கலையின் கோபத்தில் பயந்தாலும்.. ‘உங்கம்மா என்ன சொன்னாலும் கலை உன்னை கல்யாணம் செய்துக்கமாட்டான்.. ஒழுங்கா படிப்புல கவனம் செலுத்துன்னு தாத்தாவும் பாட்டியும் சொன்னாங்க மாமா..” என்றாள் பெருமையாக.
சற்று முன் கல்யாணம் வேணாம் என அழுததென்ன.? தற்போது தனக்கே ஆறுதல் சொல்வதென்ன..? என தன் கோபம் குறைத்து மதுவைப் பார்க்க.. ‘ஈஈ..” என பல்லைக் காட்டினாள் அசடாக.
சிரித்தாலும் மதுவின் பயம் அவளின் முகத்தினில் தெரிய.. பிடிக்காத கல்யாணம் நினைத்து பாவம் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பாள என நினைத்தவன்.. கீதா மீதான தன் கோபம் குறைத்து அவளருகே அமர்ந்தான்.
‘நான் சொன்னேன் மாமா.. ஆனா அம்மா கேட்டாதான.? இந்த சின்ன வயசுல எத்தனை பெரிய வேலைல இருக்கிங்கன்னும்.. உங்களுக்கு எவ்வளோ ரசிகர்கள் இருக்காங்கன்னும்.. என் தம்பி போல எங்க தேடினாலும் இப்படி மாப்பிள்ளை கிடைக்கமாட்டாங்க.. ஒழுங்கா நான் சொல்றதை மட்டும் கேளுன்னு அம்மா மிரட்டுறாங்க.. அப்பாவும் அம்மாக்குதான் சப்போர்ட் செய்யிறாங்க..” என்றாள் பாவமாக.
ம்.. மது அவளின் விபரமறிந்து இன்றுதான் தன் பக்கத்தில் அமர்ந்து இயல்பாய் பேசுகிறாள் என்பதால் மற்ற பிரச்சனைகளை தள்ளி வைத்து..‘ஏய் மது.. இதென்ன புதுசா மாமான்லாம் சொல்ற.?” என்றான் ஆச்சர்யமாக.
‘இனி உங்க பேர் சொல்லக்கூடாது மாமாதான் சொல்லனும்னு அம்மா ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க..” என்றாள்.
‘உங்கம்மா சொன்னா சொல்லிட்டு போறாங்க.. நீ கலைன்னே சொல்லு..” என்றான் இலகுவாக.
‘எனக்கும் மாமா சொல்ல பிடிச்சிருக்கு.. நான் மாமான்னே சொல்றேன்..” என்றாள் பெருமையாக.
பார்டா.. எப்பவும் ரொம்ப இளக்காரமா பார்ப்பா.. இப்ப இப்படி பார்க்கிறா என நினைத்தவன்.. ‘ம்..அப்புறம் படிப்பெல்லாம் எப்படி போகுது.?” என்றான்.
‘ஆன்லைன் கிளாஸ் நல்லாவே இல்ல மாமா.. ஸ்கூல்ன்னா செம்ம ஜாலியா இருக்கும்..” என சிறிது நேரம் இயல்பாய் பேசிக்கொண்டிருக்க.. அதில் மயில்சாமியும் கலாவும் மிகுந்த சந்தோசமடைந்தனர்.
கலையரசன் இயல்பாய் பேசியதில் மது இன்னும் பெருமையாக பார்க்க..’ஏய்.. என்ன அப்படி பார்க்கிற.?” என்றான்.
‘நான் உங்களை நிறைய இன்சலட் செய்திருக்கேன்.. உங்களுக்கு என்மேல கோபம் இல்லையா மாமா.?” என்றாள் ஆச்சர்யமாக.
‘ஹே.. நீ சின்ன பொண்ணுடா.. உன்மேல எதுக்கு நான் கோபப்படப் போறேன்..?” என்றான் இயல்பாக.
‘ம்..” என நகைப்பாய் முகம் சுருக்கியவன்.. ’இப்படி பேச்செல்லாம் உனக்கு செட்டாகலடா.. நீ எப்பவும் போலவே இரு..” என்றான்.
‘டன்..” என தன் கட்டை விரலை உயர்த்திக் காட்ட.. ‘ம்.. குட்..” என்றவன்.. மதுமிதா முன் கீதா பேச்சை வளர்க்க விரும்பாமல்.. ‘ம்மா.. பசிக்குது..” என்றான்.
‘அச்சோ.. உங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு இன்னும் ஒன்னுமே ஆரம்பிக்கலயேடா.. கொஞ்சம் பொறு..” என கலா அவசரமாய் கிச்சன் செல்ல..
‘மது.. நீ போய் பிரஸ்சாகிட்டு வா.. நான் அம்மாக்கு ஹெல்ப் பண்ண போறேன்..” என தானும் கிச்சன் சென்றான்.
‘என்னம்மா செய்ய போறிங்க..?” என்றவன் அங்கிருந்த பெரிய வெங்காயத்தை எடுத்து உரிக்க ஆரம்பிக்க.. ‘டேய்.. நான் பார்த்துக்கிறேன்..”என்று மகனின் கையிலிருந்து வெங்காயத்தை வாங்கி.. ‘நீ காலையே போகனும்னு சொன்னதால உங்கப்பா கறி வாங்கறேன்னார்..” என்க.. மயில்சாமி உள்ளே வரவும்.. ‘அப்பா கறிலாம் வேணாம்..” என்றான்.
‘போன்ல சொல்லிட்டேன் கலை.. போனதும் வாங்கி வரதுதான்.. லேட்டாகிடும்னு யோசிக்காத..” என அங்கிருந்த பையை எடுக்க.. ‘அப்பா.. ஒரு வாரத்துல கல்யாணத்தை வச்சிகிட்டு கவுச்செல்லாம் சாப்பிடலாமா.?” என்றான் சின்ன சிரிப்போடு.
‘டேய்.. என்ன சொல்ற.?” என கலா பதற..
மயில்சாமி.. ‘மது இருந்தான்னுதான் அதைப்பத்தி எதுவும் கேட்கல.. நான் கல்யாணம் செய்துக்கோன்னு சொல்லும் போதெல்லாம் நாளாகட்டும்ன்னு சொல்லிட்டு.. இப்போ ஒரு வாரத்துல கல்யாணம் வைக்க சொல்ற.. எதாவது பிரச்சனையாகிடுச்சா..?” என்றார் கவலையாக.
‘ஆமாம்ப்பா..” என அடுப்புத்திண்டில் ஏறியமர்ந்து.. ‘என்னத்தை சொல்ல..? அவ செய்ததை நினைச்சா அப்படி ஒரு கோபம் வருது..” என முகம் இறுகியவன்.. கல்யாணம் செய்துட்டு பேசிக்கிறேன் அவளை.. என உள்ளுக்குள் முனகி.. அங்கு நடந்ததை சொல்ல.. மயில்சாமி.. ‘அச்சோ.. இப்ப எப்படி இருக்கு மருமக..?” என்றார் பதட்டமாக.
‘நல்லாயிருக்காப்பா.. இனி அவ என்ன செய்வான்னு என்னால தவிச்சிட்டிருக்க முடியாதுன்னும்.. அடுத்த முகூர்த்தத்தில கல்யாணம் செய்துக்கிறேன்னும் அங்கிள்ட்ட சொல்லிட்டேன்.. நீங்க கல்யாணம் செய்ய நல்லநாள் பார்த்துட்டு அங்கிள்கிட்ட பேசுங்க.. இன்னைக்கு நீங்க பேசுவிங்கன்னு சொல்லிட்டு வந்துருக்கேன்..” என்றான்.
‘அடேய்.. அடுத்த முகூர்த்தத்துலயே செய்யனும்னா எப்படிடா..?” என மயில்சாமி தவிக்க.. ‘அதெல்லாம் செய்துடலாம்.. சிம்பிளா கோவில்ல வச்சிதான செய்யப்போறோம்..? சம்பந்திக்கு சரிப்படுமான்னு கேட்டுக்கோங்க..” என்றார் கலா.
எப்பொழுதும் பெரிய மருமகன் மகளுக்கு சப்போர்ட் செய்யும் மனைவி தற்போது இப்படி பேசியது மயில்சாமிக்கு பெருத்த ஆச்சர்யத்தை கொடுக்க.. கணவன் பார்வை உணர்ந்தவராய்.. ‘கலையை மருமகனாக்கிக்க முடியாத கோபத்தில.. எங்களை கலந்துக்காம எப்படி முடிவெடுக்கலாம்னு கீதாவும் மாப்பிள்ளையும் பிரச்சனை பண்ணுவாங்கதான்.. எப்படியோ சமாளிச்சிதான் ஆகனும்.. கலைக்கு கல்யாணம் ஆனாதான் மது நிம்மதியா படிக்க முடியும்..” என்றார்.
தனது விபரமறிந்து கீதாக்காவிற்கு எதிராக ஒருநாளும் பேசியிராத அம்மா தற்போது அவர்களின் ஆலோசனையின்றி தன் திருமணத்திற்கு சம்மதித்ததில் ஆச்சர்யமடைந்தவன்.. ‘அம்மான்னா அம்மாதான்.. என் தங்க அம்மா..” என சமையல் மேடையிலிருந்து இறங்கி சந்தோசத்தோடு கலாவை கட்டியணைக்க.. ‘நான் கேட்டுட்டேன்.. கேட்டுட்டேன்..” என உள்ளே வந்த மதுமிதா.. ‘நீங்க லவ் பண்றிங்களா மாமா..?” என்றாள் ஆச்சர்யமாக.
சிறு பெண்ணிடம் இப்படி பேச்சு பிடிக்காதவனாய்.. ‘உன்ன..” என முறைத்தவன்.. ‘குளிக்காம எதுக்கு கிச்சன் வந்த..? ஓடு..” என மிரட்ட.. ‘அச்சோ.. பயந்துட்டேன்..” என பாவனை செய்து.. ‘இன்னைக்குத்தான் என்கிட்ட நீங்க பேசுறிங்க.. இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவிங்கன்னு தாத்தா சொன்னார்.. அதனால நீங்க கிளம்புற வரைக்கும் உங்களோடதான் இருக்கப்போறேன்.. நோ குளியல்..” என்றாள் உரிமையாக.
‘கல்யாண விசயமா பேசனும் மதும்மா.. நீ போய் குளிச்சிட்டு வா.. கலையை மதியம் வரைக்கும் இங்கயே இருக்க சொல்றேன்..” என்றார் மயில்சாமி.
‘போங்க..” என வாடிய முகத்தோடு மது வெளியே போக எத்தணிக்கவும் அவளின் கையைப் பிடித்து ‘சரி இங்கையே இரு..” என்றவன்.. ‘அப்பா.. கல்யாணம் எங்க.? எப்பன்னு ஜோசியர்ட்ட பேசிட்டு.. அங்கிள்கிட்ட பேசுங்க.. மத்தது அப்புறம் பேசிக்கலாம்..” என்றான்.
‘தாத்தா என்னவோ பேசிக்கட்டும்.. எனக்கு அக்கா போட்டோ காட்டுங்க..” என்றாள்.
‘என்கிட்ட போட்டோலாம் இல்ல..” என்றான். மது நம்பாத பார்வை பார்க்க.. ‘ஏய் நிஜம்மா இல்ல மது..” என்றான்.
‘உங்க மொபைல் கொடுங்க.. நான் செக் செய்துக்கிறேன்..” என கலையின் கையிலிருந்து மொபைலை பிடுங்கியவள் அதனை ஆராய.. காலரியில் பாக்ஸிங் சம்மதப்பட்ட படங்கள்.. இவனோடு பயிற்சியெடுக்கும் சிறுவர்களின் படங்கள்.. என இருக்க.. முறைத்தாள் மதுமிதா.
‘நான்தான் சொன்னேன்ல.?” என்க.. ‘சரி அவங்களுக்கு போன் செய்து போட்டோ அனுப்ப சொல்லுங்க..” என்றாள்.
‘அவ நம்பர் என்கிட்ட இல்ல..” என்றான்.
நம்பாத தன்மையோடு மதுமிதா முறைக்க.. ‘ஹே.. நிஜம்மா என்கிட்ட அவ நம்பர் இல்ல.. இரு.. கொஞ்ச நேரத்துல தாத்தா அவங்களுக்கு கால் செய்வாங்க.. தாத்தா பேசி முடிச்சதுக்கப்புறம் நீ பேசுவியாம்..” என்றான்.
மயில்சாமி.. ‘கலை.. அடுத்த வாரத்தில ஒரு முகூர்த்த நாள் இருக்காம்.. அதை விட்டா.” எனும்போதே.. ‘அதை ஏன்ப்பா விடனும்.? வர வாரம் கல்யாணம் வச்சிக்கலாமான்னு அங்கிள்கிட்ட கேளுங்க..” என்றான்.
‘டேய்.. இன்னும் ஐஞ்சி நாள்தாண்டா இருக்கு.. நாம கேக்குறமேன்னு சம்பந்தி சங்கடத்தோட ஒத்துக்கப் போறாங்க..” என்றார்.
தான் மனதில் இருந்தபோதும் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் தற்கொலை முடிவிற்கு சென்ற கோபம் மலையளவு இருந்தபோதும்.. அதை அவளிடம் காட்டும் உரிமையை பெறவும்.. மேலும் இதுபோல் முட்டாள்தனம் நடந்திடாமல் இருக்கவும் முதலில் திருமணத்தை நடத்திட திட்டமிட்டான்.
கலையரசன் அமைதியாய் இருக்க.. ‘நமக்குமே டைம் பத்தாது கலை.. இரண்டு சம்பந்திகளை அழைக்கனும்.. கலா அண்ணன் உயிரோட இல்லன்னாலும் என் ஒரே மச்சினன் குடும்பத்துக்கு சொல்லனும்.. உன் மாமா பசங்கள்லாம் வெளில இருக்காங்க.. முக்கியமா கீதாவை சமாதனப்படுத்தனும்.. இல்ல சொந்த பந்தம் முன்ன ஆர்பாட்டம் செய்து மானத்தை வாங்குவா..” என்றார் தவிப்பாக.
‘அப்பா.. உங்கபொண்ணு மாப்பிள்ளையை தவிர மத்த எல்லாரும் நம்மை புரிஞ்சிப்பாங்க.. எத்தனை வருசம் கழிச்சி கல்யாணம் செய்தாலும் கீதாக்கா பிரச்சனை செய்யாம இருக்க மாட்டாங்க.. இதெல்லாம் பார்த்தா வேலைக்காகாது.. நீங்க அங்கிள்கிட்ட பேசுங்க.. அவங்களுக்கு ஓ.கேன்னா மத்தது நான் பார்த்துக்கிறேன்..”என்றான் முடிவாக.
ஒரு மாத காலமாக திருமண அச்சத்தில் பேத்தி அழுததை நினைத்த கலாவிற்கு கலையசரன் சொல்வதே சரியெனப்பட.. ‘ஏங்க.. அதான் எல்லாம் கலை பார்த்துக்கிறேன்றான்ல.? நீங்க சம்பந்திகிட்ட பேசுங்க..” என்றார்.
அப்பாவிற்காக அன்று அத்தனை பேசிய பெண்.. இன்று கலைக்காக உயிரை துறக்க நினைத்தை நினைத்து பெருமையோடும்.. ஒன்னு கிடக்க ஒன்னு எதாவது அபத்தம் ஆகிருந்தா என்னாகுறது என்ற பயத்தோடும், அதனால்தான் கலை இத்தனை அவசரப்படுகிறான் என மகனின் நிலையிலிருந்து யோசித்தும்.. மயில்சாமி நாகராஜிற்கு அழைக்க..’நல்லா இருக்கிங்களா.?” என்றார் நாகராஜ்.
‘நல்லா இருக்கோம் சம்பந்தி.. மருமக எப்படியிருக்கா.?” என விசாரித்து.. பின்னே திருமணம் குறித்து பேச.. நாகராஜ் மனைவியிடம் ஆலோசனை கேட்க.. அம்பிகா சந்தோசமாய் ஒப்புதல் கொடுக்க.. ‘அடுத்த வாரமே வா..” என்ற நிலாவின் பயந்த குரலோடு.. ‘ஓ.கே. சொல்லுங்கப்பா..” என்ற கதிரின் சந்தோசக் குரல் ஒலிக்க.. ‘உங்க விருப்பம்போல செய்யிங்க சம்பந்தி..” என்றார் நாகராஜ்.
‘சந்தோசமுங்க.. மருமகளை பத்திரமா பார்த்துக்கோங்க..” என இணைப்பை துண்டித்தவர்.. ‘செல்வி கீதாக்கு சொல்லனும்.. இன்னும் நிறைய வேலையிருக்கு.. ஒரு வாரத்துக்கு நீ இங்கையே இரு..” என்றார் மயில்சாமி.
‘நேத்து இங்க வரும்போதே செல்விக்காக்கு கால் செய்து நாளைக்கு வாங்கன்னு சொல்லிட்டேன்.. கீதாக்காக்கும் சொன்னேன்.. என்ன விசயம்னு ரொம்ப அக்கறையா கேட்டாங்க.. எல்லாம் என் கல்யாண விசயம்தான்னு சொன்னேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல இரண்டு பேரும் வந்திடுவாங்கன்னு நினைக்கிறேன்..” என தந்தையிடம் சொல்லி..
‘உங்கம்மாகிட்ட சண்டை போட தெம்பு வேணும்.. முதல்ல சாப்பிடலாம் வா..” என மதுமிதாவோடு சாப்பிட அமர.. செல்வராணி அழைத்தாள்.
‘கீதா வந்திருக்காடா.. அவன் எப்படி அப்படி முடிவெடுக்கலாம்னு ஒரே அழுகை.. இங்க என் நாத்தனார் மச்சான்டார்கிட்ட கலைக்குத்தான் என் மகளை கொடுக்கிறேன்னு சொல்லிட்டேன்.. அவங்க முகத்துல நான் எப்படி முழிப்பேன்..? முன்னல்லாம் கலைன்னு சொல்லிட்டிருந்த என் பொண்ணும் இப்போ ஆசையா மாமா மாமான்னு சொல்லிட்டிருக்கா.. அவளுக்கு என்ன பதில் சொல்றது.?
எல்லாம் போக.. வீட்டுக்கு பெரிய மருமகனையும் மகளையும் கலந்துக்காம உங்க வீட்ல எப்படி கல்யாண தேதி ஃபிக்ஸ் பண்ணுனாங்க.? உன் பிறந்த வீட்ல இதுதான் நமக்கான இடமான்னு என் புருசன் கேக்குறார்.. அவருக்கென்ன பதில் சொல்றதுன்னு கண்டபடி காட்டு கத்தலா கத்திட்டிருக்கா..”என்றாள் செல்வராணி.
‘எதுன்னாலும் என்னை வந்து கேட்க சொல்லு.. அதுவும் மதியத்துக்குள்ள வர சொல்லு.. இல்ல நான் கிளம்பிடுவேன்..” என இணைப்பை துண்டித்தவன்.. யார் கல்யாணத்தை யார் முடிவு செய்யிறது.? என பல்லை நெறித்து.. கீதாவின் வரவிற்காக காத்திருந்தான்.