அத்தியாயம் – 22
விநாயகத்தை கண்களால் உள்ளே நிரப்பிக் கொண்டு கார்த்திக் தன் மனதில் குடைந்த கேள்விகளை கேட்டான். “எப்படிடா இங்க வந்தீங்க??”
“உனக்கு தெரியாதா?? மாயா தான் ஃபோன் பண்ணி கூப்பிட்டா… வெள்ளிக்கிழமை ஈவ்னிங் அம்மாக்கு கால் செஞ்சு தனியா இருக்க ஒரு மாதிரி இருக்குன்னு ஒரே அழுகை தான் போல. அவங்களுக்கு பேசிட்டு என்கிட்டயும் போன் பண்ணி கிளம்பி வர சொன்னா. அவ பேசுனதே சரியில்லாம இருந்துச்சு. வரேன்னு சொன்னேன். அப்பாவையும் கூட்டிட்டு வர சொன்னதும், அவரு எதுக்குன்னு கேட்டேன். இல்ல, அவரும் கண்டிப்பா வரனும்னு அடம் பிடிச்சா.
இங்க வந்து பார்த்தா தான தெரியுது! அவ எதுக்கு எல்லாரையும் மொத்தமா கிளம்பி வர சொன்னான்னு…. பஸ்ல கஷ்டப்பட்டு டிக்கேட் எடுத்துட்டு வந்து சேரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு.”
விநாயகம் பேசியதை கேட்ட கார்த்திக்கிற்கு எதற்காக மாயா அவர்களை அவசர அவசரமாக வர சொல்லி இருப்பாள் என எண்ணம் மட்டுமே ஓடியது. அவன் மூளைக்கு எட்டிய வரை சிந்தித்து, தான் பட்ட அவஸ்தைகளை கேட்டறிந்ததால், மேலும் மேலும் பெருகியபடி இருக்கும் அவளின் குற்றயுணர்ச்சியை போக்கிக் கொள்ளவே அவள் வரச் சொல்லி இருப்பாள் என நம்பினான். பின் விநாயகத்தை அழைத்துக் கொண்டு வெளியே ஹாலுக்கு சென்றான் கார்த்திக்.
அங்கே பார்த்தால், எல்லோரும் ‘நாங்கள் சோகத்தில் மிதக்கிறோம்’ என சொல்லாமல் சொல்லினர்! மாயா இன்னமும் தன் அன்னையின் மடியைவிட்டு எழவில்லை…. ரித்தியா அவளின் முதுகை தடவிக் கொடுத்தபடி இருக்க, அபிராமியின் கண்கள் தன் பெண்ணை கண்டு கலங்கிக் கொண்டே இருந்தது. சுப்பிரமணியம் சுவரில் எங்கோ வெறித்தபடி இருந்தார்.
கடவுளே இவர்களை எப்படி சமாளிப்பது என எண்ணியவாரு, விநாயகத்தை மீண்டும் அறையினுள் இழுத்துச் சென்று மருத்துவர் கூறியவற்றை அவனிடம் பகிர்ந்தான்.
“எனக்கு எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாயாவ சரி பண்ணனும்டா…. என்னால அவள இப்படி பார்க்க முடியலை!!”
“கண்டிப்பா சரி பண்ணிடலாம்டா…. டாக்டர் கிட்ட நானும் ஒரு தடவை வரேன். நம்ம ரெண்டு பேரும் போய் பேசலாம்….”
[the_ad id=”6605″]ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறியவாரு அடுத்து என்ன செய்வது என உரையாடினர். மீண்டும் அவர்கள் வெளியே வந்தபோதும் அனைவரும் முன்பிருந்த நிலையிலேயே இருக்க, விநாயகம் தான் முதலில் வாய் திறந்தான்.
“என்ன எல்லாரும் இப்படி உட்கார்ந்துட்டு இருக்கீங்க. எல்லாரும் போய் முதல்ல குளிச்சிட்டு காபி குடிக்கிற வழிய பாருங்க….”
எதுவும் நடக்காதது போல் சாதாரணமாக விநாயகம் பேச முயன்றதை அனைவரும் உணர்ந்தனர், மாயாவை தவிர. அவள் தன் அன்னையை சேர்ந்து விட்டாள், அது போதாதா?! மேலும், தன்னால் கார்த்திக் அனைவரிடமும் வாங்கிய கெட்டப் பெயர் நீங்கியதில், மனம் சிறு சமாதானம் அடைந்தது. அதுவே மாயாவுக்கு போதுமானதாக இருக்க, தாயின் மடியை விட்டு ஒரு அடிக் கூட நகரவில்லை….
ஆனால், விநாயகம் காட்டிய கண்ணசைவில் கார்த்திக்குடன் சுப்பிரமணியமும் ரித்தியாவும் ரூம்மினுள் சென்று, அவர்களுக்கும் நடந்ததை பற்றி அறிந்தனர். அதனால், வெளியே வந்த ரித்தியா முதலில் அவள் அம்மாவிடம் சென்று, “அம்மா வா பல் தேச்சிட்டு குளிச்சிட்டு வரலாம். எல்லாருக்கும் நம்ம தான் காபி போடனும். அண்ணா நீங்க பால் வாங்கிட்டு வாங்க. அம்மா நீ எழுந்துருமா….” என்று கூறினாள், தன் அக்காவின் மேல் பார்வையை வைத்துக் கொண்டு.
அவள் நினைத்தது போலவே மாயா அவர்களின் அன்னையை எழ விடவில்லை. “ம்மாமா ப்ளீஸ் போகதமா. ரித்து எனக்கு அம்மா வேணும். ப்ளீஸ்….”
அபிராமிக்கு யாரின் பக்கம் சாய்வது என தெரியவில்லை. விநாயகமும் ஒரு நிமிடம் இதையெல்லாம் பார்த்துவிட்டு, “ரித்து இரு பர்ஸ்ட் நாங்க குளிச்சிட்டு கடைக்கு போயிட்டு வரோம். அப்புறமா நீங்க எல்லாம் ரெடி ஆகுங்க.” என்று முடிவுக்கு விரைந்தான்.
கார்த்திக் உடனே தன் வீட்டில் குளித்து வருவதாக கூற, அவன் நண்பன் தானும் வருவதாக கூறவும், அதை அறவே மறுத்தான். “ஹே அங்க எதுவுமே இருக்காதுடா. நீ இங்கயே ரெடி ஆகு. நான் வரேன் சீக்கிரமா….”
“சரி எந்த பிளாக் என்ன டோர் நம்பர்?? ரெடியாகிட்டு நானே வரேன் அங்க.”
இவன் விடமாட்டான் போலவே, என எண்ணியபடி கார்த்திக் அவன் கேட்டவற்றை கூறிச் செல்ல, விநாயகமும் சுப்பிரமணியமும் முதலில் குளித்து ரெடியாகினர். அதன்பின், தாங்கள் பால், டிபன் வாங்கி வருவதாக கூறி விநாயகம் கார்த்திக் வீடு நோக்கிச் செல்ல, ரித்தியா வீட்டிலேயே டிபன் செய்யலாம் என ஆலோசனை கூறினாள்.
“வீட்டுல எதுவுமே இல்லடா… அக்கா பிரிட்ஜ ஆப்ஃ பண்ணிட்டு போயிட்டா, பத்து நாளுக்கு எதுக்கு தண்டமா ஓடனும்னு. அதனால, நாங்க வாங்கிட்டு வரோம்.”
விநாயகம் கிளம்பியவுடன் மாயாவை பார்த்தால், அவள் தேம்பியபடியே தூங்கிப் போனாள். சில நாட்களே ஆனாலும் மனதில் எழுந்த பெரு ஊளைச்சல், தாயை பார்த்ததும் சிறிது சமனப்பட்டிருந்தது! அது அவள் கண்களை அசர வைக்க, சுப்பிரமணியம் ரித்தியாவையும் அவளின் தாயாரையும் குளித்துவிட்டு வரச் சொன்னார். “நான் பார்த்துக்கறேன் மாயாவ. நீங்க போங்க….”
உறங்கும் தன் மருமகளின் அருகிலேயே அமர்ந்துக் கொண்டு, அவளின் மனநிலை கூடிய விரைவில் சரியாக வேண்டுதல் விடுதார் எல்லாம் வல்ல இறைவனிடம்! அவள் பாதி தூக்கத்திலேயே திடீரென முழித்துக் கொண்டு குழந்தையென பேந்தப் பேந்த விழித்தாள். உடனேயே தன் மருமகளாகிய மகளின் அலைபுரதலை நிறுத்தினார்.
“அம்மா குளிக்க போயிருக்காங்க. நீ தூங்குமா…”
அவர் சொன்னதை கேட்டு, அமைதியாக படுத்துக் கொண்டவள் என்ன நினைத்தாளோ, மீண்டும் எழுந்து அமர்ந்து தன் மாமனாரை புரட்டிப் போடும் கேள்வியை கேட்டாள். “உங்களுக்கு நான் இந்த மாதிரி…. கார்த்திக் பண்ணதுல எதுவும் கோவமா??”
“என்னமா இப்படி கேட்டுட்ட?? அவன் செஞ்சதை கேட்டு சந்தோஷப்படுற முதல் ஆள் நான் தான். எப்படி நான் அவனை கோவிப்பேன்?? உன் மேல எந்த தப்பும் இல்ல…. அவன் மேலயும் எந்த தப்பும் இல்ல. நம்ம போறாத காலம்! எல்லாம் சரியாகிடும். எனக்கு நம்பிக்கை இருக்குடா.”
சுப்பிரமணியத்தின் வார்த்தைகள் அவரின் உதட்டிலிருந்து வராமல், உள்ளத்தின் வழியிலாக வருவதை உணர்ந்த நிமிடம் மாயாவின் கண்களில் அருவி மழை பொழிந்தது. அவ்வளவு நெகிழ்ந்திருந்தது மனது!!
அந்த நெகிழ்ச்சியே அவளை இவர்களுக்காகவேனும் தான் மாற வேண்டும் என நெஞ்சில் சிறு பொறியை தூவியது. ஆனால், அத்துடன் அவ்வெண்ணம் வலுப்பெறாமல் தண்ணீரில் வரையப்பட்ட ஓவியமாய், அவள் மனதில் இருந்து விரைவாகவே அழிந்தும் போனது. மாயா இப்படியே அவள் எண்ணங்களின் பிடியில் நேரத்தை கழித்த வேளையில், வெளியே சென்றிருந்த அவளின் சகோதரனும் மணாளனும் வீடு வந்து சேர்ந்தனர்.
ரித்தியாவும் அபிராமியும் ரெடியாகி வந்தவுடன், இவளை எழுப்பி குளிக்க வைப்பதில் முனைப்பாயினர். “மாயு போய் தலைக்கு குளிச்சுட்டு வா. ஒரே சிக்கா இருக்கு, நிறைய நாள் வாராம விட்டதால… நான் சிக்கெடுத்து வாரி விடறேன்.”
அபிராமி கூறியதை கேட்டு தன் தாயை பிராசையுடன் பார்வையிட்டாள் மாயா. என்னை விட்டுவிடேன் என பெரிய மகள் கண்களால் வேண்டுக்கோள் விடுக்க, அவரின் இளய மகளோ ‘அவள் அப்படித் தான் செய்வாள். அசராதே’ என செய்கையால் பேசினாள்.
[the_ad id=”6605″]பின் மாயாவை வற்புறுத்தி, குளித்து வெளியே வர வைத்து, தலைவாரிவிட்டு, சாப்பிட அழைத்து வருவதற்குள் ரித்தியாவுற்கும் சரி, அபிராமிக்கும் சரி மூச்சு இறைத்தது! தன் கணவன் மேல் கொண்ட குற்றயுணர்ச்சியாலும், அவனை ஒரு தியாகியாக நினைத்ததால் பெருக்கெடுத்த நன்றியுணர்ச்சியாலும், அவன் வற்புறுத்தி கூறியதை அவனுக்காக செய்த மாயா, அதையே தன் பிறந்த வீட்டாரிடம் செய்யவில்லை.
அம்மா, தங்கை என்றவுடன் வந்த உரிமையுணர்வில் சலுகைகளும், புறக்கனிப்புகளும் தங்கு தடையில்லாமல் வளர்ந்தது! இதை அனைவரும் முக்கியமாக கார்த்திக்கும் கண்டுக் கொண்டான். மாயாவிடம் அனைத்தையும் பகிர்ந்தப்பின்னும், வேறு யாருக்கும் அவர்களின் வாழ்க்கை பக்கங்களை சொல்லாமல் விட்டதற்கு இதுவும் ஒரு காரணம். எல்லோருமாக சேர்ந்து அவனை தியாகியாக்கி, தெய்வமாக கொண்டாருவர் என அறிந்திருந்தான். அதை அவன் துளியும் விரும்பவில்லை!
இதை எப்படி மாற்றுவது என யோசிக்கையில் அதை தடை செய்யுமாறு விநாயகம் கார்த்திக்கின் வீட்டில் எந்த பொருளும் இல்லாததை போட்டுடைத்தான். “அப்பா இவன் வீட்டுல அங்க ஒண்ணுமே இல்ல…. பேருக்கு தான் டபுள் பெட்ரூம் பிளாட்! ஒரே ஒரு பெட்ரூம்ல, கட்டில் இருக்கு, இவனோட துணிமணி இருக்கு…. அவ்வளவு தான்.
ஏன்டா எதுவும் இல்லைன்னு கேட்டா, நான் மட்டும் இருக்குறதுக்கு இது போதும்னு சொல்றான். டேய் அட்லீஸ்ட் ஒரு ஃபெர்னிஷ்ட் வீடாவது பார்க்கக் கூடாது??”
ஃபெர்னிஷ்ட் வீடு அனைத்து வசதிகளும் அடங்கிய ஒன்று. டிவி, ஏசி, ஏன் சில வீட்டில் வாஷிங் மிஷின் கூட இருக்கும். ஒரு பெருமூச்சுடன் கார்த்திக் அசுவாரஸ்யமாக பதிலளித்தான். “அதெல்லாம் வாங்கிக்கலாம்டா. இந்த அப்பார்ட்மென்ட்ல அந்த மாதிரி எல்லாமே இருக்குற வீடு இல்ல. நீ இருக்கும் போதே எல்லாத்தையும் வாங்கிடறேன். போதுமா???”
கார்த்திக் கூறியதை கேட்டு விநாயகம் எப்போது வாங்கலாம் என பிளான் பண்ண ஆரம்பித்தான். ஆனால், பெரியவர்கள் இருவரும் தாங்கள் காசு தருகிறோம் என போட்டிப் போட்டனர்.
பெண்ணிற்க்கு நடந்த எளிய திருமணத்தின் போது சரியாக செய்யாத சீர் வரிசையை ஈடுக்கட்ட அபிராமி நினைக்க, தன் மகனுக்காவும் மருமகளுக்காகவும் தான் செய்வதாக சுப்பிரமணியம் முன் நின்றார். “யாரும் காசு குடுக்க வேணாம். நான் தான் எல்லாத்துக்கும் செலவு செய்வேன்.” கார்த்திக் திட்டவட்டமாக கூறி, அந்த வாரத்திலேயே வீட்டில் அனைத்து பொருட்களும் இருக்குமாறு பார்த்துக் கொண்டான்.
விநாயகமும் அவன் கூடவே சுற்ற, லட்சத்திற்கும் மேல் செலவு செய்து தன் வீட்டை மாயாவிற்கு பிடித்தவாரு, கடல் நீல வண்ணத்தில் உள்ள பொருட்களால் வடிவமைத்தான். இவர்கள் ஒவ்வொரு பொருளாக வாங்கும் போதும், மாயாவிடம் அதை அலைபேசியில் காட்டி அபிப்பிராயம் கேட்பர். மாயா எல்லாவற்றிற்கும் பொதுவாக தலையசைத்து வைப்பாள். சில நேரம் அதுவும் வராது.
காரணம் மாயா அபிராமியை விட்டு விலகவே இல்லை!! ஏதோ பூனைக்குட்டி, தாய் பூனையிடம் ஒன்டுவது போல் தாயின் முந்தானையிலேயே குடியிருந்தாள் அவள். ரித்தியாவை கூட கண்டுக் கொள்ளவில்லை…. ஏன், கார்த்திக் மருத்துவர் கூறியது போல சிறிய வேலைகளை செய் என்றதற்கு கூட தாயின் மடியில் மேலும் அழுந்த புதைந்தாள் அவன் மனைவி! “அம்மா அம்மா..… கூடவே இரு. என்ன விட்டு போகாத!”
அபிராமியே அவளை விட்டு விலக நினைத்தாலும், இந்த தாரக மந்திரம் நன்றாகவே வேலை செய்தது. ஐந்து வயது குழந்தையிடம் காணும் தவிப்பை தன் வளர்ந்த பெண்ணிடம் கண்டதால், அபிராமியாலும் அவளை விட்டு விலக இயலவில்லை!
ஏதோ தாயின் அருகில் இருப்பதால் மனதில் நிம்மதி பிறக்கிறதா என்றால் அதுவுமில்லை. ஆனால், மனதின் வலிகளிலிருந்து தப்ப மாயாவுக்கு இதை விட சிறந்த வழி தெரியவில்லை. அபிராமி வந்து நாட்கள் ஆறு கடந்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை மாயாவிடம்! அடுத்து வந்த சனிக்கிழமையில் மாயாவுடன், விநாயகத்தையும் சேர்த்து மருத்துவமனை அழைத்துச் சென்றான் கார்த்திக்.
வழக்கம் போல் மாயாவிடம் சில நிமிடங்கள் செலவிட்ட மருத்துவர், வெளியே இருந்த மற்ற இருவரையும் அழைத்து மாயாவை வெளியே அமரச் சொன்னார். இவர்களையே முழித்து முழித்து பார்த்தப்படி, செல்லும் மனைவியை கண்ட கார்த்திக் மிகவும் வேதனையுடன் புலம்பினான் மருத்துவரிடம். “இந்த ஒரு வாரமும் ரொம்ப மோசமா இருந்தா டாக்டர். யார்கிட்டயும் பேசலை…. அவளோட அம்மா மடியிலேயே படுத்துட்டு இருந்தா முக்காவாசி நேரம். எனக்கு என்ன பண்றதுனே தெரியலை!”
“மிஸ்டர் கார்த்திக் டிப்ரஷன்ல இருக்குறவுங்க இப்படி தான் காரணமேயில்லாம படுத்துக்கிடப்பாங்க. அதுக்காக நாமளும் அப்படியே விட்டுட்டா இன்னும் மோசமா ஆகிடுவாங்க. சோ, பெட்டர் அவங்க அம்மாவ நீங்க ஊருக்கு அனுப்பிடுங்க. இப்போ நான் பேசினப்போ கூட பாதி நேரம் அவ பதில் சொல்லவே இல்லை. கண்டிப்பா மாயா இதுக்கு ஒத்துக்கமாட்டா! பட், வேற வழியில்ல…. அவங்க நல்லதுக்கு தான் இது.”
மருத்துவர் கீதாஞ்சலி கூறியதை கேட்டு நண்பர்கள் இருவரின் பார்வையும் சந்தித்து மீண்டது! பிறகு மீண்டும் கார்த்திக் மருத்துவரின் பக்கம் திரும்பி, மனதில் இந்த ஒரு வார காலமாக அரித்துக் கொண்டிருந்ததை கேட்டான். “டாக்டர் அவ என்கிட்ட பழைய மாதிரி நடந்துக்கனும்னு தான் ஆசைப்படறேன். பட், அவ நான் ஏதோ தியாகம் பண்ணிட்ட மாதிரி, என்கிட்ட நடந்துக்கறா. அவ கண்ணுலயே அது தெரியுது….
என்னால அத பார்த்துட்டு ஃபீரியா பழக முடியலை. நீங்க அவகிட்ட இதை புரியவைக்க கொஞ்சம் ட்ரை பண்றீங்களா?”
கார்த்திக்கின் வேண்டுக்கொள் மருத்துவரின் முகத்தில் ஒரு புன்னகையை தவழவிட்டது! “நீங்க கூட்டிட்டு வரும்போது அவ மனசுல உங்கள பொருத்த வரைக்கும் இருந்தது குற்றயுணர்ச்சியும் நன்றியுணர்ச்சியும்! செய்யாத தப்புக்கு நீங்க ஏத்துக்கிட்ட பழி அவ மனசை ரொம்ப பாதிச்சதுனால தான் நான் உங்க பெமிலி கிட்ட உண்மையை சொல்லச் சொன்னேன். அவ இவ்வளவு சீக்கிரம் அதை பண்ணுவான்னும் நான் நினைக்கல. இப்போ குற்றயுணர்ச்சி போயிடுச்சு! பட், இன்னும் உங்க மேல இருக்குற நன்றியுணர்ச்சியை போக வைக்குறது உங்க கைல தான் இருக்கு! நீங்க அவகிட்ட பிஹேவ் பண்றதை வைச்சு தான் அவ மனசு மாறுவா… ஹேன்டில் ஹர் வித் கேர்!”
கார்த்திக்கிற்கு புரிந்த மாதிரியும் இருந்தது புரியாத மாதிரி இருந்தது. வீட்டில் மெதுவாக யோசிப்போம் என முடிவெடுத்து, அடுத்து அவளை நேர்வழிபடுத்த என்னென்ன செய்ய வேண்டும் என கேட்டறிந்தான்.
[the_ad id=”6605″]ஒருவழியாக அவர்கள் ஹாஸ்பெட்டலில் இருந்து வீடு வந்து சேர்ந்து, இரவு உணவை முடித்தனர். பின் மாயா மாத்திரை உட்கொண்டு கண்ணசர, விநாயகம் மாயா சரியாக வேண்டுமானால் தாங்கள் நால்வரும் சென்னையிலிருந்து கிளம்ப வேண்டும் என வீட்டினருக்கு கூறினான். அபிராமியின் மனது தான் அடித்துக் கொண்டது…. மகள் வாழ்க்கை இப்படி அலங்கோலமாக காட்சியளிக்க தான் மட்டும் ஊருக்கு திரும்புவது அவரை வாட்டி வதைத்தது. ஆனால், விநாயகமும் ரித்தியாவும் தான் அவருக்கு காரணத்தை விளக்கிக் கூறி, மறுநாளே கிளம்ப வைத்தனர்.
இவர்கள் கிளம்புகிறார்கள் என்றவுடன் மாயா அதிர்ந்து நோக்கினாள். “அம்மாக்கு அங்க ஸ்கூல் ரொம்ப நாள் லீவ் எடுக்க முடியாதுமா. நீ அடுத்த மாசம் அம்மாவ பார்க்க ஊருக்கு வா. சரியா??” மோவாயை பிடித்து தாய் கொஞ்சலாக கேட்கவும், மாயா முறுக்கிக் கொண்டாள். பல முறை அதன்பின், தாயிடம் கெஞ்சிவிட்டாள். அபிராமி கிளம்பியே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்க, அழுதுக் கொண்டே அவர்களுக்கு விடை கொடுத்தாள்.
சுப்பிரமணியம் மகனின் தலைக்கோதி விடைகொடுக்க, சில நாட்களில் மைதிலியை அனுப்பி வைப்பதாக சொல்லி விநாயகமும் விடைபெற, கார்த்திக் தலையசைத்தான். எல்லோரும் கிளம்பியதும், கார்த்திக் மாயாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். உள்ளே நுழைந்ததும், மாயாவின் இமைகள் விரிந்து அந்த வீட்டையே சாப்பிடும் அளவுக்கு பெரிதாகியது!! இதற்கு முன் தான் பார்த்த வீடா இது?? மாயாவால் நம்பவே முடியவில்லை….
அவளிடம் எல்லாவற்றையும் காட்டி அபிப்பிராயம் கேட்கும் போது அவள் எதையும் கருத்தில் கொள்ளவில்லை! இப்போது எல்லாம் சேர்த்துவைத்து பார்க்க, அவளுக்கு புத்துணர்ச்சியாக எதோ வேற்று கிரத்தில் இருப்பது போன்ற உணர்வு. நமக்கு பிடித்த வண்ணத்தில், பிடித்த பொருட்களாக வீடு முழுக்க நிரம்பி இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது??
தன் தாயின் சம்பளத்தில் இருந்த போது மாயா எதற்கும் பெரியதாக ஆசைப்பட்டதில்லை. அவள் விலை உயர்ந்த பொருள் வாங்கினால் என்றால் அது அவளின் கேமரா மட்டுமே. ஆனால், வீட்டில் இதை எல்லாம் வேலைக்கு அவள் சென்றதும் வாங்க வேண்டும் என ரித்தியாவிடம் கூறுவாள் அடிக்கடி. அதை ரித்தியா கார்த்திக்கிடம் அப்படியே ஒப்பிக்க, இப்போது இருந்த வீடு அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது.
[the_ad id=”6605″]வீட்டையே சுற்றி சுற்றி வலம் வந்த மனைவியை ஆசையுடன் பார்த்தான் கார்த்திக். “பிடிச்சிருக்கா மாயு???”
“ஹ்ம்ம்ம் ரொம்ப… எல்லாம் நீயே வாங்குனியா??”
“ஹ்ம்ம்ம் ஆமா. சரி தூங்கறியா?? மாத்திரை போட்டுக்கோ அதுக்கு முன்னாடி.”
அவ்வளவு நேரம் இருந்த இனிய கனவு கலைந்தது மாயாவுக்கு, ‘மாத்திரை’ என்ற ஒற்றை வார்த்தையில். தான் எந்த நிலமையில் இருக்கிறோம், தனக்கு நிகழ்ந்ததை எல்லாம் அது உணர்த்த, மாயாவின் முகம் இஞ்சி தின்ற குரங்கைவிட மோசமாகியது. கார்த்திக் தன்னையே திட்டிக் கொண்டான் மனதினுள். இனிமேல் கவனமாக அவளிடம் பேச வேண்டும் என முடிவெடுத்து, அவளுக்கு மாத்திரை கொடுத்து தானும் உறங்கினான்.