முன்பு ஸ்டேசனில் கம்ப்ளைன் கொடுக்கலாம் என நினைத்தவன்.. தற்போது பார்த்திபன் எங்கிருக்கிறான் என அறிந்ததால்.. முதலில் பார்த்திபனை காப்பாற்றுவோம் என முடிவெடுத்து தன் நண்பனோடு டேக்சியில் பயணித்தான்.
பார்த்திபனை கடத்துவதற்கு பணம் மட்டுமே காரணமா.? இல்லை பார்த்திபனின் தந்தை தவறானவனா.. இல்லை தவறானவர்களிடம் சிக்கியிருக்கிறானா.? என அறிய வேண்டும்.. அதற்கு முன் இவர்களை சுவாதியின் பெற்றோரோடு சேர்த்திட வேண்டும்.. ஏனெனில்இன்னும் இரண்டு நாளில் முதலமைச்சரின் வாழ்த்தை பெற தலைமையகம் செல்லும் பணியிருப்பதாலும்.. இவர்கள் பின்னோடே சுத்திக்கொண்டிருக்க முடியாது..
அதோடு இங்கே தனியே இருப்பதை விட குழந்தைகள் அவர்களின்தாத்தா பாட்டி வீட்டில் இருந்தால் தந்தையை காணாத ஏமாற்றமும் சற்றே குறையும்.. சுவாதியும் பயமின்றி இருப்பார்கள்.. சுவாதிக்கும் தன் பெற்றோரோடு இணைய இதுவே சரியான தருணம்.. மகளின் கணவன் காணாமல் போன நிலையில் இரண்டு குழந்தைகளில் ஒன்றை பரிகொடுத்து தவிக்கும் இந்த சூழலில் சுவாதியின் பெற்றோர் மனமிறங்க நிறைய வாய்ப்புள்ளது என பல யோசனைகளோடு இரவு எட்டு மணிபோல் சுவாதியின் ஊரான ராசிபுரத்தை வந்தடைந்தான் கலையரசன்.
சரி மணி எட்டுதானே ஆகிறது என நினைத்தவன்.. அசோகன் சொன்ன விலாசத்தை நோக்கி விரைந்தனர்.. கால் மணிநேரத்தில் ரங்கனின் பண்ணை வீட்டின் தெரு முனை வந்ததும்.. ‘அசார்.. இங்கையே நிறுத்து..” என்றான்.
‘இந்த பிஸ்கட் சாப்டுட்டு இந்தண்ணா கூட இங்கையே இருக்கனும்.. நான் கொஞ்ச நேரத்தில பார்த்தியோட வந்துடறேன்..” என்று சொல்ல.. ‘நானும் உங்களோட வரேன்..” என பயத்தோடு சொன்னாள் சிறுமி.
‘வேணாம் கவிபாப்பா.. அங்க ரௌடிப்பசங்க இருப்பாங்க.. நான் பார்த்தியை காப்பாத்தும்போது உன்னை எதாவது செய்துட்டாங்கனா ரொம்ப கஷ்டம்.. அதனால இந்தண்ணா கூட இங்கையே இருப்பியாம் சரியா..?” என்றான்.
‘கலை.. நானும் வரேண்டா.. நீ ஒரு ஆளா போய் என்ன செய்வ.? அவனுங்க கத்தி கபடான்னு எதாவது ஆயுதம் வச்சிருக்கப் போறானுங்க.” என்றான் அசார்.
‘வேணாம் அசார்.. அங்க நான் பார்த்துக்குவேன்..” என தனது பாக்கட்டில் இருந்த துப்பாக்கியை காட்டியவன்.. ‘தேவையில்லாத சண்டையை தவிர்க்க இந்த டம்மி துப்பாக்கி எடுத்து வந்தேன்.. ஏற்கனவே என்கிட்ட வாங்கினதை மறந்திருக்க மாட்டானுங்க.. இப்போ இதை பார்த்ததும் அசல்ன்னு நினைச்சி ஓடிடுவானுங்க..
பாப்பாவை அந்த ரங்கனுக்கும் அவன் ஆளுங்களுக்கும் அடையாளம் தெரிஞ்சிருக்கும்.. ரெண்டு பேரும் அசந்த நேரம் பாப்பாவை தூக்கிட்டாங்கனா பெரிய பிரச்சனை ஆகிடும்.. அதனால நீ பாப்பாவோட இரு, அதுதான் பாப்பாக்கும் சேப்டி.. நான் வர லேட்டானாலும் இரண்டுபேரும் காருக்குள்ளயே இருங்க.. ரொம்ப தேவைன்னா கால் பண்றேன்..” எனசொல்லி ரங்கன் வீடு நோக்கி நடந்தான்.
வீட்டின் கேட்டை திறக்க முற்பட.. பக்கவாட்டிலிருந்து வந்த காவலாளி.. ‘தம்பி.. யாருப்பா நீ..? இங்கல்லாம் வரக்கூடாது.. கிளம்பு.. கிளம்பு..” என்றான் மிரட்டலாக.
‘இங்க பாருங்க.. உள்ள ஒரு குழந்தையை கடத்தி வச்சிருக்காங்க.. குழந்தையை கூட்டிட்டு போகும் எண்ணத்தோட மட்டும்தான் வந்திருக்கேன்.. உங்களைப் பார்த்தா நல்லவராட்டம் தெரியறிங்க.. தேவையில்லாம உங்களை அடிக்க வச்சிடாதிங்க..” என்றவாறு காவலாளியை அசால்ட்டாய் தள்ளி உள்ளே செல்ல முயல..
கலையரசனின் சர்ட்டை எட்டிப்பிடித்தவன்.. ‘தேவையில்லாம உசிரை உட்ராத..” எனும்போதே காவலாளியின் முகத்தில் கலையரசன் குத்து விட.. கீழே விழுந்தாலும் உள்ளே இருப்பவர்களுக்கு தன் கைப்பேசி மூலம் தகவல் கொடுக்கவே.. ‘அந்த ரங்கன் உள்ள இல்லன்னா அவனுக்கும் போன் செய்து வரசொல்லு..” என உத்தரவிட்டு முன்னேறினான்.
காவலாளி அழைப்பு ஏற்றவர்கள் உசாராக.. ஹாலின் கதவை எட்டி உதைத்தான் கலையரசன்.. கதவு திறக்கப்படாமல் இருக்க.. ‘பார்த்திபன் இங்கதான் இருக்கான்னு தெரிஞ்சிதாண்டா வந்துருக்கேன்.. ஐஞ்சு சொல்றதுக்குள்ள கதவை திறக்கலன்னா போலீஸ்க்கு கால் செய்யப்போறேன்..” என மிரட்டியவன்..’ஒன்னு..” என்க..
நீண்ட பெரிய கத்தியோடு ஒருவன் கதவைத் திறந்தவன்.. எதிரே கலையரசனைக் கண்டதும் அதிர்ந்தாலும்.. கையில் ஏதும் ஆயுதமில்லையென்றதும் சற்றே தைரியம் வரப்பெற்றவனாக.. ‘அன்னைக்கு கொடுத்ததுக்கு இன்னைக்கு வாங்கிக்க வந்தியாடா.?” என்றவாறு கத்தியை மேலுயர்த்த.. அதே நேரம் தன் துப்பாக்கியை உயர்த்திய கலையரசன் தீப்பார்வையோடு.. ‘கொஞ்சம் கூட யோசிக்காம போட்டுத் தள்ளிடுவேன்..“ என்றவாறு துப்பாக்கியை எதிர் நின்றவன் நெற்றி நோக்கி உயர்த்தினான்.
துப்பாக்கியை கண்டதும்.. ‘டேய்.. டேய்..” என பயத்தோடு சொல்ல.. கலையரசன் இரண்டடி முன்னேறவும்.. ‘அண்ணே அப்படில்லாம் செய்துடாதிங்க..” என கெஞ்ச ஆரம்பித்தான்.
உடன் இருந்த மூன்று பேரும் கத்தியோடு பயந்த நிலையில் இருக்க.. ‘கத்தியை கீழ போடுங்கடா..” என மிரட்ட.. படபடவென் கத்தியை கீழே போடவும்.. ஹாலின் கதவை அறைந்து சாத்தியவன்.. நால்வரையும் அன்று போல் அடிக்கவும்.. சற்று நேரத்திலேயே வலிதாள முடியாமல்.. ‘அண்ணே விட்ருங்கண்ணே..” என ஒருவன் பேச முடியாமல் திணறி திணறி கெஞ்ச.. அடிப்பதை நிறுத்தியவன்.. ‘எங்கடா பார்த்திபன்.?” என்றவாறு தன் கண்களை சுழற்றினான்.
‘அ.. அவன்.. அப்படி யாரும் இங்க இல்ல..” என்றான் மற்றொருவன்.. சட்டென கீழிருந்த கத்தியை எடுத்த கலையரசன்.. ‘உங்களை கொல்றது என் நோக்கமில்ல.. குழந்தையை கொடுத்திட்டிங்கனா சேதாரமில்லாம தப்பிச்சிக்கலாம்.. இல்ல.. தாட்சன்யமே இல்லாம உடம்பெல்லாம் கோடு போட்டுருவேன்..” என்றவாறு கத்தியை இரு முறை சுழற்றிக் காட்டவே.. என்ன இப்படி சுத்துறான் என்ற பயத்தில்.. ‘ஆ..” என வாய் பிளந்தனர்.
‘இந்த ரூம்லதான்..” என ஒருவன் கதவைத் திறந்தான் பயத்தோடு.
நல்ல உறக்கத்திலிருந்தபோதும் பார்த்திபனின் முகம் வெகுவாய் வாடியிருந்தது.. ‘பார்த்தி..” என குழந்தையை தொட.. ஒரு சத்தத்திற்கே பதறி எழுந்தான் அதீத பயத்தோடு.
‘ஹே.. நான்தாண்டா.. பயப்படாத பயப்படாத..” என குழந்தையின் கேசம் தடவி.. ‘வா..” என தூக்கிக்கொண்டான்.. அதிர்வில் வாய் பேச வரவில்லை பார்த்திபனுக்கு.. ஆனால் கலையரசனைக் கண்டதும் முகம் மலர்ந்தது.
ரூமிலிருந்து வெளியே வந்தவன்.. ‘உன்ன அடிச்சானுங்களா பார்த்தி.? யாரு அடிச்சான்னு சொல்லு..” என கேட்க.. அடிக்கலை என்பதுபோல் தலையசைத்தாலும் நால்வரின் முகம் பார்த்ததும் மீண்டும் பயத்தை பூசியது குழந்தையின் முகம்.
‘பயப்படக் கூடாதுடா..” என தைரியமளித்தவன்.. ‘யாருடா உங்க முதலாளி.. அவன் நம்பரை கொடுங்கடா..” என்றான்.
அனைவரும் தயங்கவே.. துப்பாக்கியை உயர்த்தியதும் அசோகன் மளமளவென நம்பரை சொல்லவும் குறித்துக் கொண்டவன்.. ரங்கனின் வீடு புகைப்படம் என அனைத்து தகவலும் சேகரித்து குழந்தையோடு கிளம்பினான்.
தூரத்தில் கலையரசன் வருவதைப் பார்த்த அசார் பெருமகிழ்ச்சி அடைந்தான். பார்த்திபனை பார்த்ததும் மகிழ்வாய் சிரித்த கவிப்பிரியா.. ‘பார்த்தி..” என கத்தினாள் பாசமாக.
அக்காவை கண்டதும் தன் அம்மாவும் வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு காரருகே வந்ததும்.. காரினுள் ஆராய்ந்தவன்.. ‘அம்மா எங்க.?” என்றான் ஏமாற்றமாக.
‘அம்மாக்கு உடம்பு சரியில்ல..” என சிறுமி வருத்தத்தோடு சொல்ல.. பார்த்திபன் முகம் வெகுவாய் வாடியது.
அதற்குள் அத்தெரு வழியாக வந்த ஒருவன் கலையரசனைக் கண்டதும் வேக நடைபோட்டு அருகே நெருங்கியவன்.. ‘நீங்க.. கலை.. கலையரசன்.. ஆமாம்.. கலையரசனேதான்.. என்ற சந்தோசத்தில் தன் நண்பனுக்கு அழைத்து ‘டேய்.. இங்க நம்ம ஊர்லதாண்டா ராஜாஜி நகர்ல இருக்காரு..” என்ற தகவலையும் கொடுத்தபடி இவர்கள் அருகே வந்தவன்.. ‘சார்.. சார்.. ஒரு செல்பி..” என கெஞ்சியதும்..
‘பாஸ் நீங்க எடுத்துக்கோங்க.. நான் ஒரு முக்கியமான வேலையா வந்துருக்கேன்.. பிரண்ட்சுக்கு சொல்லிடாதிங்க..” என பேசிக்கொண்டிருக்கவே இன்னும் ஏழெட்டு பேர் வரை வந்திருந்தனர்.
அவர்களில் ஒருவன் கதிரவனின் நண்பனாக இருக்கவே அவன் கதிரவனிற்கு அழைத்தான்.. ‘கதிர் உன் ரோல்மாடல் இங்கதாண்டா நம்ம ராஜாஜி நகர்ல இருக்கார்.. வந்தினா நீயும் செல்பி எடுக்கலாம்..” என்ற தகவலை கொடுத்து..
‘பாஸ்.. என் பிரண்டு கதிரவன்.. உங்க மேட்சை மட்டும் ஆயிரம் முறை பார்த்திருப்பான்.. நீங்கதான் அவன் ரோல்மாடல்ன்னு சொல்வான்.. ஒரு ஐஞ்சே நிமிசம் பாஸ்..” என கெஞ்சி கொண்டிருக்க.. அதற்குள் மற்றவர்களும் செல்பி எடுக்கவே.. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.
அரைமணிநேரம் கடந்திருக்க.. பொறுமையிழந்தவனாய்.. ‘பாஸ்ஒரு முக்கியமான வேலையா வந்திருக்கேன்.. தவறா நினைக்காதிங்க நான் கிளம்பனும்.. இன்னொருநாள் பார்க்கலாம்..” என்று காரினுள் செல்ல.. கதிரவன் அங்கே வந்தான்.
ஆவலோடு காரினுள் குனிந்து பார்த்த கதிரவன் குழந்தைகளைக் கண்டதும் அதிர்ந்து நின்றான். கதிரவனைக் கண்ட குழந்தைகளின் முகமும் அதிர்வைப் பூச.. அந்த கடத்தல்காரனுக்கு சம்மதம்ப்பட்டவனாக இருக்குமோ என யோசித்த கலையரசன், கதிரவனை சந்தேகத்தோடு பார்த்தான்.
கலையரசனின் பார்வையை உணரும் நிலையில் இல்லை கதிரவன்.. இத்தனை வருடம் எதிரி வீட்டின் குழந்தைகளாக இருப்பினும்.. அழுக்கு உடையோடும் வாடிய முகத்தோடுமிருந்த பார்திபனும்.. தன் தங்கையை கண்டால் புத்தம் புது பூவாய் மலரும் கவிப்பிரியாவின் சோர்ந்த முகமும் கதிரவனை பதறச் செய்ததோடு.. அருகே தன் அக்காள் இல்லாத நிலையும்.. சம்மதமே இல்லாமல் கலையரசனோடு குழந்தைகள் இருப்பதும்.. கடந்த ஒன்பது மாதங்களாக சுவாதியின் வீடு பூட்டியிருப்பதும்.. எதோ விபரீதம் என உணர வைக்கவே..
‘இந்த குழந்தைகள்..” என இறங்கிய குரலில் கேட்டான் கதிரவன்.
கதிரவனின் பதறிய முகத்தை பார்த்தவன் சுவாதியின் முகத்தையும் நிலவழகியின் முகத்தையும் ஒப்பிட்டு யோசித்து.. ‘ஓ.. நீங்கதான் இந்த குழந்தைகளோட தாய்மாமனா.? ரொம்ப நல்லதா போச்சி.. உங்களோட கொஞ்சம் பேசலாமா.? கொஞ்சம் காருக்குள்ள வரிங்களா.?” என காரின் பின் கதவை திறந்தான்.
கதிரவன் காரினுள் அமர.. ‘உங்க பிரண்ட்ஸ்கிட்ட சொல்லி பைக்கை எடுத்துட்டு வர சொல்லிடுங்க..” என்று சொல்ல.. கதிரவன் தன் நண்பனைப் பார்க்க.. அவனிற்கும் உள்ளிருக்கும் குழந்தைகள் யாரென்ற விபரம் புரிந்ததால் சம்மதமாய் தலையசைக்கவே கார் கிளம்பியது.
‘அசார்.. எதாவது ஹோட்டல்க்கு விடு..” என பணித்து சுவாதியின் நிலையை சொல்லி.. தான் இங்கு வந்ததன் நோக்கமும் சொல்ல.. பதறிப்போனான் கதிரவன். ‘தேங்க் காட்..” என்று கண்ணீர் சிந்தியவன்.. முதல் முறையாய் பார்த்திபனை ஸ்பரிசிக்க முயல.. அவன் பல்லிபோல் ஒட்டினான் கலையரசனிடம்.
ம்.. தெருவில் தினந்தோறும் பார்த்தாலும் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியதில்லை கதிரவன்.. பின்னே எப்படி ஒட்டுவார்கள்.? அதோடு இந்நிலையிலும் மாமன் எனப்புரியாவிட்டாலும் தெரிந்தவன் என்ற சந்தோசம் கூட இல்லை குழந்தைகள் முகத்தில்.
‘பாஸ்.. உங்கள்ட்ட ஒரு ஹெல்ப் வேணும்..” என ஆரம்பித்தவன் தன் எண்ணத்தை சொல்ல.. ‘அப்பா கண்டிப்பா ஏத்துக்க மாட்டார்.. இவ்ளோ பிரச்சனை ஆகியிருக்கு.. இங்கயிருக்க பயந்து தெரியாத ஊருக்கு ஓடினவ அப்பவாவது எங்களை தேடி வந்திருக்கலாமில்ல.? இல்ல எனக்காவது ஒரு கால் செய்திருக்கலாம்.. பெத்தவங்களை தலைகுனிய வச்சவளுக்கே இத்தனை வீராப்பிருந்தா.. அவமானப் பட்டவங்களுக்கு எப்படியிருக்கும்.?” என்றான் கோபத்தோடு.
——- ————- ———-
‘என்ன பாஸ் நீங்க.? வயசானவங்க மாதிரி பேசிட்டு.? பெரியவங்க கோபத்துல நியாயம் இல்லன்னு நான் சொல்லவே இல்லையே.. உங்கக்கா செய்தது மறக்க முடியாத அவமானம்தான்.. ஆனா அதை காட்ட வேண்டிய நேரம் இதுயில்லன்னு சொல்றேன்.. என்னதான் உங்கக்காமேல கோபமிருந்தாலும் குழந்தைகளைப் பார்த்ததும் உங்களுக்கு பதறுனுச்சா இல்லையா.? உங்களுக்கே இப்படின்னா உங்கப்பாம்மாக்கு சொல்லவா வேணும்..? உங்கக்கா புருசன் கிடைக்கும் வரைக்கும் குழந்தைகளுக்கு ஒரு பாதுக்காப்பான இடம் வேணும்.. அப்பாம்மாகிட்ட பேசிப்பாருங்க பாஸ்..” என்றான் பொறுமையாகவே.
தகப்பன் காணாமல் போயிருக்க அன்னையும் நலமில்லாமல் இருக்கும் பரிதாப நிலையில் குழந்தைகளை பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை கதிரவனால். ‘வேற வழி.. அவமேல கோபம் இருந்தாலும் குழந்தைகளை பார்க்கனுமில்ல..? அப்பாகிட்ட பேசறேன்..” என உறுதியோடு சொன்னவன்..
‘தயவு செய்து பாஸ் சொல்லாதிங்க.. என் பேரு கதிரவன்.. சும்மா பேர் சொல்லி கூப்பிடுங்க கலையரசன்..” என்றான் இலகுவாக.
குழந்தைகளைப் பற்றி வீட்டில் பேசுறேன் என்றதில் சந்தோசமடைந்தவனாய்.. ‘ஓகே கதிர்.. இனி பேர் சொல்லியே பேசுறேன்..” என்றான் தானும் இலகுவாக.
‘இங்க பக்கமா ஹோட்டல் இல்லைங்களா.?” என அசார் கதிரவனைக் கேட்கவும்.. ‘ஹோட்டல் வேணாம்.. காரை எங்க வீட்டுக்கு விடுங்க..” என அட்ரசை சொன்னான் கதிரவன்.