டம்ப்ளர்களில் நிரம்பியிருந்த ரஸ்னா சிதறி கொட்டாதபடி மெதுமெதுவாய் மாடி ஏறி, கையில் இருக்கும் தட்டே கவனமாய் நடந்து வந்தாள் நந்தினி. ஆண்களின் சிரிப்பு சத்தம் அவளை இன்னும் கொஞ்சம் தடுமாற வைத்தது. நிமிர்ந்தும் பாராமல் தட்டை கெட்டியாய் பிடித்துக்கொண்டு அவர்களை அவள் நெருங்க, சட்டென அவள் கையோடு தட்டை பற்றின இரு கரங்கள்.
பதறி நிமிர்ந்தவள் முன்னே அழுத்தமான பார்வையோடு நின்றிருந்தான் பொன்னிலவன். காலை எழுந்தது முதல் அவனும் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறான், அவளிடம் இருந்து ஒரு வாழ்த்து கிடைக்கும் என்று! ம்ஹும்… வீட்டில் இருக்கும் எல்லோரும் வாழ்த்தியும் அவனுக்கு பிறந்தநாள் என்று தெரிந்தும் அவள் வாய்முத்து உதிரவில்லை.
என்னதான் சிரித்து பேசினாலும் அவனுக்குள் அது குடைந்துக்கொண்டிருக்க, அதே அழுத்தத்தோடு அவளை பார்த்தான் அவன். தட்டோடு சேர்த்து அவள் கையையும் அவன் பிடித்திருக்க, அவளால் தட்டில் இருந்து கையை எடுக்கவே முடியவில்லை. மீறி வலுக்கொண்டு எடுத்தால், டம்ப்ளரில் தளும்பி நிற்கும் ரஸ்னா சிந்தி சிதறி வீணாகும் என்று அவஸ்தையோடு அவள் நிற்க, ‘கையை விடுங்கன்னு என்னை பார்த்து சொல்லட்டும் விடுறேன்’ என்று வீம்பாக நின்றான் பொன்னிலவன்.
இதே நிலை சில நிமிடங்கள் தொடர்ந்தது. பெண்ணை மொத்தமாய் மறைத்தபடி நண்பர்களுக்கு முதுகுகாட்டி பொன்னிலவன் நின்றிருக்க, அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. அதோடு பேசும் சுவாரஸ்யமாய் போய்க்கொண்டிருந்தது.
கண்ணன் தான் முதலில் இதை கவனித்து, “என்னடா சிலை மாதிரி நின்னுட்டு இருக்க? குடிக்க கிடைக்குமா கிடைக்காதா?” என்று கேட்டதும், நண்பர்களின் கவனம் அவர்கள் மேல் விழுந்தது. நந்தினி இன்னமும் தடுமாறிப்போனாள். அது அவள் கண்களில் தெரிய, அசையவில்லை அவன்.
கெஞ்சலோடு நிமிர்ந்து அவனை பார்த்தவள், “விடுங்களேன்!” என்று முனக, இன்னும் ஒரு துளி இறுக்கினான் தன் பிடியை. லேசான வலியில் அவள் முகம் கசங்க, இன்னும் அழுத்தமாய் பார்த்தான் அவளை.
கண்ணன், “என்னடா பண்ற?” என்றபடி அவர்களை நெருங்கி வர, “மாமா, விடுங்க!” என்று பதறினாள் நந்தினி. கண்ணன் நெருங்கி வந்த நேரம் தன் கரத்தை விலக்கியவன், தட்டை வேறொரு இடத்தில் பற்றி வாங்கிக்கொண்டு நண்பர்களிடம் திரும்ப, விட்டதே போதும் என ஓடியவளை, “நில்லுமா” என்று நிறுத்தினான் கண்ணன்.
“ஏன்டா துரத்துற? இன்னும் நாங்க பேசவே இல்ல” என்ற ஒருவன், “நீ நில்லும்மா!” என்று சொல்ல, நந்தினி பொன்னிலவனை பார்த்தாள். அவன் கண்களாலேயே, ‘போ’ என்று சொல்ல, அடுத்த கணம் இறங்கி ஓடிவிட்டாள்.
“டேய் என்னடா இவன் கண்ணுலேயே பேசுறான் அந்த புள்ளைட்ட… அதுவும் புரிஞ்சுக்கிட்டு ஓடுது” என்று ஒருவன் ஆரம்பிக்க, அதையே பிடித்துக்கொண்டு ஓட்ட ஆரம்பித்திருந்தனர் நண்பர்கள். பொன்னிலவன் தடுக்கவே இல்லை. அவர்களும் நந்தினியை இழுக்காமல், அவனை மட்டுமே கிண்டலடிக்க, அழகான சிரிப்போடு நின்றுக்கொண்டிருந்தான்.
“இவன் சிரிக்குற தினுச பாத்தா அந்த புள்ளையை தான் கட்டுவான் போலயே!” என்று சொல்ல, அதற்கும் சிரித்தான். கண்ணனுக்கோ ஆச்சர்யம். நிலவனின் அத்தை தன் மகளோடு அவன் வீட்டில் தங்கியிருப்பது அவனுக்கு நன்கு தெரியும். சிறு வயதில் அந்த பெண்ணை பார்த்தும் இருக்கிறான். அப்போது கேட்டபோதெல்லாம் ‘எனக்கொரு தங்கச்சி பாப்பா இல்லாத குறைக்கு அவ இருக்காடா’ என்றவன், இப்போது மனது மாறிவிட்டானோ!? என்று ஐயமானது.
இதை கேட்கவும் முடியாது. அவனை கேட்டு சங்கடப்படுத்த கண்ணனுக்கு விருப்பமில்லை. ஆனாலும் இந்த கலாட்டா பேச்சுகளில் ஒட்ட முடியாமல் சின்ன புன்னகையோடு தள்ளியே நின்றான்.
அவனுக்கு ‘நந்தினி’ என்றவள் வந்தது தெரியாது. வீட்டோடு இருந்திருந்தால் கூட தெரிந்திருக்கும். அவள் தான் விடுதியில் தங்கிக்கொண்டாளே! அவள் வீட்டோடு தங்க வந்தபோது இவர்கள் படிப்பை முடித்து தள்ளி போயிருந்தனர்.
இப்போது தான் வெகு மாதங்களுக்கு பிறகு வீட்டோடு வைத்து அவனை சந்திக்கின்றனர். பேச்சு ஒரு கட்டத்தில் ஓய்ந்தது. நிலவன் தான் வாயே திறக்கவில்லையே. அவர்களாகவே பேசி பேசி ஓய்ந்து, இறுதியில் படத்துக்கு போகலாம் என்ற திட்டத்தில் வந்து நின்றனர்.
பொன்னிலவனுக்கும் போகலாம் போல இருந்தது. உடனே ஒப்புக்கொண்டான். அந்நேரம் கொலுசு சத்தம் கேட்க, பொன்னிலவனுக்கு அந்த சத்தத்திலேயே வருவது யாரென தெரிந்துப்போனது.
“டேய், உன் அத்தை பொண்ணு தான்… உன்னை பாக்காம இருக்க முடில போல” என்று சிரித்தான் ஒருவன். சட்டென முறைத்த பொன்னிலவன், “வாயை மூடு” என்றிட, அவனை விநோதமாய் பார்த்தான் அவன்.
தடதடவென கொலுசு சத்தத்தோடு மேலே வந்த யசோதா, “மாமா… இதெல்லாம் உன் பிரண்ட்ஸ்ஸா?” என்றாள் அவன் அருகே வந்து. ‘லைப்ரரி போகிறேன்’ என காலையிலேயே தோழிகளோடு சென்றவள் மதிய நேரமும் தாண்டி தான் வந்திருந்தாள். வந்ததுமே பொன்னிலவனை காண மேலே வந்துவிட்டாள்.
“யாரிந்த பொண்ணு?” ஒருவன் கேட்க,
“அத்தை பொண்ணு!” என்றான் நிலவன்.
“அப்ப அந்த பொண்ணு?” இன்னொருவன் குழம்ப,
“எந்த பொண்ணு?” என்றாள் யசோதா.
நண்பர்கள் குழப்பத்தோடு ஒருவர் முகம் ஒருவர் பார்த்து நிற்க, இங்கே பொன்னிலவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றிருந்தான். அப்போது தான் கண்ணனுக்கு இயல்பே திரும்பியது. ‘தங்கை போல’ என்றுவிட்டு நண்பன் மனம் மாறவில்லை என்று சிறு நிம்மதி.
“மாமா, யாரை கேக்குறாங்க இவங்க!?” என்று யசோதா அவனை கேட்டதும், “நந்தினியை!” என்றான் அவன்.
“ப்ச், ஓ!” அலட்சியமாய் தலையை திருப்பியவள், “சரி, என்ன ப்ளான் இப்போ?” என்றாள். படத்துக்கு போகும் எண்ணத்தை அவர்கள் சொன்னதும் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள் அவள்.
“அத்தை விட மாட்டாங்க யசோ, சொன்னா கேளு” நிலவன் சொல்லியும் கேட்காதவள், “அப்ப நந்தினியையும் அழைச்சுட்டு போகலாம்” என்றாள். அதுவரை அவளை அழைத்துப்போகும் எண்ணம் துளியும் இல்லாத நிலவன், இந்த நொடியில் எப்படி அழைத்துப்போவது என யோசிக்கவே ஆரம்பித்துவிட்டான்.
கீழே வந்து தந்தையை அழைக்க, தங்கள் அறையில் இருந்து வெளியே வந்தனர் தியாகராஜனும் ஜெயாவும். அப்போது தான் ஜோசியர் சொன்ன சேதி எல்லாம் பேசிக்கொண்டிருந்தனர். மகன் அழைக்கவும் வந்தவர், “என்னப்பா?” என்று சிரித்தபடி கேட்க, “படத்துக்கு போயிட்டு வராவா ப்பா?” என்றான் நிலவன்.
“போயேன்டா!” என்று சொல்லிக்கொண்டே தனது வேட்டையை கொஞ்சமாய் தூக்கி உள்ளே இருந்த ட்ரவுசர் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்க முயன்றார் தியாகராஜன்.
“என்கிட்டே இருக்கு ப்பா!” நிலவன் சொல்ல, கையில் கிடைத்த பணத்தை எண்ணாமல் அப்படியே நீட்டியவர், “இருந்தா என்ன? என் புள்ளைக்கு நான் இருக்குறவரை நான் தான் எல்லாம் செய்வேன்!” என்றார். அவரிடம் மறுபேச்சே பேசாமல் வாங்கிக்கொண்டவன், “யசோதாவை அழைச்சுட்டு போகவா?” என்று கேட்க, தயங்கினார் அவர்.
அவள் பேர் வந்ததுமே, உள்ளிருந்து வந்த ராதா, “பசங்களோட போற, இவ எதுக்குப்பா? வேண்டாம்!” என்றார்.
யசோதா பிடிவாதமாய் நிலவனை முறைத்தாள்.
“இல்ல அத்தே, நான் பாத்துக்குறேன்” அவன் சொல்ல, “இல்லப்பா, திரும்ப வர ராத்திரி ஆகிடும்! சரி வராது! இத்தனை பசங்களோட இவ ஒருத்தி நின்னு என்ன செய்வா?” என்றார் அவர்.
அவன் அடுத்து பேசும் முன், “நான் மட்டும் போல, நந்தினியும் கூட வரா!” என்றாள் யசோதா. கிச்சனுக்குள் நின்றிருந்த நந்தினிக்கு தூக்கி வாரிப்போட்டது, ‘என்ன நானுமா?’ என்று.
‘ம்ம்ம்!’ என்றவர், “யசோதா… பார்த்து பத்திரமா இருக்கணும். மாமன் கூடவே இரு, நந்தினியும் நீயும் தனிதனியா எங்கயும் போய்டக்கூடாது… புரியுதா?” என்றார்.
அவள் வேகமாக ‘சரி’ என்றாள்.
“என்ன ராதா?” அவர் கேட்க, “சரிண்ணே! பத்திரமா போயிட்டு வந்தா சரிதான்!” என்றுவிட்டார் அவர். உள்ளிருந்த நந்தினிக்கு தான் கடுப்பாய் வந்தது. தன்னிடம் ‘போகிறாயா?’ என்றுக்கூட ஒருவரும் கேட்கவில்லையே என்று!
‘தான் போகவில்லை’ என்று சொல்லிவிட வேண்டும் என அவள் வேகமாய் வெளியே போக, அவளை உள்ளே தள்ளிக்கொண்டு வந்தாள் யசோதா.
“வர மாட்டேன்னு சொல்லிடாத! நீ மாட்டேன்னு சொன்னா என்னையும் விட மாட்டாங்க, சொன்னா புரிஞ்சுக்கோ” என்றிருந்தாள் அவள்.
“எனக்கு வர இஷ்டம் இல்ல யசோ” நந்தினி சொல்ல, “எனக்காக வா!” கண்டிப்போடு சொன்னவளை மறுக்க முடியாமல் அரை மனதோடு கிளம்பினாள் நந்தினி.
அப்பத்தாவின் மகன் லோடு வண்டு ஓட்ட, அன்று வேலைக்கு போகாமல் வீட்டில் தான் இருந்தார். அவரிடம் பேசி அந்த குட்டி யானை வண்டியை எடுத்துக்கொண்டு வந்தான் பொன்னிலவன். பின்னே ஆண்களை அனைவரும் ஏறிக்கொள்ள, முன்னே டிரைவர் இருக்கையில் நிலவன் இருக்க, அவருக்கு அருகே இருக்க இருக்கையில் பெண்களை அமர சொன்னார் தியாகராஜன்.
முதலில் ஏற போன யசோதா, “நடுல உட்காந்தா வேடிக்கையே பாக்க முடியாது… நீ போ!” என்று நிலவன் அருகே நந்தினியை தள்ளிவிட்டு ஜன்னல் ஓரமாய் வசதியாய் அமர்ந்துக்கொண்டாள் யசோதா.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கார்முகிலன் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
வண்டி அங்கிருந்து கிளம்ப, அரைமணி நேர தொலைவில் இருக்கும் மகாராஜா மல்டிப்ளெக்ஸ் தியேட்டரை அடைந்தது. மூணு படங்கள் ஓடிக்கொண்டிருக்க, ஆண்கள் எல்லோரும் பேய் படத்துக்கு தான் டிக்கெட் எடுத்தனர்.
பேய்ப்படம் என்றதுமே நடுநடுங்க ஆரம்பித்துவிட்டது நந்தினிக்கு. அவளுக்கு தியேட்டர் வந்து எல்லாம் பழக்கமே இல்லை. இருட்டில் சீட்டை கண்டுப்பிடித்து உட்காருவதே அவளுக்கு மலையை புரட்டும் காரியம் எனும்போது அந்த இருட்டில் உட்காந்து பேய்ப்படமா? என பதறியது. யசோதா அவளை கண்டுக்கொள்ளவே இல்லை. வீட்டை விட்டு வெளியே வருவதற்கான துருப்பு சீட்டு தானே நந்தினி? வந்தபின் அவள் எதற்கு?!
தனித்து தவித்து நின்றவள் மீது கண்ணாகவே இருந்தான் பொன்னிலவன். இருட்டில் கதவை திறந்து உள்ளே நுழையும்போது நந்தினி தடுமாற, அவள் கரத்தை கெட்டியாய் பிடித்தான் அவன். பயந்தவள், கையை உதற, “ஏய் நாந்தான்!” என்றான் அவள் காதருகே. சட்டென ஒரு ஆசுவாசம் அவளுள்.
எல்லோரும் சென்று அமர்ந்ததும் இறுதியாய் அவளை கைப்பிடித்து அழைத்து வந்தவன் கார்னர் சீட்டில் அமர்த்திவிட்டு அவள் அருகே அமர்ந்துக்கொண்டான். மறுபக்கம் யசோதா இருந்தாள். படமும் தொடங்கியது. டைட்டில் கார்ட் போடும்போதே தாவணி நுனி அவள் வாயருகே சுருண்டு சென்றுவிட்டது. என்னவோ வாயை அடைத்துக்கொண்டால், பேய்ப்பயம் போய்விடும் என்பதை போல அமர்ந்திருந்தாள் நந்தினி.
“பேய்ன்னா பயமா?” சடுதியில் காதருகே கேட்ட குரலில் விதிர்த்து நகர்ந்தாள் நந்தினி.
“நான் தான்டி லூசு!” உரிமையாய் திட்டியவன், “பயமா இருந்தா என் கையை பிடிச்சுக்கோ” என்றான் ஹேன்ட் ரெஸ்டில் இருந்த தனது கையை காட்டி.
அவன் பேச்சு தான் அவளை இன்னுமே பயப்படுத்தியது. ‘ம்ஹும் ஹும்!’ வேக வேகமாய் தலையாட்டினாள் மறுப்பாக. அதில் முறைத்தவன், “வேணான்னா போடி!” என்றுவிட்டு திரும்பிவிட்டான். அவன் திரும்பியதும், அவள் ஸ்க்ரீனை பார்த்த கணம், கர்ணகொடூரமாய் ஒரு பேய் லாங் ஷாட்டில் இருந்து அதிவேகத்தில் அவள் மடியில் வந்து அமரப்போவதை போல நெருங்கி வர, அலறிக்கொண்டு அவன் கையை கோர்த்தபடி முகத்தை புதைத்துக்கொண்டாள் நந்தினி.