சொன்ன படியே தந்தையும் மூத்த மகனும் அக்காவின் மகள் திருமணத்திற்கு வந்து இறங்கினார்கள்.பெரியவருக்கு பாச மலரை கண்ட சந்தோஷம். மகனுக்கு? வழக்கம் போலவே தாவணி போட்ட பெண்கள், லெஹெங்கா போட்ட பெண்கள், தவிரவும் பலாஸோவிலும் பெண்கள் மயக்கினார்கள். பலர் லூஸ் ஹேர் என்ற பெயரில் தலையை கட்டாமல் விட்டிருந்தார்கள். பலர் தலைக்கு இத்தனை அலங்காரம் செய்ய முடியுமா? என்னும் அளவில் வந்திருந்தார்கள். மணப் பெண் நாட்டியம் கற்றுக் கொண்டவள் என்பதால் சொல்லவே வேண்டாம் அவள் உடன் நாட்டியம் பயின்றவர்கள் அத்தனை அழகாய் இருந்தார்கள். அல்லது அழகை அழகாய் காட்டிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி தான் ரஞ்சனி. அழகி. பேரழகி.
“தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு“
சூர்யா மட்டுமல்ல. வந்திருந்த அனைத்து வாலிபர்களுமே அவள் தாவணி நுனியை பிடித்துக் கொண்டு சுற்ற தயாரானார்கள். நிச்சயம் அதில் சூர்யாவும் இருந்தான். சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கும் பெரிய பணக்கார குடும்பம் ஆயிற்றே. விஷயம் தெரிந்ததும் விட்டு விடுவார்களா? பெண்கள் விட்டாலும் அவர்களின் பெற்றோர்கள் விட்டு விட்டுவிடுவார்களா? பெயர் முதல் பட்ட படிப்பு வரை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்கள்.
அதில் இவனுக்கு பிடித்த ரஞ்சனியும் அடக்கம். பெண்ணும் பையனும் பார்த்தாயிற்று. படிப்பு வசதி ஒத்து வந்தது. பெற்றோர் பார்த்து பேசி விட்டார்கள். வேறு என்ன வேண்டும்? “உங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓக்கேப்பா. அண்ணனுக்கு புடிச்சுருக்கா விடுங்க. நான் பாக்கனுன்னு அவசியமே இல்ல” .ரவி தெளிவாக்கி விட்டான்.அப்போதே சிம்பிளாக நிச்சயம் செய்து விட்டார்கள். ரவி நிச்சயத்திற்கும் வரவில்லை. நேரடியாக திருமணத்திற்கே வந்துச் சேர்ந்தான். சூர்யாவுக்கும் ரவிக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு சூர்யாவுக்கு உடல் பயிற்சி செய்வது, ஜிம்மிற்கு போவது இதிலெல்லாம் அத்தனை ஆர்வம் இருந்ததில்லை. வாழ்க்கை வாழ்வதற்கே என்று இருப்பவன். அதற்காக அதிகமாகவும் சாப்பிட மாட்டான். கட்டுடல் என்று கூற முடியாவிட்டாலும் தொப்பை கிடையாது. ஊளை சதையும் கிடையாது. அதுவே தனக்கு போதும் என்று இருந்தான். அதுவே ரவி அப்படி இல்லை. உடல் மனது இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவன். அதே போலத் தான் பெண்கள் விஷயத்திலும்.
அப்படி எல்லாம் இல்லை. செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் தான் அவனை சுற்றி வருவார்களே தவிர அவன் அன்னையைத் தவிர யாரையும் அவன் மனதிற்குள், வீட்டிற்குள் நுழைய விட்டதே இல்லை. மற்ற பெண்களிடம் இருக்கும் அதே ஒதுக்கம் அவன் அன்னியிடமும் இருந்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
அவனுக்குத்தான் அப்படி இருந்ததே தவிர ரஞ்சனிக்கு அப்படி இல்லை. தன் கணவனும் அதே போல உடலளவில் மாற வேண்டும் என்று அவள் நினைத்திருந்தால் அதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் அப்படிப்பட்ட உடல் கொண்டவன் தனக்கு கணவன் என்று மாற்றி நினைக்கும் போது எல்லாமே தப்பாகி விடுகிறது. அவ்வப்போது அவன் வரும் போதெல்லாம் அவனை பார்த்து அவள் சைட் அடித்துக் கொண்டு தான் இருந்தாள் யாருக்கும் தெரியாமல். திருமணத்தில் ஆரம்பித்த பழக்கம் பிறகு மட்டும் விட்டு விட முடியுமா என்ன? அதுவும் பல சமயங்களில் ஒரே வீட்டில் இருக்கும்போது? சூர்யாவுக்கு ஜிம் பாடி எல்லாம் இல்லை. அது காரணமா? அல்லது பார்க்கும் பெண்களை கண்ணாலேயே தள்ளி வைக்கும் ரவியின் கூர்மையான பார்வை காரணமா?
பல பெண்களின் வேறு மாதிரி பார்வையை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அண்ணியின் பார்வை மட்டும் புரியாத என்ன?
பல சமயங்களில் சிங்கப்பூரிலேயே இருந்து விடுவான். சில சமயங்களில் மட்டுமே இந்தியாவிற்கு வருவான். அப்படி அண்ணன் வீட்டிற்கு வரும்போது அண்ணியின் பார்வை மாறுவதை அவன் புரிந்து கொண்டான். அடிக்கடி மேலே உரச ஆரம்பித்தாள். அருகில் வந்து நிற்க ஆரம்பித்தாள். இன்னும் வெளிப்படையாக சொல்லவில்லை. அதுவே அவள் வந்து சொன்னபோது அவளுக்கு எட்டாம் மாதம். அவள் சொன்ன விஷயம், கணவன் வேண்டுமானால் சூர்யாவாக இருக்கலாம். ஆனால் அவள் அந்த நேரத்தில் நினைத்தது ரவியைத்தான்.
சீ! அவள் சொன்ன வார்த்தை அவள் மீது மட்டுமல்ல அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மீதும் சேர்த்தே அருவருப்பையும், வெறுப்பையும் வளர்த்தது.
இதோ சீமந்தம் முடிந்தது. சூர்யாவின் முகத்திலும் தந்தையின் முகத்திலும் அத்தனை சந்தோஷம், பூரிப்பு. அவள் அன்னையின் வீட்டிற்கு செல்ல வேண்டும். அப்போதுதான் ரவியின் அறையில் வந்து அவள் பேசிக் கொண்டிருந்தாள். இல்லை இல்லை மிரட்டி கொண்டிருந்தாள்.
” நான் போய் புள்ளைய பெத்துக்கிட்டு வருவேன். நீ என்னோட ஆசைக்கு சம்மதிக்கணும். இல்லன்னா இப்ப உன்கிட்ட சொன்ன விஷயத்தை உங்கொண்ணா கிட்ட சொல்லுவேன். மானம் இருக்கறவறன் அதுக்கு மேல உயிரோட இருப்பான்?”
“போடி! நீ என்ன சொல்லறது? உன்ன மாதிரி ஒரு தரம் கெட்ட பொம்பள எங்க அண்ணனுக்கே வேண்டாம்” சத்தமில்லாமல் அதீத கோபத்துடன் பல்லை கடித்து வார்த்தைகளை துப்பினான்.
அவளும் அசரவில்லை. கை கட்டி புருவம் உயர்த்தினாள். இந்த ஒற்றை பார்வைக்காக அண்ணன் எத்தனை ஏங்கினான். வெறுப்பு வந்தது அவளின் முகத்தை பார்க்கையில்.
“நான் வேண்டாம் சரி! இந்த குழந்தையுமா?” நடத்தையே அசிங்கம். அதில் எப்படி இத்தனை நம்பிக்கை? சூர்யாவுக்கு அருவருப்பாக இருந்தது.
அதையும் மீறி தன் அன்னையே குழந்தையாக வருவதாக அல்லவா அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ?
“அத்தை ! பாவம் நீங்க. மறுபடியும் வந்து பொறக்கலான்னு நினைச்சீங்க. பொறந்தாலும் உங்களுக்கு அல்பாயுசு தான் போல” வயிற்றை தடவியபடி போலியாக உச்சு கொட்டினாள் .
“ரவி! வாப்பா எல்லாரும் கிளம்பறாங்க.இங்க நீ என்னம்மா பண்ணிக்கிட்டு இருக்க?”
பரபரப்பாக பேசிய தந்தையையும், கை கட்டி அமைதியாக பார்த்திருந்த அண்ணனையும் பார்த்து ரவிதான் தலை குனிந்து கொண்டான்.
“அண்ணா”
“ப்ளீஸ்! நீ எதுவும் சொல்லாத. அப்புறமா பேசிக்கலாம்”
மனைவி கிளம்பி விட்டாள் .
அடுத்த சில நாட்கள் எந்த பிரச்சனையும் வரவில்லை. போனில் பேசும்போது ரஞ்சனி முதலில் ரவியை பற்றி விசாரித்து விடுவாள். பிறகு சந்தேகம் வராமல் இருக்க மாமனாரை பற்றி கேட்டுக் கொள்வாள். மனைவி அன்னையின் இடத்தில் இருந்து தம்பியை கவனிப்பதாகவே அண்ணன் நினைத்தான். எதற்கும் ஒரு முற்று புள்ளி வேண்டாமா? அதுவும் வந்தது.
ஒரு நாள் ரவியும் தந்தையும் அலுவலக விஷயமாக காரில் வெளியூர் செல்லும்போது நடு வழியில் விபத்துக்குள்ளானது.
எதிரில் வந்த ட்ரக் ட்ரைவர் குடித்து விட்டு வந்திருந்தான் . இரு வண்டிகளும் எதிர் எதிரே முட்டி அருகிலிருந்த ஏரியில் கவிழ்ந்தது. கோரமான விபத்துதான்.
ரஞ்சனிக்கும், சூர்யாவுக்கும் திருமணத்தின் போது ஜோசியர் எட்டு பொருத்தங்கள் இருப்பதாக சொன்னாரே? வசிய பொருத்தம் அமோகமாமே? தாலி பாக்கியம் அமோகமா இருக்குன்னு சொன்னாரே? இன்னும் பூமிக்கே வராத அந்த பிஞ்சு என்ன பாவம் செய்தது? தந்தையின் முகம் கூட காண முடியவில்லையே?குடும்பத்தில் இருந்த அனைவரும் இறந்து விட்டார்கள். ரவி பைத்தியம் பிடித்தது போல இருந்தான். அனைவரின் மீதும் கோபம் வந்தது. அன்னை மீது, தந்தை மீது அண்ணா மீது. காரணமே இல்லாமல் கோபம் வந்தது.
குடும்பம் பாரம்பரியம் அது இதுன்னு சொல்லி கொஞ்சம் கூட தகுதி இல்லாதவள் அண்ணனுக்கு கட்டி வச்சுடீங்களேப்பா? எத்தனையோ விசாரித்து பெண்ணிற்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டு பிறகுதானே தந்தை கல்யாணம் முடிவு செய்தார். மண்டையில் உறைக்கவில்லை.
“பொண்டாட்டி என்ன பண்ணறான்னு பாக்க கூட துப்பில்லாதவன். என்ன ஆம்பிளைடா நீ? எந்த இடத்துல அப்பாவியா இருக்கோன்னு தெரியாம இருந்திருக்க?” இறந்தே போய் இருந்தாலும் சூர்யா மீதும் கோபம் வந்தது. நான் அவனை குறை கூற விரும்பவில்லை. இப்போது தான் என்ன யோசிக்கிறோம் என்று கூற உணர முடியாத நிலையில் ரவி இருக்கிறான். பெண்களை கண்டால் பெரியதாக நல்ல எண்ணம் எல்லாம் இல்லாதவன் இப்போது முழுவதுமாகவே பெண்களை வெறுக்க தொடங்கினான். அதை மாற்ற போவது யார்?
உங்களின் யூகம் சரிதான்.
குழந்தை பிறந்தது. மருத்துவமனைக்கே சென்று பார்த்தான் தான். நார்மல் டெலிவரி தான். கிழிந்த நார் போல இருந்தாள் அண்ணி.எப்போதுமே அவள் முக அலங்காரம் இல்லாமல் இருந்ததே இல்லை. தலை விரிந்து உதடு வெடித்து மயக்கத்தில் இருந்தவளை பார்க்கும்போது என்ன தான் இருந்தாலும் பாவமாகத்தான் இருந்தது. மறு நிமிடமே அவள் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு கோபத்தை உண்டாக்கியது. அண்ணனின் மரணத்தை உபயோகப்படுத்திக் கொள்ள நினைத்தவள் தானே? வெறுப்பு வந்தது.
குழந்தையை லேசாக கன்னம் தடவினான். கழுத்தில் இருந்த செயினை போட்டான். கிளம்பி விட்டான். அடுத்த நான்கு மாதங்களில் அண்ணியின் தந்தை வந்து குழந்தையை கொடுத்துவிட்டுப் போனார். அண்ணிக்கு வேறு திருமணம் செய்ய போகிறார்களாம். அவளுக்கு இந்த குழந்தை வேண்டாமாம். முடிந்தால் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்றார். அதற்கு அர்த்தம் என்ன? எங்கள் வீட்டு வாரிசு அனாதையா?
அன்ணனுடன் இருக்கும்போது தன்னை அடைய நினைத்தாள். இப்போது அண்ணனும் இல்லை, தானும் இல்லை. வேறு யாரோ ஒரு மூன்றாம் நபர். ரஞ்சனியின் குணத்தை எண்ணி ஒரு புறம் அசிங்கமாகவும், அருவருப்பாகவும் இருந்தாலும் மறு புறம் தான் தப்பித்தோம் என்று நிம்மதியாக இருந்தது.
தந்தை,சூர்யா இருவரின் இறப்புக்கு வந்த போதும் அவள் அடங்கவே இல்லை.
“இங்க பாரு ! எனக்கு இனி இழக்க ஒண்ணுமே இல்லை . ஏதாவது தப்பா நடந்த? கத்திய எடுத்து சொருகிட்டு போய் கிட்டே இருப்பேன்”
அவனின் உடல் மொழியில் பயந்து தான் போனாள் .அண்ணனுக்கும் தந்தைக்கும் கட்டுப்பட்டு இருந்த ரவி இப்போது இல்லை. அதனால் தானோ என்னவோ வேறு திருமணம் செய்து கொள்ள போகிறாளாம். யாரோ அவள் சிறு வயது தோழனாம். அமெரிக்காவில் தொழில் செய்கிறானாம். இவர்களை விடவும் பெரிய பணக்காரர்கள். ஒரே வாரிசு. வேறு என்ன வேண்டும்?
ஏற்கனவே வெறுப்பில் இருந்தவனுக்கு ரஞ்சனியின் பெற்றோர் கூறியது இன்னும் ஆத்திரமும் வெறுப்பும் கூடியது.
இந்த பிள்ளையை எப்படி வளர்க்க போகிறான்? லீகலாக குழந்தையை அவர்களிடமே கொடுக்க முடியும். மிகவும் சிறு பிள்ளை. சொல்லலாம்தான். இருப்பினும் ரவிக்கு அதில் இஷ்டமில்லை சமையல் செய்யும் அம்மா இரு தினங்களுக்கு பார்த்துக் கொண்டார். மிகவும் சிறு குழந்தை. இவனுக்கு தூக்க கூட பயமாக இருந்தது. பிறகு பேபி சிட்டர் வந்தார். ஓரளவு நன்றாகவே பார்த்து கொண்டார். எந்த கவலையும் இல்லாமல் ஒரு வயதில் காலடி எடுத்து வைத்தாள் குட்டி தேவதை.
“அசோ ஒரு வயசு ஆகிடுச்சா? இன்னும் நான் பெயர் யோசிக்கலையே? “
சமையல் செய்யும் அம்மாதான் வந்து கேட்டார்.
“அய்யா நம்ம பாப்பாவுக்கு ஒரு வயசு ஆக போகுது. கோவில்ல அர்ச்சனை பண்ணனும். இன்னும் பெயரே வைக்கலியே?”
“ஒ! இது வரைக்கும் எல்லாரும் அவளை ஏஞ்சல் என்றே அழைத்துக் கொண்டிருந்தனர். இப்போது?”
குழந்தையை பார்த்தான். மீன் தொட்டியில் கை வைத்து அடித்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்தவளுக்கு மீனா என்று பெயர் வைத்தான். ஒரு வயது ஆகி இருந்தது. ஆடிட்டரிடம் பேசினான். வக்கீலிடம் பேசினான். லீகலாக செய்ய வேண்டியதை செய்து முறைப்படி தத்து எடுத்துக் கொண்டான். இனி அவன் தான் தந்தை. அவள்தான் மகள். அண்ணனின் உயிரில் இருந்து வந்ததாக இருந்தாலும் அந்த நேரத்தில் அண்ணி தன்னை நினைத்ததாக கூறியதில் இருந்து அவனால் மனதார அந்த குழந்தையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எடுக்கவும் முடியாமல் விடவும் முடியாமல் மன உளைச்சலில் தவித்துப் போனான். இந்த சூழலை மாற்றப் போவது யார்…………..
———————————————————————————————–
ஒரு பெண்ணின் மனதில் ஒரு ஆண் நுழைய என்ன காரணம் தேவை?அழகு, அந்தஸ்து, நல்ல குணம்…..இதை எல்லாம் தாண்டி ஒன்று உண்டு. அவன் பெண்ணை, பெண்ணின் உணர்வை மதிக்க வேண்டும். நீ ரொம்ப அழகா இருக்க. இந்த டிரஸ் உனக்காகவே தைச்ச மாதிரி இருக்கு. நீ வச்ச கார குழம்பு இருக்கே அப்பா என்ன ருசி?… இந்த மாதிரி பாராட்டுக்கள் பெண்களுக்கு பிடிக்கும்தான். அதை யாரும் வேண்டாம் என்று சொல்லப் போவதைல்லை. ஆனால் அதையும் தாண்டி?
“என்னடி ஜில்லு, காலைலேர்ந்து வேலை செஞ்சுக்கிட்டே இருக்க. இரு. நமக்கு ஈவினிங் காபி நான் ரெடி பண்ணறேன்” சொல்லிக் கொண்டே நெற்றியில் கணவன் லேசாக ஊதினாலே போதும் மயங்கித்தான் போகிறார்கள்.
அப்படிப்பட்டவன் தான் வெற்றி. அக்கா தங்கையுடன் பிறந்தவன். அன்னை இல்லாமல் அக்காவே வளர்த்ததில் அவனுக்கு வீட்டு வேலைகள் அத்தனையும் அத்துப்படி. படிப்பில் பெரியதாக நாட்டம் இல்லை. அப்படி என்று சொல்லி விட முடியாது. அக்கா மட்டுமே எத்தனைதான் வேலை செய்யும்? இவனும் அக்காவும் சேர்ந்துதான் வீட்டை பார்த்துக் கொண்டார்கள். தந்தை காலையில் வேலைக்கு சென்றால் இரவுதான் வீட்டிற்கு வருவார். அதிலும் சில சமயம் தனியாக வருவார். பல சமயம் யாராவது அழைத்துக் கொண்டு வருவார்கல். பக்கத்துக்கு வீட்டில் இருந்த பாட்டி தான் இவர்களுக்கு தெரியாததை சொல்லிக் சொல்லிக் கொடுத்து, அந்த சிறு பிள்ளைக்கு பாலூட் டி வளர்த்தது. வீட்டு வேலைகள் காரணமாகவோ என்னவோ படிப்பில் ஆர்வம் இருந்தும் சிறு பிள்ளைகளால் பெரியதாக எல்லாம் படிக்க முடியவில்லை .
” ஏண்டா! என்னடா மார்க் இது? நாப்பது அம்பதுன்னு. இதுக்கு எதுக்குடா நீ இஸ்கூலுக்கு போற? அடி விழும். தந்தை அடித்தவுடன் ரோஷம் வரும். நன்றாக படிப்பான் அடுத்த சில நாட்களில் அக்காவுக்கு காலில் கஞ்சி கொட்டும். அல்லது கையில் சுட்டுக் கொள்வாள் . இப்படித் தான். மீண்டும் கவனம் வீட்டு விஷயங்களில் சென்று விடும்.
“அக்கா என்னக்கா உன்னோட துணி எல்லாம் இப்படி கறையா இருக்கு.
சிறு பெண்ணுக்கு விவரம் புரியவில்லை. தனக்கு எங்காவது அடிபட்டிருக்கிறதா. இல்லையே?”
பள்ளியில் விவரம் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். எதற்கும் பக்கத்துக்கு வீட்டு பாட்டியிடம் கேட்போம். அருகில் இருந்தவர்கள் வந்தார்கள் அவர்களே காசு போட்டு நல்லது நடத்தினார்கள். பணம் இருப்பதே தகுதியாக வைத்திருக்கும் பணம் படைத்தவர்களை விட இப்படிப்பட்ட சாதாரண மனிதர்கள் தான் உண்மையில் உயர்ந்தவர்கள்.
“வுடு! எதுக்கும் கவலை படாத! மலருக்கு எல்லாம் நல்லது தான் நடந்திருக்கு” அசால்ட்டாக தைரியம் சொன்னார்கள்.
“வெற்றி! வெற்றி!’
“என்னக்கா?”
“டேய் தனியா படுக்க பயமா இருக்குடா. பேய் கனவு வருதுடா”
“சரிக்கா! நான் கூட இருக்கேன். நீ தூங்கு” இரவில் அக்காவின் தலை கோதி தூங்க வைப்பான். விடியலில் தந்தைக்கு தெரியாமல் தன் இடம் வந்து விடுவான். இப்போதும் மலருக்கு அந்த நாட்களில் இரவில் பயம் தான். கணவன் அருகில் இருப்பான். அவனிடம் விருந்து வரும் சாராய வாடைக்கு பேய் கனவே பரவாயில்லை என்று தோன்றும். அதிலும் அவனிடம் சென்றால் அந்த நாள் இந்த நாள் என்று எல்லாம் பார்க்க மாட்டான். சக்கையாக்கிவிடுவான். தேவையா இது? பயத்துடன் பெட்ஷீட்டை வைத்து முகத்தை மூடிக் கொள்வாள்.
மலருக்கு இருந்த கஷ்டம் புவிக்கு இல்லை. தங்கை பெரியவள் ஆனபோது அண்ணனும் அக்காவும் நன்றாகவே பார்த்துக் கொண்டார்கள். அக்கா வாய்க்கு ருசியாக செய்து போட்டாள் . சத்துக்கு களி செய்து கொடுத்தாள் . தனக்கு கிடைக்காதது எல்லாம் அந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டும் என்று அனைவருமே கஷ்டப்பட்டார்கள். நல்ல படிப்பு நல்ல வேலை எல்லாம் கிடைக்க வேண்டும் என்று இவர்கள் நினைத்தாலும் அவள்தான் எதுவும் வேண்டாம் என்று பதினொன்றாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி குழந்தை பெற்றுக் கொள்ளும் சாதனையை செய்து விட்டாளே !
படிப்பில் ஆர்வம் இருந்த மலர் பன்னிரண்டாம் வகுப்பு முடிந்து எக்ஸ்போர்டில் வேலைக்கு போனாள் . வெற்றியும் அதே போல பன்னிரண்டாம் வகுப்பு முடித்து ஆட்டோ ஓட்டினான்.
சில வருடங்கள் வேலைக்கு சென்ற மலர் தந்தையின் உற்ற தோழனாகிய இன்னொரு குடிகாரனுக்கு மனைவி ஆனாள் . வெற்றியின் பிடிவாதம் அங்கே செல்லுபடியாகவில்லை. தந்தையின் அதிகாரமே அங்கே வலுவாக நின்றது. மகன் ஆசைப்பட்டு விட்டான். அதனால் திருமணம். இல்லை என்றால் இவர்கள் போட்ட ஐந்து சவரனுக்கு யார் மாப்பிள்ளை தருவார்கள்? இப்படியேத்தான் மலரின் மாமியார் அவளை கொடுமை படுத்தினாள் . குழந்தையும் இல்லாமல் போகவே இன்னும் கேட்கவே வேண்டாம்.