‘அதெப்படி ஒன்னாகும்.? என் செல்வி அக்கா என் ரத்தமாச்சே.. அவங்க அக்கா மாதிரிதான்..” என்றான் இலகுவாக.
அப்பொழுதும் மயில்சாமி முறைக்க.. சுவாதியின் கதையை சுருக்கமாய் சொல்லி.. ‘பிரபா அம்மாக்கு இவங்களைப் பத்தி முழுசா தெரியாது.. பாவம் திக்கில்லாம தவிக்கிறாங்க.. கண்ணுக்கு தெரியாம ஆயிரம் நடக்குதுதான்.. ஆனா கண்ணுமுன்ன ஒரு பொம்பளையை நாலு தடிமாடுங்க அசிங்கப்படுத்தும் போது அமைதியா எப்படிப்பா இருக்கிறது.? அப்புறம் நாமெல்லாம் ஆம்பிளைன்னு எப்படி சொல்லிக்கிறது.?” என கெஞ்சலாய் எடுத்துரைத்தான்.
‘இப்படி அடிதடியில இறங்குறதுக்கு பேர்தான் ஆம்பிளைத்தனமா.? இதை பார்க்கத்தான் வேலை கிடைச்சிருக்குன்னு எங்களை வர சொன்னியா.?” என்றார் கடுப்போடு.
‘ப்பா.. உண்மையாவே வேலை கிடைச்சிடுச்சிப்பா.. இன்னைக்கு பேப்பர் பாருங்க..” என தான் வாங்கிவந்த பேப்பரை காண்பிக்க.. தாய் தந்தையர் பார்க்கும் முன் ஆவலோடு பிடுங்கி செல்வராணி படித்து பார்த்ததும்.. ‘கலை..” என கண்களை அகலவிரித்து.. ‘சூப்பர்டா.. சூர்ப்பர்டா..” என அணைத்து ஆர்பரித்து.. ‘அப்பா இனி என் தம்பியை யாரும் ஒன்னும் சொல்லமுடியாது..” என பெருமையோடு சொல்ல.. பேப்பரை வாங்கி படித்த மயில்சாமிக்கும் அத்தனை பெருமையாய் இருக்கவே கண்கள் தானாய் கலங்கியது.
‘கலை..” என்றார் தழுதழுப்பான குரலில்.
கலையரசன்.. ‘ம்.. எப்படி..?” என இல்லாத மீசையை நீவுவதுபோல் பாவனை செய்ய.. ‘இனி மீசைல்லாம் ஷேவ் செய்யாத.. நல்லா பெருசா வச்சிக்க.. அப்போதான் கம்பீரமா இருக்கும்..” என்றார் அதீத பெருமையோடு. பிறகு கலாவும் படித்துப் பார்க்க.. அன்னையிடமும் பாராட்டை பெற்று.. ‘கீதாக்கா ஏன்மா வரல..?” என்றான் சின்ன ஏமாற்றத்தோடு.
கலாவின் முகம் தடுமாற.. ‘ம்.. உங்க பெரிய மகளுக்கு இந்த வெட்டி பையனை பார்க்கவெல்லாமா நேரம் இருக்கும்..? வழக்கம்போல வேலையிருந்திருக்கும்..” என்றான் நக்கலாக.
‘விடுடா.. அவகுணம்தான் தெரிஞ்சதாச்சே.. ஆனாலும் உனக்கு கமிஷனர் வேலை கிடைச்சிருக்குன்னு சொன்னா ரொம்ப சந்தோசப்படுவா..” என்றார் மகளை விட்டு கொடுக்காமல்.
( ம்.. கீதாராணிக்கு எப்பொழுதும் தற்பெருமை அதிகம்தான். அவளின் கணவன் அதற்குமேல்.. கலையரசனின் பனிரண்டாவது மார்க் வைத்தே இன்னும் கிண்டல் செய்வார்.. உன்தம்பி படிச்செல்லாம் பெரியாளா ஆகுறது நடக்காத காரியம்.. அதான் வெறியா விளையாண்டுட்டிருக்கான் என நக்கல் பேசிக்கொண்டே.. பார்வையும் எதோ அற்பத்தைபோல பார்த்து வைக்க கலையரசனால் தாள முடியாமல்.. பொறுத்திருந்தவன் ஒருநாள் பொங்கிவிட்டான்.
விளையாட்டுன்னா அவ்ளோ சாதாரணமா போய்டுச்சா..? எங்க என்கூட வந்து ஒரு நாள் எனக்கு சமாமா வேணாம்.. நான் பண்றதுல கால்வாசி செய்து காட்டுங்க பார்க்கலாம் என தீப்பார்வையோடு காட்டமாக பேசிவிட்டான் கலையரசன்.
அப்பொழுதும் படிக்க வக்கில்லன்னாலும் வாய்க்கொன்னும் குறைச்சல் இல்லை.. பெரியவங்களோட எப்படி பேசனும்ன்ற மரியாதை கூட தெரியல எனப்பேச..
பெரியவங்க பெரியவங்களாட்டம் நடந்துக்கனும்.. எங்கப்பாம்மா எனக்கு செலவு செய்றாங்க.. இதுல உங்களுக்கென்ன வந்தது.? உங்க அட்வைஸ்லாம் பொண்டாட்டியோட மட்டும் வச்சிக்கோங்க.. நான் எப்படியிருக்கனும்ன்றதை நீங்க முடிவு செய்யகூடாது என பட்டுத்தெறிக்க.. கணவனுக்கு பரிந்துகொண்டு கீதாராணி கலையரசனை அடக்க பார்க்க..
அப்போ உன் புருசன் என்னை என்னவேண்ணா சொல்வாரு.. நான் பார்த்துட்டு சும்மா இருக்னுமா.? நீயும் அவரும் படிப்புல கெட்டின்னு என்கிட்ட காட்ட நினைச்சா.. நான் எதுல கெட்டின்னு நானும் காட்ட வேண்டி வந்திடும்.. பார்த்து பத்திரமா இருந்துக்க சொல்லு.. இனி என் படிப்பு பத்தியோ வருங்காலத்துல நான் எப்படி இருப்பேன்றது பத்தியோ எதாவது வாயை திறந்தாரு அவ்ளோதான் பார்த்துக்க.. என கீதாராணியையும் வெளுத்து வாங்க.. அன்றிலிருந்து கலையரசனிற்கும் அவனின் பெரிய மாமாவிற்கும் ஒத்துப் போவதில்லை.
கீதாராணியின் மகள் பெரியவளான போதும் கூட கலையரசனோடு அவனின் மாமா பேசாமல் போகவே.. உன் வீடு தேடிவந்தும் உன் புருசன் என்னை அவமதிச்சிட்டாரில்ல..? இனி நீ மட்டும் போதும் எனக்கு.. உன் புருசனேது என்கிட்ட பேசிடப்போறாரு என கோபமாகத்தான் வந்தான்.
அதன்பின்னே கலையரசன் முதன்முதலாய் தேசிய அளவில் தங்கம் வாங்கியபோது அனைத்து சேனல்களிலும் கலையரசனின் ஆரம்ப கால பயிற்சி முறை.. கடின உழைப்பு என இவனின் பெருமையை பாராட்ட.. அன்றைய பத்திரிக்கைகளிலும் இவனின் படம்தான் முன் பக்கத்தில் வந்தது.
அதற்கு பிறகுதான் கீதாராணியின் கணவன் கலையரசனை சற்று மரியாதையாக பார்க்க ஆரம்பித்தான்.. ஆனால் அந்த நிகழ்விற்கு பிறகிருந்து கலையரசன் அதிகம் வைத்துக்கொள்வதில்லை. எதுவாகினும் மரியாதை நிமித்தமாக தனது பெரிய அக்காவிற்கு தகவல் சொல்வான் அவ்வளவே. பாசத்தோடு பழகுவதெல்லாம் செல்வராணியிடம் மட்டும்தான்.)
‘எதோ சின்ன வேலை கிடைச்சிருக்கும்னு நினைச்சிருப்பாங்க.. அதான் வரதுக்கு டைம் இல்லாம போயிருக்கும்.. இவ்ளோ பெரிய வேலைன்னு தெரிஞ்சிருந்தா இங்க வர டைம் இருந்திருக்கும்..“ என்றான் தன் பெரிய அக்காவை புரிந்தவனாக.
கலா முறைக்க.. ‘உங்க பொண்ணை மட்டும் ஒன்னும் சொல்லிடக்கூடாது..” என கடுகடுத்தவன்.. பிறகு தன் பத்து வயது மச்சினனிடம்.. ‘உங்கம்மா விளையாடல்லாம் விடறாங்களா.? இல்ல.. படி படின்னு கொல்றாங்களா.?” என்றான் சிரிப்போடு.
வினோத் செல்வியை பார்க்க.. ‘அப்போ படி படின்னு டார்ச்சர்தான் பண்றாங்களா.?” என கிண்டலடித்து.. ‘சரிம்மா.. பதினொரு மணிக்கு எல்லாரும் அங்க இருக்கனும்.. நான் போய் குளிச்சிட்டு வந்திடறேன்.. டிபன் ஹோட்டல்ல ஆர்டர் பண்றேன்..” என்று தனது மொபைலில் ஆர்டர் கொடுத்து குளிக்க சென்றான்.
அனைவரும் சாப்பிட்டு முடிக்க.. கலா மகனின் கட்டிலில் படுக்க போகவும்.. ‘என்னம்மா படுக்க போறிங்க..? இப்போ கிளம்பினாத்தான் சரியா இருக்கும்..” என்றான் கலையரசன்.
மனைவியைப் புரிந்தவராக.. ‘ரொம்ப அலுப்பா இருக்கு கலை.. நீ போய் வா.. நாங்க இங்கயே இருக்கோம்.. வெயில் தாழ வீட்டுக்கு கிளம்பனும்..” என்றார் மயில்சாமி.
ம்.. அம்மாவிற்கு அலைச்சல் ஒத்துக்காது என கலையரசனிற்கு தெரிந்ததுதான்.. இதோ இரண்டு மணிநேரம் பஸ்சில் வந்ததால் கால் சற்று வீங்கிதான் இருந்தது. அம்மாவை தனியே விட பிடிக்காமல்தான் அப்பா இவ்வாறு சொல்கிறார் எனப்புரிந்தவனாக.. ‘சரிங்கப்பா..” என்றவன்.. தனது அக்கா மற்றும் அக்காள் மகனை அழைத்து சென்றிருந்தான்.
————————-
என்னதான் அரசுப் பணியில் இருநதாலும் இத்தனை பெரிய அரங்கத்திற்கு கீதாராணி வந்திராததால் தம்பியின் கையை இறுகப் பற்றினாள். ‘அக்கா.. என்ன இது.? உன் கை இவ்ளோ ஜில்லுன்னு இருக்கு.? நீல்லாம் ஒரு பத்திர பதிப்பாளர்ன்னு வெளில சொல்லிக்காத..” என்றான் சிரிப்போடு.
‘போடா.. எனக்கொன்னும் பயம் இல்ல.. இங்க எல்லாரும் ஹையர் ஆபிசர்ஸ்சா இருக்காங்க.. அதனால கொஞ்சம் நர்வசா இருக்கு அவ்ளோதான்..“ என்றாள் மிடுக்காக.
கலையரசனோடு இன்னும் சிலருக்கு இன்று ஆர்டர் கொடுக்கப் போகிறார்கள்.. அதோடு சிலருக்கு பதவி உயர்வு என இருக்க.. பணி ஆர்டர்களை கொடுக்க டைரக்டரேட் ஜெனரல் வருகை புரிய உள்ளார்..
தனது அக்காவோடு சேர்த்து காவல் துறைக்கே உண்டான மிடுக்கை கலையரசனும் இன்றுதான் பார்க்கிறான். இது தனக்கான பணி என சொல்லும்போது இல்லாத கர்வம் தற்போது வந்திருந்தது கலையரசனிற்கு.
ம்.. கலையரசனிற்கு விளையாட்டு.. தாய்நாட்டிற்காக தங்கம் வாங்குவது இதுதான் அவனின் லட்சியம் என்பதால் மற்ற எதிலும் அவன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்க.. இங்கு அவனிற்கான மரியாதையும் வரவேற்பும் இந்த கர்வத்தை உண்டாக்கியிருந்தது.
பிறகு ஜெனரல் வரவே.. அந்த பரந்த அறையெங்கும் அத்தனை நிசப்தம்.. ‘மாமா.. எனக்கு பயமாயிருக்கு..” என வினோத் கிசுகிசுத்ததே தெளிவாய் கேட்கும் அளவிற்கு அத்தனை நிசப்தம்.
சற்று நேர உரையாடலுக்கு பிறகு.. பணி நியமன ஆர்டர்கள் கொடுக்கப்பட.. நான்கு பேருக்கு பிறகு கலையரசனிற்கும் கொடுக்கப்பட.. வினோத் வேகமாக கை தட்டினான். செல்வராணியின் சந்தோசத்தை கூற வார்த்தையே இல்லை.. அவளின் சந்தோசம் கண்ணீராக வெளிவந்தது.
ம் பின்னே எத்தனை பேர் வாத்தியார் பிள்ளை மக்கு என தன் தம்பியை இழிவு படுத்தியிருப்பார்கள்.. தம்பியை கோபத்தில் அடித்துவிட்டு எத்தனை நாள் அப்பா அழுதிருப்பார்..? எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வர.. தற்போது கலையரசனின் உயர்ந்த இடம் கண்டு சந்தோசம் கண்ணீராய் வெளிவந்தது.
உறுதி மொழி கொடுத்து ஆர்டர் வாங்கி வந்தவன்.. ‘என்னக்கா அழற.?” என்றான் கிண்டலாக.
‘போடா..” என கோபித்தாள் பெருமையோடு. சிரித்தவன் ‘வாக்கா சாப்பிடலாம்..” என அழைத்து செல்ல.. சிற்றுண்டி விருந்து போல் ஏற்பாடு செய்திருந்தார்கள்.. உண்டு முடித்து வீட்டிற்கு வர மதியம் இரண்டானது.
அங்கு நடந்த அனைத்து நிகழ்வுகளையும் படம்பிடித்திருந்த செல்வராணி தன் அப்பாம்மாவிற்கு அனுப்பி வைத்திருந்தாள். மகனை பூரிப்போடு பார்த்திருந்த கலா.. கலையரசன் வீட்டிற்கு வந்ததும் சுற்றிப்போட்டு திருஷ்டி கழித்து மகனை பாராட்டியபடியும் கொஞ்சியபடியுமே இருக்க.. தனது பணி ஆர்டரை அன்னை தந்தை கையில் கொடுத்து ஆசி பெற்றான்.
‘உன் நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராதுப்பா.. தீர்க்காயுசா நல்ல ஆரோக்கியத்தோடவும் சந்தோசத்தோடவும் எப்பவும் இருக்கனும்..” என ஆசிர்வதித்தார் மகனை.
வினோத் வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரமாகியும் தன் மாமனை புகழ்வதை நிறுத்தவில்லை. ‘டேய்.. போதும்டா.. நீயும் உங்க அம்மாயியும் என்னை புகழ்ந்தே வெக்கபட வச்சிடுவிங்க போல..” என்றான் சிரிப்போடு.
இத்தனை நேரம் பெருமிதத்திலிருந்த மயில்சாமி..’சும்மாவே அடி தடின்னு கிளம்பிடுவ.. இப்போ அதிகாரம் வேற கைக்கு வந்திடுச்சி..” என கவலைகொள்ள.. ‘அப்பா.. இன்னைக்காச்சம் அவனை ஒன்னும் சொல்லாதிங்கப்பா..” என செல்வராணி பரிந்துரைக்க..
‘எனக்கும் பயமாத்தான் இருக்கு செல்வி.. அந்த எதிர்ல இருக்க பொண்ணுக்கு எதோ உதவி செய்தோமா விட்டோமான்னு இல்லாம.. உன் புருசனை கண்டு பிடிக்கிற வரைக்கும் இங்க விட்டு வேற எங்கையும் போகக்கூடாதுன்னு இப்போ மொத்த பொறுப்பையும் எடுத்திருக்கானாம்.. இது எங்க கொண்டு போய் முடியுமோ.? இதெல்லாம் தேவையா நமக்கு..?” என புலம்ப..
‘அம்மா.. உங்க ஆசிர்வாதம் இருக்கும்வரை எனக்கு ஒன்னும் ஆகாதும்மா.. காலம் வரைக்கும் அவங்களை கண்காணிக்கிறதை விட்டா எனக்கு வேற வேலை இல்லையா என்ன..?” என இலகுவாய் சொல்லி..
‘இன்னும் இரண்டு மாசத்தில எனக்கு சாம்பியன்சிப் மேட்ச் வருது.. அது முடிஞ்சதும் இந்த பொண்ணோட புருசனை கண்டு பிடிச்சி அவங்களுக்கு ஒரு வழி செய்துடறேன்.. ஒரு வேலை அவங்க புருசனை கண்டு பிடிக்க முடியலன்னா அவங்கப்பாம்மாகிட்ட பேசி சமாதனம் செய்து அவங்களோட சேர்த்துடறேன்..” என தேற்றினான் அன்னையை.