அத்தியாயம் – 27
காலை கணேஷனிடம் பேசி முடித்தவுடன் அன்றே மாலையில் நான்கு மணி அளவில், ரவீந்திரன் சாரை பார்க்கப் போனார்கள் கார்த்திக்கும் மாயாவும். இவர்களை கண்டவுடன், “என்ன சந்தோஷமா??” என கேட்டு புன்னகைத்தார் அவர்.
“ரொம்ப ரொம்ப சந்தோஷம் சார்….” மாயா கூறியதை கேட்டு, தலையசைத்து அடுத்து வரும் நாட்களுக்கான திட்டங்களை அவளிடம் பகிர்ந்தார். “இந்த படத்தோட பிரமோஷன் முடிய இன்னும் ஒரு வாரம் ஆகும். அதுக்கப்புறம் இரண்டு தமிழ் படம் தான் கமிட் ஆகிருக்கேன். ஒரு படம் முடிச்சிட்டு தான் அடுத்த படம் பண்ணுவேன் எப்போவும். சோ, இப்போவும் அப்படி தான். ரெண்டாவதா கமிட் ஆன படம் ஒரு சை-பை மூவி. வி.எப்.எக்ஸ்.க்கு(கிராபிக்ஸ்) ஏத்த மாதிரி கொஞ்சம் ஷூட் பண்ணவும் தெரிஞ்சிக்கலாம்.
நீ கொஞ்சம் கத்துக்கலாம் அந்த ஜானர் பத்தி…. திரும்ப நான் சென்னை வந்ததும் கணேஷ் உனக்கு கால் பண்ணுவாரு. அவர் சொல்லுவாரு ஷெட்யூல் பத்தி. எனக்கு டைம்மிங் ரொம்ப முக்கியம். சோ, ஷூட்டிங்கு லேட் ஆகாம பார்த்துக்கோ! அவ்வளவு தான, வேற எதாவது இருக்கா கணேஷ்??”
கணேஷ் அவரிடம் எதையோ செய்கை காட்ட, ரவீந்திரன் மீண்டும் மாயாவிடம் திரும்பி, “என்ன சேலரி எதிர்பார்க்கற??” என்று கேட்க அவள் திகைத்து விழித்தாள். கார்த்திக்கும் அவளை குறுகுறுவென பார்க்க, தன் ஆச்சரியத்தை கட்டுப்படுத்தி, குரலில் கவனத்தை வரவழைத்து பேசினாள். “எனக்கு இந்த பீல்டுல எவ்வளவு குடுப்பாங்க, எதுவுமே தெரியாது. பட், ரொம்ப காசு வராதுன்னு மட்டும் தெரியும், அஸிஸ்டென்டா இருக்கும் போது. நீங்க எவ்வளவு குடுத்தாலும், எனக்கு ஓகே தான் சார்…. உங்க கிட்ட வேலை கத்துக்கறதே பெரிய விஷயம்.”
“ஹ்ம்ம்ம், மாசம் ஐய்யாரிரம் இப்போதைக்கு தரேன். போகப் போகப் பார்க்கலாம்.”
மாயா திருப்தியுடன் தலையாட்ட, அத்துடன் அவர்கள் பேச்சு முடிவடைந்து விட, விடைப்பெற்றுக் கொண்டு நேராக ஹோட்டல் அறைக்கு பயணித்தனர். ஹோட்டல் அறைக்கு சென்றவுடன் கார்த்திக் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென யாருக்கோ அழைத்து ஆங்கிலத்தில் நாலு வார்த்தைகள் பேசி விட்டு மாயாவிடம் உடனே கிளம்பச் சொன்னான். “எங்க கிளம்பனும்?? எங்கப் போறோம் இப்போ??” பாம்பேவில் சுற்றிப் பார்க்கத் தான் அழைக்கிறான் என நினைத்து கார்த்திக்கை கேள்வி கேட்டாள் மாயா. அவனோ ஊருக்கே கிளம்பு என்றான்.
“என்னது ஊருக்கா?? நீ தான செவ்வாய்க்கிழமை வரைக்கும் இங்க இருக்கப் போறோம்னு சொன்ன?? இப்போவே கிளம்ப சொல்ற…”
“செவ்வாக்கிழமை போறதுக்கு தான் எதுவுமே புக் பண்ணலியே… எப்போ வேணும்னா கிளம்பலாம்னு தான வந்தோம். இப்போ எல்லாத்தையும் பேசிக்கிட்டு இருக்க டைம் இல்ல, பிளைட் புக் பண்ணிட்டேன் கிளம்பு சீக்கிரம்.”
மாயாவிற்கு வந்ததே கோபம்!? முன் தினம் சித்தி விநாயகர் கோவிலுக்கும், இஸ்கான் கோவிலுக்கும் மட்டுமே சென்றனர். அன்றும் ஜுஹு பீச்சுக்கு மட்டுமே சென்று வந்தனர். முழுதாக சுற்றி பார்க்காமல் கிளம்பச் சொன்னதால் குபுகுபுவென கோபம் ஏறியது மாயாவுக்கு. புலம்பித் தள்ளினாள்…
“வந்து எதுவுமே ஒழுங்கா பார்க்காம போறவங்க நம்மளா தான் இருப்போம்.”
[the_ad id=”6605″]
“நீ தான் ரெண்டு நாள் லீவ் சொல்லிட்டல ஆபீஸ்ல?? அப்புறம் எதுக்கு இப்படி அவசர அவசரமா கிளம்பறோம்னு புரியலை… அங்க சென்னை போய் என்ன பண்ண போறோம்??”
“இப்படி பாதி டிரிப்ல கூட்டிட்டு போறேன்னு மாமாகிட்ட, அண்ணாகிட்ட எல்லாம் சொல்றேன் பாரு!”
கார்த்திக் இவளின் கூற்றுகளை காதில் வாங்கியவாரே தெரியவில்லை. அவன் பாட்டுக்கு பெட்டியில் அனைத்தையும் அடுக்கி, இவளை அழைத்துக் கொண்டு அறையை காலி செய்தான். மீண்டும் டாக்ஸி பிடித்து விமான நிலையம் வரும்போதும் மாயா முகத்தை உர்ரென வைக்க, கார்த்திக்கிற்கு சிரிப்பு பொத்திக் கொண்டு வந்தது.
உள்ளுக்குள் நகைத்தபடி விமான நிலையத்தில், அவசர கதியில் போர்டிங் பாஸ் வாங்கச் சென்றனர். எதற்கு ஓடுகிறோம் என தெரியாமலே கார்த்திக் இழுத்த இழுப்பிற்கு அவன் பின் சென்றாள் மாயா. போர்டிங் பாஸ் கையில் கிடைத்தவுடன் தான் மாயாவுக்கு தெரிந்தது அவர்கள் செல்வது சென்னைக்கு அல்ல, கோயம்பத்தூருக்கு என்று.
“ஹே நம்ம ஊருக்கு போறோமா??”
“ஆமா ஏதோ அப்பாகிட்ட, உன் அருமை அண்ணன்கிட்ட எல்லாம் சொல்லனும்னு கத்திட்டு இருந்தியே, அதை சொல்றதுக்கு தான் போறோம்!!”
கார்த்திக் குறும்புடன் கூற, அவன் தோள்களிலேயே மகிழ்ச்சியுடன் சாய்ந்துக் கொண்டாள் அவன் மனைவி. எட்டு மணியளவில் விமானம் ஏறி, பத்து மணியளவில் கோயம்பத்தூர் சென்றடைந்தனர். அந்த நேரத்தில் யாரையும் கூப்பிடாமல், ஒரு ஆட்டோ பிடித்து இருவரும், கார்த்திக்கின் வீட்டில் காலடி எடுத்து வைத்தனர். தந்தைக்கு அழைத்து தாங்கள் வீட்டின் கதவின் முன் நின்றிருப்பதாக கூறவும், அலரடி அடித்தபடி கதவை திறந்தார் சுப்பிரமணியம்.
திறந்தவருக்கு என்னென்னவோ எண்ணங்கள்!! ஏன் இப்படி நடுநிசியை தொடும் வேளையின் போது, வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார்கள்? திகைப்புடன் கார்த்திக்கை பார்த்து, “என்னடா வரேன்னு சொல்லவே இல்ல??” என்று வினவினவும், அதற்கு பதிலாய் “எல்லாம் இவ சொல்லுவா… எனக்கு தூக்கம் வருது. குட் நைட்!” என்று கூறி தன் அறைக்கு சென்றே விட்டான்.
மாயா தான் கதை கதையாய் அளந்தாள். வார்த்தைக்கு வார்த்தை ‘ரவி சார்’ பற்றி தவறாமல் கூறினாள்.
சுப்பிரமணியத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியே…. “உனக்கு பெரிய சான்ஸ் கிடைச்சிருக்குமா. எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்துக்கோ அவர்கிட்ட. அங்க ஷூட்டிங் ஸ்பாட்ல ஃபுல் கான்ஸன்ட்ரேஷன் வேலை மேல தான் இருக்கனும். சரியா?”
“கண்டிப்பா மாமா. நீங்க போய் தூங்குங்க….”
“சரிடா குட் நைட்…”
“குட் நைட் மாமா” என்று சொல்லிவிட்டு, அவளும் கார்த்திக்கின் அறையில் இருந்த கட்டிலில் போய் விழுந்தாள். கண்ணெதிரே உறங்கும் கணவனின் முகத்தை பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு. முதன் முதலாக, அவன் அருகில் சென்று அவனின் கரங்களை தன் கரங்களால் அணைத்து நெருங்கி படுத்தாள். இவள் வந்து படுத்தது தெரிந்தோ தெரியாமலோ கார்த்திக் தூக்கத்தில் உளறினான், “கண்ணம்மா தூங்குடா” என்று. அவன் கூறியதை மட்டும் மனதில் பதிய வைத்துக் கொண்டு, மாயா நிம்மதியுடன் கண்ணுறங்கினாள்.
மறுநாள் காலை எழுந்தவுடன், மூவரும் அபிராமியை காணக் கிளம்பினர். காலை உணவை கூட அங்கே சாப்பிட்டுக் கொள்வதாக திட்டமிட்டனர். சுப்பிரமணியமும் ஒன்றும் அறியாயது போல் அபிராமியிடமும் தான் வருவதாக கூறிவிட்டு, விநாயகத்திடம் அங்கே வருமாரு சொல்லியும் ஆகிற்று. மாயா தான் கிளம்பவில்லை! அறையில் தலைவாரிக் கொண்டிருந்த மாயாவை பார்த்து, “ஹே இன்னுமா கிளம்பல?? சீக்கிரம் வா மாயு…” என்று அவசரப்படுத்தினான் அவளின் கணவன். தன் நீல முடியை சிக்கெடுத்தபடியே, “நீ ஏன் என்னை எப்போவும் மாயா, மாயுனே கூப்பிடற??” என்று வினவினவாள்.
“நான் என்ன கேக்கறேன் நீ என்ன சொல்ற??”
“கிளம்பிட்டு தான் இருக்கேன். அஞ்சு நிமிஷம் ரெடியாகிடுவேன். இப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…”
“ஏன் உன்னை மாயா, மாயுன்னு கூப்பிட்டா என்ன?? பிடிக்கலையா??”
கண்களில் ஆர்வமுடன் கார்த்திக் கேட்க, அவனை முறுவலுடன் பார்த்த மனையாளோ, வேறு கூறினாள். “பிடிக்காம இல்ல… ஆனா, நேத்து ராத்திரி சொன்ன மாதிரி, கண்ணம்மான்னு கூப்பிடறது அதை விட பிடிச்சிருக்கு!” கார்த்திக் நேற்று இரவு எங்கே கூறினோம் என யோசித்த வேளையில், மாயா அவனிடம் முன்னிரவு நடந்ததை விளக்கினாள். பின்னிய கூந்தலை, ஒய்யாரமாக பின்னால் தூக்கிப் போட்டுவிட்டு, தன் கணவனிடம் சென்று “என்ன கூப்பிடுவ தான??” என்று கேட்கவும் தயங்கவில்லை மாயா.
“ஹ்ம்ம்ம் சரிங்க மேடம்….” கார்த்திக் சந்தோஷமாக அவளிடம் சம்மதித்துவிட்டு, தன் மாமியார் வீட்டுக்கு புறப்பட்டான். காரை செலுத்தும் போது மாயா, சுப்பிரமணியத்திடம் பேசியபடியே வர, கார்த்திக் அவன் சிந்தனையில் உழன்றான். அவனுக்கும் மாயாவை கண்ணம்மா என்று அழைக்க கொள்ளை ஆசை தான்! ஏன் தன் சிந்தனையில் அவளை முக்கால் பாகம் அப்படித் தானே அழைப்பது?! ஆனால், நிஜத்தில் அப்படி கூப்பிடும் போது மாயாவும் முழுதாக தன்னை நம்பி மனதில் முழுதாக ஏற்க வேண்டும் என்று எண்ணினான்.
ஒரு மோசமான சூழ்நிலையில் தான் மாயாவின் காதலை அவன் அறிய நேரிட்டது! அது கார்த்திக்கின் மனதில் அப்படியே தங்கிவிட்டது ஓர் வடுவாக… தன் அன்பினாலும், காதலினாலும் மீண்டும் தன் மனைவியின் காதலை உயிர்பெற செய்தவன், இம்முறை அவளின் காதலை வாய் வார்த்தையாக கேட்க வேண்டும் என ஓர் நப்பாசை கொண்டான். அதன் பின் தான் அடுத்த அடியை தங்களின் வாழ்க்கையில் வைக்க முடியும் என நம்பவும் செய்தான். இவள் எப்போது தன் காதலை சொல்லி, தான் எப்போது வாழ்க்கையில் முன்னேறுவது??
[the_ad id=”6605″]
கார்த்திக் பெருமூச்சு விட்ட பொழுது அபிராமியின் வீடும் வந்துவிட்டது! வெளியே வந்து பார்த்த விநாயகம் தெருவே கூடுவது போல கத்தினான். “அம்மா இங்க வாங்களேன். உங்க பொண்ணு காலேஜுக்கு லீவ் போட்டுட்டு வந்துட்டா இங்க….”
“காலேஜ் லீவ் போட்டுட்டேனா?? காலேஜ்ல இருந்து டிஸ்கன்டினியூ பண்ணப் போறேன்….”
இதை கேட்டு விநாயகத்தின் உதடுகள் விரிந்து, அவன் கைகளால் அடைக்கப்பட்டன.
“உள்ள வாடா எல்லாத்தையும் சொல்றோம்…” கார்த்திக் அவனை இழுத்துக் கொண்டு சென்றான் வீட்டினுள். உள்ளே சென்றதும் ராஜ உபசாரம் தான் அனைவருக்கும்! எல்லோரிடமும் ரவீந்திரனிடம் உதவியாளராக சேருவது பற்றி கூற, ரித்தியா மாயாவை கட்டித் தன் சந்தோஷத்தை தெரிவித்தாள். விநாயகம் கார்த்திக்கை தோளோடு அணைத்துக் கொள்ள, அபிராமி மட்டும் சிறு சங்கடத்துடனே காணப்பட்டார். கார்த்திக் அவரிடம் சென்று தணிந்த குரலில், “அத்தை உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்குல??” என்று கேட்கவும், அபிராமி முழுமனதாக தலையாட்டினார்.
“அப்போ என்னை நம்பி உங்க பொண்ண வாழ்த்துங்க. கண்டிப்பா பெரிய ஆளா வருவா….” கார்த்திக்கிடமிருந்து எதுவோ ஓர் ஊக்க சக்தி, அபிராமியிடம் இந்த சொற்களில் செல்ல, அவரும் பெண்ணை கூப்பிட்டு வாழ்த்தினார்.
இரண்டு நாட்கள் ட்ரீட், கோவில் தரிசனம் என கழிய செவ்வாய் அன்று மீண்டும் சென்னை நோக்கிப் பயணப்பட்டனர். மறுநாளே கல்லூரியில் இருந்து விடுப்பட்டு, வீட்டில் சில நாட்கள் தங்கினாள் மாயா. அடுத்த வாரமே கணேஷிடம் இருந்து அழைப்பு வந்தது, ரவீந்திரனின் ஆபீஸிற்கு வரச் சொல்லி.
அங்கே சென்றவளுக்கு அடுத்த படத்தின் ஆரம்ப காட்சிகள் எங்கே எப்படி எடுக்கப் போகிறோம் என மூத்த உதவியாளரால் விளக்கப்பட்டது. “நம்ம சாருக்கு காலையில வர சூரியன் வெளிச்சத்துல ஷூட் பண்றது ரொம்ப பிடிக்கும். சோ, எல்லா ஷூட்டிங்கும் ஆறு இல்ல ஏழு மணிக்கே ஸ்டார்ட் ஆகிடும்!”
இதை கேட்டு மாயா திக்கென்றாலும், அனைத்தும் பாடமே என எடுத்துக் கொண்டாள். இப்படியே பாசிட்டிவ்வாக யோசித்து தன் வேலையை தொடங்கினாள். மாயா வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும், கார்த்திக் அவளின் தினசரி உணவில் கவனம் கொண்டான்.
“இனிமே டெய்லி காலைல சத்துமாவு கஞ்சி தான். முறைக்காத! எனக்கும் அதே தான். நீ நல்லா சாப்பிட்டு, ஹெல்தியா இருந்தா தான் வேலை பார்க்க முடியும். இனிமே ராகி சேமியா, கம்பு கூழு எல்லாம் பழகிக்கனும்! கீரை, முட்டை முதல்ல நல்லா சாப்பிடு… கேட்டல அன்னிக்கு முப்பத்தைஞ்சு கிலோ தூக்கனாராம்! நீயும் தூக்கனும்னா, எல்லாம் சாப்பிட்டா தான் முடியும்…”
மாயாவிற்கு மறுக்க எதுவும் ஒழுங்கான காரணம் கிடைக்கவில்லை… அதனால், அவளும் பழகிக் கொண்டாள் இந்த சாப்பாட்டு முறைக்கு. மற்றபடி இருவரும் ஒருவரை வம்பிழுத்துக் கொண்டு தான் இருந்தனர், அவர்களின் எல்லை சுவரை தாண்டாமல்! நாட்கள் இப்படியே கழிய, உதவியாளராக சேர்ந்து ஐம்பது நாட்கள் முடிவடையும் போது மாயா ஐந்து நாட்கள் ஹைதராபாத் போக வேண்டி வந்தது!
“அங்க ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில ஷூட்டிங். கொஞ்சம் சீன்ஸ் தான். சீக்கிரமே வந்திடுவேன்.” கார்த்திக்கிடம் ஆறுதல் கூறுவது போல் கூறினாலும், தனக்கு தானே சொல்லிக் கொண்டது போலவும் தோன்றியது. “யாருக்குடி சொல்ற?? நான் ஒண்ணும் ஃபீல் பண்ணலியே நீ போறதுக்கு!”
உதடுகளை சுழித்துக் கொண்டும், தோள்களை குலுக்கிக் கொண்டும் கார்த்திக் அசால்டாக கூற, மாயாவுக்கு குறுகுறுவென கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “இருடா… இங்கயே தனியா இரு… அப்போ தான் தெரியும்.”
ஆனால், கார்த்திக் உண்மையிலேயே அவள் இல்லாத தனிமையை மாயா சென்ற இரண்டாம் நாளே உணர்ந்தான். எவ்வளவு நேரம் கழித்து ஷூட்டிங்கில் இருந்து திரும்பினாலும், வீடு வந்ததும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் தன்னவளின் பேச்சை, அந்த பேசாத நிசப்தம் அவனுக்கு உணர்த்தியது.
மாயாவிற்கு அங்கே முழு தினமும் வேலை வாட்டியதால், இவனுடன் காலையிலும் மாலையிலும் சில நிமிடங்கள் மட்டுமே பேச முடிந்தது. அவ்வளவே! இறுதியில் ஐந்து நாட்கள் முடிந்து வீடு திரும்பியவளை விமான நிலையத்தில் ஆவலே உருவாக வரவேற்றவனை கூம்பிய முகத்துடனே பார்த்தாள் மாயா.
“ஹே என்னடி உம்முன்னு இருக்க?? சார் கிட்ட திட்டு வாங்குனியா??”
கார்த்திக் கேட்டதற்கு வீடு திரும்பியும் பதில் வரவில்லை. “கண்ணம்மா என்னாச்சு சொல்லுடா….” உருகலாக கேட்ட கணவனின் தோள்களில் சாய்ந்துக் கொண்டு, “இன்னும் ஒரு வாரத்தில குலு-மனாலி போகனும். அங்க ஒரு வாரம் கிட்ட ஷூட்டிங். எனக்கு போகவே கஷ்டமா இருக்கு…” என்று கூறி கார்த்திக்கையும் திகைக்க வைத்தாள்!
உடனே அவனின் திகைப்பை அவளுக்கு வேதனை கொடுக்கும் என்பதை உணர்ந்து அதை மறைத்துக் கொண்டு, தேற்றத் தொடங்கினான். “குலு-மானாலி சூப்பர் பிளேஸ். இப்போ அஞ்சு நாள் போனதே தெரியலை பார்த்தியா. அதே மாதிரி சட்டுனு போயிடும். இப்படி நிறைய நீ டிராவல் பண்ற மாதிரி தான் வரும். இதுக்கெல்லாம் சோகமா இருக்கக் கூடாதுடா….”
[the_ad id=”6605″]
“நீ சொல்றது சரி தான். பட், இப்போ தான் போயிட்டு வந்தேன். உடனே திரும்ப போகனும்னு சொன்னாங்களா. அதான் ஒரு மாதிரி இருந்துச்சு. நான் பார்த்துக்கறேன்…. ஆனா, உனக்கு லீவ் கிடைக்குமா?? நீயும் வரியா??”
“லீவ் கிடைச்சா நானே வர மாட்டனா கண்ணம்மா. ரொம்ப ஹெக்டிக்கா போயிட்டு இருக்கு வேலை! முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்றேன்.”
கார்த்திக் கூறியது போல், உண்மையிலேயே அவனின் வேலை பளுவை அவள் குலு-மனாலி செல்லும் முன் கண் முன்னால் பார்த்தாள் மாயா. தினமும் அவன் வீடு திரும்பவே ஒன்பது முதல் பத்தாகியது! இதில் அவன் வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் சிறியது என்பதை உணர்ந்து, கனத்த இதயத்துடன் விமானம் ஏறினாள்.
கார்த்திக்காலும் எதுவும் செய்ய இயலவில்லை. அதுவே அவனின் நெஞ்சை குடைந்தது. மாயாவிற்கு ஹைதராபாத்தில் இருந்தது போன்று முழுதினமும் வேலை இருக்கவில்லை குலு-மனாலியில். அவர்கள் சென்றது ஒரு பாடலை பதிவு செய்யவே. அதற்கு நாட்களும் தாராளமாக இருந்ததாலும், அங்கே விடியவே நேரம் பிடித்ததாலும் காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி அளவில் ஷூட்டிங் நடைப்பெற்றது.
அங்கே சென்ற இரண்டாம் நாளே அவளின் முகம் களையிழந்து இருப்பதை கண்டு, ரவீந்திரனே கேட்டார் மாயாவை. “என்ன மேடம் மூட் அவுட்டா??”
அப்போது தான் தன் அகத்தின் வேதனை முகத்தில் தெரிவதை அறிந்தால் மாயா. மழுப்பலாக சிரித்து விட்டு, “அப்படியேல்லாம் ஒண்ணுமில்ல சார்… நீங்க சொல்லுங்க.” என்று கூறி சமாளித்தாள். ஆனால், அவளாலும் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் கார்த்திக்கை பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை. மூன்றாம் நாள் இரவு பேசும் போது, கார்த்திக்கே அவளை சமாதானப்படுத்தினான்.
“ஹே இன்னும் அஞ்சு நாள் தான்மா. நீ அங்க இப்படி இருந்தா எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நானும் இங்க எவ்வளவோ டிரை பண்ணேன். பட், முடியலைடா….. சாரிமா!”
“நீ ஏன் சாரி சொல்ற?? லூசு, விடு நான் இங்க இருந்துப்பேன் ஒண்ணுமில்ல…”
இந்த சம்பாஷனையை மனதில் வைத்து, படுத்து உறங்கினாள். மறுநாள் ஏழு மணியளவில் எழுந்ததும், குளித்து டிவியில் பாடல்களை ஓடவிட்டு, கட்டிலில் அமர்ந்திருந்தாள். அப்போது அவளின் ரூம்மின் காலிங் பெல் அடிக்க, யாராக இருக்கும் என யோசனையின் ஊடே கதவை திறந்தாள். திறந்தவள் அதிசயத்தை பார்த்தவள் போல நிற்க, அதிசயம் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து கதவை மூடவும் செய்தது.
“கார்த்தி…..” கண்கள் பனிக்க, உடல் முழுவதும் ஒருவித சந்தோஷம் பரவ, துள்ளளுடன் தன் கணவனை தாவி அணைத்தாள் மாயா! தன் கைகளை கொண்டு மனைவியை தழுவியவனுக்கு, மனதில் பூர்ண திருப்தியை கொடுத்தாள் மனையாள். “ஹே கார்த்தி ஐ லவ் யூ! லவ் யூ சோ மச் டா!!!”
உணர்ச்சி பிழம்பாக மாறி கார்த்திக்கின் முகத்தில் மாறி மாறி முத்தமிட்டு, தன் அன்பை மனைவி வெளிப்படுத்த, அதற்கு பதிலாக கணவனும் தன் காதலை முத்தத்தால் வெளிக்காட்ட, அங்கே ஓர் அழகிய திருமண பந்தம் முழுமை பெற்றது!!!