குழந்தைகளை தூங்க வைத்த சுவாதி வெளியே வர.. கதவு திறக்கும் சத்தத்தில் கண்திறந்தவன் சுவாதியை கண்டதும் தனக்கும் பேசவேண்டியுள்ளதால் எழுந்தமர்ந்தான்.
தயக்கத்தோடு சுவாதி நின்றிருக்க.. சுவாதி இங்கு எப்படி வந்தாள் என முன்பே கலையரசன் சொல்லியிருக்க.. இங்கு யாருக்காவது பணம் தரவேண்டியுள்ளதா.? இத்தனை நாள் பணத்திற்கு என்ன செய்தாய்.? என அவசியமானதை மட்டும் கேட்டறிந்து.. ‘நாளைக்கு காலைல கிளம்பனும்..” என்றான் உத்தரவாக.
சுவாதி அதிர்வோடு விழிவிரிக்க.. ‘காலம்பூரா கலையரசனுக்கு தொல்லை கொடுத்துட்டு இங்கயே இருக்க போறியா.? உன்னை பார்த்துக்கிறதுதான் அவரோட வேலையா.?” என்றான் கோபமாக.
‘இல்ல.. அப்பா..” என சுவாதி கண்கலங்க.. ‘உன்னை கூட்டிட்டு வரது அவருக்கு பிடிக்கலதான்.. நீ செய்ததுக்கு வெத்தல பாக்கு வச்சி வரவேற்பாங்களா.?” என கடித்து குதற.. சுவாதியின் கண்ணீர் அதிகமாக..
‘ப்ம்ச்..” என தன்னை கட்டுப்படுத்தியவன்.. ‘நானும் அப்பாம்மாவும் உயிரோட இருக்கும்போது நீ இப்படி இருந்தா எங்களுக்குத்தான் அசிங்கம்.. இந்த நிலையிலயும் வீட்டுக்கு வர யோசிக்கிறயா நீ..?” என்றான் முறைப்போடு.
குற்றவுணர்வோடிருப்பளுக்கு தாய் தந்தையரை எதிர்கொள்ள தயக்கம்தான்.. ஆனால் கதிரவன் சொல்வதுபோல எத்தனை நாளைக்கு மற்றவர்களுக்கு பாரமாய் இருப்பது என நினைத்து சம்மதமாய் தலையசைத்தாள் சுவாதி.
‘வீட்டுக்கு போனதும் அப்பா எதாவது சொன்னாலும் நீ அமைதியா இரு.. ஏற்கனவே குழந்தைங்க ரொம்ப பயந்திருக்காங்க.. அங்க வந்தும் சண்டைன்னா இன்னும் பயந்துப்பாங்க..” என்றான் கட்டளையாக.
தன் மீது கோபமென்றாலும் குழந்தைகளை நினைக்கிறானே என சுவாதி பாசத்தோடு பார்க்க.. இவளின் பாசப்பார்வை பிடிக்காமல்.. ‘போய் படு..” என சிடுசிடுத்து திண்டில் படுத்து கண் மூடினான்.
—- —— ——– ——– ——–
ஆறு மணிபோல் மைதானத்திற்கு வந்த ரமணனை பிடித்துக்கொண்டனர் இளம் வீரர்கள்.. ‘கலை இன்னும் வரலயா.? ஒரு வாரத்திற்கு பயிற்சி வேண்டாம் ரெஸ்ட் எடு என்றபோதும் உங்களை பார்க்கிறதுக்காகவே இன்னைக்கு வரேன்னானே..” என்றவர்.. சொன்னா வந்திடுவானே என யோசித்தபடி அழைப்பு விடுத்தார் கலையரசனிற்கு.
அதிகாலை வரை நிலவழகி நினைவிலேயே உழன்றவன் தற்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.. இரண்டு முறை அடித்து ஓய்ந்து மூன்றாவது முறைக்கு அழைப்பை ஏற்றவன்.. யாரென்றும் பாராமல் ‘ஹலோ..” என்றான் தூக்க கலக்கத்தோடே.
‘குரல் ஏன் ரெஸ்டலஸ்சா இருக்கு..? உடம்பு சரியில்லையா.?” என்ற ரமணனின் குரலில் தூக்கம் கலைந்தவன்.. ‘மார்னிங் சார்..” என்றான்.
‘இன்னைக்கு நைட் சென்னை கிளம்பனும்.. தஞ்சாவூர்லயிருந்து வந்துட்டல்ல.?” என்க.. ‘நேத்தே வந்துட்டேன் சார்..”
‘அப்போ ஏன் கிரௌண்டுக்கு வரல.? பசங்க உனக்காக காத்திட்டிருக்காங்க..”
அச்சோ அதை மறந்தே போய்ட்டோமே என வருந்தியவன்.. ‘ராசிபுரம் வரைக்கும் ஒரு வேலையா போய் வந்தேன்.. தூங்க லேட் நைட் ஆகிடுச்சி.. இப்போ கிளம்பி வரேன் சார்..” என்றான் குரலிறங்கியவனாய்.
தேவையில்லாமல் எதையும் செய்யமாட்டான் என நன்கறிந்த ரமணன்.. ‘பரவால்ல கலை பசங்கள்ட்ட நான் சொல்லிக்கிறேன்.. ரெஸ்ட் எடு.. நைட் வேற டிராவல் செய்யனும்..” என்றார் அக்கறையாக.
சிறுவர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள் என நினைத்தவன்.. ‘இல்லைங்க சார்.. பசங்க ப்ராக்டிஸ் முடிக்கிறதுக்குள்ள நான் வந்துடறேன்..” என இணைப்பை துண்டித்து பாத்ரூமினுள் நுழைந்தான்.
பத்து நிமிடத்தில் குளித்து மைதானம் செல்ல தயாரானவன் வழக்கம்போல் ஷூவை எடுத்துக்கொண்டு வெளியே வந்தமர.. நிலழவகி தரிசனம் கிடைக்கவும் லேட் நைட் தூங்கிட்டு அதுக்குள்ள எழுந்துட்டா.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமில்ல என நினைத்தவாறு மெல்ல சாக்சை உதறிக்கொண்டிருந்தான்.
திண்டில் உறங்கிக்கொண்டிருந்த கதிரவனின் காலை சுரண்டிக்கொண்டிருந்தாள் நிலவழகி.. கதிரவன் எழாமல் இருக்கவே கோபத்தோடு.. ‘அண்ணா..” என காலைப் பிடித்து உலுக்கினாள்.
‘ம்..” என சோர்வோடு எழுந்த கதிரவன்.. ‘என்ன நிலா.?”என்றான் தூக்கத்தோடே.
‘எனக்கு பசிக்குது..” என்றாள் பாவமாக. பசி தாளமாட்டாள் என கதிரவன் சொன்னதோடு.. நேற்றிரவு சரியாக சாப்பிடாததும் நினைவு வர.. ஒரு நாளைக்கு கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து சாப்பிட்டிருக்கலாமில்ல என மனதில் கடிந்தபடி ஷூவை போட்டு தனது பைக்கை துடைத்துக்கொண்டிருந்தான்.
நேரம் பார்த்த கதிரவன் ஆறரை ஆகிடுச்சா என நினைத்தபடி.. ‘சரி நான் போய் பால் வாங்கி வரேன்.. நீ போய் கொஞ்சம் தண்ணி கொண்டுவா..” என பணிக்க.. நிலா உள்ளே செல்லவும்..
‘ஹாப்பி மார்னிங் கதிர்..” என்றபடி மச்சானிடம் வந்தவன்.. ‘என் வீட்ல குளிச்சிக்கோங்க..” என பைக்கை கிளப்ப.. ‘கலை..” என கதிர் அழைத்தது கேட்டும் கேளாதவன்போல் சென்றிருந்தான்.
நேற்றிலிருந்து கலையரசனிடம் எதோ தீர்க்க முடியாத கடன் பட்டது போன்ற குற்றவுணர்வில் இருந்தவனுக்கு.. தற்போது தமக்காக வீட்டை திறந்து விட்டு போனது இன்னும் சங்கடத்தை கொடுக்க.. இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்ய போறோம் என மிகுந்த சங்கடத்தோடு நின்றிருந்தான்.
நிலவழகியோடு தொணதொணத்துக்கொண்டு வெளியே வந்த பார்த்திபன் கதிரவனைப் பார்த்ததும் கப்பென வாய்மூடினான். நிலவழகி தண்ணீர் கொடுக்க முகம் கழுவியவன்.. ‘பார்த்திபா கடைக்கு போலாமா.?” என்றான்.
பார்த்திபன் அமைதியாய் இருக்க.. அவனை தன்னோடு பேச வைக்கும் முயற்சியாக.. குழந்தை உயரத்திற்கு குனிந்தவன்.. ‘நிலாக்கு பசிக்குதாம்.. பால் பிஸ்கட்லாம் வாங்கனும்.. கடை எங்கயிருக்குன்னு எனக்கு காட்டுறியா.?” என்றான் கெஞ்சலாக.
வெளியே வந்த சுவாதி.. ‘மாமாவோட போய் வா பார்த்தி.. இங்க உனக்குதான எல்லாம் தெரியும்..” என குழந்தையை ஊக்குவித்தாள்.
‘போலாமா பார்த்தி..?” என கதிரவன் பார்த்திபனை தூக்க.. ‘லிலா..” என இறங்கப்பார்த்தான்.. இனி தம்மோடுதானே இருக்கப் போகிறான்.. மெல்ல பழகிக்குவான்.. தற்போது நிலாவின் பசிதான் முக்கியம் என நினைத்து..‘சரி நீ நிலாவோடவே இரு..” என இறக்கிவிட்டவன்.. ‘இங்க கடை எங்கயிருக்கு.?” என்றான் சுவாதியிடம்.
‘இந்த தெரு முனையிலயே இருக்கு.. நான் போய் வாங்கி வரேன்.” என சுவாதி கிளம்ப.. அங்கே வந்த கலையரசன் சுவாதியிடம் பேகை நீட்ட.. ‘நான் போய் வாங்கியிருப்பேனே..” என வாங்க தயங்கினாள்.
‘பரவால்ல பிடிங்க.. உங்ளுக்கும் உடம்பு சரியில்ல.. கதிருக்கு இங்க கடை எங்கன்னு தெரியாது.. அதான் நானே வாங்கி வந்துட்டேன்..” என பேகை கொடுத்தான்.
கதிரவன்.. ‘பிரபாகர் அம்மாகிட்ட சொல்லிட்டு ஒன்பது மணிபோல கிளம்பலாம்னு இருக்கேன்.. நீங்க வீட்டை பூட்டிட்டு போங்க கலை..” என்றான்.
‘நான் வர லேட்டானா வீட்டை பூட்டி பிரபா அம்மாகிட்ட சாவி கொடுத்துடுங்க..” என்க.. கதிரவன் நன்றியோடும் பிரம்மிப்போடும் பார்க்க.. ‘எதுக்கு கதிர் இத்தனை மரியாதையா பார்க்கிறிங்க..? என்னை பார்த்தா அத்தனை வயசானவன் மாதிரியா தெரியுது..?” என சிரிக்க..
நீங்க செய்த உதவிக்கு நன்றின்ற ஒத்த வார்த்தை பத்தவே பத்தாது என நினைத்த கதிரவன்.. ‘கவலைப்படாதிங்க.. நன்றி சொல்லி உங்களை தள்ளி நிறுத்த எனக்கும் விருப்பமில்ல..” என்றான் இலகுவாக.
‘பார்த்தி அப்பா விசயமா உங்கள்ட்ட பேச வேண்டியிருக்கு.. கொஞ்சம் ப்ரீ ஆகிடுட்டு அடுத்த வாரம்போல கால் செய்யறேன்.. இப்போ டைம் ஆகுது..” என்று கிளம்பினான் மைதானத்திற்கு.
கதிர்.. ‘நிலா நைட்டே சரியா சாப்பிடல.. சமைக்க என்ன வாங்கி வரட்டும்.?” என்றான் சுவாதியிடம்.
கலையரசன் கொடுத்த கேரிபேக் கனமாக இருக்கவே அதனை பிரித்து பார்க்க.. பால்.. பிஸ்கட் பிரட்டோடு.. தோசைமாவு.. தக்காளி வெங்காயம் தேங்காய் என சமையலுக்கு தேவையானதும் இருக்க.. ‘எல்லாமும் கலையே வாங்கி வந்திருக்கார்..” என்று கேரிபேகை காண்பித்தாள் சுவாதி.
‘சரி போய் எதாவது செய்.. நிலா பசிதாங்கமாட்டா..” என்றான்.
இரண்டு மணிநேரத்தில் அனைத்து வேலையும் முடித்த சுவாதி.. ‘ப்ராக்டிஸ் முடிச்சி எப்பவும் ஒன்பது மணிக்குள்ள கலை வந்திடுவார்.. இப்போ வர நேரம்தான் வந்ததும் சொல்லிட்டு போலாம்…” என்கவே கலையரசனிற்காக காத்திருந்தனர்.
—– —— ——– ———–
ஒன்பதரை மணிபோல் கலையரசன் வர.. கலையிடம் ஓடி வந்த பார்த்திபன்.. ‘அண்ணா பாய்.. எங்கம்மா வீட்டுக்கு போறோம்.. அங்க போனதும் அப்பா வந்திடுவாங்க..” என்றான் சந்தோசத்தோடு.
‘ஊருக்கு வர பயந்தான்.. அதான் இப்படி சொல்லி சமாதனம் செய்திருக்கேன்..” என்ற சுவாதி கண்ணீரோடும் நன்றியோடும் கைகூப்ப.. ‘யப்பா.. என்னை ஒரேடியா பெரிய மனுசனாக்கிடுவிங்க போல.. நான் உங்களை விட சின்ன பையன்ங்க..” என இலகுவாய் சொல்லி..
‘கதிர் இதெல்லாம் ஆகறதில்ல.. நீங்க கிளம்புங்க..” என்றான்.
‘கலை.. சுவாதியோட சிம் உங்கள்ட்ட இருக்கிறதா சொன்னா.. அதை கொடுக்கறிங்களா.? குமாரை கண்டு பிடிக்க உதவியா இருக்கும்..” என்றான்.
வேலை கிடைத்த பிறகு ஒருசில அதிகாரிகளோடு பழக்கம் வந்திருக்க.. அவர்களிடம் இதுகுறித்து கலந்தாலோசித்து பார்க்கலாம் என முன்னமே யோசித்திருந்ததால்.. ‘ஒரு வாரத்துக்கு நான் கொஞ்சம் பிஸி கதிர்.. அதுக்கப்புறம் இதைப்பத்தி விசாரிக்கலாம்னு இருக்கேன்..” என கலையரசன் கொடுக்க மறுத்தான்.
கதிரவன்.. ‘இல்லங்க கலை ஏற்கனவே நிறைய செஞ்சிட்டிங்க.. இனி நான் பார்த்துக்கிறேன்..” என பிடிவாதமாய் கேட்கவும்.. சுவாதியின் சிம்மை கொடுத்தவன்.. ‘எதுனா ஹெல்ப் வேணும்னா கால் பண்ணுங்க கதிர்..” என்றான் அக்கறையாக.
பிறகு பிரபாகரன் வர.. அவனிடமும் சுவாதி நன்றியோடு விடைபெற.. ‘சாரிங்கக்கா.. அக்காகிட்ட இப்போ பணம் இல்லையாம்.. அக்கா பணம் கொடுத்ததும் உங்க அக்கௌண்ட்க்கு போட்டுடறேன்க்கா..” என்றான் வாடிய முகத்தோடு.
‘பரவால்ல பிரபா.. அதெல்லாம் நான் யோசிக்கவே இல்ல.. நீ என்னை கூட்டிட்டு வரலன்னா என் நிலைமை என்னவாகியிருக்குமோ..?” என நன்றியோடு சொல்லி கிளம்பலாம் என்பதுபோல் கதிரவனைப் பார்த்தாள்.
சாமான் ஏற்றியிருந்த டெம்போ டிரைவரிடம்.. ‘பாஸ் முன்ன போங்க..” என கிளப்பி.. புக் செய்திருந்த வேனுக்கருகே சென்றவன்.. ‘நிலா குழந்தைகளோட பின்னாடி உக்கார்ந்துக்கோ..” என்றான்.
காலை சமையலின்போது கலையரசனும் பிரபாகரனும் எத்தனை உதவிகளை செய்திருக்கிறார்கள் என சுவாதி நிலாவிடம் சொல்லியிருக்க.. காருக்குள் அமர்ந்த நிலவழகி நன்றியோடு கலையரசனை நோக்கினாள்.
இவளின் பார்வையை கவனித்த கலையரசன் ம்க்கூம்.. இதற்கு இவள் முறைப்பதே மேலென நினைத்து.. அவளை கவனியாதவன் போல கதிரவனிடம் பேசி விடைபெற்று தனது வீடு நோக்கி நடந்தான்.