ஜேகே தனக்கு தெரிந்ததை தன்னுடைய மனைவி ரூபாவிடம் சொல்லிக்கொண்டிருக்க…
ரூபா மகனின் நினைவில் நிறுத்தியிருந்த அழுகையை கேவலாய் வெளிப்படுத்தினார்.
“ரூபா வேணுன்னு பண்ணல?” நீரஜா ரூபாவிடம் விளக்கம் சொல்ல முற்பட, ஜேகே விடவில்லை.
“இப்போவே உங்க ரெண்டு பேரையும்…” என்றவர், “இல்லையில்லை உடனே தண்டனை கொடுத்து அவ்வளவு எளிதாக போயிட்டால் எப்படி? உன் பொண்ணையும் கூட்டிட்டு வா ஏசிபி ஆபீஸ் போகலாம்” என்றார்.
“அச்சோ அண்ணா… நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்களேன்!”
டாம்பீகமாக… பேச்சில் கூட திமிராக நடக்கும் நீரஜா முதல் முறை மன்றாடி இறைஞ்சினார்.
அவரின் பேச்சினை கேட்கும் நிலையில் ஜேகே இல்லை.
உடன்பிறந்த தங்கை… தனக்கு மருமகளாக இல்லாது தன்னுடைய வீட்டிற்கு மகளாக கொண்டுவர நினைத்த ஷீலா… இவர்களாலே தனது மகனின் உயிர் பிரிந்துவிட்டதே! அதுவும் எத்தனை கொடூரமான மரணம். நினைக்கவே பொறுக்கவில்லை. ஆதலால் முற்றிலும் இயல்பை தொலைத்து வெறி பிடித்து நின்றார்.
“ஒற்றை மகன். என் இத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு. அத்தனையும் என்னுடைய உழைப்பால் வந்தது. அதை தானம் தர்மம் செய்யுமளவிற்கு எனக்கு பரந்த உள்ளம் கிடையாது. ஆனால் நீ கேட்டிருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்திருப்பனே!” என்று ஜேகே கலங்கி முடிக்கும் முன்னர்,
“அச்சோ அண்ணா உன்னைவிடவா எனக்கு சொத்து முக்கியம்?” என்று ஜேகேவின் காலிலே விழுந்துவிட்டார் நீரஜா.
“உனக்கு முக்கியமில்லாமல் இருக்கலாம். ஆனால் உன் வீட்டுக்காரருக்கு… அதான் என் அப்பாவுக்கு இருக்குமே!” என்றபடி அங்கு நடப்பதை மேலிருந்து கவனித்திருந்த ஷீலா அவர்களின் அருகில் வந்தாள்.
அவளின் முகத்திலிருந்து ஜேகேவால் எதுவுமே கண்டுபிடிக்க முடியவில்லை. உணர்வுகளற்று நிர்மலமாக இருந்தது.
நீரஜாவிடம் காட்டிட முடிந்த கோபத்தை கொஞ்சமும் தவறு செய்துவிட்டதாக சந்தேகப்படப்படும் ஷீலாவின் மீது ஜேகேவிற்கு வரவில்லை.
பெற்றது மட்டுமே அவரின் தங்கை. வளர்த்தது அவரல்லவா! வளர்த்த பாசம் அவரின் கைகளை கட்டிப்போட்டது.
ஜேகேவை நேருக்கு நேர் பார்த்த ஷீலா…
“போகலாமா மாமா?” எனக் கேட்டு முன் செல்ல, வேறு வழியின்றி நீரஜாவும் மகளின் பின் சென்றார்.
மனைவி ரூபாவை அழுத்தமாக ஏறிட்ட ஜேகே,
“தப்பு செய்தது யாராயிருந்தாலும் நம்ம மகனுக்கான நியாயம் நிச்சயம் உண்டு. சொந்தம் உறவுன்னு பின் வாங்கிடமாட்டேன்” என்றார்.
தங்கை, தங்கையின் மகளென்று மன்னித்து விடுவாரோ என்ற ரூபாவின் எண்ணவோட்டத்தை கணவனாக உணர்ந்தவர், மனைவிக்கு வேண்டிய வார்த்தைகள் மூலம் நம்பிக்கை அளித்தார்.
******
வாழியின் முன் ஜேகே, நீரஜா, லீலா மூவரும் அமர்ந்திருந்தனர்.
வாழி தன் விசாரணையை துவங்காது நீரஜா மற்றும் ஷீலாவை அவதானித்தபடி அமர்ந்திருந்தான்.
‘என்ன எதுவும் கேட்காது இருக்கார்!’ சூர்யா வழக்கம்போல் வாழியின் எண்ணவோட்டம் புரியாது பார்த்திருந்தான்.
நீரஜா தன்னுடைய அண்ணன் தனக்கு முன் துப்பாக்கியை நீட்டியதிலேயே மிரண்டு போயிருந்தார்.
எங்கே வாழி முதல் நாள் விசாரணையின் போது சொல்லியதை இன்று உண்மையாக்கிவிடுவானோ என பயந்த நீரஜா, தனக்கு தெரிந்ததை சொல்லிட தானாக வாய் திறந்திட…
“உங்க வீட்டு பொண்ணு மாட்டிக்கக்கூடாதுன்னு வழக்கின் திசையை என் பக்கம் திருப்ப முயற்சிக்கிறீங்களோ?” என்று கண்களில் ஒருவித திமிர் தெரிய கேட்டிருந்தாள் ஷீலா.
‘அன்னைக்கு அழுத முகத்தோடு பதில் சொல்லவே தயங்கிய பெண்ணா?’ என்றிருந்தது சூர்யாவுக்கு.
ஷீலாவின் வார்த்தையில் ஜேகே’விற்கு ஏதும் புரியவில்லை என்றாலும், வாழியின் முகத்தை அர்த்தமாக ஏறிட்டார்.
வாழி அப்போதும் வாய் திறக்காது சிறு மென்னகையை உதட்டில் படர விட்டவனாக, நீயே மேலே சொல் எனும் விதமாக இருந்தான்.
“அருணை கொலை பண்ணது முன்னாள் கமிஷ்னர் கிருஷ்ணாவின் மகள் தன்விதா மாமா. இவருடைய குடும்பத்துப்பெண். அவளை காப்பாற்றவே என்னை இதில் மாட்டிவிடப் பார்க்கிறார்” என்றாள் ஷீலா.
ஜேகேவிடம் சொன்னாலும் வாழியை தான் பார்த்திருந்தாள்.
ஜேகேவிடம் இல்லாத அதிர்வு, சூர்யாவிடம்.
‘அதனால் தான் சில நேரங்களில் என்னை பக்கத்தில் சேர்த்துக்கொள்ளவில்லையோ?’ என உள்ளே நினைத்தாலும் அவனால் வாழி தன் கடமையிலிருந்து தவறுவான் என்று நினைக்க முடியவில்லை.
“எங்க சார் ஒரு விடயத்தை மறைக்கிறாருன்னா அதில் ஆயிரம் அர்த்தமிருக்கும்.”
சூர்யா வாழிக்காக பரிந்து பேசிட, வாழியை பற்றி சில தினங்களிலேயே அவனெப்படி என்று ஓரளவுக்கு கணித்திருந்த ஜேகே சிறு உயர பார்வையுடன் சூர்யாவை நோக்கினார்.
“உன்னை நாங்க கேள்விகேட்க கூப்பிட்டால், நீ எங்களை கேட்டுட்டு இருக்க” என்ற சூர்யாவிடம்,
“அப்போ உங்க சார் அந்தப்பொண்ணையும் எங்களை மாதிரி கூப்பிட்டு விசாரிக்க வேண்டியது தானே?” என்றாள் ஷீலா.
வாழிக்கு ஷீலாவின் நோக்கம் அக்கணம் நன்கு புரிந்தது. அவள் இந்த விசாரணையை தவிர்ப்பதற்காகவே பேச்சை வேறு திசையில் கொண்டு செல்கிறாள் என்று.
அவள் சொல்ல விருப்பப்படாதா ஒன்றை சரியாகக் கேட்டுவிட்டாரே!
“இப்போ நீங்க அவர் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்?” என்ற சூர்யா,
“எங்ககிட்ட இருக்க வீடியோ எவிடென்ஸ் போதும்… மொட்டை மாடியில் செய்ய முடியாததை, இந்த மாதிரி செய்து முடிச்சிட்டாங்கன்னு மொத்தமா உங்க மேல குற்றத்தை சுமத்திட்டு கேஸை முடிச்சிடுவோம்” என்றான்.
அப்போதும் ஷீலா மௌனமாகத்தான் இருந்தாள்.
அவளால் அன்றிரவு மொட்டை மாடியில் நடந்ததை, அருண் பேசியதை வெளியே சொல்ல முடியாது. அருண் மீது காதல் கொண்டவளுக்கு அவன் பேசியது எத்தனை வலி. அதனை மீண்டும் கீறிக்கொள்ள அவள் தயாரில்லை.
“நான் சொல்றேன்” என்று ஷீலாவையே அழுத்தமாக பார்த்துக்கொண்டு மெல்ல சொல்லத் துவங்கினான் வாழியாதன்.
“அருண் காதலித்தது எங்க வீட்டுப்பொண்ணு தன்வியை. த்ரி இயர்ஸ். காதலித்தவன் ஏமாத்திட்டான்னு அவனை கொலை செய்யுறளவுக்கு போகிறவள் அவளில்லை. ஆனால் கட்டிக்கப்போறவன், இன்னொரு பெண்ணை விரும்பினேன் சொன்னதை ஷீலாவால் ஏத்துக்கு முடியல. அதான் அவங்களுக்கு கிடைக்காத அன்பு இன்னொரு பெண்ணுக்கு அருண் மூலாமாகக் கிடைக்கக்கூடாதுன்னு, ஒருவித உணர்வு கொந்தளிப்பில் தள்ளிவிட கையை கொண்டுபோனவங்க சுதாரிச்சிட்டாங்க. அப்போ அருணும் சரியா திரும்பிட, தான் செய்யவிருந்ததை நினைத்து அவங்களே கில்ட் ஆகியிருக்காங்க. இதுதான் உண்மை. அருணை கொலை செய்ய முயற்சித்திருக்கலாம். ஆனால் அருண் இறப்புக்கு ஷீலா காரணமில்லை” என்றான்.
காணொளியை வைத்து காட்சியமைப்பாய் தனக்குள் தன் அனுமானமாக உருவாகியதற்கு வார்த்தை கொடுத்திருந்தான் வாழியாதன்.
ஒரு குற்றம் நடந்து முடிந்து சரியான விளக்கம் இல்லையென்றால்… அது எப்படி நடந்ததென்று நீதிமன்றத்திற்கு விளக்குவதற்காக… காவல்துறை, இந்த குற்றம் இப்படி நடந்திருக்கலாம் என்பதை விசாரணையின் அடிப்படையில் காட்சிப்பதிவாக பதிவு செய்து காணொளியாக சமர்பிப்பர்.
இப்போது வாழியும் அந்த வகையில் தான் கூறியிருந்தான்.
“உங்களுக்கு அருண் காணவில்லை என்ற வருத்தம், அவர் இறந்துவிட்டாரென்று தெரிந்தபோது இல்லை. அருணுடைய உடலை பார்த்தபோது உங்களிடம் உதட்டை எட்டாத விரக்தி சிரிப்பு. யாரும் கவனிக்கலைன்னு நீங்க முகத்தை வேகமாக மாத்துகிட்டதை நான் நோட் பண்ணேன். அதுக்கு முன்னாடி தான், உங்களுடைய ரிஸார்ட் மேனேஜரிடம் அருண் இறந்து கிடந்த பார்க் புட்டேஜ் வேணுன்னு வாங்கப்போன சூர்யா, இந்த புட்டேஜூம் சேர்த்து கொண்டு வந்தாங்க” என்று, எப்படி இப்பதிவு தனக்கு கிடைத்தது என்பதை விளக்கினான்.
அருண் இறந்த பூங்காவுடைய ரிசார்ட்டில் தான் அருண் மற்றும் ஷீலா திருமணம் நடந்திருந்தது.
ஜேகேவிற்கு அடுத்து என்ன கேட்பதென்றே தெரியவில்லை. தன்னுடைய மகன் ஒரு பெண்ணை விரும்பியிருக்கிறான். அதனை தன்னிடம் மறைத்திருக்கிறான் என்பதையே அவரால் ஏற்க முடியாது நிலை குலைந்து போயிருக்கிறார்.
“உனக்கு தெரிந்ததை… நீ செய்யப்போன காரியத்துக்கு பின்னாலிருக்கும் காரணத்தை தயவுசெய்து சொல்லிடும்மா? செத்துப்போனது என் பிள்ளை. ஏன்னு காரணம் தெரியாமல், நானெல்லாம் இவ்வளவு உயரத்திலிருந்து என்ன பயன்?” என்று முதல் முறையாக உள்ளங்கையால் கண்களை மறைத்து தோள்கள் குலுங்க கண்ணீர் சிந்தினர்.
“அய்யோ சொல்லுடி… சொல்லித்தொலையேன். சிங்கமா இருந்த மனுஷன் அழுது பார்க்குறேனே!” என்று தலையில் அடித்துக்கொண்டார் நீரஜா.
ஜேகேவின் பக்கம் தண்ணீர் குவளையை நகர்த்திய வாழி,
“ஜேகே ப்ளீஸ். காம் டவுன்” என்றான்.
“எவ்வளவு பெரிய ஆளாயிருந்தாலும் உணர்விருக்க மனுஷன் தானே நான். என் பிள்ளையோட மனசு புரியாமல் அவன் சாவுக்கு நான் காரணமாகிட்டனோ.” ஜேகேவின் குரல் முற்றிலும் உடைந்திருந்தது.
அழுகையில் தழுதழுத்த அந்த குரல் ஷீலாவை என்னவோ செய்தது. அவளுக்காக சிறுவயதிலிருந்து அனைத்தும் செய்தவராயிற்றே! அவர் கலங்கியிருப்பதை அவளால் பார்க்க முடியாது போக, அன்று நடந்ததை கூறினாள்.
அருணுக்கு எப்படியோ… ஷீலா மனமார அருணை காதலித்ததால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதித்தாள்.
தாய்மாமன் மகன். வீட்டிலும் தங்களுக்குத்தான் திருமணம் என்கிற பேச்சு அவள் வயது வந்தது முதல் நீரஜாவால் கேட்டக்கப்பட்டதால் தன்னுடைய காதலை அருணிடம் சொல்ல வேண்டுமென்று ஷீலா நினைத்ததில்லை. எப்படியும் அருணுடன் தான் திருமணம், அதன் பின்னர் சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள்.
முதலில் வேண்டாமென்று அருண் மறுத்தபோது இருந்த வருத்தத்தைவிட அவன் வேறொரு பெண்ணை விரும்பியிருக்கிறான் என்பதை அவன் வாயாலே சொல்லி கேட்டது அவளுக்கு ஆகப்பெரும் வேதனையாக இருந்தது.
திருமணத்திற்கு முதல்நாள் இரவு நள்ளிரவுக்கு மேல், பேச வேண்டுமென ஷீலாவை மொட்டை மாடிக்கு அழைத்த அருண்,
“நான் ரிட்டையர்ட் கமிஷனர் கிருஷ்ணனின் மகள் தன்வியை காதலித்தேன். நாளைக்கு ரிஜிஸ்டர் ஆபீஸ் வர சொல்லியிருக்கேன்” என்றான்.
ஷீலா அதிர்ச்சியோடு வலியையும் உள்வாங்கி நின்றாள்.
‘இப்போவாவது உண்மையை சொன்னானே’ என்கிற சிறு நிம்மதியே அக்கணம் அவளுள்.
ஆனால் அடுத்த நொடியே அருணின் பேச்சில் அவளது கோபம் எல்லை கடந்தது.
“கண்டிப்பா நாளைக்கு நான் ரிஜிஸ்டர் ஆபீஸ் போகப்போறதில்லை. உன் கழுத்தில் தான் தாலி கட்டுவேன். எனக்கு என் கனவான அரசியல் வாழ்கை ரொம்ப முக்கியம். அதுக்கு உன் அப்பா தயவு வேணுமே” என்றவன், “கல்யாணம் மட்டும் தான் உன்னோடு. குடும்பம் என் தனுவோடு தான்” என்றான்.
இதனை அருண் சொல்லிய பின்னர் தான் ஷீலாவுக்குள் தான் தன்னுடைய காதல் அத்தனை தரம் இறங்கிவிட்டதா என்கிற எண்ணம்.
“நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், என் தனு நான் கூப்பிட்டால் என்கிட்ட வந்திடுவாள். அப்படி அவளை என் கண்ட்ரோலில் மயக்கி வச்சியிருக்கேன்” என்று வெட்கமாய் பாவனை காட்டி… “அவள் எவ்வளவு அழகு தெரியுமா? அவளை மொத்தமா எடுத்துக்கணுங்கிறதுக்காகவே, அவள் விரல் நுனியை கூட தீண்டாம அவமீதான ஆசையை போதையா சேவ் பண்ணிட்டிருக்கேன். அப்புறம், அவளை நினைச்சுதான் உன் கழுத்தில் தாலி கட்டப்போறேன். மனசால் கூட என் தனுவுக்கு நான் துரோகம் பண்ணிட்டேன்னு இருக்கக்கூடாது” என்றான்.
ஷீலா சொல்லிக்கொண்டிருக்க இவ்விடத்தில் அருணின் பேச்சு, வாழியின் கை முஷ்டியை இறுக செய்தது.
அருண் உயிரோடிருந்திருந்தால், இந்நொடி வாழியே அவனை கொன்றிருப்பான்.
“உன்னை கல்யாணம் செய்துகிட்டாலும், இன்னொரு பொண்ணோடு நான் குடும்பம் நடத்துவேன்னு சொல்லுறான். அந்த இடத்தில் ஒரு பெண்ணா நான் எப்படி சும்மா இருக்க முடியும். அந்த கணம் நான் காதலித்த அருணாக அவன் தெரியல. வார்த்தையாலே ரெண்டு பொண்ணுங்க வாழ்வை நாசமாக்குற அரக்கனாகத்தான் தெரிந்தான். இப்படிப்பட்டவனெல்லாம் உயிரோடு இருந்து என்ன செய்யப்போகிறான் அப்படின்னு எனக்குள்ள தோன்றிய கேள்வி, உந்துதலாக மாறி அவனை கொல்லத் தூண்டியது. என்னையும் அறியாமல் மனசு சொன்னதை கேட்டு ஒருவித ஆப்கான்ஷியஸா அவனை தள்ளிவிட பார்த்துட்டேன்” என்று முடித்தாள்.
ஜேகேவிற்கு தன் மகனா இப்படியென்று உடலெல்லாம் பதறிவிட்டது.
பெண்கள் மீது அத்தனை மரியாதை வைத்திருக்கும் தனக்கு இப்படியொரு மகனா? ஆசைக்கு ஒரு பெண் தேவைக்கு ஒரு பெண் என்று அவன் பேசிய பேச்சினை ஜீரணிக்க முடியாது அதீத வருத்தம் சுமந்து தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார்.
“இதெல்லாம் என்கிட்ட நீ சொல்லலையே” என்ற நீரஜா,
“இவள் ஏன் அருணை தள்ளிவிட முயற்சிப்பண்ணான்னு எவ்வளவோ கேட்டும் சொல்லாததால், அவள் அப்பாகிட்ட சொல்லிடுவான்னு கூட்டிட்டு போனேன். அவர் என்னை வெளிய போகசொல்லிட்டுத்தான் இவகிட்ட பேசினார்” என்றார்.
அருண் இழிவாக பேசியதை மற்றவரிடம் சொல்லிடக்கூடாதென, அதுவும் தன்னை இன்னொரு பெண்ணாக நினைத்து தாலி கட்டுவதாக சொன்னது தெரிந்து தனக்கு அவமானமாகிவிடக் கூடாதென நினைத்த ஒன்றையே சொல்லிவிட்ட பின்னர், மற்றவற்றை சொல்லிட ஷீலாவிடம் தடையிருக்கவில்லை.
“அப்பாகிட்ட அருண் சொல்லியதெல்லாம் சொல்லி கல்யாணத்தை நிறுத்துங்க சொன்னால், என் அரசியலுக்கு மாமாவோட சொத்து ரொம்ப முக்கியம் சொல்றாரு. அவனை கொல்லணும் நினைக்கிறியா, தாலியை வாங்கிக்கிட்டு பொண்டாட்டியா பக்கத்திலிருக்கும்போது கொல்றது ஈஸி. உன் மேலையும் யாருக்கும் டவுட் வராது சொல்றாரு. நான் முடியாதுன்னு மறுக்க… என் அம்மாவை கொன்னுடுவேன்னு மிரட்டினார். அதுக்காகத்தான் கல்யாணம் செய்துகிட்டேன். அன்னைக்கு நைட் முழுக்க… யாருக்கோ போன் ட்ரை பண்ணிட்டே இருந்தான். தன்விக்குன்னு புரிஞ்சுது.”
“திடீர்ன்னு அதிகாலையில் என் தனுவை பார்க்கப்போறேன். உன்கூட நடக்க வேண்டியது அவக்கூட நடக்கப்போகுதுன்னு சொல்லிட்டு போயிட்டான். திரும்பி வரல. என் லைஃப் தப்பிச்சிதுன்னு எனக்குள்ள ஆசுவாசம் தான். அதை வெளியில் காட்டிக்கிட்டால் தேவையில்லாத சந்தேகம் என்மேல வரும்ன்னு தான் அன்னைக்கு இதெல்லாம் எதுவும் சொல்லல. அதோட தன்விதா உங்களுக்கு யாருன்னு தெரியும். உங்ககிட்டவே அவங்களை பற்றி சொன்னால், என் அம்மாவை இல்லாததை சொல்லி அன்னைக்கு வாய் மூட வைத்ததுபோல… உங்க வீட்டு பெண்ணை காப்பற்ற என்னை மாட்டிவிட்டுடுவீங்களோன்னு தான் எதையுமே சொல்லல” என்றாள்.
அழுத்திக்கொண்டிருந்த அனைத்தும் ஒரே மூச்சில் வெளியேறிவிட்டதால் ஷீலாவிடம் நிர்மலமான பாவனை.
அனைத்தும் தெரிந்த பின்னர் ஷீலாவின் தந்தையை நினைத்து தான் ஜேகேவிற்கு அத்தனை கோபமாக வந்தது.
பணத்திற்காக பெட்ரா மகளின் வாழ்வை துணிந்து பணயம் வைத்திருக்கிறானே என்று.
நீரஜாவிற்கு கணவன் தன்னை கொன்று விடுவான் என்று சொன்னதை ஏற்க முடியாது… இத்தனை வருட வாழ்வை கேள்விக்குறியாகிட துவண்டு மனதால் மரித்துப் போயிருந்தார்.
கணவனை மொத்தமாக தூக்கிப்போட்டு விட்டார்.
“உங்களுக்கே ஷீலா செய்யலன்னு தெரிந்திருக்கு. அப்புறம் எதுக்கு அவளை கார்னர் செய்தீங்க?” என்றார் ஜேகே. அவர் தன்வியை பற்றி எதுவும் கேட்கவில்லை. வாழியின் நேர்மையை அறிந்தவருக்கு, சூர்யா சொல்லியது போல் அவனது செயலின் பின்னால் காரணமிருக்கும். ஆனால், எக்காரணம் கொண்டும் குற்றவாளியை விட்டுவிட மாட்டேனென்ற உறுதி இருந்தது.
“உண்மையான குற்றவாளி தெரிந்தாலுமே… ஷீலாவின் இந்த வீடியோ போதும். அவர் தான் குற்றவாளின்னு நம்ப வைப்பதற்கு. அப்படி ஒன்று நடந்தால், ஷீலா கொலையாளி இல்லைன்னு ப்ரூவ் பண்ண நம்மகிட்ட ஸ்ட்ராங் ரீசன்ஸ் இருக்கணுமே! அதை நேரடியாகக் கேட்டால், இத்தனையையும் அவங்க சொல்லியிருக்கமாட்டாங்க” என்றான்.
அங்கிருந்த மற்றவர்களுக்கும் வாழியின் போக்கு புரிந்தது.
இனி யாராலும் ஷீலாவை குற்றவாளியாக நினைக்க முடியாதல்லவா. அந்தளவிற்கு அவள் தரப்பினை சரியான ஆதாரமாக உருவாக்கிக்கொண்டான்.
“தன்வி விடயத்திலும் இதுதான் சூர்யா.”
சந்தேகமென்று வந்த பின்னர் தன்வியை விசாரணையில் மறைத்து வைத்ததற்க்கான கேள்வி, ஷீலா தன்வியின் பெயரை சொல்லியதும் சூர்யாவினுள் தோன்றியிருந்தது.
அதற்கான பதிலையே இப்போது வாழி சொல்லியிருந்தான்.
அதாவது தன்வி குற்றவாளியல்ல. அருணுடன் சம்மந்தப்பட்டிருப்பதால், அவளை நிச்சயம் சந்தேகிக்கும் சூழல் உருவாகும். அந்நேரம் அவளும் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்கும் கட்டாயம் வாழியிடம் உள்ளது. அதற்காகவே அவள் விடயத்தை வாழி வெளிப்படையாக செய்யவில்லை.
தன்வியின் உறவினனாக இருக்கும் பட்சத்தில் வழக்கு மற்றவர் கைக்கு மாற்றம் கொள்ள நிறைய வாய்ப்புள்ளது.
இந்த விளக்கத்தை வாழி சொல்லாது, அவனது ஒற்றை வரியில் சூர்யா விளங்கிக்கொண்டான். சூர்யா மட்டுமல்ல ஜேகேவும்.
“ரொம்ப தேன்க்ஸ் வாழியாதன்” என்று விசாரணை முடிந்ததால் எழுந்துகொண்ட ஜேகே,
“எனக்கு இப்படியொரு மகனான்னு நினைக்கவே வேதனையா இருக்கு. அவனை கொன்னவங்களுக்கு என் கையால் தான் சாவுன்னு சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்” என்றதோடு, “எனக்கு இப்படியொரு மகன் பிறக்கவேயில்லைன்னு நினைச்சுக்கிறேன்” எனக்கூறி தளர்ந்த நடையோடு அங்கிருந்து வெளியேறினார்.
“நீங்க தன்விதாவை லவ் பண்றீங்களா?”
ஜேகேவின் பின்னோடு நீரஜாவும் சென்றிட, பின் தங்கிய ஷீலா வாழியிடம் கேட்டிருந்தாள்.
வாழியின் கண்கள் மட்டும் புன்னகையைக் காட்டியது.
“ஷீ இஸ் லக்கி” என்ற ஷீலா, “தன்விதாவை சொன்னால் நீங்க என் பக்கமிருந்து டைவர்ட் ஆகிடுவீங்கன்னு தான் தன்விதா பெயரை சொன்னேன். அவங்களை மாட்டிவிடணும் இல்லை” என்றாள்.
வாழி புரிந்தது எனும் விதமாக தலையை அசைத்தான்.
ஷீலா சென்றதும்,
தலையை கைகளில் தாங்கியவனாக அமர்ந்தான் வாழியாதன்.
அவனின் தோற்றம் அடுத்து என்னவோ என்கிற பதட்டத்தை கொடுத்தது சூர்யாவுக்கு.