அத்தியாயம் – 4
அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே .
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே .
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே . பார்க்காதே .
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே .
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் .
“ஆப்கா நாம் கியா ஹேய்” ஹிந்தியில்.. இல்லை இல்லை. இந்தியில் கேட்டாள் ரம்யா. சமீபத்தில் அவள் பேசிய மிகப் பெரிய இந்திப் பேச்சு இதுவாகத்தான் இருக்கும்.
“மேரா நாம் கே.ஆர்.எஸ். மத்லப் கௌஷல் ரகுபீர் ஷர்மா.” சொன்னது கார் டிரைவர். தாஜ்மகால் போவதற்காக ஏற்பாடு செய்திருந்த கார் விடியலிலேயே சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டது. தன்னுடைய பேகை ரித்விக்கை எடுத்து வரச் சொல்லிவிட்டுக் கீழே காருக்கு வந்தாள் ரம்யா.
அடுத்த வரியை இந்தியில் சொல்ல ரம்யா தடுமாறுகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட கே.ஆர்.எஸ். “ஹம்கோ மதராஸி பாஷா, கன்னட், டெலுகு, கேரள்… சப்குச் ஆத்தா ஹே.” என்றான் வாய் விரிந்த சிரிப்போடு…
“சரி சரி ஆத்தா உன்னோட மொகரையப் பேத்தா” என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே முகத்தில் பொய்ப்புன்னகையோடு நின்றாள். அதற்குள் எல்லாரும் கீழே இறங்கி வந்துவிட்டார்கள். சித்ராவிடமிருந்து ஃபெராவை வாங்கிக் கொண்டாள் ரம்யா. சுஜித் வசதியாக டிரைவருக்குப் பக்கத்தில் முன்னாடி உட்கார்ந்து கொண்டான்.
பின்னாடி சீட்டில் ரித்விக் வலது ஜன்னலோரமும் சித்ரா இடது ஜன்னலோரமும் உட்கார்ந்து கொள்ள.. ரம்யா நடுவில் உட்கார்ந்து கொண்டாள். “புருஷனையும் பொண்டாட்டியையும் பிரிச்சிட்டீங்களே” என்று பொய்யழுகை அழுத சுஜித்தின் தலையில் சித்ரா “நறுக்கென்று’’ கொட்ட, கலகலப்பாகத் தொடங்கியது அவர்களது ஆக்ரா பயணம்.
டிரைவருக்குப் பேரெல்லாம் சொல்ல வேண்டுமா என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. என்ன செய்வது? பெரிய பாத்திரமில்லையென்றாலும் கதையில் கே.ஆர்.எஸ் ஒரு வருத்தத்திற்குரிய செயலைச் செய்யப் போகிறான். ம்ம்ம்ம்….சரி. அதை அவன் செய்யும் பொழுது எப்படிச் செய்கிறார் என்பதை அணுவணுவாகப் பார்ப்போம். இப்பொழுதே பேசி மனதை வருத்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். பயணம் வேறு மகிழ்ச்சியாகத் தொடங்கியிருக்கிறது. அப்படியே நாமும் உடன் செல்வோம். கதையில் நமது வசதிக்காக கே.ஆர்.எஸ்சும் இனிமேல் தமிழ்தான் பேசப் போகிறான். (எனக்கும் வாயில் இந்திக்கு பதிலா வாந்தி தான் வருது.. சோ இந்தி திணிப்பு ஆகாதுல்ல, அதான் இந்திக்கு மூடு விழா நம் கதையில்..)
“சார். ஒரு உதவி” மெதுவாக ஆரம்பித்தான் கே.ஆர்.எஸ்
சுஜித் ஆச்சரியக்குறியோடு பார்த்தான். பயணம் தொடங்கியதும் பணம் கேட்கப் போகிறானோ என்று. ஏற்கனவே முழுப் பணமும் அலுவலகத்தில் கட்டியாகி விட்டது. டிரைவர் கையில் பேட்டா மட்டும் குடுத்தால் போதும் என்று சொல்லித்தான் அனுப்பியிருக்கிறார்கள். யோசனையோடு பார்க்க
“ஒன்னுமில்லை சார். இந்தக் கார் டூரிஸ்ட் ரிஜெஸ்டிரேஷன் கார் இல்ல. இதுல டூர் கூட்டீட்டுப் போகக் கூடாது. ஒருவேளை போலீஸ் யாரும் கேட்டாங்கன்னா… காருக்குச் சொந்தக்காரர் உங்க ஃப்ரண்ட்னு சொல்லனும். அவரோட பேரு நித்தின் நயால்.” என்றான் தயங்கித் தயங்கி
“இது வேறையா?” என்றான் சுஜித் சலிப்பாக.
“என்ன செய்றது சார். இப்பிடித்தான் போனவாட்டி ஆக்ரா போனப்போ வெள்ளக்காரங்கள ஏத்தி அனுப்புனாங்க. அவங்ககிட்ட நூறுதடவை சொன்னேன். அவங்களுக்குப் புரியவேயில்லை. என்னோட கெட்ட நேரம் போலீஸ் பிடிச்சிட்டாங்க. அங்கிரேசிக்காரன் டூரிஸ்ட் வந்தோம்னு சொல்லீட்டான். ரெண்டாயிரம் ரூவா தண்டம். அதனால டூரிஸ்ட் வந்தோம்னு சொல்லாதீங்க சார்.” என்றான் கே.ஆர்.எஸ்
“சரி… அழாதீங்க சார். பார்த்துக்கலாம் விடுங்க. அவரோட பேர் என்ன நித்தின் நயால்தானே.” என சுஜித், கே.ஆர்.எஸ்ஸை சமாதானப் படுத்த
“சரி சார். சரி சார்.. ஆக்ரா ஊருக்குள்ள எனக்குச் சின்னச் சின்ன ரோடு சந்து எல்லாம் அத்துப்படி சார். அந்த வழியாப் போறேன். எனக்கு எல்லா ரோடும் தெரியும். பெரிய ரோடுகள்ள போலீஸ் இருப்பாங்க சார். போலீஸ் கிட்ட மாட்டாம போய்ட்டு வந்தாப் போதும் சார்.” என விம்மில் விளக்க
ரம்யாவுக்கு அந்தப் பக்கத்து ஊர்கள் ரொம்பவும் புதுமையாக இருந்தன. நொய்டாவை விட்டு வெளியே வந்தால் பட்டிக்காடுகள்தான். புழுதிக்காடு என்று சொல்லலாம். கரிசல் மண். ஆனாலும் ஏதோ வித்தியாசம் அவளுக்குத் தெரிந்தது. மரங்கள் நெடுநெடு மரங்களாக இருந்தன. ஒரு சாப்பாட்டுக்கடையில் நிறுத்தி ரொட்டி, சப்ஜி, சாய் சாப்பிட்டார்கள். ஃபெர்ரா விழித்துக் கொண்டதால் ரம்யாவும் ரித்விக்கும் சிறிது நேரம் அவனோடு விளையாடினார்கள்.
அந்தப் பயணத்தில் ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொரு விதமான மகிழ்ச்சியில் இருந்தது. சுஜித் சற்றுக் களைப்பாக இருந்தான். இரண்டு நாட்களாகக் கடுமையான வேலை. தூக்கமும் குறைவு. ஆனாலும் அனைவரும் இருக்கும் மகிழ்ச்சியில் களைப்பே தெரியவில்லை. சித்ராவுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் இந்தப் பயணம் முடிந்து திரும்பி வருவதற்குள் ரம்யாவைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
ரித்விக்கும் ஒரு முடிவோடுதான் இருந்தான். எப்படியாவது தன்னுடைய மனதில் இருப்பதை ரம்யாவிடம் சொல்லிவிட வேண்டும். அதற்குப் பின் என்ன நடந்தாலும் சரிதான் என்ற முடிவுக்கு வந்திருந்தான். சரியான சமயத்திற்கு எதிர்பார்த்திருந்தான். பயணத்தில் ரம்யாவுக்கும் மகிழ்ச்சிதான். நேற்றிரவு சித்ரா சொன்னது இன்னமும் மனதில் இனித்துக் கொண்டிருந்தது. ஆனால் ஒப்புக்கொள்ளத்தான் அவளால் முடியவில்லை. சரி. யாராவது மறுபடியும் பேச்செடுப்பார்கள் என்று காத்திருந்தாள். ரித்விக்கின் தோளில் சாய்ந்து கொண்டு சுகமாக இருந்தாள்.
ஆக்ராவிற்குள் நுழைந்ததுமே கே.ஆர்.எஸ் சந்துகளிலும் பொந்துகளிலும் வண்டியை ஓட்டினான். “மொதல்ல எங்க போறது சார்?” கேள்வியை ஆரம்பித்தான்.
“இத்மத் உத் தௌலா போங்க. அதான் மொதல்ல பாக்கனும்.” என்றான் முதலில். அவன் எங்கெங்கு போக வேண்டும் என்று முன்னாடியே திட்டம் வைத்திருந்தான்.
இத்மத் உத் தௌலாவின் வாசலில் கார் நின்ற பொழுது ஆட்டுப்புழுக்கைகளும் தள்ளுவண்டிகளும் ஓரத்தில் ஓடும் சாக்கடையும்தான் வரவேற்றன. ஆனால் உள்ளே நுழைந்ததும் அழகான பெரிய சலவைக்கல் நகைப்பெட்டி தெரிந்தது. கொஞ்ச நேரம் அதனுடைய அழகில் மயங்கியிருந்தவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்கள்.
ரம்யாவிற்கும் ரித்விக்கிற்கும் வாய்ப்புக் குடுத்து சுஜித்தும் சித்ராவும் ஒதுங்கியிருந்தார்கள். ரம்யாவும் ரித்விக்கின் அருகாமையை ரசித்துக் கொண்டிருந்தாள்.
“டேய்…. என்ன அழகாக் கட்டீருக்காங்க பாரேன். நகைப்பெட்டி மாதிரி இருக்கு. அதுலயும் ஆத்தங்கரை ஓரம். இந்த எடத்துல சந்தோஷமா தங்கீருப்பங்கள்ள.” வாய்ப்பூட்டை திறந்தாள் பெண்.
“முட்டாளா.. இது மனே(வீடு) இல்ல. இது சமாதி. இங்கதான் நூர்ஜஹானோட அப்பாவையும் அம்மாவையும் பொதைச்சிருக்காங்க. இத தன்னோட தாயி தந்தைக்கோஸ்கரா நூர்ஜஹான் கட்டீருக்காங்க. அதோட நூர்ஜஹானோட சமாதியும் இதுலதான் இருக்கு.” அவன் தனக்கு தெரிந்ததை கூறிக்கொண்டே வர
“ஓ…அப்படியா? நூர்ஜஹானோட சொந்த ஊர் இதுதானா? அதான் இங்க கட்டீருக்காங்க” வியப்பை விழிகளில் காட்டியபடியே தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டாள்.
“இல்ல. நூர்ஜஹானுக்குப் பெர்ஷியாதான் சொந்த நாடு. இப்ப ஈரான். அப்போ அப்பா இந்தியா வந்தாங்க. வர்ர வழியில நூர்ஜஹான் பொறந்திருக்காங்க. ஆனா வறுமை தாங்காம குழந்தைய விட்டுட்டுக் கெளம்பீருக்காங்க. ஆனா முடியாம திரும்ப வந்து எடுத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் அக்பர் கிட்ட வேலைக்குச் சேந்து ரிச்சாயிட்டாங்க.”
“ஆகா…இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சி வெச்சிருக்க. பெரிய ஆளுதான்.”
“ஹா ஹா ஹா.. இன்னொன்னு சொல்றேன். யமுனா ரொம்ப ரொமாண்டிக்கான நதி. மொகல் மன்னன்ஸ் எல்லாம் இந்த நதிக்கரைலதான் ரொமாண்ஸ் பண்ணீருக்காங்க. தாஜ்மகால் கூட யமுனா ஓரத்துல தான் இருக்கு தெரியுமில்ல.”
“ம்ம்ம்……” ரித்விக்கின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா. ஏதோ ஒரு ஈர்ப்பு. சலவைக் கல் கட்டிடத்தின் குளிர்ச்சியும் அழகும் அவள் உள்ளத்தை “என்னவோ செய்து” வைத்தன. ரித்விக் சொன்ன ரொமாண்டிக் அவளுக்குள் வேலையத் தொடங்கியிருந்தது. அவன் ஏற்கனவே காதல் ஊறுகாய். இருவரும் சற்று நேரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“ரம்யா. I love you.” பெண்ணின் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்து, ரசனையாகத் தன் காதலை சொல்லி விட்டான் கவுடா.
தொடரும்……