காதலால் நெய்திடு..
அத்தியாயம்.. 9
குழந்தைகள் நல்ல உறக்கத்திலிருக்க.. அன்றும் அக்காவிற்கு உதவி செய்யத்தான் வீட்டிற்கு வந்திருக்கிறான்.. இன்றும் பார்த்தியை காப்பாத்தியிருக்கிறான்.. அக்காவிற்கும் பாதுகாப்பளித்திருக்கிறான்.. ஆனால் தன்னை மட்டும் மிரட்டுகிறானே.. அதிலும் ஒழுங்காய் படிக்கனும்ன்றான்.. பெரியவளானதும் முத்தம் கொடுத்தது நான்தான்னு அண்ணாகிட்டயும் சொல்வேன்றான்.. இவன் நல்லவனா.? இல்லையா.?
நல்லவன்போல் தெரிவார்கள்.. ஆனால் கெட்டவர்களாக இருப்பார்கள் என தன் அண்ணன் சொன்னதுபோல இருப்பானா.? என்ற குழப்பத்தில் பதினொரு மணிவரை விழித்துக்கொண்டிருந்தவள் அதன் பின் அவளையறியாமலேயே கண்ணயர்ந்திருந்தாள்.
நள்ளிரவில் திருச்சி வந்தடைந்தனர். கார் சத்தம் கேட்டதும் விழித்துக்கொண்டிருந்த சுவாதி தவிப்போடு வெளியே வர.. அங்கே கதிரவன் தோளில் வாகாய் தூங்கிக்கொண்டிருந்த மகளைக் கண்டு இன்ப அதிர்ச்சிக்குள்ளானவள்.. பின்னே தீயாய் முறைத்திருந்த கதிரவனைக் கண்டு மகளை வாங்க கூட தயங்கி நின்றாள்.
முதலில் பிடித்தவனை கரம் பிடிப்போம்.. கோபம் தணிந்த பிறகு மற்ற பெற்றோர்கள் போல நம் பெற்றோரும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைத்து குமாரோடு தன் திருமணத்தை நடத்திக்கொண்டாள் சுவாதி .
முதல் குழந்தை பிறந்தபோது பெற்றோர் பார்க்க வருவார்கள் என மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தவள்.. யாரும் வராமல் போகவே அப்படியென்ன யாரும் செய்யாத தவறை செய்துவிட்டேன் என சுவாதிக்கு கோபம்தான் வந்தது.. பார்த்திபன் பிறந்த பிறகும் பெற்றோர் மனம் இலகாமல் போகவே.. எப்படித்தான் இப்படி கல்மனதோடு இருக்கிறார்கள்.? மனதிற்கு பிடித்த வாழ்க்கை வாழ்வது இத்தனை தவறா என்று அப்போதும் சுவாதிக்கு கோபமேதான்..
ஒன்பது மாதங்களாய் கணவன் வராத நிலையில் தமக்கென யார் இருக்கார் என்ற எண்ணம் தோன்ற.. இனி எப்படி குழந்தைகளை தனியாளாய் பார்ப்போம் என்ற பயம் வர பெற்றோரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் வெகுவாய் ஏங்கியது மனம்..
கடந்த நான்கு நாட்களாய் மகனை காணாத நிலையில்.. தான் வீட்டை விட்டு வெளியேறியதும் இப்படித்தானே தன்னை பெற்றவர்களும் தவித்திருப்பார்கள் என இத்தனை வருடம் கழித்து பெற்றவர்களுக்கு எதோ பெரிதாய் தவறிழைத்துவிட்டோம் என்ற குற்றவுணர்வு வந்திருக்க.. சுவாதியால் கதிரவனை எதிர்கொள்ள முடியவில்லை.
(ம்.. இத்தனை நிகழ்வுகள் நடந்தும்.. பாராட்டி சீராட்டி உயிரென வளர்த்த பெற்றோருக்கு தன்னால் எத்தனை தலைகுனிவு என்பதை இன்றுவரை உணரவில்லை சுவாதி. பட்டால் மட்டுமே புத்தி வரும் சுவாதி போன்ற பெண்களுக்கு வருங்காலம் பாடம் கற்பிக்குமா பார்ப்போம்.)
நிலவழகி தூக்கத்தில் நிற்க முடியாமல் நின்றிருக்க.. ‘என்னங்க அப்படியே நின்னுட்டிங்க.? ஐஞ்சு மணிநேரம் பக்கம் டிராவல் செய்து பாப்பா ரொம்ப டையர்டா இருக்கா.. உங்க தங்கையும் தூக்கத்தில இருக்காங்க.. முதல்ல கதிரவனை உள்ள கூப்பிடுங்க..” என்றான் கலையரசன்.
‘அண்ணா தூக்கம் வருது..” என சோர்வோடு சொன்ன நிலவழகி மீண்டும் காரினுள் சென்று படுக்க முயல.. சுவாதி ‘ஹே.. நிலா உள்ளவந்து படு..” என தங்கையின் கையை பாசத்தோடு பிடிக்க.. குப்பென தூக்கம் கலைந்த நிலவழகி கதிரவனைப் பார்த்தாள் கலக்கத்தோடு.
‘பாப்பாவை பிடி நிலா..” என கவிப்பிரியாவை நிலாவிடம் கொடுத்தவன்.. ‘ரெண்டு பேரும் உள்ள போய் படுங்க..” என்றவன்.. டாக்சிக்கான பணத்தை செட்டில் செய்து.. அசாருக்கு நன்றி சொல்லி அனுப்பி வைத்தவன் கார் கிளம்பிய பின்னும் சுவாதியின் புறம் திரும்பாமல் நின்றிருந்தான்.
‘உ.. உள்ள வா கதிர்..” என சுவாதி சன்னக்குரலில் சொல்ல.. முறைப்போடு திரும்பியவன்.. ‘பார்த்திய வாங்கிட்டு போய் படு.. நான் இங்க திண்ணையில இருக்கேன்..” என்றான் இறுக்கத்தோடே.
கதிரவன் கோபம் புரிந்த சுவாதி முதலில் குழந்தைகளை படுக்க வைப்போம் என கலையரசனிடமிருந்து பார்த்தியை வாங்க.. தூக்கத்திலும் ‘அண்ணா..” என ஒட்டினான் பயத்தோடு.
‘பார்த்திபா..” என சுவாதி அழைக்க.. அன்னை குரல் கேட்டு..‘ம்மா..” என தாவியவன் அழ ஆரம்பிக்க.. ‘அழாத.. அழாத.. அண்ணாதான் கூட்டிட்டு வந்துட்டாங்கள்ல..?” என கொஞ்சி முத்தமிட.. சற்று சமாதானமாகி ‘ம்மா.. தூக்கம் வருது..” என்றான்.
‘வா நிலா..” என தங்கையின் கைப்பிடித்து உள்ளே அழைத்துப் போனாள்.
இவர்களின் பேச்சு சத்தத்தில் பிரபாகரன் வெளியே வர.. ‘ண்ணா வந்துட்டிங்களா.?” என்றான்.
‘வந்துட்டோம் பிரபா.. நீ போய் தூங்கு..” என்க.. கதிரவனைப் பார்த்தான் பிரபாகரன்.
‘இவர் பார்த்திபனோட தாய்மாமா.. மூனு பேரையும் அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போக வந்திருக்கார்.. மத்தது காலைல பேசிக்கலாம்.. போய் படு..” என்றான்.
பிரபாகரன் சென்றிட.. கலையரசன்.. ‘எதிர் வீட்லதான் நானிருக்கேன்..” என தன் வீட்டை சுட்டிகாட்டிவன்.. ‘இங்க எல்லாருக்கும் இடம் போதாது.. நீங்க வாங்களேன் என் வீட்ல படுத்துக்கலாம்..” என்றான் கதிரவனிடம்.
‘உங்களோட ஸ்டே பண்ண ஆசைதான்.. ஆனா இன்னைக்கு வேணாம்.. இங்க திண்ணையில படுத்துக்கிறேன்..” என மறுத்தான்.
‘உங்க அக்கா வீட்ல பெட்சீட் தலையணைலாம் நிறைய இருக்காது..” என மீண்டும் கலையரசன் அழைக்க..
‘தப்பா எடுத்துக்காதிங்க கலை.. வீட்லயே இடம்மாறி படுத்தா நிலா சரியா தூங்கமாட்டா.. நிலாவை இங்க விட்டுட்டு என்னால உங்க வீட்ல நிம்மதியா தூங்கமுடியாது நீங்க போய் படுங்க..” என்றான் மறுப்பாக.
‘சரி இருங்க..”என தன்வீடு சென்றவன் இரண்டு தலையணைகளையும் பெட்சீட்டும் எடுத்து வந்து.. ‘எங்கம்மாப்பா வந்தா யூஸ் பண்ணுவாங்க.. இன்னைக்கு நீங்க யூஸ் பண்ணிக்கோங்க..” என கொடுக்க மறுக்காமல் வாங்கிய கதிரவன்.. ‘சுவாதி..” என குரல் கொடுத்தான்.
சுவாதி வெளியே வர.. ‘இதை நிலாக்கு வச்சிவிடு..” என தலையணையை கொடுத்தவன்.. ‘கதவை தாழ் போட்டுக்க..” என கட்டளையாய் சொல்லி.. ‘ரொம்ப தேங்க்ஸ் கலை.. லேட் நைட் ஆகிடுச்சி.. ரொம்ப டையர்டா இருப்பிங்க.. போய் படுங்க காலைல பார்க்கலாம்..” என்றனுப்பினான்.
கலையரசன் படுக்க சென்றிட.. எந்த பிரதிபலனும் இல்லாமல் இத்தனை உதவிகளை செய்திருக்கும் கலையரசனிற்கும் பிரபாகரனிற்கும் ஆயிரம் நன்றிகளை சொன்னாலும் பத்தாது என நினைத்தவாறு திண்டில் சாய்ந்தவனுக்கு.. இத்தனை பிரச்சனை வந்தபோதும் அருகிலிருக்கும் தன்னை நாடி வரவில்லையே.. நாம்தானே இவளை தேடி வந்திருக்கிறோம் என்ற கோபமும் தணலாய் கொதிக்க.. இச்சிறு வயதில் தகப்பனை காணாததோடு ரௌடிகளின் பயத்தோடு வாழும் குழந்தைகளின் நிலை நினைத்து கோபம் தணித்தான்.
சுவாதி கணவனிற்கு என்னவாயிற்று.? திருமணத்திற்க்கு முன் எப்படியோ.? திருமணத்திற்கு பின் இருக்கும் இடம் தெரியாமல்தானே வாழ்ந்து வந்தான்.. மது புகையிலை சூதாட்டம் என எந்த கெட்டபழக்கமும் கிடையாது.. ஆனால் பணம் வசூலிப்பதில் மிகவும் கராறாக இருப்பான் என ஊருக்குள் பேச்சுண்டு.. ஒருவேளை கடன் வாங்கியவர்களுடன் ஏதேனும் பிரச்சனையாகியிருக்குமோ.? என யோசித்திருந்தான்.
இவளை அழைத்து போனதும் அப்பாவை எப்படி சமாளிப்பது.? என யோசிக்க, அவர் கோபத்தில் தவறென்ன இருக்கிறது.? நான்கு நாளாய் மகன் காணாமல் போனதற்கே இப்படி துடிக்கிறாயே.. நீ வீட்டை விட்டு போனதோடு மறக்க முடியாத அவமானங்களையும் சேர்த்து கொடுத்திருக்கிறாயே.. நம் தாய் தந்தையர் எப்படி துடித்திருப்பார்கள்.?
இந்த காலத்தில் காதல் கல்யாணம் சகஜம்தான்.. தக்க வயதில் மனதிற்கு பிடித்தவனோடு திருமணம் தவறில்லைதான்.. ஆனால் பிள்ளைகளின் சந்தோசத்தில் மட்டுமே நிம்மதி காணும் பெற்றோரிடம் ஒருமுறை பேசிப்பார்த்திருக்கலாமே.. தான் தேர்ந்தெடுத்த நபர் சரியானவனாய் இருக்கும் பட்சத்தில் அதை தாய் தந்தையருக்கு பொறுமையாய் உணர்த்தியிருக்கலாமே.. இதையெல்லாம் விடுத்து யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தன் வாழ்வே பெரிதென சென்றுவிட்டாயே..
சிறுமியென பாவித்து வளர்த்து வந்த மகள் காணாமல் போனதையே தாங்கிக்கொள்ள முடியாத போது.. இரண்டு நாள் கழித்து இனி நான் உன் மகளல்ல.. வேறொருவன் மனைவி என வந்து நின்றால் எந்த பெற்றோரால்தான் தாங்கிக்கொள்ள இயலும்.? நாகராஜ் மகள் யாரோடோ ஓடிபோய் திருமணம் செய்து கொண்டாளென சொந்த பந்தங்களிடையே எத்தனை அவமானம்.?
இத்தனை நடந்தும் மகள் அறியாமல் செய்திருப்பாள்.. வீட்டிற்கு அழைத்து வந்து பொறுமையாய் எடுத்துரைக்கலாம் என நம்பிக்கையோடு காவல் நிலையத்திற்கு சென்றார் தந்தை. அங்கும் மகள் நிராகரித்துவிட்டாள் என்ற அவமானத்தோடும் கண்ணீரோடும் தகப்பன் வந்த காட்சியை நினைத்து இன்று நடந்ததுபோல் கண்கலங்கினான்.
அதன் பின் சரி வர உண்ணாமல் உறங்காமல் பித்து பிடித்தாற் போல் எத்தனை மாதம் தவித்திருக்கிறார் என உனக்கு தெரியுமா.? அவர் வேதனையை அருகிலிருந்து பார்த்த எங்களுக்குத்தானே தெரியும்..
நீ செய்த காரியத்தின் ரணம் இன்றுவரை ஆறாமல் இருக்கபோய்தானே நிலாவிற்கு ஃபங்சன் வேணாம் என்றார்.. உன்போலவே நிலாவும் செய்திடுவாளோ என உள்ளுக்குள் பயமிருக்கப் போய்தானே சிறு பெண்ணென்றும் பாராமல்.. அன்று நிலாவிடம் காதலெல்லாம் கூடாது.. படிப்பு முடித்ததும் உன் மனதிற்கு பிடிக்கும் படியான பையனை நானே தேடி கண்டுபிடித்து உன் முன் நிறுத்துவேன் என கண்டிப்பதாய் நினைத்து யாசித்தார்.. என வேதனையாய் கண்மூடித் திறந்தான்.
ம்.. தந்தையின் அனைத்து வேதனையும் அறிந்த நானும் அவரை எதிர்க்க வேண்டிய சூழ்நிலையாகிற்றே என மீண்டும் சுவாதி மீது கோபம்தான் வந்தது.