கீதா சொல்லி முடிக்கவும் கலை வெளியே வரவும் சரியாக இருக்க.. ‘என்ன சொன்ன..?” என தீயாய் முறைத்தவாறு கீதா அருகே நெருங்க.. ‘தம்பி..” என்ற நாகராஜன் குரலுக்கு.. ‘அங்கிள்..” என ஆரம்பிக்கும் போதே..
‘நான் பதில் சொல்லிக்கிறேன்..” என்றார் தன்மையாகவே.
‘அவங்க பிரச்சனை செய்யறதுக்காகவே பேசுறாங்க.. இதை நான் பார்த்துக்கிறேன் அங்கிள்..” என்று கண்டிப்போடு சொல்லவும்..
‘பிரச்சனை வரதுக்காக பேசுறவங்ககிட்ட பிரச்சனை செய்யறதை விட அதுக்கு தீர்வு காணறதுதான் என்னோட இயல்பு.. உங்க அக்கா பேசினது என்கிட்ட.. நான் பதில் சொல்லிக்கிறேன்..” என்றார் தானும் கண்டிப்பான குரலிலேயே.
தன் மீதும் தன் தாய்தந்தையர் மீதும் எத்தனை மதிப்பு வைத்துள்ளார் என நாகரானை பற்றி நன்றாக தெரிந்தவனாதலாலும்.. தான் கேட்பதற்கு கீதாக்கா கொடுக்கும் பதில் மாமனாரின் தன்மானத்தை சீண்டும் வகையில் இருந்தால் அது இன்னும் பெரும் சங்கடமாகிடும் என்பதாலும்.. இத்தனை வயதுடையவர் நான் பேசுகிறேன் என பொறுமையாக கேட்கும் பொழுது மீண்டும் நான்பேசினால் அது அவரை அவமதிப்பது போலாகும்.. இடையில் மீண்டும் கீதா வார்த்தை விட்டால் அப்போது பார்த்துக்கலாம் என அமைதியானான் கலையரசன்.
இவன் வருவது தெரியாமல் பேசிவிட்டோமே என பதைத்தவளுக்கு தற்போது தம்பியையே அடக்கும் குரலில் நாகராஜன் பேசவும்.. அதற்கு கலை அமைதியானதும் அவளின் பதட்டம் இன்னும் அதிகமானது.
கீதாவிடம் பேசும் முன்னே மகளை பார்வையால் வருட.. சிலை கண்ணீர் வடிக்கும் தோரணையில் நின்றிருந்தாள் நிலா. ‘சம்பந்திம்மா என் பொண்ணு பசிதாங்கமாட்டா..” என்க.. ‘எனக்கு பசிக்கிலப்பா..” என்றாள் திடமான குரலில்.
எழுந்து மகளிடம் வந்தவர்.. ‘நிலாம்மா.. அப்பாக்கு இதெல்லாம் ஒரு விசயமா.? நான் பார்த்துக்கிறேன்.. நீயும் தம்பியும் போய் சாப்பிடுங்க..” என்றார் கனிந்த குரலில்.
‘அப்பா..” என நிலா திணற.. ‘உன்னை பொண்ணு பார்க்க வந்தன்னைக்கு நான் அமைதியா இருந்ததுக்கு காரணம் வேற.. இன்னைக்கும் அப்படியே இருப்பேனா.? அப்பா சொல்றேன்ல.? போய் ரெண்டு பேரும் சாப்பிடுங்க..” என்றார்.
தான் சொல்வதற்காக கீதாவிடம் மகள் வாய் திறக்கவில்லையென்றாலும்.. தகுந்த பதில் கொடுக்கும் வரை சாப்பிடமாட்டாள் என்றுணர்ந்த நாகராஜ்.. ‘அம்பிகா நகையல்லாம் எடுத்துட்டு வா..” என்றார்.
அம்பிகா.. ‘சுவாதி.. மேல கட்டிலுக்கு அடியில ஒரு பை இருக்கும் எடுத்துட்டு வா..” என்றார். சுவாதி எடுத்து வரவும்.. அம்பிகா அதனை திறந்து காட்ட.. அடேங்கப்பா.. இதென்ன இவ்வளவு நகை என வாய்பிளந்தாள் கீதாராணி.
கீதாவை விடுத்து கலா மயில்சாமியிடம்.. ‘பக்கத்துல தறி ஓட்டுவாங்க.. அதுல ஆர்வம் வரவும் எட்டாவதோட படிப்பை நிறுத்திட்டு அது கத்துக்க ஆரம்பிச்சேன்.. கத்துக்கிட்டதுக்கப்புறம் தனியா தறி போட்டேன்.. கல்யாணத்துக்கு முன்ன ஒத்த ஆளாத்தான் எல்லாம் பார்ப்பேன்.. அம்பிகாவை கல்யாணம் செய்ததுக்கப்புறம் அசுர முன்னேற்றம்னு சொல்லலாம்.. இரண்டு வருசத்துல எழுபது பேர் பக்கம் என்கிட்ட வேலை செய்யிற அளவுக்கு தொழில் நல்லா போனுச்சி..
அறுபது கடைகளுக்கு பக்கம் நம்ம தறியில இருந்துதான் புடவை போகும்.. நமக்கு பூர்வீக சொத்துன்னெல்லாம் எதுவும் கிடையாதுங்க.. அதனால முதல்ல வீட்டை கட்டிடுவோம்னு கட்டினேன்.. அதுக்கப்புறம் என் பொண்ணுங்களுக்கு எவ்வளோ சேர்க்க முடியுமோ சேர்க்கலாம்னு சேர்த்ததுதான்.. இதுல இருநூறு பவுன் இருக்குங்க.. எல்லாம் பதினைஞ்சி வருசத்துக்கு முன்ன செய்தது..” என்றார் பெருமையாக.
‘எங்க பொண்ணுங்களுக்கே நாங்க இவ்வளோலாம் போடலங்க சம்பந்தி..” என்று மயில்சாமி சொல்ல.. ‘கீதா எதோ புரியாம பேசிட்டா.. இது மாதிரி நாங்க எதிர்பார்க்கலங்கண்ணா..” என்றார் கலா.
நாகராஜ்.. ‘மாப்பிள்ளை சொன்னதும் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதிலயே நீங்க எதுவும் எதிர்பார்க்கலன்னு தெரிஞ்சிடுச்சிங்க..” என பெருமையோடு சொல்லி..
‘என் பொண்ணுக்குன்னு சேர்த்தினது.. எங்க கட்டிகொடுத்தாலும் இதெல்லாம் கொடுக்கிறதுதான்.. என்ன.? இப்படி தங்க மாப்பிள்ளைக்கு புதுசா செய்ய சூழ்நிலை இல்லன்னுதான் கஷ்டமா இருக்கு..” என்றார் வருத்தமாக.
என் அப்பாவின் வயதென்ன.? இவர்களின் வயதென்ன.? எத்தனை இளப்பமாய் கேள்வி கேட்டிருக்கிறார்கள்..? இவங்களையும் பேச வேணாம்னுட்டு எத்தனை தன்மையாய் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்.. வியாபாரிகளிடம் எத்தனை கறாராய் இருப்பார்.? பொண்ணை கட்டி கொடுத்திட்டா இத்தனை இறங்கி போகனுமா.? என குமைந்துகொண்டிருந்தாள் நிலவழகி.
கலா.. ‘கலைக்கு வாங்கலயேன்னு நீங்க இவ்வளோ வருத்தமே படத்தேவையில்லைங்க அண்ணா.. உங்க மாப்பிள்ளை சின்ன மோதிரம் கூட போட்டுக்க மாட்டான்.. மருமக போட்ட செயின்தான் அதிசியமா இவ்வளோ நேரம் கழுத்துல தங்கியிருக்கு..” என்றார் இன்முகமாக.
‘உனக்கும் இதுபோல் செய்தார்களா..?” என சுவாதியிடம் அக்கறையாய் கேட்பதுபோல் கேட்டாலும்.. கீதாவைப் புரிந்த நாகராஜ்.. ‘அவங்களைப் பத்தி நினைக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது..” என்றார் அழுத்தத்தோடு.
கீதாவின் பேச்சில் குமாருக்கு கோபம் வந்தபோதும் தன் மாமனாரின் பதிலில் முகம் பிரகாசமடைந்தது. ம் பின்னே இருக்காதா.? இத்தனை வருடம் கழித்து உனக்காக பேசுகிறார் என சுவாதியை சந்தோசத்தோடு பார்த்தான். சுவாதியும் தனக்காக கோபமடைந்த தந்தையைத்தான் நெகிழ்வோடும் கண்ணீரோடும் பார்த்திருந்தாள்.
சிறுவர் பட்டாளம் வர.. அங்கு பரப்பி வைத்திருந்த நகைகளைக் கண்ட கவிப்பிரியா.. ‘அக்கா.. இதேபோல எனக்கும் நிறைய இருக்கு.. எங்க தாத்தா கொடுத்தாங்க.. அம்மா எல்லாமும் வீட்லயே வச்சிட்டு வந்துருக்காங்க.. நீங்க எங்க வீட்டுக்கு வரும்போது காட்டறேன்..” என்றாள் மதுமிதாவிடம்.
மயில்சாமி நாகராஜை ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் பார்க்கவும்.. ‘பெரும் கருங்காளிக் கட்டைக்கு வளையாத கோடாளி.. சிறு வாழைத் தண்டுக்கு வளைஞ்சிடும்னு அந்த காலத்துல பெரியவங்க சொன்னது என் விசயத்துல நடந்துடுச்சிங்க..” என இலகுவாய் சொல்லி..
‘பெரியவ மேல உள்ள கோபம் இன்னும் போகலன்றது எந்தளவுக்கு உண்மையோ.. அதேநேரம் இப்போலாம் என் பேரன்பேத்தியை ஒருநாள் கூட விட்டுட்டு இருக்க முடியறதில்லைங்க.. நிலாம்மா இல்லாத குறையை இனி கவிபாப்பாதான் போக்கப் போறா..” என நிறைந்த பார்வை பார்த்தார் பேத்தியை.
‘நிலா டிபன் எடுத்துட்டு உள்ள வா..” என அறைக்குள் புகுந்தான் கலையரசன். இவர்களிடம் பேசினாலும் மகளின் முகபாவனையையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார் நாகராஜன்.
நிலா உள்ளே வரவும்.. ‘உன்ன டிபன் எடுத்துட்டுதான வரசொன்னேன்..?” என சிடுசிடுக்கவும்.. ‘எனக்கு பசிக்கல..” என்றவளுக்கு கண்கள் குளம் கட்டியது.
‘அங்கிள் சொன்னதுக்காகத்தான் அமைதியானேன்.. அப்பவும் எங்கக்கா திரும்பவும் உங்கக்காகிட்ட கேட்டதுக்கு வாயே திறக்க முடியாதளவுக்கு தக்க பதில் கொடுத்திருப்பேன்.. நீ பசியோட இருக்கிறதால எனக்கு பேச்சு வரல.. நீ சாப்பிட்டாதான் எனக்கு பேச வரும்.. போய் டிபன் எடுத்து வா ப்ளீஸ்..” என்றான் கெஞ்சலாக.
‘அப்பா வயசுக்கு கூட மரியாதை கொடுக்காம..” என மீண்டும் கண்கலங்க.. ‘இதை வேறமாதிரிதான் டீல் செய்யனும்.. நான் பார்த்துக்கிறேன்.. முதல்ல சாப்பிட எடுத்து வா..” என்றான் அவளின் கேசம் வருடி.
‘கலை..” என செல்வராணி வெளியிலிருந்து குரல் கொடுக்கவும்.. ‘வாக்கா..” என்றான். டிபனோடு உள்ளே வந்த செல்வராணி.. ‘நீங்க உள்ள வந்ததும் கதிர் வந்தான்.. வந்ததும் நிலாவைத்தான் தேடினான்.. நீங்க உள்ள இருக்கவும் நிலா சாப்பிட்டாளான்னு அத்தைகிட்ட கேட்டான்.. இனிதான் எல்லாரும் சாப்பிடனும்னு வார்த்தையை முடிக்க கூட இல்ல..
இவ்வளோ நேரம் பசிதாங்கமாட்டான்னு பதறிட்டு.. இவங்களுக்குதான் நிலாவைப் பத்தி தெரியாது.. நீ சொல்லியிருக்கலாமில்லம்மான்னு அத்தைகிட்ட சண்டை போட்டான்.. மணி ஒன்பது கூட ஆகலயேன்னு நானும் அசால்ட்டா இருந்துட்டேன்.. முதல்ல சாப்பிடுங்க.. மத்தது அப்புறம் பேசிக்கலாம்..” என அங்கிருந்த டேபிளில் வைத்து வெளியேறினாள்.
தட்டை எடுத்து நிலாமுன் நீட்டி.. ‘சாப்பிடு..” என்றான் கனிவாக.
‘நிஜமா எனக்கு பசி போய்டுச்சி..” என்றாள் இறங்கிய குரலில்.
‘வா.. கதிர்..” என கலை அழைக்க.. கதிர் உள்ளே வந்ததும்.. பெரிதாய் விம்மினாள். ‘ப்ச்.. எதுக்கு இப்படி அழற.? எதுன்னாலும் கலை பார்த்துப்பார்.. முதல்ல சாப்பிடு.” என அதட்டி ஒரு கவளம் எடுத்து தங்கையின் வாயில் திணித்தான்.
அண்ணனை முறைத்தாலும் உணவை முழுங்கவும்.. ‘சாப்பிட வைங்க கதிர்.. நான் வந்துடறேன்..” என வெளியேறினான் கலையரசன்.
— —- —-
செல்வியும் கலாவும் அனைவருக்கும் பரிமாற எடுத்து வைத்து கொண்டிருக்க.. ‘அங்கிள் ஆன்ட்டி முதல்ல சாப்பிடுங்க..” என்றவன்.. கீதாவிடம்.. ‘உன்னோட கொஞ்சம் பேசனும்.. வெளில வா..” என அழைத்து போனான்.
‘பணத்தை யோசிச்சி கல்யாணம் செய்யிறவங்கதான் மாமனார் என்ன செய்வாங்கன்னு எதிர்பார்த்திட்டிருப்பாங்க.. குமாரண்ணா அப்படியில்ல.. பார்த்தி அம்மாவை பிடிச்சிருந்தது.. கல்யாணம் செய்துக்கிட்டார்.. அவர் செய்த ஒரே தப்பு.. அங்கிளுக்கு தெரியாம கல்யாணம் செய்துகிட்டது மட்டும்தான்.. அதுக்கும் அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல அங்கிள்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டார்..
நிலா வீட்டினர் இத்தனை வசதியுடையவர்கள் என சற்றும் எதிர்பாராத கீதா.. சீர் வரிசைப்பத்திதான கேட்டேன்.. இவன் அவங்க மாமனாரோட வீராப்பை பத்தி சொல்லிட்டிருக்கான் என யோசிக்கவும்.. ‘என் கல்யாணத்துக்கு அழைக்க அப்பா உங்க வீட்டுக்கு வந்தப்ப அவருக்கு என்ன மரியாதை கிடைச்சதோ இனி அதையேதான் உங்க குடும்பத்துக்கு திருப்பி கொடுக்கபோறேன்..
இனி வரும் நம்ம வீட்டு விசேஷங்களுக்கு உங்க வீட்டுக்கு அழைக்க அப்பாம்மா வரமாட்டாங்க.. நான்தான் வருவேன்.. அதுவுமே உனக்காக இல்ல.. மதுமிதா தரணிதரண்க்காக மட்டும்தான்.. அதே போல அங்க எந்த விசேஷம்னாலும் உன் மாமனார் மாமியாரோட உங்க புருசனும் சேர்ந்து.. அழைக்கிற முறையோட அழைச்சா மட்டும்தான் நானும் என் பொண்டாட்டியும் வருவோம்.. அப்போ கூட அப்பாம்மாவை கூட்டிட்டு வரமாட்டேன்..” என்க.. கீதா அதிர்வாய் பார்க்க..
‘நாங்க கூப்பிட்டு உன் புருசன் என் கல்யாணத்துக்கு வராததுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல.. ஆனா வளைகாப்பு அதுஇதுன்னு என் விசேஷம் எதுக்கும் உங்களை கூப்பிடாம விட்டா உன் புகுந்த வீட்ல உனக்கு எவ்வளோ அசிங்கம்னு யோசிச்சிக்கோ..” என்றான் அழுத்தமாக.. ‘டேய்..” என கீதா பதற..
‘ஆரம்பத்திலயிருந்தே இதெல்லாம் செய்யாததாலதான் சம்பந்தின்ற மரியாதை தெரியாம உன் மாமியார் அப்பாகிட்ட பேசியிருக்கு.. உனக்கும் என் மாமனாரையே கேள்வி கேக்குற அளவுக்கு துணிச்சல் வந்திருக்கு..” என முறைத்து..
‘என் பொண்டாட்டிக்கு என்ன போட்டாங்கன்னு கேட்க உனக்கு எந்த உரிமையும் கிடையாது.. அவங்க பணத்தை நம்பி நானும் அவளை கல்யாணம் செய்துக்கல.. அவளைப் பத்தியோ இல்ல அவங்க குடும்பத்தை பத்தியோ இனி ஒரு வார்த்தை வந்தாலும்.. இப்படி தனியா கூப்பிட்டு வச்சி பேசமாட்டேன்.. எல்லார் முன்னவும் அசிங்கப்படுத்திடுவேன்.. ஜாக்கிரதை..” என மிரட்டி உள்ளே போனான்.
கலையை கண்டதும்.. ‘எதுக்குடா நாலு மணிக்கெல்லாம் அலாரம் வச்சிருந்தியாம்.?” என முறைக்க.. அச்சோ அப்பாக்கு எப்படி தெரிஞ்சது.? என சிவந்த முகத்தோடு கலை நிலாவை முறைக்க..