நீயும் நானும் அன்பே..
கனபதியே போற்றி
பகுதி – 1
வெள்ளை வெள்ளையாய் இரவுகள்
கொள்ளை கொள்ளையாய் கனவுகள்
கொஞ்ச கொஞ்சமாய் கரைகிறேன்
அன்பே உன் காதலாலே
சின்ன சின்னதாய் ஆசைகள்
புத்தம் புதிதாய் கவிதைகள்
லட்சம் லட்சமாய் தோன்றுதே
அன்பே உன் செய்கையாலே
ஏழு மாடிக் கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்தது ஹைடெக் சொல்யூசன்ஸ் எனப்படும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம். அந்த நிறுவனத்தின் ஹெச்.ஆர் டிபார்ட்மென்டின் ஒரு பகுதியில் தான் நம் நாயகனின் பணி.
“ஏய் ரித்விக்…… லேப்டாப்புக்குள்ளயே போயிறாத. மண்டைய வெளியவும் நீட்டு. நான் நாளைக்கு டெல்லிக்குப் போறேன். அதான் உங்கிட்ட சொல்லலாம்னு வந்தேன்.” துள்ளல் குரலில் அவள் முன்னே நின்றாள் நாயகி.
ரித்விக் என்று அழைக்கப்பட்டவன் நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தான். பார்ப்பதற்கு திரைப்பட நடிகர் சூர்யா போல இருப்பான். அதென்ன போல. சூர்யா என்றே வைத்துக் கொள்ளுங்களேன். உங்களுக்கும் கற்பனை செய்வதற்கு எளிதாக இருக்கும்.
“ஹே! ரம்யா…. வா வா உட்கார். டெல்லிக்கு என்ன திடீர்னு பயணம்?” பரபரப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், அவனது பேச்சில் ஒரு ஆர்வம் இருந்தது.
அவனைச் சூர்யா என்று சொல்லி விட்டோம். அப்படியானால் ரம்யா? அசின்…. வேண்டாம். வேண்டாம். ஜோதிகா என்றே வைத்துக் கொள்வோமே.
இப்பொழுது புரிந்திருக்குமே. அவன் கதாநாயகன். அவள் கதாநாயகி. அடுத்து காதல்தான். அவ்வளவுதான் கதை. ஆனால் அது எப்படி நடக்கின்றது என்று கதை முழுக்க படித்துத் தெரிந்து கொள்வோமே.
ரித்விக்கும் ரம்யாவும் பெங்களூரில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கின்றார்கள். இருவரும் லீட் பதவியில் இருப்பவர்கள். தமிழ் இலக்கணப்படி சொன்னால் அவர்கள் வேலை மேய்த்தலும் மேய்க்கப்படுவதும். இவர்களிடம் இவர்களது மேனேஜர்கள் வேலை வாங்குவார்கள். அது மேய்க்கப்படுவது. இவர்கள் இருவரும் தங்களுக்குக் கீழ் ஒரு சிறிய கூட்டத்தை வைத்து வேலை வாங்குவார்கள். அது மேய்த்தல்.
வழக்கமாக தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகன் தமிழாகவும் கதாநாயகி வேறு மொழியாகவும் இருப்பார்கள். ஆனால் காதல் எப்படி வித்தியாசங்களைக் காட்டுகிறதோ, அதே போல நாமும் சற்று வேறு மாதிரி. ரித்விக் கன்னட மகா. ரம்யா தமிழச்சி.
வேலையில் சேரும் பொழுதுதான் இருவருக்கும் முதற் பழக்கம். கடந்த நான்கரை வருடங்களில் இருவரும் இவ்வளவு தூரம் வேலையிலும் நட்பிலும் முன்னேறியிருக்கின்றார்கள். இருவரும் காதலிக்கின்றார்களா என்று கேட்டால்…. ஆமாம் என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம்.
இருவருக்கும் உள்ளுக்குள் காதல் உண்டு. ரித்விக்கிற்குத் தன் காதல் புரிந்து விட்டது. ரம்யாவிற்குத் தான் அது இன்னமும் தெளிவாகப் புரியவில்லை. அவ்வளவுதான் விஷயம். அதைப் புரிய வைக்கத்தான் ரித்விக்கும் படாதபாடு படுகிறான் அவளிடம்.
ரம்யா ரித்விக்கின் க்யூபிக்கிளில் இருந்த நாற்காலியில் சாவகாசமாக உட்கார்ந்தாள். அங்கிருந்த அவனது பேனாவை எடுத்துக் கையில் உருட்டியபடியே இங்கும் அங்கும் சுழன்றாள் அந்த சுழற் நாற்காலியில்.
அவளது செய்கையையும் அவளையும் ரசித்தபடியே “என்ன திடீர்னு டெல்லி?” திரும்பவும் மனம் கவர்ந்தவளைப் பார்த்துக் கேட்டான்.
“அட. அதுவா… நம்ம ஹெச்.ஆர் இருக்காங்கள்ள….. அதாம்ப்பா நல்லாயிருக்குறவங்களை எல்லாம் நம்ம கம்பெனியில சேத்து அவங்க வாழ்க்கையப் பாழடிக்கிறாங்களே…. அவங்க டெல்லியில இருக்குற பலரோட வாழ்க்கைய வீணடிக்கனும்னு அங்க இன்டர்வியூ வெச்சிருக்காங்களாம். அதுக்குப் போகனும்னு கேட்டு மெயில் அனுப்பீருந்தாங்க. நானும் சரீன்னு சொல்லீட்டேன். ஆனா ஒரு கண்டிஷனோட. அது என்னன்னு தெரியுமா?” கேட்டு விட்டு ரித்விக்கின் முகத்தையே ஆவலோடு பார்த்தாள்.
என்னவென்று புரிந்தாலும், புரியாதது போல “என்னது?” அமைதியாகப் புன்னகையோடு கேட்டான் ரித்விக்.
“அப்படிக் கேளு. இன்டர்வியூ சன்டே. ஆனா எனக்கு வியாழக் கிழமை நைட்டே பிளைட் புக் பண்ணனும்னு கண்டிஷன். வெள்ளிக்கிழமை லீவு. அது ஏன்னு தெரியுமா?” திரும்பவும் ரித்விக்கின் முகத்தையே ஆவலோடு பார்த்தாள்.
“ஏன்?” மறுபடியும் அமைதியாகப் புன்னகையோடு கேட்டான் அவன். அவள் பேச்சு ஒவ்வொன்றையும் ரசித்தபடி.
“அப்படிக் கேளு. நொய்டால யாரு இருக்காங்க? சுஜித்தும் சித்ராவும் இருக்காங்கள்ள. அவங்க ரெண்டு பேரும் நொய்டா போய் ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு. அதுக்கப்புறம் ஃபோன்ல பேசிக்கிறதோட சரி. மெயில் அனுப்புறதோட சரி. இந்த இன்டர்வியூவச் சாக்கா வெச்சுக்கிட்டுப் பாத்திரலாம்ல. அதான். வெள்ளியும் சனியும் அவங்களோட சுத்தீட்டு சன்டே இண்டர்வியூ எல்லாம் எடுத்திட்டு திரும்பவும் பெங்களூர். எப்படிப் பிளான்?” முகத்தை பொம்மை போல வைத்துக் கொண்டு, தன் சுடிதார் காலரைத் தூக்கி விட்டபடி பெருமையாகக் கேட்டாள் ரம்யா.
அவளுடைய முகத்தைப் பார்த்துக் கஜினி சூர்யா போல ஷார்ட் டெர்ம் மெமரி லாசுக்குப் போனான் நம் நாயகன். அவனுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பீ.பி.ஸ்ரீநிவாஸ் பாடினார். “நின்ன கண்ண கண்ணடியல்லி கண்டே நன்ன ரூபா (உந்தன் கண்ணின் கண்ணாடியிலே கண்டேன் எந்தன் ரூபம்)” (ஏன் பி.பி.ஸ்ரீனிவாஸ்ன்னு யோசிக்காதீங்க, அவன் ஒரு பழைய பாடல்களின் ரசிகன்.)
“ஏய்… என்ன பாத்துக்கிட்டேயிருக்க…. பொறாமையா இருக்கா? நான் போய் சுஜித்தையும் சித்ராவையும் பாக்கப் போறேன்னு? சரி…. எனக்கு வேலையிருக்கு. இதச் சொல்லலாம்னுதான் வந்தேன். வர்ரேன்…..” சொல்லி விட்டு பதிலை எதிர்பார்க்காமல் போனாள் ரம்யா. எப்படியோ அவனைக் கடுப்பேத்தியாச்சு. இன்னைக்கு கோட்டா ஓவர்.. மனதுக்குள் சிரித்தபடியே தன் இடத்திற்கு கிளம்பினாள்.
யாரிந்த சுஜித்தும் சித்ராவும்? இவர்களும் ரம்யா ரித்விக்கோடு வேலைக்குச் சேர்ந்தவர்கள்தான். சுஜித்தின் முழுப்பெயர் சுஜித் ஷெட்டி. பெங்காலிப் பையன். மிஸ்டர் அண்டு மிசஸ் ஐயர் படத்தில் நடித்த ராகுல் போஸ் போல இருப்பான். சித்ரா பெங்களூர் தமிழ். அதே மிஸ்டர் அண்டு மிசஸ் படத்தில் நடித்த கொன்கொனா சென் போல இருப்பாள்.
இனிமேல் இவர்களை அவர்களாகவே உருவகம் செய்துகொள்ளுங்கள். இருவரும் காதலித்துக் கல்யாணமும் செய்து கொண்டு நொய்டாவிற்குப் போய் விட்டார்கள். இருவர் வீட்டிலும் நிறைய பிரச்சனைகள் இருந்ததால் நொய்டாவில் வேலை தேடிப் போய் விட்டார்கள். இருவர் வீடுகளுக்குமே அது தொலைவுதான். அந்தத் தொலைவு இருவர் வீட்டாரிடமும் நன்றாகவே வேலை செய்தது. குழந்தை பிறந்ததும் இருவீட்டுப் பிரச்சனைகளும் தீர்ந்தும் போனது.
எப்பொழுதும் ஒன்றாகவே இருந்த கூட்டணி இப்பிடிப் பிரிந்து ஒன்று மத்திய அரசாங்கமாகவும் மற்றொன்று மாநில அரசாங்கமாகவும் மாறிப் போனது. ஆனாலும் கூட்டணி ஒப்பந்தப்படி ஃபோனிலும் மெயிலிலும் விடாத தொடர்பு. ஆனால் ரம்யாவும் சரி.. ரித்விக்கும் சரி… நொய்டா சென்று பார்க்கவேயில்லை. இப்பொழுது ரம்யாவிற்கு அலுவலகம் வழியாக ஒரு வாய்ப்பு. ஆகையால் அவளுடைய கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்.