“அத்தே, முந்தாநேத்து ராத்திரி வேலைன்னு போனவரு இன்னும் வரல. ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறாரு. உங்களுக்கு எதுவும் சொன்னாரா?” பூக்கட்டி கொண்டிருந்த ஜெயாவிடம் வேலை முடித்து வந்து விசாரித்தாள் யசோதா.
“அங்க அவருக்கு ஒன்னும் வேலை இல்லாமே அத்தே!?” அவள் சொல்லும்போதே, வாசலில் வண்டி வந்து நின்றது. கார்முகிலன் நெடுநெடுவென உள்ளே வந்தான்.
அவனைக்கண்டதும், “வேலைன்னு கண்ட நேரத்துல போறவன் ஒரு போனை போட்டு அவ்வப்ப சொன்னா தான் என்னடா?” என்று ஜெயா கேட்க, அவர்களை திரும்பிக்கூட பாராமல் மாடி ஏறியவன், “வந்தோன்ன தொண்டையை தொறக்காத ம்மா, ஒரு டீயை போடு” என்றுவிட்டு போக,
“இவன் அப்பா இருந்தவர தான் பயம், மரியாதை எல்லாம்… அவர் போனதுமே இவன் என் கையை மீறி போய்ட்டான்” வெகு சலிப்பாக சொல்லியவர் மகன் கேட்ட டீயை போட கிட்சன் சென்றார்.
யசோதாவுக்கு இப்போதே மாடிக்கு சென்று அவனோடு பேச வேண்டும் என்ற எண்ணம் தான். அவன் மீதான கோவம் எல்லாம் அவன் இல்லாத இந்த இரண்டு நாட்களில் கரைந்தே போனது. கிட்டதட்ட இரு வாரங்கள் அவள் முகம் திருப்பியும், அவனை கண்டுக்கொள்ளாமல் இருந்தும், அவன் அவளை ‘ஏன்!?’ என்று சீண்டவில்லை. அது இன்னுமே அவளை வாட்டியது தான். ஆனாலும், அவன் இல்லாத இந்த இரு நாட்கள் அவள் கோவத்தை மாற்ற வைத்தது.
மாடியை பார்த்தபடி அவள் நின்றிருக்க, இரு டம்ளர்களை எடுத்துக்கொண்டு வந்தார் ஜெயா.
“இந்தா யசோ… ரெண்டு பேரும் போய் குடிங்க” என்று கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு மாடி ஏறினாள்.
மேலே சென்ற கார்முகிலனோ சட்டை பட்டன்களை கழட்டிக்கொண்டே, ஃபோனில் அழைப்பு விடுத்தான். மறுபுறம் அழைப்பு எடுக்கப்பட்டதும், “பாப்பா எப்படி இருக்கா இப்ப?” என்றான்.
“இப்போதானே இங்கிருந்து போனீங்க? அதுக்குள்ள என்ன ஆகிடுமாம் உங்க மவளுக்கு?” மீனா அங்கிருந்து கேட்க, புன்னகை அவன் முகத்தில்.
“யாரோ ரெண்டு நாள் முன்னாடி கட்டிப்புடிச்சு அழுதாங்க!” அவன் கிண்டலாய் சொல்லிக்கொண்டே சட்டையை கழட்ட, “அது, பயத்துல… இப்ப தான் சரியாகிட்டாளே! தெம்பு வந்துடுச்சு” என்றாள் மீனா.
லுங்கியை ஹேங்கரில் இருந்து எடுத்தவன், “ஆஹான்… தெம்பு வந்தது தெரியாம, நான் வேற கிளம்பி வந்துட்டேனே…” கள்ள சிரிப்போடு அவன் பேச, “யாரு போக சொன்னா? திரும்பி வாங்க” என்றாள் அவள்.
“வந்துட்டா போச்சு!” அவன் சொல்லும்போது, “மாமா…” என்றாள் யசோதா. நொடியில் அவன் முகமே மாறிப்போனது. “என்ன?” என்றாள் திரும்பி சுள்ளென.
“டீ…” அவள் சொல்ல, “வைச்சுட்டு போ!” என்றான். வைத்தவள் போகாமல் அங்கேயே கட்டிலில் அமர்ந்து தனது டீயை பருக, எரிச்சலாய் பார்த்தவள், மெல்லிய குரலில், “அப்புறம் பேசுறேன் மீனு, பாத்துக்க” என்று வைத்துவிட்டான்.
“யாரு ஃபோன்ல?” யசோதா உடனே கேட்டாள். அவன் பேசியது கேட்கவில்லை என்றாலும், அவன் முகபாவனை அவளை கேட்க வைத்தது.
டீ கிளாசை கையில் எடுத்தவன், “உனக்கு தேவையில்லாதது” என்றான். அவனது வேலை தொடர்பாக நிறைய அழைப்புகள் வரும். எந்த அழைப்பு என்றாலும் அவள் கேட்டால் அவன் இதைத்தான் சொல்லுவான்.
அந்த பேச்சை விட்டவள், “ரெண்டு நாளா வீட்டுக்கே வரலையே நீங்க?” என்றாள்.
“ஏன் இதுக்கு முன்ன நான் போனதே இல்லையா இப்படி?”
“இல்ல, ஃபோன் கூட எடுக்காம இருந்தது இல்லல?” அவள் தன்மையாகவே கேட்டாள்.
கழுத்தை மட்டும் திருப்பி அவளை பார்த்தவன், “வேற எங்க இருக்கும்?” என்று முறைக்க, “இல்ல, கார்மெண்ட்ஸ்ல அவசர வேலை எதுவும் இல்லையாமே! நீங்க கூட ரெண்டு நாளா அங்க போகலைன்னு கேள்விப்பட்டேன்” என்று சொல்ல, திரும்பி அவளை தீயென முறைத்தான் கார்முகிலன்.
“எவன் சொன்னது உனக்கு? என்ன? பின்னாடி ஆள் வச்சு பாக்குறியா?” அவன் எகிற, “இல்ல மாமா, நீங்க போனே எடுக்கலன்னு உன்கூட வேலை பாக்குற திவாகர் அண்ணாக்கு கூப்புட்டேன், அப்போதான் அவர் சொன்னாரு” என்றதும் அவன் முகமே மாறிப்போனது.
“அவன்கூட உனக்கென்னடி பேச்சு?” அவன் த்வனியே மாறி இருந்தது. இதற்கு அஞ்சித்தானே சத்தமாய் சண்டையிட வேண்டியதை கூட தன்மையாய் பொறுமையாய் கேட்க ஆரம்பித்தாள். ஆனாலும் அவன் புத்தி குதற்க்கமாகவே தன் கேள்வியை முன் வைக்க, மாற்றி பேச கூட தெம்பு இல்லை அவளுக்கு.
“நான் வீட்டுக்கு வரலையேன்னு அவனோட பேசுனியா? இல்ல” என்று நிறுத்தியவன், “நான் வீட்டுக்கு வரலன்னு அவனோட பேசுனியா?” என்று வார்த்தைகளை அழுத்தி வேறு விதமாய் பேச, “உங்ககிட்ட ஏதோ தப்பு இருக்கு, அதை மறைக்க என்னை நீங்க தப்பா பேசுறீங்க” என்று விட்டாள் தைரியமாய்.
“நீ பண்ண தப்பெல்லாம் தெரியக்கூடாதுன்னு தானே என்னைக்கூட வச்சுருக்க?” அவன் கேட்டுவிட, “என்ன பேசுறீங்க நீங்க?” என்றவளுக்கு வார்த்தையே வரவில்லை, எழுந்துவிட்டாள்.
“நல்லவ மாறி நடிக்காத!” என்றவன், அவள் கரத்தை பட்டென இழுத்து மணிக்கட்டை அழுத்தி, “இது சொல்லும்… நீ செஞ்சதை!” என்றுவிட்டு, வெடுக்கென உதற தடுமாறி படுக்கையிலேயே விழுந்தாள்.
“ஹலோ சார், உள்ளே வரலாமா?” சிரித்த முகமாய் அலுவலக அறைக்கதவை கொஞ்சமாய் திறந்து எட்டிப்பார்த்தான் இளங்கோவன்.
“வாங்க வாங்க” என்ற பொன்னிலவன், கையில் இருந்த நோட்டை மூடிவிட்டு, “உட்காருங்க” என்று உபசரிக்க, “சில மாடல்ஸ் கொண்டு வந்துருக்கேன் சார்… பாருங்க…! உங்களுக்கு எந்த மாதிரி வேணும்ன்னு சொன்னீங்கன்னா, நம்ம இடத்துக்கு ஏத்த மாறி அதை டிசைன் பண்ணிடலாம். ரொம்ப பெரிய வேலை எல்லாம் இருக்காது சார், சீக்கிரம் முடிச்சுடலாம்” என்றவன் தனது டேபை எடுத்து நீட்டினான்.
அவன் காட்டிய மாடல்களை எல்லாம் பார்த்த பொன்னிலவன், “எனக்கு ஏனோதானோன்னு இல்லாம நல்லா ஸ்ட்ராங்கா சீலிங் க்ளோத்ஸ் போட்டு தரனும். ரொம்ப அடைஞ்ச மாதிரி இல்லாம, வரவங்க நின்னு பாக்க வசதியோட வேணும். சும்மா வெறும் பூச்செடி மட்டும் இல்லாம, நிறைய மூலிகை செடி, மருத்துவ செடி எல்லாம் இருக்குறமாறி ஏற்ப்பாடு பண்ணுங்க” என்று சொல்ல,
“எப்படி கேக்குறீங்களோ அப்படியே பண்ணிடலாம் சார்” என்றான் இளங்கோ.
“இந்த ‘சார்’ ரொம்ப இடிக்குது, பேர் சொல்லி கூப்பிடலாமே!?” என்று சிரித்தான் அவன்.
“கூப்பிட்டுட்டா போச்சு” என்று சிரித்த இளங்கோ, “உங்க பேரென்ன?” என்று கேட்க, “அதையே சொல்லலையா நான்?” என்றவன் புன்னகையுடன், “பொன்னிலவன்” என்று சொல்ல, எதிரே சிரித்திருந்தவனின் முகத்தில் புன்னகை உறைந்தது.
“என்ன பேரு?” அவன் மீண்டும் கேட்க, இன்னும் சிரித்தவன், “பொன்னிலவன்!” என்றான் அழுத்தமாய்.
“உங்க அப்பா பேரு?” இளங்கோ கேட்டதும், புருவம் சுருங்கியவன், “தியாகராஜன்… ஏன்?” என்று கேட்க, “இல்ல, எனக்கு தெரிஞ்சவரான்னு பாத்தேன்!” என்றான் இளங்கோ.
“தெரிஞ்சவனா?” சிநேக சிரிப்போடு அவன் கேட்க, “தெரியும்ன்னு தான் நினைக்குறேன்” என்ற இளங்கோ, “இந்த இடத்தை போட்டோஸ் எடுத்துக்கலாமா?” என்றான்.
“கண்டிப்பா, வாங்க!” என்ற பொன்னிலவன் எழுந்து வெளியே அழைத்து சென்றான். உடன் யோசனையோடு சென்ற இளங்கோ, “உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்றான்.
உறைந்த சிரிப்போடு திரும்பிய பொன்னிலவன், “ம்ம்ம்!” என்றுவிட்டு முன்னால் போக, “அவங்க… அவங்க என்ன பண்றாங்க?” என்றான் இளங்கோ.
அப்படியே நின்ற பொன்னிலவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த மாதிரி கேள்விகள் புதிதாய் பார்க்கும் பலரும் கேட்டிருந்தாலும், அப்போது போல எளிதாய் கடக்க முடியவில்லை இப்போது. சில நாட்களாய் அதிகம் உணரப்படும் அவளின் நினைவுகள் அவனை அலைக்கழிப்பது கூட காரணமாய் இருக்கலாம்.
“பொன்னிலவன்… உங்களைதான்!!” அந்நியரிடம் சொந்த விஷயங்கள் கேட்கக்கூடாதே என்றுக்கூட இல்லாமல் திரும்பவும் அவன் கேட்க, அழுத்தமாய் திரும்பியவன், “தெரியல!” என்றான்.