வேறு வழியில்லாமல் அறைக்குள் வந்தான் கதிர். சோகமாக இன்பா அமர்ந்திருக்க அவன் அருகில் வந்து “என்ன மச்சான் கிளம்பலையா?”, என்று கேட்டான்.
“வெறியேத்தாத கதிர். என்னால முடியலை டா”
“வா இப்பவே மாமா கிட்ட பேசுவோம்”
“அவர் என் பேச்சைக் கேக்க மாட்டார்”
“கேக்கலைன்னா வீட்டை விட்டு போறேன்னு சொல்லு”
“வீட்டை விட்டு போனா எங்க டா போய்த் தங்குறது?”
“காதலிச்ச பொண்ணைத் தவிர வேற பொண்ணைக் கட்டிக்க முடியாதுன்னு எனக்கு நல்லா தெரியும் மச்சான். ஒழுங்கா மாமா கிட்ட பேசி சண்டை போடு. இல்லைன்னா கடைசி முயற்சியா வினோதினி கிட்ட பேசு”
“நாம கிளம்ப இன்னும் நேரம் இருக்கு. நீ மாடிக்கு போ. நான் வினோதினியை வரச் சொல்றேன்”
“வந்தா மட்டும் அவ சம்மதமா சொல்லப் போறா?”
“ஒரு வேளை சொல்லிட்டானா? பேசித் தான் பாறேன் மச்சான்”
“இப்ப எப்படி பேச? வீட்ல எல்லாரும் இருக்காங்க”
“நான் அவளை வர வைக்கிறேன்”
“அவ வந்தா வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சுரும் டா”
“யாருக்கும் தெரியாம அவ கிட்ட உன்னைப் பேச வைக்கிறது என் பொறுப்பு”, என்ற கதிர் நேராக இளவரசியைத் தேடித் தான் சென்றான்.
நிச்சயம் செய்வதற்காக இளவரசி பட்டு சேலை அணிந்து, தலை நிறைய பூ வைத்து, நகை அணிந்து கிளம்பி இருக்க ஒரு நிமிடத்தில் இன்பாவுக்கு உதவ வேண்டும் என்பதையே மறந்தே விட்டான்.
அவளையே அவன் இமைக்காமல் பார்க்க “நீ என்ன டா இங்க? ஒழுங்கா உன்னோட ரூமுக்கு போ”, என்றார் பார்வதி.
“கிழவி, உன் மேல கொலை வெறில இருக்கேன். பேசாம போயிரு. நான் இளவரசி கிட்ட பேச வந்தேன்”
“நான் பேசாம போகணுமா? கல்யாணம் வரைக்கும் உன்னை என் பேத்தி கிட்ட வர விட மாட்டேன்”
“கிழவி, உன் பேத்தியை நான் ஒண்ணும் செய்ய மாட்டேன். ஒரு விஷயம் பேசிட்டு போயிறேன்”
“அதை என் முன்னாடியே சொல்லு”, என்று பாட்டி நிலையாய் நிற்க வேறு வழியில்லாமல் “அரசி”, என்றான்.
“என்ன அத்தான்?”
“எனக்கு ஒரு உதவி செய்யணும். நீ நாம கிளம்புற வரைக்கும் இந்த ரூம்ல இருந்து வெளிய வரக் கூடாது”
“எதுக்கு டா என் பேத்தி வெளிய வரக் கூடாது?”, என்று பார்வதி கேட்க “வரக் கூடாதுன்னா வரக் கூடாது தான். வெளிய இளவரசின்னு யார் கூப்பிட்டாலும் நீ வெளிய வரக் கூடாது. இது என் மேல சத்தியம்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
“இவனுக்கு என்ன லூசா?”, என்று எண்ணி இளவரசி குழப்பமாக பார்க்க “இந்த கிறுக்கு பய எதுக்கு இப்படி சொல்றான்? ஏதோ பெரிய பிளான் பண்ணுறான் போல? எல்லாம் இன்பாவுக்காக தான் இருக்கும்”, என்று எண்ணிக் கொண்டு பேத்தியிடம் வேறு பேச ஆரம்பித்து விட்டார்.
இளவரசியிடம் சொல்லி விட்டு வெளியே வந்த கதிர் நேராக வினோதினி வீட்டுக்குச் சென்றான்.
அவனைக் கண்டதும் “வாங்கண்ணா”, என்றாள் அணு.
அவளைப் பார்த்து சிரித்தவன் “வினோதினி எங்க மா?”, என்று கேட்டான்.
“அக்கா உள்ள கிளம்பிட்டு இருக்கா”
“உங்க அம்மா அப்பா எல்லாம்?”
“அவங்களும் கிளம்பிட்டு இருக்காங்க”
“வினோதினியை ஒரு நிமிஷம் வெளிய கூப்பிடுறியா அணு?”
“இதோ சொல்றேன்”, என்று சொல்லிச் சென்ற அணு “அக்கா உன்னை கதிர் அண்ணன் கூப்பிடுறாங்க”, என்றாள்.
குழப்பமாக முகத்துடன் வெளியே வந்த வினோதினி “என்ன அண்ணா?”, என்று கேட்டாள்.
அவனோ அவளைத் திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் முழு அலங்காரத்தில் இருக்க “இவ எதுக்கு இப்படி அலங்காரம் பண்ணிருக்கா?”, என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. பின் இளவரசியும் இப்படி தானே அலங்காரம் செய்திருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டு “உன்னை இளவரசி கூப்பிடுறா மா”, என்றான்.
“என்னையா? எதுக்கு?”, என்று குழப்பத்துடன் கேட்டாள்.
“தெரியலை. ஏதோ ஹெல்ப் வேணுமாம். நீ அங்க வரியா?”
“நானா? அங்கயா?”, என்று தயங்கினாள்.
“ஒரு அஞ்சு நிமிஷம் தான். வந்துட்டு போயேன்”, என்று சொல்ல வேறு வழியில்லாமல் அவனுடன் சென்றாள்.
அவள் நேராக இளவரசி அறைக்குச் செல்லப் போக “இளவரசி அங்கே இல்லை மா. மாடி ரூம்ல தயாராகிட்டு இருக்கா”, என்றான் கதிர்.
“ஓ”, என்று சொல்லி விட்டு “இளவரசி”, என்று அழைத்த படி மாடி ஏறினாள்.
அவள் ‘இளவரசி’ என்று அழைத்தது இளவரசிக்கும் பார்வதிக்கும் கேட்டது.
“அதான் உன் அத்தான் காரன் உன்னை வெளிய வரக் கூடாதுன்னு சொல்லிட்டு போனானே? பொறுமையா இரு. அவன் என்ன தான் பண்ணுறான்னு பாப்போம்”, என்று பார்வதி சொன்னதும் அமைதியாகி விட்டாள்.
மாடிக்கு சென்ற வினோதினி அங்கு வேஷ்டி சட்டையுடன் நின்ற இன்பாவைக் கண்டு திகைத்து விட்டாள்.
“இவனா?”, என்று எண்ணி அவள் வெட்கத்துடன் தலை குனிய அவனுக்கோ அவளது அலங்காரம் திகைப்பைத் தந்தது. பின் இப்படி தயாராகச் சொல்லி பாமா சொல்லி இருப்பாள் என்று எண்ணிக் கொண்டு அவளைப் பார்த்தான். ஏனென்றால் பாமா தான் எப்போதும் இளவரசியை அலங்கரித்துப் பார்ப்பதை விரும்புவாள். அதனால் அப்படி நினைத்தான்.
அவன் அமைதியாக அவளைப் பார்த்த படி இருக்க “இளவரசி எங்க? என்னை வரச் சொன்னாளாம்?”, என்று கேட்டாள் வினோதினி.
“இளவரசியைப் பாக்குறது இருக்கட்டும். முதல்ல என்னை நிமிர்ந்து பாரு டி”, என்று கோபத்துடன் சொன்னான் இன்பா. அவனது கோபக் குரலில் வெட்கம் உதறி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“மேடம் இப்ப எங்க இப்படி மேக்கப் பண்ணி கிளம்பிருக்கீங்க?”, என்று நக்கலாக கேட்டான்.
அவன் கேள்வியில் அவளுக்கு சிரிப்பு வரப் பார்த்தது. ஆனால் அதை அடக்கிக் கொண்டு “உங்களுக்கு என்கேஜ்மென்ட்டாம். அதுக்கு அத்தையும் பாட்டியும் எங்களையும் கூப்பிட்டாங்க. எனக்கு இன்னைக்கு லீவ். அதான் வந்தேன். ஏன் நான் வரக் கூடாதா?”, என்று கேட்டாள்.
“உனக்கு கஷ்டமா இல்லையா டி?”, என்று தளர்ந்து போய்க் கேட்டான் இன்பா.
“என்ன கஷ்டம்?”
“எனக்கு வேற பொண்ணு கூட நிச்சயம் ஆகுறதை நினைச்சா உனக்கு கொஞ்சம் கூட கஷ்டமாவே இல்லையா?”
“உங்களுக்கு கல்யாணமே ஆனா கூட நான் ஏன் கவலைப் படணும்?”
“படுத்தாத வினோ. எனக்கு உன்னைத் தான் டி பிடிச்சிருக்கு”
“அதுக்கு நான் என்ன பண்ண?”
“உனக்கு என்னைப் பிடிக்கலையா டி?”
“இல்லை”
“அப்புறம் ஏன் டி என்னைக் கட்டிப் பிடிக்கிற? முத்தம் கொடுத்தா வாங்கிக்கிற?”, என்று கேட்டதும் அவள் முகம் சிவந்தது.
அதைப் பார்த்தவன் “பாத்தியா இப்ப கூட உன் முகம் வெட்கத்துல சிவக்குது”, என்றான்.
“ஹலோ சார், நீங்க இப்படி பேசினா என் முகம் அப்படித் தான் இருக்கும். அப்புறம் நானா ஒண்ணும் உங்களைக் கட்டிப் பிடிக்கலை. நீங்களா தான் எல்லாம் பண்ணுறீங்க”
“நான் பண்ணினா நீ என்னைத் தள்ளி விட வேண்டியது தானே?”
“முதல் நாள் தள்ளி விட்டதுக்கு தான் அப்படி வலிச்சது எனக்கு. எதுக்கு அந்த ரிஸ்க் எடுக்கணும்னு தான் என்னமும் பண்ணிக்கோங்கன்னு விட்டுட்டேன்”, என்று சொன்னவளுக்கு இங்கிருந்து ஓடி விட வேண்டும் போல இருந்தது.
“விளையாடாத வினோ”
“நான் விளையாடலை. நீங்க தான் தேவையில்லாதது பேசுறீங்க?”
“நீ பேசுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டி. நீ இல்லாம வேற பொண்ணு கூட… என்னால நினைச்சு கூட பாக்க முடியலை. நீ ஒரே ஒரு வார்த்தை மட்டும் பிடிச்சிருக்குன்னு சொல்லு. மத்தது எல்லாம் நான் பாத்துக்குறேன்”
“பிடிச்சிருந்தா தானே பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியும்?”, என்று அவள் கேட்க “ஏய்”, என்று கத்திய படி அவள் கழுத்தைப் பிடித்து விட்டான்.
அவன் செயலில் அதிர்ந்தாலும் அவனையே இமைக்காமல் பார்த்தாள். அவள் பார்வையில் எரிச்சலானவன் “சே”, என்ற படி அவள் கழுத்தை விட்டான்.