தன் கையை இறுகப்பற்றிக்கொண்டு முகத்தை புதைத்துக்கொண்டிருந்த நந்தினியை வாகாக அவள் புறமாய் சாய்ந்து அமர்ந்து ஆசையாய் அவன் பார்க்க, சரக்கென மறுபக்கம் இழுபட்டான். அவன் மறுபுறத்தில் அவனது கரத்தை நெரிப்பது போல இறுக்கமாய் கட்டிக்கொண்டு எக்கி அவன் தோளிலேயே சாய்ந்திருந்தாள் யசோதா. சூழ்ந்திருந்த மாயவலை அறுபட்டதை போல எரிச்சல் அவனிடம்.
இந்த கேப்பில் தெளிந்திருந்த நந்தினி, சீட்டில் சம்மணம் போட்டு அமர்ந்துக்கொண்டு நெஞ்சுக்கு குறுக்காக தன் கரங்களை கட்டிக்கொண்டு ஸ்க்ரீனை வெறித்திருந்தாள்.
அதைப்பார்த்ததும் நிலவனுக்கு இன்னுமே எரிச்சல் வர, “விடு யசோ” என்றான் அவளிடம். அவளுக்கு காதே கேட்கவில்லை. கவனம் முழுக்க படத்தில் தான் இருந்தது. கையை விலக்கிவிட்டால், இன்னும் வேகமாய் பற்றிக்கொண்டாள். வலுக்கட்டாயமாய் விலக்க அவனுக்கு மனமில்லை. யசோதா இடம் பொருள் இன்றி ‘என்ன மாமா உனக்கு பிரச்சனை?’ என்று கத்தினாலும் கத்துவாள் என்று தெரியும் அவனுக்கு.
கொஞ்சமாய் மறுபக்கம் அவன் நகர்ந்தாலும் சரக் சரக்கென அவன் கையை கட்டிக்கொண்டு இழுத்தாள் யசோதா. தெரிந்து செய்கிறாளா தெரியாமல் செய்கிறாளா என்றே புரியவில்லை அவனுக்கு. அவளுக்கு அடுத்து அமர்ந்திருந்த நண்பர்கள் எட்டிப்பார்ப்பதை போல தோன்ற, இவனும் பார்த்தான்.
‘ம்ம் ம்ம்ம்!’ என கண்ஜாடையிலேயே அவனை வெறுப்பேற்றினர். முகத்தில் அப்பட்டமான எரிச்சலை காட்டியவன், அதோடு முறைக்கவும் செய்ய, அப்படியே ஸ்க்ரீன் பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டனர். நிலவனுக்கு மிகுந்த அசௌகரியமாய் இருந்தது. யசோதா அவனை தொட்டு பேசுவது சின்ன வயதில் இருந்தே இயல்பு போல நடப்பது தான் என்றாலும், இந்த கணம் போல ஒரு நெருக்கம் இருந்ததே இல்லை. அவன் நெளிய நெளிய அதை யசோதா புரிந்துக்கொள்ளாமல் படத்தை பார்க்க, ஒரு நேரத்தில் தியேட்டர் விளக்குகள் எல்லாம் ஒளிர ஆரம்பித்தது.
‘ஹப்பாடா… இடைவேளை விட்டானுங்க’ நெஞ்சில் கைவைத்து பெருமூச்சு விட்டவன், முதல் வேலையாக யசோதா கரத்தை தன்னிடம் இருந்து பிரித்து விட்டான். நண்பர்கள் வெளியே செல்ல, யசோதாவும் எழுந்து நடக்க, “வா!” என்றான் நிலவன், நந்தினியிடம்.
“இல்ல, நான் இங்கேயே இருக்கேன்!” அவள் எழுந்து நிற்கும் அவனின் சட்டையை பார்த்தபடி மெல்ல சொன்னாள்.
“ஏன்? பாத்ரூம் போக வேண்டாமா?” அவன் பளிச்சென கேட்டு வைக்க, சங்கோஜமாக தலையை குனிந்துக்கொண்டவள், “நான் வரல” என்று மீண்டும் சொல்ல, “இங்க பாரு நந்தினி!” என்றான்.
“பாரு!!!” அழுத்தி சொல்ல, தலை நிமிர்ந்தாள் அவள்.
“உன்னோட தேவைக்கு கூட பேச தயங்குனன்னா இந்த உலகத்துல பொழைக்கவே முடியாது. நீ என்ன குழந்தையா? எத்தனை ஆளுங்க இருந்தா என்ன? எதுக்கு தயங்கணும்… பயப்படனும்?” என்றான். அவள் ஒன்றுமே சொல்லவில்லை. அவனே புரிந்துக்கொண்டான். பெண்கள் பள்ளி விடுதியிலேயே தங்கி வளர்ந்தவளுக்கு சேர்ந்தது போல பத்து ஆண்களை பார்த்துவிட்டாளே தன்னையறியாமல் உதறும். இந்த இரண்டு வருடமாய் தான் தனியாய் பள்ளிக்கு சென்று வர பழகியிருந்தாள்.
தனியாக என்றால், இந்த வருடமாக தான். போன வருடம் வரை யசோதா உடன் வந்துக்கொண்டிருந்தாள். இப்போது அவள் கல்லூரி முதல் வருடம் முடித்திருக்க, அவளுக்கும் இவளுக்கும் வேறு வேறு பாதைகள், வெவ்வேறு நேரங்கள்!
“வரியா இல்லையா?” அவன் கேட்டதும் எழுந்துவிட்டாள் அவள். பாராட்டான ஒரு பார்வையோடு முன்னே அவன் போக, அவன் அடியை பற்றி அவனை தொடர்ந்தாள் நந்தினி. வெளியே கூட்டமாக இருந்தது. அந்த தியேட்டரின் மூன்று ஸ்க்ரீனில் இரண்டுக்கு இடைவேளை நேரமாக இருக்க, சிற்றுண்டி வாங்க கூட்டம் வரிசையில் நிற்க, பாத்ரூம் பக்கம் நிரம்பியது தலைகள்.
நண்பர்கள் இவனுக்கு கையசைக்க, “நீ அங்க போ! நான் ஸ்நாக்ஸ் வாங்குறேன்” என்றவன், “என்ன வேணும் உனக்கு?” என்றான்.
“ஒன்னும் வே…” என ஆரம்பித்தவள், அவனது பார்வையில், “பாப்கார்ன்” என்றிட, “போயிட்டு வந்து இங்கேயே நில்லு!” என்றவிட்டு சென்றான்.
மெல்ல கூட்டத்தில் கலந்து மெதுவாய் அவள் பெண்கள் ஓய்வறையை நெருங்கும்போது, “ஏய் ஏய் ஏய்!!!” என்ற சத்தம். தன்போக்கில் சத்தம் வந்த திக்கில் அவள் திரும்ப, கூட்டமாய் நான்கைந்து ஆண்கள் சிரித்துக்கொண்டிருந்தனர்.
இவள் கண்டுக்கொள்ளாமல் கடக்க, “இங்க நமக்கெல்லாம் ஒண்ணுக்கே வழி இல்ல மச்சான், முன் சீட்டுல ஒருத்தன் இந்த பக்கம் ஒன்னு, அந்த பக்கம் ஒண்ணுன்னு சும்மா வாழுறான்!” அவள் காதில் விழும்படி வேண்டுமென்றே கத்திதான் சொன்னான் அவன்.
நந்தினி இந்த பேச்சை காதில் ஏற்றாமல் ஓய்வறைக்கு சென்றுவிட்டாள். அவளுக்கு அந்த பேச்சு உண்மையில் புரியவில்லை.
உள்ளே நிற்கவே இடம் இல்லாமல் இருந்தது. சற்று தள்ளி வாஸ்பேசின் அருகே நின்றுக்கொண்டாள் நந்தினி. கூட்டத்தில் முண்டியடித்து போகும் திறமை எல்லாம் அவளுக்கு இல்லை. அப்போது ஒரு பாத்ரூம் கதவை திறந்துக்கொண்டு வந்தாள் யசோதா.
அவளை கண்டதும், “யசோ, நானும் வந்துடுறேன், இங்க இருக்கியா?” என்று அவள் கேட்க, வாஸ்பேசினில் கையை கழுவிக்கொண்டே, “ஐயையோ, இந்த நாத்தத்துல எவன் நிப்பான்? நான் போய் ஐஸ்க்ரீம் கேக்கணும் மாமாக்கிட்ட… நீ பொறுமையா எல்லாரும் போனதும் வா” என்றவள் என்றுவிட்டாள்.
அப்போது மூன்றாவது ஸ்க்ரீனுக்கும் இடைவேளை நேரம் வர, இன்னும் ஒரு பங்கு கூட்டம் குமிந்தது அங்கே. இதற்குமேல் ஒதுங்கி நின்றால் சரிவராது என உணர்ந்தவள், தானும் ஒரு அறைக்கு வெளியே சென்று நின்றாள். அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து நகர்ந்து வெளியேற போனவளை, “ஏ நந்தினி!” என்ற பரிட்சயமான குரல் நிறுத்த, திரும்பியவள், முகமே பிரகாசிக்க, “டீச்சர்?” என்றாள்.
கை உலர்த்தும் இயந்திரத்தின் அருகே வாசலுக்கு பக்கமாய் நின்றிருந்தார் அந்த டீச்சர். வேகமாய் அவரை நெருங்கி, “மாலை வணக்கம் டீச்சர்” என்று பிரகாசமாய் நந்தினி சொல்ல, “எப்படிடி இருக்க?” என்றார் அவர்.
“நல்லா இருக்கேன் டீச்சர்…” என்ற நந்தினி, “உங்களை அடிக்கடி நினைப்பேன். இன்னைக்கு பாப்பேன்னு எதிர்ப்பாக்கவே இல்லை” என்றாள் சிரிப்போடு.
“ஸ்கூல்ல இருக்கும்போதே டீச்சரை நினைக்காத புள்ளைங்களுக்கு மத்தில நீ பழைய டீச்சரை கூட பாக்கணும்ன்னு நினைக்குறியே!” அவர் சொல்ல, “உங்களை எப்டி டீச்சர் மறப்பேன்? நீங்க தானே என்னோட மாரல் சப்போர்ட்டே! அப்பா போனதுக்கு அப்புறம் ஹாஸ்டல்ல உங்க கவனிப்புல தானே நான் வளர்ந்தேன். அந்த நன்றி என்னைக்கும் எனக்கு உண்டு” மெலிதாக கண்கள் கலங்க சொன்னாள் நந்தினி.
“இதுல என்னடா இருக்கு?” என்றவர், “யாரோட வந்த? எப்படி இருக்க?” என்றார்.
“நல்லா இருக்கேன் டீச்சர், என்னோட கார்டியன் கூட வந்தேன்!” என்றதும், “பரீட்சை எப்படி செஞ்ச? அதை சொல்லு… இந்த முறையும் ஸ்கூல் பர்ஸ்ட் வருவியா?” என்றார் ஆவலாய்.
சத்தியில் அவள் பத்தாம் வகுப்பு வரை படித்த பள்ளியில் ஆசிரியராகவும், விடுதி பாதுகாப்பாளராகவும் இருந்தவர் தான் இவர். பதினொன்றாம் வகுப்புக்கு நந்தினி சத்தியை விட்டு கவுந்தப்பாடிக்கு வந்திருக்க, தொடர்ப்பு விட்டுப்போயிருந்தது.
“நல்லா பண்ணிருக்கேன் டீச்சர்… பர்ஸ்ட் வந்துடுவேன்னு தான் நினைக்குறேன்” என்றாள் அவள்.
“அம்மா போலாமா?” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் ஒருத்தி.
“இது என் பொண்ணு… காவியா” என்ற டீச்சர், அந்த காவ்யாவிடம், “இது நந்தினி! நான் சொல்லிருக்கேன்ல?” என்றார் கேள்வியாய்.
“அட நீங்க தானா அது? உங்களை சொல்லி சொல்லி என்னை டார்ச்சர் பண்ணுவாங்க. நந்தினி மாறி படி, நந்தினி மாறி சொல் பேச்சு கேளு, நந்தினி மாறி…” என்று அவள் சொல்லிக்கொண்டே போக, “ஏய்… பொய் சொல்லாத டி” என்று மகளை போலியாய் அதட்டினார் டீச்சர்.
சிரித்த காவ்யா, “இவ்ளோ இல்லன்னாலும், உங்களை புகழ்ந்து ஒரு நாலு வார்த்தையாது என்கிட்டே சொல்லிடுவாங்க” என்றாள் நந்தினியிடம். நந்தினி என்ன சொல்வதென தெரியாமல், புன்னகையோடு நிற்க, “அம்மா, படம் போட்ருவாங்க, போலாமா? இளா வேற கால் பண்றான்” என்று சொல்ல, “நீ போ, நான் வந்துடுறேன்” என்றார் டீச்சர்.
காவ்யா ஃபோனில் அழைத்த தன் அண்ணனிடம், “இளா… கத்தாத, வந்துட்டேன்” என்றபடி செல்ல, “காலேஜு கடைசி வருஷம் படிக்குறா இவ. இவ்ளோ நாலு கோயம்பத்தூர்ல ஹாஸ்டல்ல இருந்தா… நான் வேலையை விட்டுட்டேன். அதனால எங்க வீட்டுல இருந்து கடைசி வருஷ படிப்பை முடிச்சுடுவா” என்று டீச்சர் சொன்னதும் திகைத்தாள்.
“ஏன் டீச்சர் வேலையை விட்டுட்டீங்க?”
“என் பையன் வெளிநாடு போறாம்மா… எங்களையும் கூப்புடுறான். காவ்யாக்கும் போக தான் எண்ணம். இந்த வருஷ படிப்பை முடிச்சுட்டான்னா, நானும் அவளோடவே போய்டுவேன்… ரெண்டு வருஷ சர்விஸ் தான் இருக்கு, ரெஸ்ட் எடுங்கன்னு புள்ளைங்க ஒரே தொல்லை” சுக அலுப்பாக சொன்னார் அவர்.
பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருமே கூட்டம் குறைந்து தாங்கள் மட்டுமே நிற்பதை மறந்துப்போயினர். நந்தினிக்கு கூட, வெளியே ஒருவன் தன்னை தேடுவானே என்ற எண்ணம் இல்லை.
வெளியே ஒருவனோ, பெண்கள் ஓய்வறை வாசலை தான் பார்த்தவண்ணம் தள்ளி நின்றிருந்தான். அவன் நண்பர்கள் எல்லாரும் உள்ளே சென்றாகிவிட்டது. தானும் போவதாக சொன்ன யசோதாவை வம்படியாய் பிடித்து, “அவளை காணோம் யசோ… உள்ளபோய் பார்த்துட்டு வா” என்று நிலவன் சொல்ல, “படம் போட்டுடுவாங்க, போ மாமா” என்றாள் அவள்.
“நான் போக முடியாது யசோ, அதனால தான் கேட்டுட்டு இருக்கேன் உன்னை. ப்ளீஸ் போய் பார்த்துட்டு வா!” என்று கெஞ்சல் போல கேட்க, “போனவளுக்கு வர தெரியாதா மாமா? படம் பாக்கணும் விடு மாமா” என்றவள், “நீ வேணா இங்கயே நில்லு அவளுக்கு, நான் போறேன்” என்று நகர்ந்தாள்.
“உனக்காக தான் அவளே வந்தா… அந்த பொறுப்பு கூட உனக்கு வேண்டாமா?” என்று கேட்டுவிட, “எனக்கு பொறுப்பு இல்ல, உனக்கு இருக்குல? நீ போ!” என்றவள் நிற்காமல் சென்றுவிட்டாள். அந்த ஷணம் யசோதா மேல் வெறுப்பே வந்துவிட்டது அவனுக்கு, ‘ச்சை’ என!
தானே போகலாமா?! என்றுக்கூட நினைத்துவிட்டான். சற்று அருகேயும் சென்றுவிட்டான்.
“நந்தினி…” குரல் கொடுக்க, உள்ளிருந்து எந்த சத்தமும் இல்லை. அந்நேரம், சுத்தம் செய்யும் பெண் ஒருவர் அவனைத்தாண்டி உள்ளே போக முனைய, “அக்கா அக்கா… உள்ள நந்தினின்னு ஒரு பொண்ணு இருக்காளான்னு கேட்டு சொல்லுங்களேன்” என்றான்.
அவர் இவனை மேலும் கீழுமாய் பார்க்க, “கட்டிக்கப்போற பொண்ணு க்கா… காணோம்! ப்ளீஸ்” முகத்தை பாவமாய் வைத்து அவன் கேட்டதும், வாயில் வெற்றிலையை மென்றுக்கொண்டே உள்ளே சென்றவர், “யம்மா… நந்தினியா நீ!?” என்றார்.
டீச்சரிடம் பேசிக்கொண்டிருந்தவள், மிரண்டுப்போய், “ம்ம்ம்” என்று தலையாட்ட, “நீ கட்டிக்கப்போறவன் வெளில நிக்குறான், போ” என்றுவிட்டு தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார். தூக்கிவாரிப்போட்டது அவளுக்கு. டீச்சரை அதே திகைப்புடன் அவள் பார்க்க, “யாரு?” என்றார் அவர் கூர்மையாய்.
“கார்டியன் மாமாவோட பையன்!” அவள் சொல்ல, அவளை அழைத்துக்கொண்டு அவர் வெளியே சென்றதும், நந்தினி முகத்தை பார்த்தபின்னர் தான் அவனுக்கு நிம்மதியே வந்தது.
“எவ்ளோ நேரமா காணோம்ன்னு தேடுறேன் தெரியுமா?” அவன் கொஞ்சமாய் கடிய, “டீச்சர் கூட பேசிட்டு இருந்தேன்” என்றாள் அவள்.
அப்போது தான் உடன் வந்தவரை பார்த்தவன், “வணக்கம் டீச்சர்” என்றான். அவனுக்கு அவரை தெரியும். ஸ்கூல் விடுதியில் இவளை ஒவ்வொரு முறை விடும்போதும் இவரிடம் சொல்லிவிட்டு தான் வருவான்.
அவருக்கு இவனை சட்டென அடையாளம் தெரியவில்லை. ஆள் உருவில் மாற்றம் வந்திருக்க, பழைய ஒடிசலான நெடுமரம் போன்ற பையனை தான் தெரிந்தது.
“மறந்துட்டீங்களா? நந்தினியை விட வரப்போ உங்ககிட்ட பேசிட்டு தானே போவேன்!?” அவன் எடுத்து கொடுத்ததும், “அட, நீயாப்பா? அடையாளம் தெரியல” என்றவர், இயல்பாக சில நிமிடங்கள் அவனிடம் உரையாடிவிட்டு, “நல்லா படிக்குற பொண்ணு, படிக்க வைங்க” என்றார்.
“கண்டிப்பா டீச்சர்” அவன் உறுதிக்கொடுக்க, தனது பர்சில் இருந்து ஒரு கார்டை எடுத்தவர், “இது என் கார்டு. உனக்கு எந்த நேரம் என்ன உதவி வேணாலும் என்கிட்ட வா! சும்மா வார்த்தையா சொல்லல… நிஜமா தான் சொல்றேன்” என்று சொல்லி அவளிடம் நீட்ட, வாங்கிக்கொண்டவள், “நன்றி டீச்சர்” என்றாள்.
அவர் அங்கிருந்து சென்றதும், நந்தினியின் கரத்தை பற்றிக்கொண்டவன், “பேசுறதை வெளில வந்து பேச மாட்டீங்களா? உள்ள போனவளை காணோம்ன்னு நான் ஒருத்தன் இங்க அல்லாடுறேனு தோணவே செய்யாதா?” என்றான் கடுகடுப்பாய்.
அவள் அப்படியே நிற்க, “கொஞ்சம் விட்டுருந்தா உள்ளயே வந்துருப்பேன். பொம்பளைங்க கையாள எனக்கு அடி வாங்கி குடுக்கத்தான் திட்டம் போட்டுருப்ப போல நீ!” என்று கிண்டலை கூட கடுகடுவென அவன் சொல்ல, பதறினாள் அவள்.
“இல்ல மாமா… நான் அப்படி எல்லாம் நினைக்கல” என்றாள். ஒன்றும் சொல்லாமல் அவள் கைப்பிடித்தே உள்ளே அழைத்து சென்றான். இருட்டில் தடுமாறியவளும் அவன் கையை விலக்கவில்லை. தங்கள் இருக்கையில் வந்து இருவரும் அமர, “செம்ம சீனு தெரியுமா மாமா? மிஸ் பண்ணிட்டீங்க போங்க” என்ற யசோதாவை அவன் கண்டுக்கொள்ளவே இல்லை.
அமர்ந்தவுடனே நந்தினி பக்கம் நகர்ந்து சாய்ந்துக்கொண்டவன், தன் கையையும் அவள்புறமாகவே வைத்துக்கொண்டான்.
“பயமா இருக்கா? கை வேணுமா?” அவன் வெகு நெருக்கத்தில் கேட்க, “ம்ஹும்!” என தலையாட்டினாள் அவள்.
“எனக்கு பயமா இருக்கு, உன் கை தரியா?” அவன் கேட்க, விழி விரித்தவள், “ம்ஹும்!” என முன்பை விட வேகமாய் தலையாட்ட, “பாத்து, கழண்டு விழுந்துடப்போகுது!” உர்ரென சொன்னவன் ஸ்க்ரீனை நோக்கி திரும்பிவிட்டான். உண்மையில் படம் அவர்களை உள்ளே இழுத்துக்கொண்டது.
படம் முடிந்து எல்லோரும் வெளியே செல்ல நகர, கூட்டத்தில் இடிப்படாமல் யசோதாவையும் நந்தினியையும் பத்திரமாக அழைத்து சென்றான் பொன்னிலவன். அவர்கள் பின்னால் வந்த கூட்டத்தில் ஒருவன், “வாழ்றான் மச்சான்!” என்று சத்தமாய் சொல்ல, “வக்கு இருக்கு வாழ்றான், விடேன் டா” என்றான் இன்னொருவன் கேலியுடன்.
“நம்மக்கிட்ட இல்லாத எதுடா அவன் கிட்ட இருக்கும்? இப்படி உரசுராளுங்க” அவன் சொல்லவும், அப்போது தான் பொன்னிலவன் கவனம் அந்த பேச்சில் போனது. ஆட்கள் அதிகம் இருந்ததால், கூட்டம் மெதுமெதுவாக தான் நகர்ந்தது.
இந்த கூட்டத்தில் என்ன இது பேச்சு? என முகச்சுளிப்போடு பார்த்தவனுக்கு அப்போது தெரியவில்லை, பேச்சே அவர்களை பற்றியது என்று!
“ப்ரீ டிக்கெட்டா கூட இருக்கும்டா, நம்மளும் ஒரு ட்ரை போட்டா என்ன?” ஒருவன் சொல்ல, அந்த கூட்டம், ‘ஹே ஹே ஹே’ என கூச்சல் போட்டபடி வேகமாய் முண்டிக்கொண்டு முன்னே போக, சகட்டுமேனிக்கு எல்லோரையும் இடித்தது. அதில் சிலர் சத்தமாகவே திட்ட, பலர் முகத்தை சுளித்தனர்.
எதையும் கண்டுக்கொள்ளாது அவர்கள் குதித்துக்கொண்டே முன்னே போக, யசோதா மேல் இடித்தான் ஒருவன். ‘ப்ச்’ என முகத்தை சுளித்தவள், “மாமா…” என்று பின்னால் வந்த நிலவனை அழைக்க, நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தவன், அவளை மேலும் தனக்கு முன்னே இழுத்துக்கொண்டு, “போ, போ” என்றான்.
“அவனை திட்டு மாமா!” யசோதா சொல்ல, “திட்டி பிரயோசனமே இல்ல, வேணுன்னே பண்றவங்களை ஒன்னும் செய்ய முடியாது” என்று எரிச்சலாய் அந்த கும்பலை பார்த்துக்கொண்டே சொன்னான். வாசலை நெருங்கும் நேரம், சட்டென ஒரு வேகத்தோடு நந்தினி மேல் மோதினான் ஒருவன். அவன் மோதியதும், “செம்ம ஷாட் மச்சி!” என்று வேறு அவன் நண்பர்கள் கண்ணடித்து புகழ, அழுகையில் உதடு பிதுங்கியது நந்தினிக்கு.
“நான் சொன்னேன்ல? ப்ரீ ஹிட் கிடைக்கும்ன்னு!” ஒருவன் கமென்ட் அடிக்கும்போதே, நந்தினியை இடித்தவன், ‘அம்மா’ என அலறியிருந்தான். நொடியில் அந்த கும்பலே நான்கடிகள் விலகியிருக்க, பொன்னிலவனுடன் நந்தினி நெருங்கி நிற்க, யசோதா கூட ஓரடி தள்ளிதான் நின்றிருந்தாள்.
அலறியவன் தரையில் கிடக்க, சில நொடிகள் என்ன நடந்ததென புரியாமல் நின்றிருந்த அந்த குழு, நண்பனுக்கு அடி என்றதும் திமிறிக்கொண்டு வந்தது.
பொன்னிலவனும் ஒன்றும் தனியாக வரவில்லையே!!! அவனது நண்பர்களும் சேர்த்து அடிக்க ஆரம்பிக்க, இரு குழுவுக்கும் இடையே கைகலப்பானது. யசோதா பயந்தால் தான் என்றாலும், நந்தினி நடுங்கியே விட்டாள். அதிலும் நிலவனின் முகம் காட்டும் ஆக்ரோஷத்தை கண்டவளுக்கு சும்மாவேனும் கூட அவனிடம் இனி பேச நா வருமா என்றே தெரியவில்லை.
சற்று நேரத்திலேயே தியேட்டர் நிர்வாகத்தார் வந்து, ‘அமைதியாக போகவில்லை என்றால், போலீசை அழைக்கவேண்டி வரும்’ என்று சொல்ல, இருதரப்புமே சற்று அடங்கியது. அதன்பின் சில நிமிடங்களில் மெல்ல களைய ஆரம்பித்தனர்.
வண்டியை எடுத்த பொன்னிலவன் அருகே அமரக்கூட பயமாய் இருந்தது நந்தினிக்கு.
“யசோ, நீ உக்காரேன்!” அவள் சொல்ல, “எனக்கு வேடிக்கை பாக்கணும்” என்றாள் யசோதா.
பொன்னிலவன் அறியாமல், “ப்ளீஸ் யசோ” என்று நந்தினி கெஞ்ச, இன்னும் ஏறமால் நிற்கும் பெண்களை பார்த்து, “என்ன?” என்றான் நிலவன். அந்த குரலில் நந்தினி பதற, “என்னை நடுல உக்கார சொல்றா மாமா” என்றுவிட்டாள் யசோதா.
அதற்கு பொன்னிலவன் பார்த்த பார்வையில், அடுத்த நொடி அவன் அருகே இருந்தாள் நந்தினி. வண்டி வேகமாய் கிளம்பியது. எங்கேயும் அவன் பார்வை நகரவில்லை. வீட்டுக்கு சென்று அவன் வண்டியை நிறுத்த, ஏற்கனவே நேரமானதால், வாசலோடு தங்கள் வண்டியை எடுத்துக்கொண்டு நண்பர்கள் கிளம்பியிருந்தனர்.
உள்ளே சென்ற யசோதா, “ம்மா… பசிக்குது!” என்று கத்திக்கொண்டே கிட்சன் போனாள். பொன்னிலவன் நிற்காமல் மாடியேற, தானும் உடைமாற்ற எண்ணி மாடிக்கு சென்றாள் நந்தினி. தனது அறைக்குள் சென்று உடை மாற்றிவிட்டு தன்னை சுத்தம் செய்துக்கொண்டு அவள் வெளியே வர, மாடி வளைவில் விருட்டென குறுக்கே வந்தான் பொன்னிலவன்.
துள்ளி விலகினாள் அவள் பயந்து. அவன் தான் என்று தெரிந்ததும் கொஞ்சமே கொஞ்சம் ஆசுவாசம் வர, “வழி மாமா” என்று முனக, “என்னை பார்த்தா பூச்சாண்டி மாறி இருக்கா?” என்றான்.
“இல்ல!” என்று சொன்னாலும் அவள் கண்கள் அப்படி தான் என்று சொன்னது அவனுக்கு.
“என்னை பார்த்து இன்னொரு முறை பயந்த… கொன்னுடுவேன்! புரியுதா?” என்று கேட்க, அதுக்கூட மிரட்டல் தொனியில் தான் கேட்டது அவளுக்கு. பயத்தை மறைத்து மாங்கு மாங்கென மண்டையாட்டினாள்.
“போ!” அவன் விலக, சின்ன இடைவெளியில், எலி போல புகுந்து ஓடியவளை கண்டு புன்னகை அரும்பியது நிலவனுக்கு.