அத்தியாயம் – 20
கார்த்திக்கின் மனதில் எழுந்த பயங்கள் யாவும் வடிவம் பெற்றது போன்று மாயா நடந்துக் கொள்ள, ஒரு நிமிடம் திகைத்து நின்றவன், மறுநிமிடம் அவளிடம் விரைந்தான். “மாயா இங்க பாருடா…. நான் எப்போவுமே அப்படி நினைக்க மாட்டேன்டா! உனக்கு ஒண்ணும் இல்ல…. இந்த விஷயம் தெரியலைனா மட்டும் என்ன பண்ணிருப்ப?? அதே மாதிரி இப்போவும் நினைச்சுக்கோ. முதல்ல இப்படி அழுவறத நிறுத்து….”
ஹூஹூம்ம்ம் கார்த்திக்கின் எந்த கூப்பாடலும், மாயாவின் காதுகளில் விழவேயில்லை. அவனிடம் நெருங்கவும் இல்லை! ஒரு வார்த்தை அதன் மேல், பேசவும் இல்லை! அந்த அறையிலேயே ஓரமாக அழுது வடிந்து, முகமேல்லாம் வீங்கி, முடி கலைந்து, உடம்பில் சிறிய அசைவும் இன்றி தன் மனக் கவலையை அவளின் கண்ணீரின் வழியாக கரைக்க முயன்றாள் மாயா. அழுது அழுது ஓய்ந்தாலும், அவளின் தேம்பல் தொடர்ந்தது! இப்படியே சூரியன் நன்றாக சுட்டேரிக்க வரும் வரை மாயா பண்ண, அவளுக்கு ஏதாவது சாப்பிட கொடுக்க அவளை தனியே விட்டுச் சென்றான் கார்த்திக்.
அவன் சமையல் அறையில் பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. பால் கூடயில்லை… பிரேட்டும், ஜாமும் மட்டுமே இருந்தது. அதை மாயா சாப்பிடுவாளோ என்னவோ என யோசித்து, முழித்தான். சரி அவளுக்கு பாலாவது வாங்கி வந்து, காபி போட்டுக் கொடுக்கலாம் என நினைத்து, மாயா இருந்த அறைக்கு மீண்டும் சென்றான். அங்கே இருந்த கப்போர்ட்டை திறந்து அவனுக்கு வேண்டிய பர்ஸை எடுத்தது மனைவியை பார்த்தால், அதை கூட அறியாமல் வெறித்த பார்வையுடன் தன் கண்களை எங்கேயோ நிலைத்து வைத்திருந்தாள்.
அவளின் பார்வையே கார்த்திக்கை அவளிடம் இழுக்க, அவள் அருகே குனிந்து குரலுக்கு வலிக்குமோ என மெதுவாக பேசினான். “மாயா நான் கடைக்கு போயிட்டு வரேன்டா.”
மாயா அசையவேயில்லை… அவளின் தோள்களில் கைகளை வைத்து, “மாயு நான் கடைக்கு போயிட்டு வரேன்டா. கதவை பூட்டிட்டு போகவா??” என்று வினவவும், மாயாவின் முகம் சரலென்று திரும்பியது. தன்னை தனியே விட்டுச் செல்கிறானா??
அவனின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, “வேணாம்…. எங்கயும் போக வேணாம்!” என்று சிறு பிள்ளையின் அடத்தோடும் பிடிவாதத்தோடும் கூறிய மாயாவை, கார்த்திக் பிறாசையுடன் கண்டான். இவளை இப்படியே விட்டால், சரி வர மாட்டாள் என நினைத்து, எப்படியாவது கடைக்கு போயே தீருவது என முடிவெடுத்தான்.
[the_ad id=”6605″]“இங்கப் பாரு மாயு. நீ பழைய மாதிரியில்ல. உனக்கு இப்போ கராத்தே எல்லாம் தெரியும் தான?? ஃபிரஸ்ட்ட விட எவ்வளோ தைரியமா இருக்க?? அப்புறம் என்ன?? பத்து நிமிஷம் தான். கீழ இருக்குற கடைக்கு போயிட்டு வந்திடறேன்மா. வீட்டுல பால் கூட இல்லடா…. ப்ளீஸ்ஸ்ஸ்”
“வேணாம் எனக்கு எதுவும் சாப்பிட வேணாம். நான் சாப்பிட மாட்டேன். என்னை விடு…. விட்டுடு!” மீண்டும் வாக்கியங்கள் அழுகையில் தொய்ந்தன. கார்த்திக் தன் மண்டையிலேயே அடித்துக் கொண்டான்! மாயாவை எப்படி தேற்றுவது என சில நிமிடங்கள் யோசித்தவன், பின் மீண்டும் அவளிடம் கெஞ்சத் தொடங்கினான்.
அவள் ரிப்பீட் மோட்டில் இருக்கும் பாட்டு போல, மீண்டும் மீண்டும் கூறிய வார்த்தைகளையே துப்பினாள். “வேணாம்ம்ம்ம்” என்பதை ஒரு ஐம்பது முறையாவது கூறியிருப்பாள்! ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியாமல், “உனக்கு வேணாம், ஆனா எனக்கு வேணும்.” என்று கார்த்திக் குரல் உயர்த்தவும், மாயா அடங்கிப் போனாள்.
தனக்காக அவன் பட்டது போதும் என்று தோன்ற, அதன்பின் எளிதாக சம்மதம் வந்தது அவன் மனையாளிடம் இருந்து. கார்த்திக்கின் மனதில் அவளின் சம்மதம் வந்ததும், உள்ளுக்குள் நகைப்பு ஒன்று ஓடி மறைந்தது. ‘உனக்கு வேண்டாம். ஆனா, நீ சாப்பிடறது எனக்கு வேணும்’ என்ற அர்த்தத்தில் அவன் கூற, மாயாவுக்கு அது வேறொரு புரிதல் தந்தது. அவளின் முன் நெற்றி முடியை ஒதுக்கிவிட்டு, காசையும் எடுத்துக் கொண்டு, கடைக்கு விரைந்தான் அந்த அன்புக் கணவன்!
கீழே அவர்களின் அடுக்குமாடி குடியிருப்பின் அருகிலியே இருந்த கடையில் இரண்டும் மூன்று நாட்களுக்கு தேவையானவற்றை அள்ளிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் கார்த்திக். அவன் திரும்பி வந்து பார்த்தப் போது மாயா படுத்திராமல் எழுந்து அமர்ந்திருந்தாள். அதன்பின் தான் அவனுக்கு மிகப்பெரிய வேலை வந்தது. மிகவும் வற்புறுத்தி, கெஞ்சி, கோபப்பட்டு மாயாவை காபியை அருந்த வைப்பதற்குள், கார்த்திக்கிற்கு போதும் போதும் என்றானது!
[the_ad id=”6605″]அதை குடித்தாளே தவிர அழுகையை மட்டும் எக்கணமும் நிப்பாட்டவில்லை அவள். அதுவே அந்த காபியை வாந்தியாய் எடுக்க போதுமானதாக இருந்தது! அன்று முழுவதும் இதே கதை தொடர, கார்த்திக் நொந்துப் போனான். அவள் சாப்பிடாத போது, அவனுக்கும் எதுவும் இறங்கவில்லை…. இப்படியே அன்று முழுக்க அவளை தேற்றுவதாக கூறி நேரத்தை ஓட்டினான். மாலையில் ஒருமுறை வீட்டிற்கு பேசினாள், மிகவும் பிரயத்தனப்பட்டு!
இரவு இருவருமே தூங்கவில்லை. அவளின் அருகிலேயே கால்களை நீட்டிக் கொண்டு அமர்ந்து எங்கோ பார்வை வெறிக்க அமர்ந்திருந்தவனை கண்டு மாயாவுக்கு இன்னும் துக்கம் பொங்கியது. மனதில் எழுந்த கேள்விகளை கேட்கவென அவனிடம் சென்று உட்கார்ந்தாள். அவளை அருகில் பார்த்ததும், “என்னடா எதாவது வேணுமா??” என்று வினவினான் அவளின் கணவன்.
“நீ எப்படி அந்த…. அந்த வீட்டுல அருவாளோட போன??”
அவளின் தலையை தடவிக் கொடுத்தபடியே, பதிலளித்தான் கார்த்திக். “எனக்கு அந்த மிருகங்கள ஒண்ணும் பண்ண முடியலையேனு ரொம்ப ஏமாற்றம்டா மனசுக்குள்ள. என்னால தனியாவும் எதுவும் செய்ய முடியாது. அதான், கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ரெண்டும் மாசம் முன்னாடி தான் என்னோட ஃபிரெண்ட ஈரோடுல பார்த்தேன். இன்ஸ்பெக்டரா இருக்கான்.
அவன் ஹெல்போட தான் அவங்கள அந்த இடத்துல கொண்டு வந்து வைச்சேன். நீ அதுக்குள்ள வந்துட்ட…. அவங்கள வேற கேஸ்ல உள்ள போட்டுட்டறேன்னு சொன்னான் அவன்.
ஆனா, அவங்கள எதுவும் பண்ணாம விட மாட்டேன்! இப்போ நினைச்சாலும், எனக்கு உடம்பேல்லாம் துடிக்குது!!” கார்த்திக் பேசும் போதே கோபத்தில் உதறல் எடுத்த அவன் உடம்பை பார்த்து பயந்தாள் மாயா. “வேணாம் கார்த்திக். நீ எதுவும் செஞ்சு மாட்டிக்காத. ப்ளீஸ்.”
“இந்த விஷயத்துல மட்டும் நீ சொல்றத என்னால கேக்க முடியாது மாயு. அதான் என்னோட பிரெண்டு இருக்கான்ல. நாங்க பார்த்துக்கறோம்!”
“ஏதாவது பிரச்சனை வரும் கண்டிப்பா. ப்ளீஸ்…. எனக்காக இது ஒண்ணும் மட்டும் செய்யாம விட்று!”
[the_ad id=”6605″]மாயா கார்த்திக்கை பார்த்து கெஞ்சலுடன் கேக்கவும், வேறு வழியில்லாமல் அரைமனதாக தலையாட்டினான் அவளின் கணவன். ஆனால், அந்த உறுதிமொழியை அடுத்த நிமிடமே மறந்துவிட்டு மீண்டும் தன் எண்ணங்களிலேயே உழன்றாள் மாயா.
அவளுக்கு உணவும் உறக்கவும் பாகற்காயாய் கசந்ததால், வாழ்க்கையே வெறுத்துப் போனது! மாயாவின் மனது இரண்டு வகையில் ஊசலாடியது! ஒரு பக்கம் தன் மேல் எழுந்த அருவருப்பில் மனம் துவண்டு போனது என்றால், மறுபக்கம் கார்த்திக் தன்னால் தான் எல்லாவற்றையும் அனுபவித்தான் என்ற குற்றயுணர்ச்சி மனதை அரித்தது. இதை ஒட்டியே அவள் மனம் பையித்தியம் பிடித்தது போன்று சுழன்றது.
காலையில் எழுந்ததும் கார்த்திக் மாயாவை எழுந்து அவளின் வீட்டிற்கு சென்று, குளித்து உடை மாற்றிக் கொண்டு வரச் சொல்ல, அதற்கு மாயா ஒன்றும் சொல்லவில்லை. இரவிலிருந்து அவளை எப்படி சரிபடுத்துவது என யோசித்தபடி இருந்தவன் மாயாவை அப்போது தான் உற்று கவனித்தான்.
பித்து படித்தது போல் இருந்தவளை கண்டு கார்த்திக் திகைத்து உலுக்க, மாயாவோ அலறித் துடித்தாள். “என்னால முடியலடா…. பையித்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு!! மண்டையில யாரோ ஓங்கி அடிக்கறாப்ல வலிக்குது. உடம்ப அசைக்கக் கூட முடியலை!! எதையும் யோசிக்கவும் முடியலை… சும்மாவும் இருக்க முடியலை… ரொம்ப கஷ்டமா இருக்குடா!!! அப்படியே தல முடியை பிச்சிட்டு எங்கையாவது போயிடுவனோன்னு பயமா இருக்கு. எனக்கு பையித்தியம் பிடிச்சிருமா கார்த்தி??”
அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டு, “ஒண்ணும் பிரச்சனை இல்லமா… நம்ம டாக்டர்கிட்ட போகலாமா?? அவங்ககிட்ட பேசுனா எல்லாம் சரியாகிடும்… இன்னிக்கே போகலாம்டா…” என்று இரவு தான் யோசித்து வைத்திருந்த திட்டத்தை கார்த்திக் கூற, அதை முதலில் மறுத்தாள் மாயா. “எனக்கு நடந்த அசிங்கத்த எல்லாம் அவங்க கிட்ட சொல்லனுமா… வேணாம், எனக்கு ஏதாவது மாத்திரை குடு, போதும். என்னால யார்கிட்டயும் பேச முடியாது.”
“எத்தனை நாள் மாத்திரை போடுவ?? இப்படியே உனக்குள்ள வைச்சிட்டு இருந்தா எதுவும் சரியாகாது. புரிஞ்சிக்கோமா. ப்ளீஸ், இன்னிக்கு ஈவ்னிங் நான் அப்பாயின்மென்ட் வாங்கறேன். நம்ம டாக்டர் கிட்ட போகலாம்.”
கார்த்திக் கூறுவதிலும் இருந்த நியாயத்தை அறிந்த மாயா, மிகவும் சலிப்பான ஒரு தலையசைப்பை தந்து மாலையில் அவர்கள் ஹாஸ்பெட்டல் போவதை உறுதி செய்தாள். அவளின் சம்மதம் வந்தவுடனே புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையில் மனநல மருத்துவரிடம் அப்பாயின்மென்ட் வாங்கினான் கார்த்திக். முன்தினம் போலவே அன்றும் இருவருக்கும் நேரம் கழிந்தது. இடையில் ஊரில் இருப்பவர்களிடம் அவளை தேற்றி பேச வைக்கவும் மறக்கவில்லை அவன்.
அன்று மாலை கஷ்டப்பட்டு அவளை தயார்படுத்தி ஹாஸ்பெட்டலுக்கு அழைத்துச் சென்றான் கார்த்திக். பாதி மயக்கமும், பாதி தயக்கமுமாக மாயா டாக்ஸியில் பயணித்தாள். ஒரு நேரம் பயந்து கணவனின் கைகளை பற்றுபவள், மறுநிமிடமே திகைத்து கைகளை உருவிக் கொள்வாள். அவள் படும் வேதனையை பார்த்து, மனதளவில் மிகவும் சோர்ந்துப் போனான் கார்த்திக்.
டாக்டரிடம் போகும் போது அவளின் உடம்பு சிறிது நடுங்குவதை அவனால் தெளிவாக உணர முடிந்தது. அந்த மருத்துவமனை சூழலும், அங்கே மெலிதாக வருடிய ஏசிக் காற்றும், அமைதியான நிசப்தமும் மாயாவுக்கு என்னென்னவோ செய்தது!! எல்லாம் டாக்டரை காணும் வரை தான். உள்ளே கீதாஞ்சலி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நடுத்தர வயது பெண்மணியை கண்டதும், அவளின் மனதின் அலைப்புரதல்கள் சிறுது சிறிதாக அடங்கின.
அந்த முகத்தில் நிலவிய அமைதி, மாயாவின் நெஞ்சில் நம்பிக்கை விதையை தூவியது. “சொல்லுங்க உங்க பெயர் என்ன? என்ன பண்றீங்க??”
[the_ad id=”6605″]டாக்டரின் கேள்விக்கு மாயா பதிலளிக்காமல், கார்த்திக்கின் முகத்தை பார்த்தாள் உதவிக்கு. அவன் இருவரையும் அறிமுகப்படுத்தவும், டாக்டருக்கு மாயாவிடம் தான் பிரச்சனை என்று புரிந்துப் போனது. “உங்க ஹஸ்பென்ட் தான் உங்களுக்கும் சேர்த்து பேசுவாறா?? ஹ்ம்ம்ம்…”
நகைச்சுவை உணர்வுடன் கீதாஞ்சலி கேட்க, மாயா அதை கூட தன்னால் செய்ய முடியவில்லையே என்ற பரிதவிப்பில், அழ ஆரம்பித்தாள்! கார்த்திக் அவளை தேற்றத் துவங்க, டாக்டரோ அவள் அழட்டும் என்றார். “சார் விடுங்க அவங்க அழட்டும். நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் தனியா பேசலாமா?? நீங்க வெளிய இருங்க அது வரைக்கும்…”
கார்த்திக்கிற்கு சம்மதிப்பதை தவிர வேறு வழியில்லை. தன்னை அப்போது தான் போகாதே என்பது போல் இறுக பற்றியிருந்த மனைவியை கண்களால் பலப்படுத்திவிட்டு, வெளியே சென்றான். கீதாஞ்சலி தாங்கள் அமர்ந்திருந்த மேசையை விட்டு எழுந்து வந்து, மாயாவின் கைகளை பிடித்து, “பயப்படாதமா. இங்க ப்ரீயா இல்லனா, வா சோபாவில் உட்காந்து பேசலாம்.” என்று அன்பொழுகிய குரலில் கூறி சோபாவில் தன் அருகில் அமர வைத்து பேச்சு குடுக்க தொடங்கினார்.
அவளின் பிறந்த ஊர், ஸ்கூல் படித்தது, அவளின் குடும்பம், அவளுக்கு பிடித்த விஷயங்கள் என்று முதலில் அவளை பற்றி புரிந்துக் கொள்ள செயல்பட்டார் மருத்துவர்.
மேற்கூறியவற்றை பற்றி பேசும் போது மாயாவின் அழுகை தானாக நின்றது. பேச்சிலும் சிறிது தெளிவு வந்தது. அடுத்து கல்லூரி நினைவுகள் பகிரும் போது கூட பெரிதாக சலனப்படவில்லை மாயா. அது முடித்ததும் என்ன நடந்தது என்ற டாக்டரின் கேள்விக்கு சில நிமிட மௌனமே பதிலாகியது! “கார்த்திக்கும் உனக்கும் எப்போ கல்யாணம் ஆச்சு?? உன்னோட லவ்வ அவன் கிட்ட நீ சொன்னியா??” கீதாஞ்சலியின் கேள்வியை கேட்டதும், நெஞ்சு முழுவதும் ஒரு வலியடைக்க பேச முடியாமல், தன் வருத்தங்களை கண்ணீராக பொழிந்தாள் மாயா.
அவள் அழுது முடிப்பாள் என காத்திருந்த கீதாஞ்சலியோ அவள் அதை நிறுத்துவதாக காணோம் என்றவுடன், அவரே பேச்சுக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நடந்தவற்றை வாங்கினார் மாயாவிடமிருந்து. தன் கதை மொத்தமும் மாயா முடிக்க, கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பிடித்தது!!
அதன்பின் டாக்டரிடம் தன் மனக்குமுறலை கொட்டினாள் மாயா, “எனக்கு ஒரு நேரம் வாழவே பிடிக்கலை மேடம். ஆனா, நான் போயிட்டா என்னோட அம்மா, ரித்து, விநா அண்ணா, எனக்காக எல்லாத்தையும் தாங்கிட்ட கார்த்தி இவங்க என்ன செய்வாங்கன்னும் பதறுது! என்னால ஒண்ணுமே முடியலை!!” மாயாவின் பிரச்சனைகளை கேட்டுவிட்டு, அவளின் கைகளை அழுத்தமாக பற்றிக் கொண்டு, அவளுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார் மருத்துவர்.
“எல்லாம் சரியாகிடும்… உன்னோட கஷ்டத்தை என்னால புரிஞ்சிக்க முடியுதுன்னு சொல்ல மாட்டேன். அவங்கவுங்க படற கஷ்டம் அவங்கவுங்களுக்கு தான் தெரியும். பட், இதுல உன் மேல ஒரு தப்பும் இல்லாதப்போ நீ இப்படி வாழவே பிடிக்கலைன்னு சொல்றதை நான் ஒத்துக்க மாட்டேன்.”
“நான் வீட்டை விட்டு போனது தப்பு தான மேடம்?? நான் தான் எல்லாத்துக்கும் காரணம்.”
இதை கேட்டு கீதாஞ்சலி மெலிதாக புன்னகை பூத்தார். “எப்படி நீ தான் காரணம்னு சொல்லுற?? நீ ஒண்ணும் நைட் ஒரு மணிக்கு பஸ் ஸ்டாப் போகலையே!
நைட் ஏழு மணிக்கு போனப்போ இப்படி நடந்ததுக்கு நீ காரணமில்ல. அந்த மாதிரி கேவலமானவனை பெத்து வளர்த்திருக்காங்களே அவங்க தான் காரணம்! அதுமட்டுமில்லாம அன்னிக்கு நீ உங்க அம்மா கூட போயிருந்தாலும், அவங்கள தூக்கிப் போட்டுட்டு, இல்ல அவங்களுக்கும் மயக்க மருந்து குடுத்துட்டு போக எவ்வளவு நேரம் ஆகிருக்கும், சொல்லு??”
டாக்டர் கூறியதை கேட்டு சிறுது நேரம் அமைதியானாள் மாயா. தான் கூறியதை அவள் உள்வாங்க நேரம் கொடுத்தவர், கார்த்திக்கை எண்ணி வியக்காமலும் இல்லை!! மீண்டும் அவளிடம் இப்போது அவள் எங்கே இருக்கிறாள் யாருடன் இருக்கிறாள் என கேட்டறிந்தார். அதை சொல்லும் போதே கார்த்திக்கின் மேல் தனக்கிருந்த குற்றயுணர்ச்சியை மாயா கூறவும், அதை போக்குவதற்கான வழியை அவளுக்கு கூறினார்.
இன்றைக்கு இது போதும் என நினைத்தவர், வெளிய படப்படக்கும் நெஞ்சோடு காத்திருந்த கார்த்திக்கை கூப்பிட்டார். வந்ததும் மாயாவின் முகத்தையே கார்த்திக் பார்க்க, அதிலிருந்து சரியாக அவனால் எதுவும் முடிவிற்கு வர முடியவில்லை.
கீதாஞ்சலி மீண்டும் மேசையில் அமர்ந்து மறுபக்கம் அமர்திருந்த இருவரையும் பார்த்து நம்பிக்கை ஊட்டும் விதமாக, புன்னகைத்தார். “ஒண்ணும் பிரச்சனையில்லை மிஸ்டர். உங்க வைப் கிட்ட எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். நம்ம ஒரு நாள் விட்டு திரும்ப மீட் பண்ணலாம். சனிக்கிழமை இங்க வாங்க…. அதுவரைக்கும் நைட் தூங்க டேப்ளட்ஸ் குடுக்கறேன். ஃபாலோ பண்ணுங்க போதும்.”
“எனக்கு சரியாகிடுமா மேடம்??” திடீரென மாயா இப்படி கேட்பாள் என மற்ற இருவரும் நினைக்கவில்லை. “கண்டிப்பா ஹன்டரட் பெர்சன்ட் சரியாகிடும்! அதுக்கு நீ தான்மா ஒத்துழைக்கனும். அப்போ தான் சீக்கிரமா சரியாகும் சரியா??”
மாயா பத்து வயது சிறுமிப் போல் தலையாட்டவும், கார்த்திக்கிற்கு புதிய ரத்தம் பாய்ந்தது போன்று ஒரு புத்துணர்ச்சி தோன்றியது. “படுத்திட்டே இருக்காம எதாவது சின்ன சின்ன வேலை செய்யனும். காபி போடுறது, வாஷிங் மிஷின்ல துணி போடுறது இப்படி உன்னால முடிஞ்ச ஏதாவது வேலை எடுத்து செய், போதும். அப்புறம் இது என்னோட நம்பர் எப்போ வேணும்னாலும் நீங்க கால் பண்ணலாம்!” மருந்துச் சீட்டின் பின்னே தன் தொலைப்பேசி எண்ணை குறித்துக் கொடுத்த மருத்துவர், மாயா அறியாமல் கார்த்திக்கை பார்த்து போன் செய்யும் படி செய்கை காட்டினார்.
அதை கவனித்து தலையசைத்து விடைப்பெற்றான் கார்த்திக். மாயாவின் மனது சிறிது அளவே முன்னேறி இருந்தாலும், அதுவே அவளின் மனதில் புதிய தெம்பை கொடுத்தது.
வீட்டிற்கு திரும்பியதும் தோசை ஊற்றி சாப்பிட்டுவிட்டு, மாயாவுக்கு மாத்திரை கொடுத்து படுக்க வைத்தான் கார்த்திக். அவள் தூங்கியதும் அவசரமாக மருத்துவருக்கு அழைத்து பேசினான். அவர் கூறிய கருத்துக்களை உள்வாங்கியபடி போனை வைத்தான் அந்த கணவன். டாக்டர் கூறியபடி நடப்பது என்ற முடிவுக்கு வந்தவனை, மாயா அடுத்த இரண்டு நாட்களில் வேறொரு காரியம் செய்து முழி பிதுங்க வைத்தாள்!!!