‘அழாதிங்கத்த.. இதெல்லாம் சரிசெய்யத்தான் பெரிய சித்திகிட்ட இப்படி பேசினேன்.. நான் பேசினதையே திரும்ப திரும்ப யோசிப்பாங்க.. என்மேல கோபப்படுவாங்க.. என்னை ஜெயிக்கிறதுக்காவது அவங்க தப்பை சரிசெய்ய பார்ப்பாங்க..” என்றாள் நம்பிக்கையாக.
‘நீ அவளை எதிரியா நினைக்கிலல்ல நிலா.?” என்றார் தவிப்பாக.
‘கண்டிப்பா நினைக்கமாட்டாம்மா..” என்றபடி செல்வராணி உள்ளே வந்தாள்.
நிலா..‘வாங்க சித்தி..” என்றாள். கலா இப்படி வருந்துவதை தாளமுடியாமல் செல்விக்கு அழைத்திருந்தாள் நிலவழகி.
‘செல்வி..” என கலா தவிப்பாய் பார்க்க.. ‘ப்ச் ம்மா.. நேத்து நடந்ததை நிலா நைட்டே எனக்கு கால் செய்து சொல்லிட்டா.. நிலாக்கும் கீதாக்கும் பிரச்சனையாகிடுச்சேன்னு வருத்தமா இருந்தாலும்.. அந்த சூழலை ஏற்படுத்தினது கீதாதான.?” என்றாள் தானும் வருத்தமாக.
‘நான் டென்சன் ஆகலம்மா.. அப்பாம்மான்னு உங்கக்காக்கு கொஞ்சமாவது இருந்தா தவறை திருத்திட்டு வரட்டும்.. இல்ல என் வளர்ப்பு சரியில்லன்னு மனசை தேத்திக்கிறேன்..” என்றார் வேதனை மறைத்து.
நிலா.. ‘மாமா.. ஏன் இப்படி.?” என பரிதவித்தவள்.. ‘வளர்ப்பு சரியில்லாமத்தான் யாருன்னே தெரியலன்னாலும் உங்க மகன் எங்கக்காக்கு பாதுகாப்பளித்து பார்த்தியை காப்பாத்துனாரா.?
இரண்டு வருசம் காதலிச்சும் ஒத்த வார்த்தையோ பார்வையோ தப்பா நடந்துகிட்டதேயில்ல.. சித்தி என்னை மகள் போல பார்த்துக்கிறாங்களே.? இதெல்லாம் வளர்ப்பு சரியில்லாமத்தான மாமா..?” என்றாள் பெருமையாக.
நிலாவின் பேச்சில் மயில்சாமி சந்தோசித்தாலும் கலாவின் முகம் வாடி இருக்கவும்.. ‘உங்க மகனாலதான் எங்கக்கா திரும்பவும் எங்கம்மா வீட்டோட இணைஞ்சாங்க.. உங்க தங்க மகனை கட்டிக்கவும்தான் நான் சந்தோசமா இருக்கேன்.. நீங்க ரெண்டுபேரும் என்னை பெத்த பொண்ணாட்டம் பார்த்துக்கிறதாலதான் எங்கப்பாம்மா நிம்மதியா இருக்காங்க.. சித்தி பேசப்போய்தான் சுவாதிக்காகிட்ட பணம் வாங்கிக்க எங்கப்பா சம்மதிச்சார்..
இப்படி நீங்க எல்லாருமா சேர்ந்து எனக்கும் என் அம்மாப்பாக்கும் சந்தோசத்தை கொடுக்கும்போது உங்களை சந்தோசமா வச்சிருக்கிறது என் கடமை..
எங்கப்பாம்மாவை யாராவது எதாவது சொன்னா என்னால எப்படி தாங்க முடியாதோ.. அதேபோலத்தான் நீங்களும்த்த.. மாமாவை அவமானப்படுத்தினதோட இல்லாம உங்களையே மிரட்டுறாங்க.. எப்படி சும்மாயிருக்க முடியும்.?” என்றாள் உரிமையாக.
மயில்சாமியும் செல்வியும் பெருமையாக பார்க்கவும்.. ‘அவன் வேற வந்து என்ன சொல்லப்போறானோ..?” எனப் புலம்பிய கலா.. ‘கலைக்கு கீதா பேசினது தெரியுமா.?”என்றார்.
‘என் புருசன் கல்யாணத்துக்கு முன்ன எப்படி எந்த டென்சனும் இல்லாம.. மத்தவங்களுக்கு உதவி செய்யிறது.. சின்சியரா வேலை பார்க்குறது.. பாக்ஸிங்குனு இருந்தாங்களோ அதே போலத்தான் இனியும் இருக்கனும்.. இதெல்லாம் சொல்லி அவங்களை டென்சன் பண்ணமாட்டேன்த்த..” என கலையின் நினைவில் காதலோடு சொல்லி..
‘காதலுக்காக உயிரைக் கொடுத்தா பத்தாது.. மாப்பிள்ளைக்கும் சம்பந்திக்கும் உன்னால எந்த மனக்கஷ்டமும் வந்திடக்கூடாது.. குடும்பத்தை அன்பால இணைச்சி மேல எடுத்து வரதுதான் உண்மையான காதல்ன்னு அப்பா சொல்லியிருக்கார்.. என் குடும்பத்தை நான் பார்த்துக்கிறேன்ப்பான்னு அப்பாக்கு வாக்கு கொடுத்திருக்கேன்..
நம்ம குடும்பத்துல இருக்கிற ஒரே பிரச்சனை பெரிய சித்திதான்.. அவங்களை சரிசெய்துட்டா எல்லாம் சரியாகிடும்.. அத்தை மாமாக்கு மரியாதை தராத பெரிய சித்திக்கு அதுவே அவங்களுக்கு நடந்தா எப்படியிருக்கும்னு காட்டினாதான் தெரியும்.. அதான் நிறைய பேசிட்டேன்..” என்றாள்.
கலா.. ‘பேசினதோடவா விட்ட.? கம்பெடுத்து அடிக்கயில்ல கிளம்பின..?”என்றார் சிறு கோபமாக.
‘அத்தை…” என பரிதவித்தவள்.. ‘பிறந்த வீட்டு பெருமையை புகுந்த வீட்ல பேசக்கூடாதுன்னு அம்மா ரொம்ப கண்டிப்போட சொல்லித்தான் அனுப்பினாங்க.. ஆனா எனக்கு இந்த ரெண்டு வீட்டைத் தவிர வேற தெரியாது.. அதனால அங்க பத்தி இங்க பேசுறேன்னு தப்பா நினைக்காதிங்கத்த..” என பொறுமையாய் எடுத்துரைத்து..
‘என் அக்கா வீட்டைவிட்டு போகும்போது பதினெட்டு வயசுதான்.. என்னதான் சுவாதிக்காவை நல்லவிதமா பார்த்துக்கிட்டாலும், கல்யாணம் செய்த விதம் ரொம்ப தப்புன்னு மாமா அப்பாகிட்ட மன்னிப்பும் கேட்டாங்க.. ஆனாலும் இன்னைக்கு வரைக்கும் எங்கப்பா அக்கா மாமாகிட்ட பேசுறதில்ல..
அன்னைக்கு அப்பாம்மா வேணாம்னு வீட்டைவிட்டு போன சுவாதிக்காக்கு இன்னைக்கு அப்பா சுவாதிக்காவை ஒதுக்கும்போதுதான் அந்த வலி என்னன்னு புரிஞ்சிருக்கு.. சிலருக்கெல்லாம் தப்புக்கான தண்டனை கிடைக்கும்போதுதான் அவங்க செய்த தப்போட வீரியமே புரியுது..
குழந்தைகளை வச்சிக்கிட்டு வேலைக்கும் போய்ட்டு வீட்டையும் பார்த்துக்கிறது எவ்வளோ கஷ்டம்..? பசங்களுக்கு நிறைய செய்யனும்னுதான அத்தனை கஷ்டப்பட்டுருப்பிங்க.? பெத்த புள்ளைங்க நல்ல வேலைல செட்டிலான பின்னும்.. மாடு கன்னுகுட்டின்னு ரிட்டையர்ட் ஆகியும் மாமா எதுக்கு வேலை பார்க்கிறார்.? எல்லாம் எங்களுக்காகத்தான.? இத்தனை செய்தும் உங்களோட அருமையும் அன்பும் பெரிய சித்திக்கு கொஞ்சம் கூட புரியல..
இனியும் இப்படியே போனா உறவை தக்க வைக்க முடியாது.. நல்ல மாதிரியா சொன்னா அவங்க புரிஞ்சிக்க மாட்டாங்க.. அப்போ என்னதான் செய்யிறது.? அதான் அவங்க செய்யிறதையே திருப்பி செய்யலாம்னு இறங்கிட்டேன்..
கல்யாணத்துக்கு முன்னவும் கவியும் பார்த்தியும் இல்லனா எனக்கு வீட்ல பொழுதே போகாது.. அப்பாக்கு தெரியாம நான் பண்ற ஒரே வேலை குட்டிங்களை பார்க்கிறதுதான்.. இப்போ இங்க மது தரண் வினோதான் கவி பார்த்தி இடத்தை நிரப்பிட்டிருக்காங்க..” என்றாள் கனிந்த குரலில்.
மகள் மீதான பாரம் நீங்கிய கலா மருமகளை சந்தோமாய் பார்க்க.. செல்வி.. ‘உன் மகன் அவனுக்கேத்த பொண்டாட்டியைதான்மா பிடிச்சிருக்கான்.. அவனை மாதிரியே தப்புன்னா ஜிவ்வுன்னு ஏறுறதும்.. அன்புனா மொத்தமா இறங்குறதும்னு..” என்றாள் சிரிப்போடு.
—— —— —— ——-
ஒரு வருடம் நான்கு மாதம் முடிந்திருக்க.. நான்கு நாட்களாய் கணவனை அழைத்துக்கொண்டிருக்கிறாள்.. கலை வந்தபாடில்லை.. இதோ இன்று காலையிலிருந்து இதோடு பத்தாவது முறையாக அழைக்கிறாள்.. ’ப்ச்.. என்ன நிலா.? வேலையிருக்குடி.. சன்டேதான வந்துட்டு வந்தேன்.? இப்போஅங்க வந்தாலும் இரண்டு மணிநேரத்துல கிளம்பற மாதிரி இருக்கும்.. அதுக்கும் மூஞ்சை மூஞ்சூர் மாதிரி வச்சிப்ப..” என்றான் சலிப்பாக.
‘அதெல்லாம் வைக்க மாட்டேன் வாங்க..” என்றாள் பிடிவாதமாக. பின்னே சிறுவர் பட்டாளமும்.. ‘மாமா.. உங்களாலதான் பார்ட்டி டிலே ஆகுது..” என கோபமாய் சிணுங்க.. ‘என்ன.? பார்ட்டியா.? என்னவாயிருக்கும்.? கல்யாணநாளும் முடிஞ்சிடுச்சி.. அழகி பொறந்த நாளும் முடிஞ்சிடுச்சி..” என யோசனையோடு முனுமுனுக்க..
‘அப்படியே கல்யாண நாளுக்கும் பிறந்த நாளுக்கும் பொண்டாட்டி பக்கத்துலயே பத்து நாளா ஒட்டிட்டிருந்த மாதிரிதான்..” என நொடித்தவள்.. ‘நாளைக்கு வரிங்க..” என கட்டளையிட்டு இணைப்பை துண்டித்தாள்.
மதுவிடம்.. ‘நாளைக்கு உங்க மாமாக்கு சர்ப்ரைஸ் கொடுக்க இன்னைக்கே கேக் செய்யலாமா..?” என சிறுவர்களிடம் ஆலோசனை நடத்தினாள்.
‘கேக்கெல்லாம் செய்ய தெரியுமா நிலா.?” என கலா ஆச்சர்யத்தோடு கேட்கவும்.. ‘இதுவரை செய்ததில்லத்த.. இதுதான் ஃபர்ஸ்ட் டைம்.. மொபைல் பார்த்துதான் செய்ய போறேன்.. எப்படி வருதோ தெரியல.. மூனு நாளா கூப்பிட்டு வராததுக்கு உங்க மகனுக்கு என் கேக்தான் தண்டனை..” என சிரிப்போடு சமையலில் இறங்கினாள்.
‘இரண்டு ஃபிளேவர் செய்யலாம்.. எது நல்லாயில்லையோ அதை உங்க மாமாக்கு கொடுத்துடுவோம்.. நல்லாயிருக்கிறதை நாம சாப்டுடலாம்..” என அரட்டையோடு ஆரம்பித்த வேலை இரண்டு மணிநேரம் கழித்து முடிவிற்கு வர.. பின்னே மதிய சமையலை முடித்து சாப்பிட்டு.. நாளை பார்ட்டிக்கு என்ன உடை உடுத்தவேண்டுமென்ற தீவிர ஆலோசனையில் இருந்தனர்.
‘அக்கா.. நீங்க சுடிதாரேதான் போடுறிங்க.. நாளைக்கு சாரி கட்டிக்கோங்க..” என மது சொல்ல.. சந்தோசத்தோடு சம்மதித்தாள் நிலவழகி.
பிறகு கதிருக்கு அழைத்து பார்ட்டி விபரம் சொல்ல.. ‘இதெல்லாம் ஒரு பொழப்பா.? ஒன்னரை வருசமா காலேஜ் பக்கமே போகாம டிகிரி வாங்கப்போறேன்னு பார்ட்டி வேற.. இந்த மானங்கெட்ட பார்ட்டிக்கு நான் வேற பணம் அனுப்பனுமா.? அதெல்லாம் முடியாது..” என்றான் சிரிப்போடு.
‘பொறாமை.. லைட்டாவா.? இல்ல டைட்டாவா.?” என இவளும் சிரித்து.. பின்னே வழக்கம்போல் வீடியோ காலில் தாய் தந்தையிடம் நலம் விசாரித்து.. தான் செய்த கேக்கை காண்பித்து.. கவி பார்த்தியிடம் பேசினாள்.
‘நிலா.. நானும் பாஸ் ஆகிட்டேன்னு அம்மா சொன்னாங்க.. எனக்கு கேக்கு..” என பார்த்தி கேட்க..
‘நான் அங்க வரும்போது செய்து தரேன் பார்த்தி.. இப்போ மாமாவை வாங்கி வர சொல்லு..” என்க.. ‘ஏய் நிலா.. சும்மா எதையாவது சொல்லி வைக்காத.. இங்க பேக்கிரிலாம் எதுவும் திறக்கிறதில்ல.. இந்த வாலுங்க சொன்னாலும் புரிஞ்சிக்காம நிலா சொன்னா நிலா சொன்னான்னு என்னை நச்சு பண்ணுவாங்க..” என்றான்.
‘ம்.. எனக்கு பணம் அனுப்பமாட்டன்னல்ல.?வேணும்னேதான் பார்த்திகிட்ட பிட்டை போட்டேன்.. நல்லா அனுபவிங்க..” என சிரித்து இணைப்பை துண்டித்தாள்.
அடுத்து சுவாதிக்கு அழைத்து ‘பார்த்திக்கு கேக் செய்து கொடுக்கா..” என்க.. ‘எனக்கு அதெல்லாம் செய்ய வராது..” என்றாள் சுவாதி.
திருமணத்திற்கு முன்பிருந்தே குமார் தனக்கு தானே சமைத்து சாப்பிட்டதால் நன்றாகவே சமைக்க கற்றிருந்தான்.. சுவாதியோடு திருமணம் முடிந்த பின்னும் கூட சுவாதிக்கு சமைக்க தெரியாதென்பதால் குமாரின் சமையல்தான் என சுவாதி சொல்லியிருக்கவும் குமாரிடம் கொடுக்க சொல்லி.. ‘மாமா.. மொபைல் பார்த்துதான் நானும் செய்தேன்.. பார்த்தி இங்க கேக்கை பார்த்ததும் ஏக்கமாகிட்டான்.. எப்படியாவது அவனுக்கு செய்து கொடுங்க..” என்றாள்.
‘ட்ரை பண்றேன் நிலாம்மா.. நீ சொல்லி மறுப்பேனா.?” என்றான் சந்தோசமாக.
‘கட் பண்ணிட போறா இங்க கொடுங்க..” என மீண்டும் பேசிய சுவாதி.. ‘பாசானதெல்லாம் சந்தோசம்தான்.. எப்போ அம்மா ஆகப்போற.? கல்யாணம் ஆகி ஒன்றரை வருசமாச்சி.. இன்னும் ஒன்னும் காணோம்னு அம்மா புலம்பிட்டே இருக்காங்க..”என்றாள் எதிர்பார்ப்போடு.
‘க்கா..” என தடுமாறியவள்.. ‘நான் என்ன பண்ண.? அது உருவாகலைன்னா..? ப்ம்ச் போக்கா..” என கோர்வையற்ற வாக்கியமாய் உளறி கொட்டி இணைப்பை துண்டித்தாள்.
மயில்சாமி.. ‘சுவாதிகிட்ட பேசிட்டிருக்கும்போது முகம் ஏன்மா ஒரு மாதிரி ஆகிடுச்சி.? குட்டிங்க உங்கக்கால்லாம் நல்லாயிருக்காங்கதான.?” என்றார் அக்கறையாக.
‘ம்.. நல்லாயிருக்காங்க மாமா..” என திணறி.. ‘இதோ வரேன் மாமா..” என தனதறைக்குள் புகுந்துகொண்டாள்.
நிலாவிற்கு திருமணமானதிலிருந்து தன் பிரசவத்தின்போது உன் மாமா அம்மாக்கு கொஞ்சமும் குறைவில்லாம எப்படில்லாம் பார்த்துக்கிட்டாங்க.. என அன்னையிடம் பகிர முடியாததை கூட தங்கையிடம் பகிர்ந்து கணவனை பெருமை படுத்துவாள். என்னதான் தோழமையோடு பேசினாலும் இப்படி தனக்கான குழந்தை விசயம் பேசியது இதுதான் முதல்முறை என்பதால் நிலாவிற்கு என்னவோ போலாகிற்று.
சுவாதிக்கா அம்மால்லாம் ஆசைப்படுறாங்கனா அப்போ அத்தை மாமாக்கும் அந்த ஆசை இருக்கும்தானே.? நமக்கு ஏன் இன்னும் குழந்தை உண்டாகவில்லை.? என பலமாய் யோசித்திருந்தாள்.
பாக்ஸர் போல வீரமான பாசமான ஒரு பையனை பெத்து அத்தை கையில கொடுத்தா ரொம்ப சந்தோசப்படுவாங்க.. நமக்கு எதாவது குறையிருக்குமா.? அவங்க வந்ததுக்கப்புறம் ஹாஸ்பிட்டல் போய் செக் செய்யலாமா.? என ஏதேதோ எண்ணம் சுழல ஏக்கமாய் யோசனையாய் படுத்திருந்தாள்.
— —- —–
மயில்சாமியும் கலாவும் வெளியிலமர்ந்து பேசிக்கொண்டிருக்க இரவு பத்து மணிபோல் கலை வந்தான். ‘வா கலை..” என்றார் கலா.
‘நிலாக்கு என்னமா ஆச்சு.? ஏன் வந்தே ஆகனும்னு போன் செய்திங்க.?” என்றான் கவலையாக.
‘தெரியல கலை.. அவங்க அண்ணனோட பேசும்போது கூட சந்தோசமாத்தான் பேசினா.. என நிலா பேசியதனைத்தும் எடுத்துரைத்து.. ‘கடைசியில சுவாதிகிட்ட பேசினதுக்கப்புறம்தான் முகம் வாடிட்டா..
நீ நாளைக்கு வந்தாலும் இரண்டு மணி நேரத்துலயே திரும்பவும் திருச்சி கிளம்பறன்னும் கிளம்பும்போது உன்னோட அவளும் கிளம்பறதாவும் கேட்டா.. சந்தோசமா போய் வாம்மான்னுதான் சொன்னேன்.. அப்பவும் சோர்ந்தேதான் இருந்தா.. நைட் தோசை கூட பேருக்கு கொறிச்சிட்டு தூக்கம் வருதுன்னு எட்டரைக்கெல்லாம் கதவை சாத்திட்டா..” என்றார் கவலையாக.
‘சரிம்மா.. நான் என்னன்னு பார்க்கிறேன்..”என தனதறை வந்தவன் வழக்கம்போல் குளித்து வெளியே வர.. நிலா எழுந்தமர்ந்திருந்தாள்.
‘ஹே.. தூங்கலயா நீ.?”என அமர்ந்தான் அவளருகில்.
‘வரவே முடியாது ரொம்ப வேலையிருக்குன்னிங்க.?”
‘என்னாச்சு.? சாய்ங்காலத்துலயிருந்து ஏன் டல்லா இருக்கியாம்..? அம்மா புலம்பறாங்க..” என்றான் கவலையாக.
‘சாப்டிங்களா.? தோசை ஊத்தறேன் முதல்ல சாப்பிட வாங்க..” என எழுந்தாள்.
‘நான் சாப்டுட்டுதான் வந்தேன்.. உனக்கென்ன ஆச்சுன்னு சொல்லு..” என்றான் சின்ன மிரட்டலாக.
‘அது..” என தயங்கி தலைகுனிந்தவள்.. ‘எனக்கு ஏன் இன்னும் குழந்தை வரல.?” என்றாள் சன்னக்குரலில்.