காதலால் நெய்திடு..
அத்தியாயம்.. 3
பிரபாகரனின் அண்ணனும் கலையரசனும் ஒன்றாக படித்தவர்கள். கலையரசன் இங்கே குடிவந்து ஐந்து வருடமாகப்போகிறது.. கல்லூரியில் சேர்ந்து முதல் ஆறு மாதம் ஹாஸ்டலில்தான் தங்கியிருந்தான்.. அங்கு அவனுக்கு உணவு பிடிக்கவில்லையென்பதாலும்.. இவனோடு தங்கும் மாணவர்கள் நள்ளிரவு வரை படிப்பது.. அரட்டை அடிப்பது என இருக்க.. அது இவனின் தூக்கத்தை கெடுப்பதாலும் அதனால் காலையில் சரியான நேரத்திற்கு எழுந்து மைதானம் செல்ல முடியாததாலும் வெளியே தங்கி கொள்ள தந்தையிடம் சொல்ல.. வெளியே விசாரித்ததில் வாடகை அதிகமாய் தோன்ற..
அந்த நேரம் பிரபாகரனின் அக்காவின் கல்யாண செலவிற்கு இவ்விடம் விலைக்கு வருவது பிரபாகரனின் அண்ணன் மூலம் தெரிய.. ரிட்டையர்ட் ஆகி வந்த பணத்தில் இவ்விடத்தை வாங்கினார் மயில்சாமி.
ஒரு சிறிய சமையலறை.. அதோடு ஒரு ரூம்.. பின்கட்டில் பாத்ரூம் என இருந்தது.. எப்படியாகினும் படிப்பு முடிக்கும் வரை இங்குதான் இருப்பான் என ஐந்தாறு வருடத்திற்கு இவ்வீட்டின் வாடகை கணக்கு போட.. அது இவ்விடத்தின் விலையை விட அதிகமாக வரவே.. வாங்கி போட்டால் சொத்துக்கு சொத்தும் ஆகிடும்.. மகனும் நிம்மதியாக இருப்பான் என வாங்கியிருந்தார்.
கலையரசனின் அப்பா உயர்பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஐந்து வருடத்திற்கு முன் ஓய்வு பெற்றவர்.. அம்மா கலா தொடக்கப்பள்ளி ஆசிரியையாக பணியாற்றி அதே ஐந்து வருடத்திற்கு முன் விருப்ப ஓய்வு பெற்றிருந்தார்.
இருமகள்களுக்கும் திருமணமாகியிருக்க.. கலையரசனும் விளையாட்டு படிப்பிற்காக திருச்சி வந்திருக்க.. நாளெல்லாம் கணவன் தனியாக இருக்கக்கூடும் என்பதற்காகவே யார் சொல்லியும் கேட்காமல் விருப்ப ஓய்வு பெற்றிருந்தார் கலா.
————
சந்தோசமான விசயம் சொல்ல தந்தைக்கு அழைத்தான் கலையரசன். கலாதான் அழைப்பை ஏற்றார். ‘நாளைக்கு எல்லாருமா இங்க வாங்க.. அக்கா மாமாவையும் கூட்டிட்டு வாங்க.. “ என பேசிக்கொண்டிருக்கும் போதே..
‘என்னப்பா விசயம்.? உடம்பேது சரியில்லையா.? இல்ல காலேஜ்ல எதாவது பிரச்சனையா.? யார்கிட்டயாவது வம்பு வளர்த்து வச்சிட்டியா.?” என பதறினார் கலா.
‘ப்ச்.. ம்மா..” என சலித்தவன்.. ‘ஒரு பிரச்சனையும் இல்லைம்மா..” என சொல்ல.. ‘இரு உங்கப்பாட்ட கொடுக்கிறேன்..” என பதட்டத்தோடே.. ‘ஏங்க.. என்னைக்குமில்லாம செல்வி கீதான்னு எல்லாரையும் அழைச்சிட்டு வரசொல்றான்.. கொஞ்சம் என்னன்னு கேளுங்க.. என்ன செய்து வச்சிருக்கான்னு தெரியலையே.. போலீஸ் கேசு அது இதுன்னு ஆகியிருக்குமோ..” என கலா புலம்புவது கலையரசனின் காதில் புகையை வரவழைக்க..
‘என்னத்த செய்து வச்சிருக்க.? பணம் எதாவது ஏற்பாடு செய்துட்டு வரவா.?” என்ற மயில்சாமியை இடையிட்டவன்.. ‘ப்பா.. கொஞ்சம் நிறுத்துறிங்களா.?” என்றான் கோபமாக.
‘பண்றதெல்லாம் போக்கிரி வேலை.. இதுல கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..” என மயில்சாமியும் புலம்ப.. போயும் போயும் இவங்கள்ட்டையா சஸ்பன்ஸ் வைக்க நினைத்தோம் என தன் தலையில் அடித்துக்கொண்டவன்..
‘அப்பா.. எனக்கு வேலை கிடைச்சிருக்கு.. நாளைக்கு ஆர்டர் கொடுக்கிறாங்க.. முடிஞ்சா எல்லாரும் வாங்க.. இல்ல நான் பார்த்துக்கிறேன்.’ என்றான்.
மயில்சாமி.. ‘என்ன வேலைடா..?” என்றார் ஆர்வமாக.
‘நேர்ல வாங்கப்பா சொல்றேன்..”
‘கலை.. மாடு இப்பவோ அப்பவோன்னு இருக்குடா.. “ எனும்போதே.. ‘இதுக்குத்தான் அதெல்லாம் வளர்த்த வேணாம்னு சொல்றேன்.. எங்க கேக்குறிங்க..?” என கடிய..
‘இங்க தனியா என்னடா செய்யிறது.? உங்கக்காங்களும் பசங்க படிப்பு அது இதுன்னு வீட்டு பக்கமே வரமாட்றாங்க.. நீயும் மேட்ச் இருக்கு ப்ராக்டிஸ் செய்யனும்னு சாக்கு போக்கு சொல்ற.. வேலைக்கு போய்ட்டிருக்கவரை தெரியல.. ரிட்டையர்ட் ஆனதிலயிருந்து எத்தனை நேரம்தான் உன் அம்மா முகத்தையும் டிவி யையுமே பார்த்திட்டிருக்கிறது..? ரொம்ப வெறுப்பா இருந்தது.. அதான் இரண்டு மாடு வாங்கினேன்.. மனுசங்க மாதிரி எல்லாத்தையும் புரிஞ்சிக்கிது தெரியுமா.? மாடு இரண்டு வருசத்துல நாலு மாடாகிடுச்சி.. அதுல இரண்டு செனையா இருக்கு..”
‘ப்பா.. போதும் போதும் உங்க மாட்டு புராணம்.. நாளைக்கு ஆர்டர் கொடுக்கபோறாங்க.. உங்கள்ட்ட ஆசிர்வாதம் வாங்கனும்னு நினைக்கிறேன்.. முடிஞ்சா வாங்க.. இல்ல மாட்டுக்கு பிரசவம் பாருங்க..” என கோபமாக இணைப்பை துண்டித்தான் கலையரசன்.
என்ன வேலை ஏதுன்னு கூட கேட்காம போலீஸ்ல மாட்டிக்கிட்டியா.? பணம் கொண்டு வரவான்னுகிட்டு.. என மனதில் வறுத்தெடுத்தான் பெற்றோரை.
அன்று மாலை பயிற்சி முடித்து வழக்கம்போல் ஏழு மணிக்கு உணவு பார்சலோடு வீட்டிற்குள் புகுந்தவன்.. அலுப்பு தீர குளித்து உணவுண்டு நாளைய நினைவுகளோடு படுக்க போக.. மனம் ஏமாற்றமே கொண்டது.
பள்ளிகள் அளவிலான சோனல் போட்டிகள்.. பிறகு மாவட்ட அளவிலான போட்டிகள்.. அடுத்து மாநிலம்.. அடுத்து தேசிய அளவிலான போட்டிகள் என எத்தனை கடின உழைப்பிற்கு பிறகு கிடைத்த வெற்றி இந்த வேலை.. ஆனால் தன்னோடு இணைந்து கொண்டாட ஆளில்லை..
ம்.. எப்போதுதான் தன்னை பாராட்டியிருக்கிறார்கள்.? என சலிப்பாய் நினைத்தவன்.. சாப்பிட்டு படுக்கப் போக வெளியே கதவு தட்டும் சத்தம். எழுந்து வந்து பார்க்க நான்கு வயது சிறுவன் பரிதாபமாய் நின்றிருந்தான். ஆம் சுவாதியின் மகன்தான்.
‘என்னடா குட்டி.? சாப்டியா.?”என்றான் சிறுவனை கையில் ஏந்தியபடி.
‘ம்..” என தலையாட்டியவன் கண்ணில் அத்தனை கலக்கம்.
‘என்னடா.?” என கேட்டவனுக்கு சிறுவன் முகத்திலிருந்த பயத்தை கண்டு திரும்பவும் தான் கல்லூரிக்கு சென்ற நேரமேது யாராவது சண்டைக்கு வந்திருப்பார்களோ என யோசிக்க.. ‘உங்களுக்கு பாய் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்..” என்றான்.
இவனின் அன்னையிடம் கிரிக்கெட் பேட் வாங்கிதர பரிந்துரைத்தால் தன்னோடு ஒட்ட நினைக்கிறான் என வாஞ்சையாய் பார்த்தவன்.. ‘தூங்கபோகும்போது பாய் சொல்லக்கூடாதுடா.. குட்நைட் சொல்லனும் சரியா.?” என அறிவுருத்த சரியென்பதாய் தலையசைத்தான்.
‘சரி போய் தூங்கு..” என அனுப்ப சிறுவன் திரும்பி திரும்பி பார்த்தவாறே சென்றான் எதிரிருந்த தன் வீட்டிற்கு. பார்த்திபன் வீட்டினுள் செல்லும் வரை பார்த்திருந்தவன் பிறகு படுக்கபோனான். எப்பொழுதும் எட்டரை மணிக்கு சாப்பிடுபவன் ஒன்பதரைக்கெல்லாம் உறங்கிடுவான்..
வழக்கம்போல் அதிகாலை நாலரை மணிக்கு வெளியே வந்தவன் பக்கவாட்டிலுள்ள சேரில் அமர்ந்து தனது ஷூவை போட்டு வீட்டை பூட்டவே.. சுவாதியின் கையை உதறியபடி சிட்டாய் பறந்து வந்தான் சிறுவன்.
‘என்னடா.? இந்நேரத்துக்கே எழுந்துட்டியா.?” என கேட்க.. குழந்தை ஓவென அழ ஆரம்பிக்கவே.. முதலில் அழாதே என கெஞ்சியவன்.. பின்னே ‘சுப்..” என மிரட்டி அழுகையை நிறுத்த வைத்து என்ன என விசாரிக்க..
‘நாங்க எங்க வீட்டுக்கு போகப்போறோமாம்.. எனக்கு இங்கதான் பிடிச்சிருக்கு.. இங்கையே இருக்கலாம் சொன்னா அம்மா அடிக்கிறாங்க..” என்றான் அழுதுகொண்டே.
சுவாதி.. ‘பார்த்திபா..”என குரல் கொடுக்க.. ‘வர மாட்டேன்..” என்றான்.
‘உன்பேரு பார்த்திபனா.?” என பாராட்டாய் கேட்டவன் குழந்தையின் கைப்பிடித்தவாறு சுவாதியிடம் வந்தான்.
‘பார்த்திபன் சொல்றது உண்மைங்களா.?” என்றான்.
சுவாதி ஆமாம் என தலையசைக்க.. ‘உங்க வீட்டுக்கு போறிங்களா.?” என்றான் நம்பாத்தன்மையோடு.
ஆமாம் என தலையசைத்தாள் தலைகுனிவோடு. ‘ஏன்.? என்னாச்சி.? என்னை மோப்பம் பிடிச்சி இங்க வரைக்கும் வந்துட்டானுங்க.. அங்கபோனா சும்மா விடுவானுங்களா.? சின்ன பசங்கவேற இருக்காங்க..”
கலையரசன் பேசிக்கொண்டிருக்க.. சுவாதிக்கு பதில் சொல்ல முடியவில்லை.. கண்ணீர் மட்டும் வந்துகொண்டிருக்க.. கலையரசனின் பேச்சரவம் கேட்ட பிரபாகரனின் அம்மா வெளியே வந்தார்.
ஓ.. இவர்கள்தான் எதோ சொல்லியிருக்கிறார்கள் எனப்புரிந்தவனாய்.. ‘என்னாச்சும்மா..? இவங்க ஏன் போறேன்றாங்க.?” என்றான் தன்மையாக.
கலையரசன் ஒழுக்கமானவன் என பிரபாகரனின் அன்னைக்கு மட்டுமல்ல.. அந்த தெருவிற்கும் அவனை அறிந்த அனைவருக்கும் தெரியும்தான்.. ஆனாலும் தவறென தெரிந்தால் சட்டென கை வைத்திடும் இவனின் முன் கோப குணமே அனைவரிடமும் இவனிடமிருந்து தள்ளி நிறுத்தியிருந்தது.
சிறு தயக்கத்தோடு.. ‘நேத்து ரௌடிப்பசங்க வந்துட்டு போறாங்க.. இந்த பொண்ணோட புருசனும் வந்த பாடில்ல.. தேவையில்லாத தொல்லைகளை சமாளிக்கிற அளவுக்கு எங்ககிட்ட பணமில்ல.. அதான் காலி செய்ய சொன்னேன்..” என்றார் குரலிறங்கியவராய்.
‘உங்க வீட்டை எனக்கு வாடகைக்கு விடுவிங்களா.?” என்றான் பட்டென.
‘ஏன் தம்பி..?” என பிரபாகரனின் தாய் தடுமாற.. ‘எனக்கு விடுவிங்களா சொல்லுங்கமா..” என்றான் தன்மையாகவே.
‘வி..விடுறேன் கண்ணு..” என்றார் தயக்கத்தோடு.
‘ரொம்ப நல்லதும்மா..” என்றவன்.. சுவாதியைப் பார்த்து.. ’இன்னைக்கு எனக்கொரு முக்கியமான வேலையிருக்கு.. இன்னும் ரெண்டு நாள் கழிச்சி என் வீட்டை காலி செய்து தரேன்.. அங்க இருந்துக்கோங்க.. நான் இங்க வந்துடறேன்.. என்கிட்டயும் பெருசா சாமான் எதுவும் இல்ல.. ஒரு கட்டில்.. சின்ன பீரோ.. இரண்டு குடம் கொஞ்சம் சமான் அவ்ளோதான்.. உங்ககிட்டயும் அதிகம் சாமானில்லாததால ஒரு மணி நேரத்தில வேலை முடிஞ்சிடும்.. இப்போ போய் தூங்குங்க..” என கிளம்பப் பார்க்க..
சுவாதி.. ‘இல்ல.. என்னால எல்லாத்துக்கும் சிரமம் வரும் போல.. என் புருசன் யாருக்கு என்ன செய்து வச்சிருக்காரோ.. அவனுங்களும் என்னை விடறதா தெரியல.. பசங்களை எங்கையாவது ஹாஸ்டல்ல சேர்த்துட்டு கடவுள் மேல பாரத்தை போட்டு என் வீட்டலயே நான் இருந்துடறேன்..” என்றாள் வேதனையாக.
‘இதோ பாருங்க.. இதுக்கு முன்ன எப்படியோ.? என்னை நம்பி சாவி கொடுத்து உங்க பொருள் எடுத்து வர சொன்னிங்கள்ல.? அதுக்கப்புறம்தான் இத்தனை பிரச்சனையும்.. எடுத்த காரியத்தை பாதில விடற பழக்கம் எனக்கில்ல.. எவன் வாரான்னு பார்த்துக்கலாம்.. உங்க புருசன் வர வரைக்கும் இல்ல நானா உங்க புருசனை கண்டுபிடிக்கிற வரைக்கும் நீங்க இங்க விட்டு வேற எங்கையும் போகக் கூடாது..” என கண்டிப்போடு சொன்னவன்..
பிரபாகரனின் அன்னையிடம்.. ‘அம்மா.. இவங்க இங்க விட்டு போனதுக்கப்புறம் இவங்க உயிருக்கு எதாவது ஆபத்துன்னா போலீஸ் இங்கையும்தான் விசாரிக்க வருவாங்க.. அதுவும் நமக்கு பிரச்சனைதான்.. இன்னும் இரண்டு நாளைக்கு மட்டும் இங்க இருக்கட்டும்.. வர சனி ஞாயிறுல நாங்க வீட்டை சிப்ட் செய்துக்கறோம்.. இப்போ எனக்கு டைம் ஆகிடுச்சி.. மீதியை ப்ராக்டிஸ் முடிச்சி வந்து பேசறேன்.. என்னை நம்பி பயமில்லாம உள்ள போய் படுங்க..“ என்றான் கலையரசன்.
தன் மகள் கல்யாணம்.. வளைகாப்பு பிரசவம் என எந்த உதவி கேட்டாலும் முதல் ஆளாய் வந்து நிற்கும் கலையரசன் பேச்சிற்கு மறுப்பு சொல்ல முடியாமல் பிரபாகரனின் தாய் சம்மதித்து தலையசைக்க.. நிம்மதியானவன்..
‘டேய் குட்டி.. அம்மாவ உள்ள கூட்டிட்டு போடா..” என பார்த்திபனிடம் சொல்லி.. தனது பைக்கை கிளப்பினான் மைதானத்திற்கு. சுவாதி தயக்கத்தோடு வீட்டு ஓனரை பார்க்க.. ‘ம்.. அதான் கலை தம்பி சொல்லிடுச்சில்ல.? உள்ள போ..” என மிடுக்கான குரல்கொடுத்து தானும் உள்ளே போனார்.
தன் காதலுக்காக காவல் நிலையத்தில் தன் அப்பாவின் மனதை வருத்தியதெல்லாம் சுவாதிக்கு தற்போதுதான் புரிய ஆரம்பிக்க.. இன்னும் எத்தனை கஷ்டத்தை பார்க்கனுமோ.. என்ற வேதனையோடு மகனை அழைத்து கொண்டு உள்ளே போனாள்.
—————————
வழக்கம்போல் ஒன்பது மணிக்கு பயிற்சி முடித்து வீடு வர.. வீடு திறந்திருப்பது கண்டு அம்மாதான் வந்திருப்பார்கள் என சந்தோசத்தோடு உள்ளே செல்ல அங்கே மயில்சாமி கலா செல்வராணி அவனின் மகன் அனைவரும் இருக்க.. ‘அக்கா..” என பாசத்தோடு அழைத்தவன்.. ‘நல்லாயிருக்கிங்களாம்மா..?” என அன்னையிடம் கேட்க..
‘நான் நல்லா இருக்கிறது இருக்கட்டும்.. நீ மாறவே மாட்டியாடா.?” என்றார் வருந்திய குரலில்.
‘பிரபாகரன் அம்மா எல்லாத்தையும் சொல்லிட்டாங்களா.?” என சிரிப்போடு கேட்டு.. தந்தையிடம்.. ‘விடிய காலமே கிளம்பிட்டிங்களாப்பா.? மாடு கண்ணு போட்டுருச்சா..? யார்கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு வந்திருக்கிங்க.?” என்றான்.
மயில்சாமி முகம் கடினத்தோடு இருக்க.. ‘அப்பா.. நம்ம அக்காங்களுக்கு ஒன்னுன்னா இப்படி சும்மா இருப்பேனா.? பாவம் யாருமில்லாம தவிக்கிறாங்க..” என ஆரம்பிக்க.. ‘கண்டவங்களும் உங்கக்காவும் ஒன்னாடா..?” என காந்தினார் மயில்சாமி.