கட்டிலில் தொய்ந்து அமர்ந்திருந்த யசோதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. தன் வாழ்க்கை எங்கே தவறுகிறது? தன் தவறு ஏதும் இருக்குமா? என சுய அலசலில் ஆழ்ந்தாள்.
கார்முகிலனை விரும்பி ஒன்றும் அவள் மணமுடிக்கவில்லை. அவனாக கேட்டபோது மறுக்காமல் செய்துக்கொண்டாள். யோசித்துப்பார்த்தால் அவளை திருமணம் செய்த புதிதில் அவன் மொத்தமாகவே வேறாக தான் இருந்தான். விலகி விலகி நின்றவளை கூட முகம் சுளிக்காமல் அணுகினான். அவள் எடுத்தெறிந்து பேசினால் கூட அவன் அமைதியாக கடந்திருந்தான்.
அவளும் விட்டுக்கொடுத்தெல்லாம் நடக்கவில்லை. அவன் நெருங்கி நெருங்கி வந்தபோது அவளாலும் முகம் காட்ட முடியாமல் போக, அவனோடு ஒன்ற தான் ஆரம்பித்தாள். இல்லறமும் நல்லறமாக தான் போனது. அப்படித்தான் அவள் நினைத்தாள். வருடம் இரண்டை நெருங்கியபோது கார்முகிலனிடம் நிறைய மாற்றங்கள். அவள் லேசாக முகம் திருப்பினாலும் அவளுக்கு மேல் இருந்தான் அவன். கொஞ்சகொஞ்சமாய் அவனுக்கு பயந்து, அடங்கி இப்போது பேசக்கூட யோசிக்கும் அளவில் வந்துவிட்டாள்.
வேகமாய் அறைக்குள் கார்முகிலன் நுழைய, எழுந்து நின்ற யசோதா, “மாமா… என் மேல ஏதாவது கோவமா?” என்றாள். ஆரம்ப காலத்தில் இப்படி கேட்டால், “இல்லையே!” என்பவன் அவளை அன்றிரவு அதிகமாகவே கவனிப்பான். சில முறை அதற்க்காகவே அவனிடம் அப்படி கேட்டதும் உண்டு.
அதன்பின், வருடங்கள் கூட, இதே கேள்வியை எத்தனையோ முறை கேட்டிருக்கிறாள். அவனும் யோசிக்காமல், “இல்ல” என்று தான் சொல்வானே ஒழிய அவளை கண்டுக்கொள்ளவே மாட்டான்.
இப்போதும் அதே கேள்வியை அவள் முன்வைக்க, மேசை ட்ராயரில் எதையோ தேடி எடுத்துக்கொண்டிருந்த கார்முகிலன், “இ…” என ஆரம்பிக்கும்போதே அவன் பேச்சும் நின்றது, செயலும் நின்றது.
அவனை முதுகோடு கட்டியணைத்திருந்தாள் யசோதா. அவள் அணைப்பில் இருந்த அழுத்தம் சொன்ன சேதி அவனுக்கு விளங்காமல் இல்லை. ஆனாலும் ஒரு ஒவ்வாமை. அப்படியே நின்றான்.
யஸோதாவுக்குள் ஒரு எண்ணம். இருவருக்குமான தாம்பத்திய வாழ்க்கை சீரில்லாமல் இருப்பது கூட இந்த அவனின் சிடுசிடுப்பு, கோவத்துக்கு காரணமாய் இருக்குமோ என்று!? கடந்த ஒரு வருடமாகவே விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் அவர்களின் ரகசிய ராத்திரிகள் இருந்திருக்கும்.
அதிலும் ராதாவின் தொடர் புலம்பலில் அவள் மாதாமாதம் மருத்துவமனை ஏறி இறங்க, அவர்களும் ஒவ்வொரு மாதமும் சில நாட்களை குறித்துக்கொடுத்து ஒன்றாக இருக்க அறிவுறுத்த, வீட்டில் இவனிடம் அதை சொல்லும்போது சிரத்தையாய் கேட்டுக்கொள்பவன் அந்த நாட்களில் வீடு தங்குவதே இல்லை.
போன மாதம் அவள் ‘அந்த நாட்களை’ பற்றி அவனிடம் பேசவே இல்லை. அறைக்குள் வந்தவனை அவள் விடவில்லை. அந்த ஒரு நாள் தான். அடுத்த நாட்கள் எல்லாம் அவனை பிடிக்கவே முடியவில்லை. மிகவும் நம்பினாள். பிள்ளைப்பேறு கிடைத்துவிடும் என்று! ‘இல்லை’ என்றானதன் வெளிப்பாடு தான் அன்று நிலவனிடம் அப்படி பேசிவைத்தது.
இப்போது அவளே வந்து அவனை அணைக்க, அவனும் அசையாமல் நிற்க, அவன் வயிற்றின் மீது வைத்திருந்த கைகளை அப்படியே மேல்நோக்கி நகர்த்தி இரு கை சந்திலும் விட்டு தோளோடு அணைத்தவள், அவன் மீது தாடை ஊன்றி, “சொல்லுங்க, என் மேல கோவமா?” என்றாள் கிசுகிசுப்பாய்.
கழுத்தை மட்டும் திருப்பி அவளை பார்த்த கார்முகிலன் ஒன்றுமே சொல்லாமல் அவள் கரங்களை பிரித்துவிட்டு தள்ளி நிறுத்தினான் அவளை. யசோதா அவனையே பார்க்க, “என்ன இன்னைக்கு பண்ணனுமா?” என்றான்.
“மாமா….” அவள் நெருங்கி வர, கை நீட்டி தடுத்தவன், “எவளோ டாக்டர் ஒருத்தி சொல்றதை எல்லாம் என்னால செய்ய முடியாது. எனக்கு தோணனும்” என்றான்.
“தோணவே மாட்டேங்குதே உங்களுக்கு…” கொஞ்சம் உரிமையாகவே அவனிடம் முகம் சுருக்கி சொல்ல, “உன்கிட்ட தோண மாட்டேங்குது” என்றான். அவன் சொன்னதை வேறு விதமாய் திரித்துக்கூட அவள் நினைக்கவில்லை. சொன்னதை சொன்னபடி புரிந்துக்கொண்டவள், “ஏன்? நான் நல்லா இல்லையா?” என்றாள்.
மீண்டும் மேசை ட்ராயரை பார்த்தவன் அவன் தேடிய பேப்பர் கிடைத்துவிட, அதை தன் மொபைலில் போட்டோ எடுத்தபடி, “நல்லா இருந்தா மட்டும் போதுமா?” என்றான்.
“வேற என்ன வேணுன்னு சொல்லுங்க” அவள் அவனை நெருங்க, “என்கிட்ட இருந்து உனக்கு எதுவும் கிடைக்காது. தேவையில்லாம என்னை நெருங்காத யசோதா” என்றபடியே வெளியே சென்றான்.
வாசல் வரை போனவனை மறித்தவள், “நான் உங்க பொண்டாட்டி, நியாபகம் இருக்கா?” என்றாள்.
“மறந்துட்டேன்னு நினைக்குறேன்! நீயும் மறந்துட்டா நல்லா இருக்கும்” என்று சொல்லிவிட, அப்போது தான் அவன் சொல்வதை அவள் தீவிரமாகவே எடுக்க ஆரம்பித்தாள்.
“என்ன பேசுறீங்க மாமா?”
“நான் பேசுறதை புரிஞ்சுக்கோ… நான் சும்மா சொல்லல” அவன் அழுத்தமாய் சொல்ல, “நான் என்ன செஞ்சேன் மாமா?” என்றாள் அவள். கேட்கும்போதே கண்கள் கலங்கிவிட்டது.
“நீ ஒண்ணுமே செய்யல, அது தான் என் பிரச்சனை!” என்றவனுக்கு அழைப்பு வர, “வாட்சைப் ல அனுப்பிட்டேன் சார், பாருங்க” என்று பேசிக்கொண்டே போய்விட்டான்.
அவன் பேச்சில் அங்கேயே தேங்கி நின்ற பெண்ணுக்கு நகர்ந்துப்போகக்கூட தோன்றவில்லை. சிந்தனைகள் தறிக்கெட்டு பின்னோக்கி சென்றது. அவளுக்கு மட்டுமல்ல, பக்கத்து அறைக்கு ஏதோ வேலையாய் வந்த ராதாவின் காதிலும் இந்த பேச்சுக்கள் விழ, மகளது வாழ்க்கை பூதாகரமாய் மிரட்டியது. செய்து வைத்ததன் மிச்சம் தான் தொடர்கிறதோ என்ற அச்சம் வேறு!!!
யசோதாவை பேசிவிட்டு சென்ற கார்முகிலனும் நிம்மதியாய் நிற்கவில்லை. வீட்டின் பின்னே தோட்டத்தில் தனிமையில் அமர்ந்தவனுக்கு அவன் செய்யும் தவறை நியாப்படுத்தும் எண்ணமில்லை. அதற்காக கூனி குறுகவும் தோன்றவில்லை. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய சூழ்நிலைகளை தான் நினைக்கக்கூட பிடிக்காதவனாய் வெறுத்தான் அவன்.
அவனிடம் எத்தனை பிழைகள் இருந்திருந்தாலும் ‘ஒழுக்கத்தில்’ பிழை என்று இருந்ததே இல்லை. அதில் பிழை செய்வான் என்று அவனும் நினைத்ததே இல்லை. தந்தையின் முகம் ஒரு நொடி கண் முன் வந்துப்போனது.
‘தப்புன்னு தெரிஞ்சே தான் பண்றேன். சாரி ப்பா! உங்களுக்கு என்னைக்குமே நான் பிடிச்ச மகன் இல்லை’ என்றவன் சிந்தனைகள் தந்தையிடம் போனது.
***
மனதுக்கு நெருக்கமாய் தோன்றிய புதியவன் ‘மனைவி’யை பற்றி கேட்டதும் பொன்னிலவனின் மனம் என்றும் இல்லாததாய் அவன் கட்டுப்பாட்டை மீறி கடந்த காலத்தில் கரைய துடித்தது. இளங்கோ அவனிடம் சொல்லிக்கொண்டு விடைப்பெற்றபோது கூட இயந்திரம் போல தலையாட்டியவன் நின்ற இடத்திலேயே நின்றான். அவன் நினைவுகள் மட்டும் அவனை விட்டு பின் சென்றது.
இளங்கோ தன் வண்டியை இயக்கிக்கொண்டு நேரே தன் வீட்டுக்கு தான் சென்றான். இரண்டு வீடுகள் மட்டுமே கொண்ட இரண்டாம் மாடியில் இருந்த தன் வீட்டுக்கு சென்றவன் கதவை திறக்க, வெறுமையான வீடே வரவேற்றது. பையை சோபாவில் வீசிவிட்டு மொபைலுடன் பக்கத்து வீட்டு கதவை தட்டினான். கதவு திறக்கும் சில நொடிகளுக்கு கூட காத்திருக்க முடியாமல் மீண்டும் அவன் படபடவென தட்ட, கதவை திறந்தாள் அவன் மகள் வானதி.
“ஐ… அப்பா சீக்கிரம் வந்தாச்சு… நந்தும்மா… அப்பா பாரு” என்று அவள் சத்தம் கொடுத்துக்கொண்டே உள்ளேப்போக, கதவை அகல திறந்து வைத்தவன், அங்கிருந்த சேரில் அமர்ந்தான்.
கிச்சனில் இருந்து வானதியுடன் சிரித்து பேசியபடி வந்த நந்தினி, “சீக்கிரம் வந்தாச்சு… நர்சரி விஷயமா பேசனும்ன்னு போனீங்க?” என்று கேட்டபடி டீயை நீட்ட, ஒரு கையில் அதை வாங்கிய இளங்கோ, மறுகரத்தால் தன் மொபைலை நீட்டினான்.
ஏதோ வேலை தொடர்பாக இருக்கும் என்று நினைத்து தான் பார்த்தாள். கண்டிப்பாக ‘அவனை’ எதிர்ப்பார்க்கவில்லை. இரு விரல்கள் பேராசை கொண்டு அவனை பெரிதாக்கி பார்க்க, அவனது பக்கவாட்டு தோற்றம் தான் தெரிந்தது. இதற்கு மேல் பெரிதாக்க முடியாது என்றதும் அப்படியே பார்த்துக்கொண்டே நின்றாள் அவள். அவனை சில நாட்கள் முன்பு தான் நேரில் கண்டாள் என்றாலும், இது போல இமைக்காமல் கண்ணில் நிரப்ப கிடைக்கவில்லையே.
அவள் கையில் இருந்த ஃபோனை எட்டி எட்டி பார்த்த வானதி, சட்டென அவளது கையை கீழ இழுத்தபடி, “இது அன்னைக்கு கோவில்ல பார்த்த மாமா தானே?” என்று கேட்டிட, இளங்கோவின் கண்கள் அதிர்ந்து விரிந்தது.
“இது யாரு நந்தினி?” அவன் தீவிர குரலில் கேட்டிட, அவள் பார்வை ‘அவனில்’ இருந்து அகலவில்லை. பொறுமையற்ற இளங்கோ, “வானதி, கீழ் வீட்டுல போய் விளையாடு” என்று மகளை அனுப்பிவிட்டு, நந்தினி கரத்தில் இருந்த அவனது மொபைலை வெடுக்கென பிடுங்கினான்.
அதில் தவித்து நிமிர்ந்தவள், “என்கிட்ட குடுங்களேன்” என்று முனக, “இது யாருன்னு சொல்லு முதல்ல?” என்றான் அவன். அவள் வாய் திறக்கவில்லை.
“இத்தனை வருஷத்துல உன்னை பத்தி நாங்க எதுவும் கேட்டுக்கிட்டதே இல்ல… நீயும் சொல்ல விருப்பப்படல. உன்னோட கார்டியன் தியாகராஜன் வீட்டுல இருந்து நீ வந்துருக்கன்னு உன் டீசி பார்த்து தான் எங்களுக்கே தெரியும். அவர் மகன் பொன்னிலவனை நீ கல்யாணம் செஞ்சன்னு என் அம்மா சொன்னாங்க. இதைத்தாண்டி ஒண்ணுமே… ஒண்ணுமே தெரியாது எனக்கு”
“இப்ப கேக்குறேன், சொல்லு!!! இது யாரு?” இளங்கோ கேட்க, அப்போதும் அவள் அமைதியாய் நிற்க, “இப்ப சொல்லப்போறியா இல்லையா நந்தினி?” என்று அவன் கத்தியதில், விலுக்கென துள்ளி நிமிர்ந்தவள், “என் புருஷன்!” என்றாள் கன்னத்தில் நீர் வழிய.
***
பொன்னிலவனின் இருபத்து ஐந்தாவது பிறந்தநாளுக்காக அவன் வீட்டுக்கே வந்திருந்தனர் அவன் பள்ளி, கல்லூரி நண்பர்கள். கேக் வெட்டி கொண்டாடுவது எல்லாம் அங்கே யாரும் செய்து பழக்கம் இல்லை என்பதால், அந்த மாதிரி ஆர்பாட்டங்கள் எதுவும் இல்லாமல், வீட்டிலேயே இனிப்பு செய்து சிரித்து பேசி என அந்த மொட்டை மாடி கலகலவென இருந்தது.
“இருவத்தி அஞ்சு பொறந்தாச்சு, இனி என்னடா… பொண்ணு பார்த்துடலாமா?” கண்ணன் தான் ஆரம்பித்தான். அவன் தொடங்கவும் மற்ற நண்பர்கள், “ஒரு பொண்ணு மட்டும் பாத்தா போதுமா? இல்ல, ரெண்டு மூணு பார்த்து முடிப்போமா?” என்று கிண்டல் பேச, “டேய், ஒருத்திக்கு ஒருத்தி தான் டா கணக்கு!” என்று முறைத்தான் பொன்னிலவன்.
“சரி விடுடாப்பா… உனக்கு ஒன்னே ஒன்னு பாக்குறோம்!” ஒருவன் சிரிக்க, “நம்ம தான் பாக்கணுமா இல்ல அவனே பார்த்துருக்கானான்னு தெரியலையே” என்றான் இன்னொருவன்.
“ஒண்ணுமே சொல்லாம சிரிக்குறான் பாரேன்!” மற்றொருவன் சொன்னதில் வராத சிரிப்பு கூட வந்தது நிலவனுக்கு.
“அவனுக்கு ஏன்டா வெளில எல்லாம் பாக்கணும்? அதான் வீட்டுலையே பொண்ணு இருக்கே!” கண்ணன் சொல்லி கண்ணடிக்க, பொன்னிலவனிடம் வெட்க சிரிப்பு முளைத்து, அவனை வசீகரனாக்கியது. அதைப்பார்த்ததும், “அட, அதானா சேதி? அதுக்கு தான் இந்த பய நம்மளை வீட்டுக்குள்ளயே சேர்க்காம இருந்தானா?” என்றான் ஒருவன்.
பொன்னிலவனின் கல்லூரி சற்று தூரத்தில் தான் என்பதால் நண்பர்கள் வீடு வரை வந்தது குறைவு. அப்படியே வந்தாலும் வாசலோடு பேசி வெளியே அவர்களோடு சென்றுவிடுவான். பள்ளி நண்பர்களுக்கு வீட்டில் அவனது அத்தையும் மகளும் இருப்பது தெரியும் என்பதால் அவர்களும் வீடு வரை பெரிதாக வந்தது இல்லை. இப்போது எல்லோரும் படிப்பை முடித்து அவரவர் அளவில் ஒரு வேலையில் இருக்க, நண்பனை பிறந்தநாளுக்கு வாழ்த்துவோம் என சொல்லாமல் வந்து நின்றனர்.
பொன்னிலவனுக்கு வீட்டிலேயே பெண்’ என்றதும் நந்தினி மட்டுமே நினைவில் வந்தாள். யசோதா அவன் எண்ணத்தில் இல்லவே இல்லை. ஆனால், வந்தவர்களுக்கு நந்தினி என்ற ஒருத்தி அவன் வீட்டில் இருப்பது தெரியாது, அவனும் சொன்னதில்லை. அவளும் இந்த இரண்டு வருடங்களாக தான் வீட்டோடு இருக்கிறாள் என்பதால் ஒரு சில உள்ளூர் நண்பர்களை தவிர, யாருக்குமே தெரியாமல் போனது.
அந்நேரம் வந்தவர்களுக்கு ரஸ்னா கலக்கி எடுத்துக்கொண்டு மாடிக்கு வந்திருந்தாள் நந்தினி. பன்னிரண்டாவது பரீட்சை முடித்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. வீட்டு வேலைகளை தன்னைப்போல செய்ய ஆரம்பித்திருந்தாள் அவள். இப்போது கூட நிலவனின் நண்பர்கள் வந்ததற்கு நந்தினியை அழைத்து தான் ‘குடிக்க ஏதாவது தயார் செய்து கொடு’ என்று சொல்லிவிட்டு தங்கள் அறைக்குள் கணவனிடம் பேச சென்றிருந்தார் ஜெயா.
சட்டை பட்டங்களை அவிழ்த்துவிட்டு கட்டிலில் கைகளை ஊன்றி சுற்றும் மின்விசிறியை பார்த்துக்கொண்டு யோசனையாய் அமர்ந்திருந்தார் தியாகராஜன். உள்ளே வந்த ஜெயா, கதவை தாழ் போடாமல் சாற்றிவிட்டு அவர் அருகே வர, அவர் கலையவில்லை.
“என்னடி?” அவர் சோர்வாய் கேட்கவும், “பெரியவன் ஜாதகத்தை தூக்கிட்டு போனீங்களே? என்ன சொன்னாரு கலிங்கியம் ஜோசியரு?” என்றார் ஆர்வமாக.
“அவன் தொடங்குன தொழில் அமோகமா வருமாம், மென்மேலும் வளர்ச்சி தானாம். அதுல எந்த குறையும் இருக்காதாம்” என்று சொல்ல, ‘கடவுளே!’ என சந்தோசமாய் கும்பிட்டார் ஜெயா.
“பிறகேன் மூஞ்ச தொங்கப்போட்டு கடக்கீங்க?” அவர் கேட்டதும், “அவரு வேற ஒன்னை சொல்லிப்போட்டாருடி! அவனுக்கு குருபலன் கூடி நிக்குதாம். இந்த மூணு மாசத்தை கடத்துனா அடுத்து பத்து வருஷத்துக்கு அந்த யோகமே அவனுக்கு கிடையாதுன்னு அடிச்சு சொல்றாரு” என்றதும், திக்கென்றானது அவருக்கு.
“என்னங்க சொல்றீங்க? இப்ப என்ன அவசரம் அவனுக்கு? இன்னும் ரெண்டு வருஷம் போய்க்கூட கல்யாணம் செய்யலாமே!” ஜெயா சொல்ல, “நான் மட்டும் என்ன உடனே செய்யணும்ன்னா சொல்றேன்? அவர் அப்படி சொல்றப்போ என்ன பண்ண சொல்ற?” என்றார் குழம்பிப்போய்.
“மூணு மாசத்துல பண்ணனும்ன்னா பொண்ணுக்கு எங்க போறது? கிடைக்க வேண்டாமா? இதென்ன கத்திரிக்கா வாங்குற கதையா?” ஜெயாவுக்கு விருப்பமே இல்லை. அது அவர் பேச்சிலேயே தெரிய, “பொண்ணு நம்ம தேட வேண்டாமாம். அதுவே காட்டுமாம் நமக்கு” என்றும் தியாகராஜன் சொல்ல, எழுந்துவிட்டார் ஜெயா.
“நீங்க ஜோசியரை பார்த்தீங்களா இல்ல மந்திரவாதியை பாத்தீங்களா? இங்க பாருங்க, உங்க மன நிம்மதிக்கு ஜோசியரை பார்த்துட்டு வந்துட்டீங்க… விஷயத்தை அத்தோட விடுங்க, இதை இதுக்குமேல பெருசு பண்ணீங்க… எனக்கு கெட்ட கோவம் வந்துடும்!” என்ற ஜெயா,
“இதை நம்ம பையன்கிட்ட எதுவும் சொல்லி வைக்காதீங்க… இப்போதான் தொழிலை பெருசுப்படுத்தி நல்லா நடத்திட்டு வரான். கல்யாணம் கில்யானம்ன்னு சொன்னீங்கன்னா கோச்சுக்கப்போறான்!” என்றுவிட்டு போக, அவர் அறியவில்லை,
தியாகராஜன் இந்த விஷயத்தை மகனிடம் சொல்லப்போவதும், அதற்கு தன் மகன், ‘இப்போதே தாலியை குடு’ என அடம் பிடிக்கப்போவதும்!