலில் இருந்து கலைக்கு அழைத்த கவிப்பிரியா.. ‘சித்தப்பா நிலாக்கு காய்ச்சல்.. ஹாஸ்பிட்டல்ல இருக்கோம்.. நிலாக்கு மயக்கமாம்..” என்றாள்.
‘ஏய்.. கலைக்கா போன் செய்த..?” என கதிரவன் பதற.. ‘ஆமாம் மாமா.. நம்ம சித்தப்பாக்கு சொல்லனும்தான.?” என கேட்க.. அதற்கு பதில் சொல்லும் முன் கலை கதிரவனுக்கு அழைத்தான்.
அழைப்பை ஏற்றவன்.. ‘ஆமாம் கலை.. மதியம் சாப்பிட்டது சேரலபோல..” என்றான். ஆனால் குரல் உடைந்திருக்கவும் சந்தேகம் வரவே.. ‘ஆன்ட்டிகிட்ட கொடுங்க கதிர்..” என்க..’அம்மா நிலாகிட்ட இருக்காங்க.. அப்புறம் பேச சொல்றேன்..” என இணைப்பை துண்டித்தான்.
சுவாதிக்கு அழைப்பு வர.. அழைப்பை ஏற்றவளுக்கு கலையிடம் எதையும் மறைக்க முடியவில்லை.. தூக்க மாத்திரை சாப்பிட்டிருக்கிறாள் என்றதுமே எந்த ஹாஸ்பிட்டல் என விசாரித்து கிளம்பியிருந்தான் கலையரசன்.
இரண்டு மணிநேரத்தில் மருத்துவமனைக்கு வந்தான் கலையரசன். பணியில் இருந்ததால் காக்கியிலேயே வந்திருந்தான். உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர் சொல்லியிருக்கிறார்.. இன்னும் சற்று நேரத்தில் கண்விழித்திடுவாள் என்று கதிரவன் சொல்லியும் அத்தனை இறுக்கமாய் இருந்தது கலையின் முகம்.
என்ன காரணம் என யாருக்கும் விளங்கவில்லையென்பது தெரிய.. ‘நீ விளையாட கூப்பிட்டபோது நிலா என்ன சொன்னா.?” என கலை கவிப்பிரியாவிடம் விசாரிக்க.. ‘எனக்கு உடம்பு சரியில்ல சொன்னா..” என்றாள் சிறுமி.
கலை..‘படுக்க போகும் முன்ன என்ன செய்திட்டிருந்தா.?”
‘பூ கட்டிட்டு இருந்தா..” என்றாள்.
‘அப்போ சிரிச்சி பேசினாளா.?”
‘ம்.. சாமிக்கு கொஞ்சம் வச்சிட்டு ஆயாக்கு கொஞ்சமா கொடுத்துட்டு நாம ரெண்டுபேரும் நிறைய வச்சிக்கலாம்ன்னு சொன்னா..” என்றாள்.
‘பூ கட்டி முடிச்சதும் படுக்க போய்ட்டாளா.?”
‘இல்ல என்னோட விளையாட வரன்னு சொன்னா.. ஆயா செடிக்கு தண்ணி ஊத்திட்டு விளையாட போங்கன்னு சொல்லவும் நாங்க செடிக்கு தண்ணி ஊத்த போனோம்.. ஊத்தி முடிச்சி விளையாட கூப்பிட்டோம்.. அப்போ உடம்பு சரியில்லன்னு சொன்னா..” என்றாள் சிறுமி.
‘அவ மொபைல் கொடுங்க..” என கேட்டு வாங்கியவன் அதனை ஆராய.. கடந்த ஒரு வாரமாக யாருக்கும் அழைக்கவும் இல்லை.. அழைப்பும் வரவில்லை எனப்புரிய வாட்ஸ்ஆப்பிலும் கல்லூரி தோழிகளிடம் பாடம் பற்றிய செய்திதான் அனுப்பியிருக்கிறாள் எனப்புரிய.. கலையரசனிற்கும் ஏதும் விளங்கவில்லை.
‘பேசன்ட் கண்முழிச்சிட்டாங்க.. ஒவ்வொருத்தரா போய் பாருங்க.. இத்தனை பேர் ஹாஸ்பிட்டல்ல இருக்காதிங்க..” என செவிலிப்பெண் சொல்ல.. நாகராஜ் உள்ளே செல்ல முயல.. ‘அங்கிள் நீங்க இருங்க.. கதிர் நீங்க போய் பார்த்துட்டு வாங்க.. நான் வந்துருக்கேன்னு சொல்லாதிங்க..” என்றான்.
நாகராஜ்.. ‘இல்ல நான் போய் பார்க்கிறேன்..” என உள்ளே போக முயல.. ‘ஒரு நிமிசம் இருங்க அங்கிள்.. நிலா எதுக்காக இப்படி செய்துக்கிட்டான்னு தெரியனும்.. உங்கள்ட்ட எதுவும் சொல்லமாட்டா.. கதிர்கிட்ட சொல்லுவா.. இதுபோல இனி நடக்கக்கூடாதுன்னா, முதல்ல விசயம் என்னன்னு தெரியனும்.. ப்ளீஸ் நீங்க இங்கயே இருங்க.. ஒரு பத்து நிமிசத்துல கதிர் விசாரிச்சிடுவார்..” என்றான்.
திருமணம் பற்றி பேச்செடுக்காததால் கலையரசன் மீது கோபத்தில்தான் இருந்தார் நாகராஜன். ஆனால் தற்போது கலையரசனின் காக்கி உடைக்கு பணிந்தாரோ என்னவோ.. கலை சொன்னதற்கு சரியென தலையசைத்தார்.
‘நானும்..” என கவியும் பார்த்திபனும் சொல்ல.. சிறு யோசனைக்கு பிறகு.. ‘கதிரோட போய்ட்டு அமைதியா நிலாவை தொல்லை செய்யாம பார்க்கனும்.. நிலாக்கு நான்னா பிடிக்காது.. அதனால நான் வந்துருக்கேன்னு சொல்லக்கூடாது..” என்று கவியிடம் சொன்னவன்..
‘பார்த்தி.. அவங்க ரெண்டு பேரும் வந்ததும் நாம ரெண்டு பேரும் போலாம்.. நிறைய பேர் போனா அந்தக்கா திட்டுவாங்க..” என செவிலிப்பெண்ணை காட்ட.. சமத்தாய் தலையசைத்து கலையோடு நின்றான் பார்த்திபன்.
கலை வீட்டினர் பெண்பார்க்க வந்த அன்று சுவாதி வராததால் நீண்ட நாள் கழித்து இன்றுதான் கலையைப் பார்க்கிறாள்.. தன் திருமண விசயம் கிளறப்போய்தான் நிலாவின் கல்யாணம் நின்றுப்போனது என்ற குற்றவுணர்வில் இருந்தவளுக்கு.. தற்போது காக்கி உடையில் கம்பீரத்தோடு முகத்தில் நிலாவிற்கான தவிப்பு அப்பட்டமாய் தெரிய.. அன்பும் இரக்ககுணமும் வீரமும் ஒருங்கே சேர்ந்த கணவன் தன் தங்கைக்கு கிடைக்கவிருந்தும் தான் நடத்திக்கொண்ட திருமணத்தால் அது தடைபட்டதை நினைத்து இன்னும் குறுகிப்போனாள் சுவாதி.
‘வணக்கங்க..” என குமார் சொல்ல.. ‘அட என்னண்ணா இது.? வணக்கம்லாம் சொல்லிகிட்டு..” என உரிமையாய் அதட்டினான் கலையரசன்.
‘நான் கல்யாணம் செய்துக்கும்போது பின்னாடி பிரச்சனை வரும்னு எனக்கு தெரியும்தானுங்க.. ஆனா அது நிலாப்பொண்ணு கல்யாணம் வரைக்கும் பாதிக்கும்ன்னெல்லாம் யோசிக்கவே இல்ல.. தப்பு சரின்னு சொல்லி வளர்த்த என் பாட்டியைத் தவிர வேற யாரும் இல்லங்க.. என் வாழ்க்கை ஆரம்பமாகும் முன்னவே அவங்களும் போய் சேர்ந்துட்டாங்க.. வாழ்க்கையில பிடிப்பே இல்லாத எனக்கு.. என்னை பிடிச்ச சுவாதியை விட மனசில்ல.. முறைப்படி பொண்ணு கேட்டாலும் அநாதையான எனக்கு சுவாதியை கட்டிகொடுப்பாங்கன்ற நம்பிக்கையில்ல.. அதான் எதையும் யோசிக்காம கல்யாணம் செய்துகிட்டேன்.. எத்தனை சொன்னாலும் நான் செய்தது தப்புதான்..” என வருந்தியவன்..
‘என் பொண்ணு பிறக்கும்போது நிலா நாலாவதுதான் படிச்சிட்டிருந்துச்சு.. அப்போயிருந்து இப்போ வரைக்கும் எங்க வீட்டுக்கு வந்து போய்ட்டிருக்க ஒரே சொந்தம் நிலாப்பொண்ணு மட்டும்தான்.. அது இப்படி செய்துகிட்டதும் எல்லாம் என்னாலதான்னு ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. நீங்க வந்து பேசினப்பவே கல்யாணம் நடந்திருந்தா இப்படி ஆக விட்டுருக்கமாட்டிங்க..” என வருந்தி கண்கலங்கினான் குமார்.
குமாரின் பின்புலமும் மனவோட்டமும் தற்போதுதான் நாகராஜிற்கு தெரிய வந்தது.. ஆனாலும் பேசவெல்லாம் மனமில்லை.. திருட்டுத்தனமான திருமணமென்றாலும் இன்றுவரை மகளை நன்றாக பார்த்துக்கொள்கிறான் என்ற நிம்மதி இருக்கிறது.. அதையும் கூட நாகராஜ் என்றும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. தற்போது குமார் பேசுவது தனக்காகத்தான் எனப் புரிந்தபோதும் அமைதியாகவே நின்றிருந்தார்.
குமாருக்கும் மாமனாரிடம் தன் மனதை வெளிப்படுத்த இதுதான் தருணம் என உணர்ந்த கலையரசன்.. கவனமெல்லாம் நிலா மீதிருந்தாலும்.. ‘உங்களாலயோ இல்ல எங்கக்கா பேசினதாலயோ இந்த கல்யாணம் நிற்கலண்ணா.. எங்கப்பாம்மா அங்கிள் ஆன்ட்டி கதிர்ன்னு எல்லாரும் கல்யாணத்துக்கு சம்மதிச்சாலும்.. இன்னும் நிலா சம்மதம் கிடைக்கல.. அவ சம்மத்துக்காகத்தான் கல்யாணத்தை தள்ளி வச்சிருக்கேன்..” என குமாருக்கு ஆறுதல் சொன்னதோடு.. எதனால் திருமணத்தை தள்ளிபோடுகிறேன் என தன் மாமனார் மாமியாருக்கும் சேர்த்து தகவல் கொடுத்தான் கலையரசன்.
பேரக்குழந்தைகள் கலையரசனை சித்தப்பா என அழைத்தபோது நிலா திட்டியது.. கதிரவனை கலையோடு பேசக்கூடாது என நிர்பந்தித்தது போன்ற காரணத்தால் கலை இப்படி நினைக்கிறான் என அம்பிகாவிற்கு புரிய..’உங்கக்கா அப்படி பேசவும்தான் நிலா கல்யாணம் வேணாம்னு சொன்னா.. மத்தபடி அன்னைக்கு நீங்க வரன்னதும் சந்தோசமாதான் அலங்காரம் செய்துகிட்டா.. உங்களை பிடிக்கவும்தான் எந்த மறுப்பும் சொல்லாம கல்யாணத்துக்கு சம்மதிச்சா..” என அம்பிகா எடுத்துரைக்க..
இவர்கள் சொல்வதுபோல் தன்னை பற்றி நினைப்பிருந்தா இப்படி ஒரு காரியம் செய்யத் துணிவாளா என்ற கோபம் இருந்தபோதும்.. தன்மீதான மாமியாரின் பாசத்திற்காக மைய்யமாய் தலையசைத்தான் கலையரசன்.
நாகராஜன்..‘கதிர்.. வெளில வா.. நான் நிலாவைப் பார்க்கனும்..” என தவிப்போடு கதவைத் திறக்க..
‘அண்ணா.. அப்பாகிட்ட சொல்லாத..” என்று கண்ணீர் வடித்தவளை தீயாய் முறைத்தபடி நாகராஜோடு தானும் உள்ளே போனான்.