‘இங்கயிருக்க ஹோட்டல்ல இந்த நேரத்துக்கு பரோட்டாதான் இருக்கும்.. குழந்தைங்களுக்கு அது ஒத்துக்காது.. அதோட ரொம்ப அழுக்கா இருக்காங்க.. வீட்டுக்கு போய் குளிக்கவச்சி சாப்பிட வைப்போம்..” என்றான்.
அப்பொழுதும் கலையரசன் யோசனையோடிருக்க.. ‘அப்பாவை சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்.. ஆனா கண்டிப்பா அம்மா விடமாட்டாங்க.. சுவாதி மேல கோபம் இருந்தாலும் அவளுக்காகத்தான் தினமும் சாமிகிட்ட வேண்டுவாங்க.. அப்பா ஒத்துக்கலன்னாலும் எதாவது பேசி அவரை சம்மதிக்க வச்சிதான் ஆகனும்..
சுவாதி புருசன் கிடைக்கும் வரை குழந்தைகளை நாங்க பார்த்துக்கிறோம்..எங்கள்ட்ட ஒட்டலன்னாலும் நிலாகிட்ட ஒட்டிப்பாங்க, நிலா சூப்பரா பார்த்துப்பா..” என்றான் உறுதியாக.
அசார்.. ‘நிலா யாரு.?” என்க.. ‘என் தங்கைதான்.. எங்களுக்கு தெரியாம இந்த குட்டிங்களோட நல்லா பழகுவா.. அப்பாம்மாக்கு தெரியாம நானும் பலமுறை கண்டிச்சிட்டேன்.. வேலைக்கே ஆகல.. ஸ்கூல் லீவ் விட்டாங்கனா குழந்தைகளை பார்க்கவேண்டி அப்பா கேட்டா நான்தான் கடைக்கு அனுப்பினன்னு அப்பாகிட்ட சொல்லிடுன்னு என்கிட்டயே ஹெல்ப் கேப்பா..
எவ்வளவோ சொன்னாலும் நிலாக்கு சுவாதி செய்த தப்பு புரியவே இல்ல.. நம்ம அக்கா.. நம்ம அக்கா குழந்தைன்னுவா.. சரி கொஞ்சம் பெருசானா புரிஞ்சிபாப்பான்னு நினைச்சேன்..
கொஞ்ச வருசம் கழிச்சி அவளும் புரிஞ்சிக்கிட்டாதான்.. ஆனா இந்த குட்டிங்க நிலாவை விடல.. எங்ளுக்கு பயந்து நிலா அமைதியா வந்தாலும்.. இந்த வாலு பாப்பா நிலா நிலான்னு என் தங்கையை கண்டாலே அப்படி சந்தோசப்படுவா..” என கவிப்பிரியாவைப் பார்த்து சொன்னவன்.. ‘நிலா இருக்கிற தைரியத்துலதான் குழந்தைகளை கூட்டிட்டு போறேன்..” என்றான் தங்கையின் நினைவோடு.
அக்கா மேல அவ்ளோ பாசம் இருக்கப்போய்தான என்னையே அடிக்க துணிஞ்சது அந்த நண்டு என பெருமையோடு நினைத்தவன்.. ம்.. ஆனாலும் இந்த நிலையிலும் சுவாதியைப் பற்றி விசாரிக்காததிலிருந்தே அவர்கள் மேலுள்ள கதிரவனின் கோபமும் புரிய..
‘அதெல்லாம் சரி கதிரவன்.. ஆனா குழந்தைகள் அவங்கம்மா இல்லாம இருக்கமாட்டாங்களே..” என்றான்.
‘அவளை நினைச்சா எங்கப்பாக்குன்னு இல்ல.. எனக்கே ஜிவ்வுன்னு ஏறும்..” என பல்லை நெறித்தவன்.. சில நிமிட இடைவெளிக்கு பின்.. ‘ஆனா என்ன செய்யிறது.? கூடப் பிறந்து தொலைச்சிட்டாளே.. முதல்ல குழந்தைகளை காட்டி அப்பாவை மலையிறக்குவோம்.. அதுக்கப்புறம் அவளை வந்து கூப்பிடறேன்..” என்றான். ஹப்பா எல்லாம் சுலபமா முடியுது என நிம்மதியாய் நினைத்திருந்தான் கலையரசன்.
அன்னைக்கு அழைத்து விபரம் சொல்லி அப்பாவிடம் கொடுக்க சொன்னான் கதிரவன். மனைவி மூலம் விபரமறிந்த நாகராஜ்.. ‘உங்கக்கா பாதி உசிரை எடுத்துட்டா.. மிச்சம் மீதியை நீ எடுக்கலாம்னு இருக்கியா.? யாரை கேட்டுடா அந்த நாயோட குழந்தைகளை இங்க அழைச்சிட்டு வரன்னு சொன்ன.? இந்த வீட்டுக்கு யாரும் வர நான் அனுமதிக்கமாட்டேன்..” என காட்டு கத்து கத்தினார் நாகராஜ்.
‘மகனை காணாத அதிர்ச்சியில உங்க மக மயக்கமாகி ஹாஸ்பிட்டல்ல இருக்காளாம்..” என பார்த்திபன் கடத்தல் விபரமும் அவனை கலையரசன் காப்பாற்றிய விபரமும் சொல்லி.. ‘நாம செய்ய வேண்டியதை கலையரசன் செய்திருக்கார்.. இனியும் எத்தனை நாள் அவர் பார்த்துப்பார்.? நம்ம பிரச்சனை நம்மளோட..
சுவாதி செய்தது தப்புதான்.. அதுக்காக அவளோட போட்டி போட்டுட்டு நாம இத்தனை பேர் இருந்தும் குழந்தைகளை அநாதையா விடமுடியுமா.? அம்மாவை டிபனுக்கு ஏற்பாடு செய்ய சொல்லுங்க.. குழந்தைங்க காலைலயிருந்து இன்னும் சாப்பிடலயாம்.. நான் இன்னும் பத்து நிமிசத்துல வந்திடுவேன்..
அப்புறம் முக்கியமான விசயம்.. என்ன கோபம்ன்னாலும் உங்க பொண்ணு வந்ததுக்கப்புறம் அவகிட்டயும் அவ புருசன்கிட்டயும் காட்டிக்கோங்க.. குழந்தைங்க முன்ன எதுவும் பேசக்கூடாது..” என கண்டிப்போடு சொல்லி தகப்பனின் பதிலுக்கு இடமளிக்காமல் இணைப்பை துண்டித்தான் கதிரவன் .
‘இத்தனை பாசத்தை வச்கிகிட்டு எப்படி கதிர் விட்டுட்டு இருக்கிங்க.?” என்றான் அசார்.
‘பாசம் இருந்து என்ன செய்யிறது.? அவளால நாங்க பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமில்ல.. எங்க பரம்பரையில யாரும் இப்படி செய்ததில்ல.. ” என்றவன்.. குழந்தைகள் அருகிலிருப்பதால் இந்த பேச்சு வேணாம் என முடிவெடுத்து..
‘கலை.. உங்களை பார்ப்பேன்னோ.. இப்படி பேசுவேன்னோ நான் நினைச்சே பார்த்தில்ல.. அவ்ளோ ஏன்..? ஒரு ஆட்டோகிராஃப் வாங்கிட்டா போதும்னு ஏங்கியிருக்கேன்.. எனக்கு அவ்வளோ பிடிக்கும் உங்களை.. இன்னைக்கு எங்க வீட்லதான் உங்களுக்கு சாப்பாடு.. சாப்பிட்டு முடிச்சி நிறைய செல்பி எடுக்கனும்.. எங்க ஃபேமலியோடவும் பிக்சர்ஸ் எடுக்னும்..
ஏண்டா என்கிட்ட சொல்லலைன்னு என் பிரண்டஸ்கோவிப்பாங்க.. அவங்களுக்கு நீங்க எங்க வீட்ல இருக்கிறதை பெருமையோட சொல்லனும்.. இப்படி இன்னும் நிறைய லிஸ்ட் இருக்கு.. உங்களை லேசுல விடறதா இல்லை..” என்றான் சந்தோசத்தோடு.
‘யப்பா.. என்ன இவ்ளோ பில்டப் கொடுக்கிறிங்க.. நான் அவ்வளோ பெரிய ஆளெல்லாம் இல்லை கதிர்..” என சிரிப்போடு சொன்னவன்.. ‘ஃபிரண்ட்செல்லாம் இன்னொரு நாளைக்கு பார்த்துக்கலாம் ப்ளீஸ்.. உங்க வீட்டுக்கு வந்த அரை மணிநேரத்துல நான் கிளம்பியாகனும்..” என்றான்.
‘அசார்.. இந்த தெருதான்.. ரைட்ல கட் பண்ணுங்க..” என கதிரவன் சொல்ல.. குழந்தைகளுக்கு தற்போதுதான் இது தன் வீடு செல்லும் பாதை எனப்புரிய.. ‘இங்கதான் எங்க வீடு இருக்கு..” சிறுமி சொல்ல.. ‘அம்மா வீட்ல இருக்காங்களா.?” என்றான் பார்த்திபன்.
‘முதல்ல அம்மாவோட அம்மா வீட்டுக்கு போலாம்.. நாளைக்கு அம்மாவை நான் போய் கூட்டிட்டு வரேன் சரியா.?” என கனிவாய் சொன்னான் கதிரவன்.
‘ம்..கூம்.. வேணாம்..” என பயத்தோடு தலையசைத்தாள் கவிப்பிரியா.
‘நான் இருக்கேன்ல.? வா..” என்று காரிலிருந்து இறங்கினான் கலையரசன்.
‘என்ன நினைச்சிட்டிருக்கான் உன் மகன்.? நாலு பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா எதுன்னாலும் செய்வானா.? இத்தனை வருசமில்லாம இப்போ என்ன..? அவ நல்லாத்தான் இருப்பா.. நைசா ஒட்டிக்கலாம்னு நாடகம் பண்ணினாலும் பண்ணுவா.. அவ வேசம் புரியாம இவன் துடிக்கிறான்..” என நாகராஜன் கத்துவது வாசல் வரை கேட்டது.
‘அம்மா..” என குரல் கொடுத்தவன்.. ‘தப்பா நினைக்காதிங்க கலை.. அவர் கோபத்துலயும் நியாயம் இருக்கு.. மெதுவா பேசித்தான் மலையிறக்கனும்.. எங்கப்பாவை சமாதனப்படுத்த நான் எதாவது பேசினா நீங்க தப்பா நினைச்சிடாதிங்க.. உங்களை பகடையா வச்சிதான் அவரை சமாளிக்கப்போறேன்.. உள்ள வாங்க..” என்றபடி உள்ளே நுழைந்தான்.
கதிரவன் பின்னோடு அசார் உள்ளே வர.. பார்த்திபனை தூக்கியிருந்த கலையரசன் கவிப்பிரியாவை கையில் பிடித்தபடி நிலாவின் நினைவில் உள்ளே நுழைந்தான் ஆர்வத்தோடு.
குழந்தைகளின் முகம் பார்த்ததும் மனம் இலகத்தான் செய்தது நாகராஜனிற்கு.. இருப்பினும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இறுக்கமாகவே நின்றிருந்தார்.
தாத்தா பாட்டியென உரிமையாய் வரவேண்டிய குழந்தைகள்.. யார் வீட்டிற்கோ வந்ததுபோல் பரிதாப நிலையில் வந்திருப்பதை பார்த்ததும் மிகுந்த வேதனையடைந்த அம்பிகா.. ‘வாங்க தம்பி..” என நன்றியுடன் வரவேற்று.. ‘என் பொண்ணுக்கு என்ன ஆச்சு.?” என்றார் கலக்கத்தோடு.
நாகராஜன் கோபம் குறைக்க.. ‘அப்பா.. நம்ம நாட்டுக்கு தங்கம் வாங்கித் தந்த தங்கமகன் வந்திருக்கார்.. வாங்கன்னு சொல்லமாட்டிங்களா.?” என்றான் கதிரவன்.
கிச்சனில் இருந்த நிலா.. குழந்தைகள் வராங்கன்னுதான அம்மா தோசை சுட சொன்னாங்க.. அண்ணா யாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வரமாட்டாங்களே.? அதான் அம்மா வெளில வரவேணாம் சொன்னாங்களா.? என யோசித்திருந்த நிலவழகிக்கு தன் அண்ணன் தங்க மகன் என சொன்னதும்.. அச்சோ ஒருவேளை அவனா இருக்குமோ எனத்தோன்ற இனம் புரியாத பயம் தொத்தியது.
பிறகுதான் கலையரசனைப் பார்த்த நாகராஜன்.. ஓ.. இந்த தம்பி பாக்சிங்ல தங்கம் வாங்கின தம்பியாச்சே எனப்புரிய.. ‘வாப்பா..” என்றார் மரியாதை நிமித்தமாக.
நாகராஜனின் இறுகிய முகம் பார்த்த குழந்தைகள் இறுகப் பற்றின கலையரசன் கைகளை. குழந்தைகளின் பயந்த முகம் கண்டதும் பதைத்து போனார் அம்பிகா.. பேரக்குழந்தைகள் அருகே சென்று.. ‘வாடா குட்டிகளா..” என கண்ணீரோடு கையேந்த.. கலையிடம்.. ‘அண்ணா அம்மாகிட்ட போலாம்..” என்றாள் கவிப்பிரியா.
நிலாவால்தான் இவளை சமாளிக்க முடியும் என நினைத்த கதிரவன்.. ‘அம்மா.. முதல்ல தண்ணி கொண்டு வாங்க..” என்றவன்.. ‘நிலா..” என குரல் கொடுத்தான்.
அந்த நேரம்.. ‘அண்ணா போலாம்..” என்ற பார்த்திபனின் குரலைக் கேட்டதும் கலையரசன் மீதான பதட்டம் மறந்து வெளியே வந்தாள் நிலவழகி.
நீண்ட நாள் கழித்து நிலவழகியை கண்ட சிறுமியின் முகமும் மலர்ச்சியைக் காட்டியதோடு.. ‘நிலா..” என அழைத்தாள் ஏக்கமாக.
‘கவிம்மா..” என பாசத்தோடு அழைத்தாலும்.. வந்திருப்பவன் அவனா இருக்குமோ என்ற சந்தேகத்தோடு ஒரே ஒரு நொடி கலையரசன் முகம் பார்த்தவள்.. அச்சோ அவனேத்தான் என பயந்து நின்றாள்.
நிலாவை கண்ட பார்த்திபன்.. ‘லிலா..” என்றபடி கலையிடமிருந்து கீழிறங்க முயல.. ம்.. வந்து வாங்கட்டும் என இவன் விடாமல் பிடித்திருந்தான் சிறுவனை.
பார்த்தியின் பாசமான அழைப்பில் சந்தோசமடைந்த நிலவழகி இரண்டடி முன்னே வர.. நாகராஜன் முறைக்கவும் மீண்டும் அங்கேயே நின்றாள் பாவமாக.
தகப்பனை அறிந்த கதிரவன்.. ‘அப்பா.. வந்திருக்கிறவர் தங்கமகன் மட்டுமில்ல.. கமிஸ்னரும் கூட.. குழந்தையை காப்பாத்தினதோட சுவாதி புருசன் காணம போனதைப் பத்தியும் விசாரிக்க வந்திருக்கார்.. இவர் சொல்ற மாதிரி கேட்டுகிட்டா எந்த பிரச்சனையும் நமக்கு வராது.. இல்ல தேவையில்லாம ஸ்டேசன் ஏற வேண்டியிருக்கும்..” என்றான்.
‘அவளைத்தான் ஒட்டு மொத்தமா தலைமுழுகியாச்சே.. நான் எதுக்குடா ஸ்டேசன்க்கு போகனும்..?” என்றார் கோபமாக.
நாகராஜ் முகத்தில் பயம் தெரியவே.. ‘காரணமில்லாம நான் எதையும் செய்ய மாட்டேன்.. குழந்தைகள் இங்கதான் இருக்கப் போறாங்க.. உங்களுக்கு பிடிக்கலன்னா பேசாதிங்க..” என்றான் முடிவாக.
கலையரசன்.. அடப்பாவி.. இவங்கப்பாவை மலையிறக்க என்னை வில்லனாக்குறானே.. என மனதில் கடிந்தான் கதிரவனை.
எல்லாம் நான் செய்த பாவம்.. என முனகி வேறு வழியின்றி ஓரத்தில் இருந்த சேரில் அமர்ந்தார் நாகராஜன். ‘நிலா.. குழந்தைகளை கூட்டிட்டு போய் குளிக்க வை..” என்றான் கதிரவன்.
‘அண்ணா குளிக்க வச்சால்லாம் டைம் ஆகிடும்.. பார்த்தியும் கவியும் ரொம்ப டையர்டா தெரியறாங்க.. அதோட குளிச்சி மாத்திக்க இவங்களுக்கேத்த டிரெஸ்சும் இங்க இல்ல.. நான் ஊட்டி விட்டுக்கிறேன்.. முதல்ல சாப்பிடட்டும்..” என்று கதிரவனின் பதிலுக்கு காத்திராமல் கிச்சன் சென்று சில நிமிடத்தில் தோசையோடு வந்தாள்.
பார்த்திபன் கலையிடம் இருப்பதால் சிறுமி நின்றிருந்த இடத்தில் தானும் அமர்ந்து.. தற்போதும் கலையரசன் முகம் பாராமல்.. ‘உக்காரு கவி..” என கைப்பிடித்து இழுக்க.. வேறு வழியின்றி சிறுமியின் கையை விடுவித்தவன் மடித்துக் கட்டிய ரெட்டை ஜடையோடு லோயர் பேண்டும் டீசர்ட்டும் அணிந்திருந்தவளைபார்த்து, நம்ளை தெரிஞ்ச மாதிரி ஒரு ரியாக்ஷனும்காணமே.. ஒருவேளை நம்மளை மறந்திருப்பாளோ.? ச்சே.. ச்சே.. அதெப்படி முடியும்.? நம்மளால மறக்க முடியலங்கும்போது அவளுக்கும் நிச்சயம் நியாபகம் இருக்கும்.. எனதிடமாய் நினைத்தவன்,
அன்னைக்கு சில்வண்டாட்டம் திருடன் திருடன்னு என்னமா சவுண்டு விட்டுட்டு, என் கையையும் கிழிச்சிட்டு.. இன்னைக்கு ஒன்னுமே தெரியாதவளாட்டம் என்ன ஒரு பவ்யம்.. என நினைத்தாலும், ஒருவேளை அன்னைக்கு நடந்தை அவங்கப்பாகிட்ட சொல்லிடுவன்ற பயத்துல இருப்பாளோ? என்றும் நினைத்தான்.
அன்னைக்கு என்னை திருடன்னு நினைச்சவ இன்னைக்காவது அது தப்புன்னு புரிஞ்சிப்பாளா? நான் தவறானவன் இல்லையென்பது போல் ஒருமுறையேனும் தன்னை பார்ப்பாளா? என பல யோசனைகளோடு நின்றிருந்தான்.
‘பார்த்தி..” என கவிப்பிரியா சன்னக்குரலில் சொல்ல.. நிலவழகி கதிரவன் முகம் பார்க்க.. ‘கீழ இறக்கி விடுங்க கலை.. சாப்பிடட்டும்..” என்றான் கதிரவன்.
‘கை கால் முகமாச்சாம் கழுவிவிட்டு சாப்பிட கொடுங்க கதிர்.. ரொம்ப அழுக்கா இருக்கான்..” என்றவன் இன்னும் தன்னோடேதான் வைத்திருந்தான் பார்த்திபனை.