வெண்மதி இவளுடன் சென்னைக்கு வருவதை போன் மூலம் சொன்னாள். அப்போது அவள் கோயிலில் இருந்தாள்.
“கவி எனக்கு சென்னை கம்பெனியிலிருந்து ஃபைனல் ரவுண்ட் இன்டர்வியூ கால் வந்திருக்கு.”
“சூப்பர் மதி. உனக்கு இந்த வேலை கிடைச்ச மாதிரிதான்.”
“ஆமாண்டி நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நாளைக்கு நான் உன் கூட சென்னைக்கு வர்றேன்.”
“சரிடி நாம ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்.” என்று கூறி போனை வைத்து திரும்பிய கவிதா ஒருவர்மீது தெரியாமல் மோதினாள்.
“சாரி” என்று கூறியபடி நிமிர்ந்து பார்த்தவள் ஆச்சரியமனாள். அது செல்வா தான்.
அவன் எதுவும் பேசாமல் சென்றுவிட்டான். இதனை வெண்மதியிடம் கூறினாள் கவிதா.
“ ஒருவேளை அவன் நாம பேசினதை கேட்டு அதை விஜயிடம் சொல்லியிருப்பான். “
“அப்போ இது விஜய் பண்ண வேலை தானா” என்று சத்தமாக யோசித்தாள் வெண்மதி.
“ஆமாம் வெண்மதி. நீ சொல்றது கரெக்டு தான். அவன் தான் வேணும்னு இந்த மாதிரி பேசி பண்ணி இருப்பான்.”
“எவ்வளவு திமிரு அவனுக்கு! நெக்ஸ்ட் டைம் வேலை கிடைக்கிற வரைக்கும் யார்கிட்டயும் நான் இன்டர்வியூ போற விஷயத்தை சொல்ல போறது கிடையாது. எங்க அம்மாகிட்ட கூட சொல்ல போறது கிடையாது.”
“அது எப்படி முடியும் மதி?”
“மனசு வச்சா முடியும். ஒருவேளை நீ என்கிட்ட பேசினதை செல்வா கேட்ட மாதிரி நான் நெக்ஸ்ட் டைம் எங்க அம்மாகிட்ட இல்ல எங்க அம்மா வேற யார்கிட்டயாவது சொல்லும்போது விஜய்க்கு தெரிஞ்சவங்க யாராவது கேட்கலாம் இல்லையா ?
“ஆமாம் மதி சான்ஸ் இருக்கு. நீ நெக்ஸ்ட் டைம் வேலை கிடைச்சிடுச்ச அப்புறம் எனக்கு கால் பண்ணி சொல்லு. அதுவரைக்கும் நான் வேலையை பத்தி உன்கிட்ட கேட்கவே மாட்டேன்.”
“ஓகே கவி.”
“இந்த வேலை போனதுக்கு நானும் ஒரு சின்ன காரணமாக இருந்துட்டேன்.” “அப்படி எல்லாம் ஒன்னுமில்ல. உன்னை பத்தி எனக்கு நல்ல தெரியும். இந்த விஷயத்தை நாம ரெண்டு பேருமே மறந்துட்டு அடுத்த வேலையை பார்ப்போம்.”
“சூப்பர் மதி. உன்னை நினைச்சா எனக்கே பெருமையா இருக்கு. எத்தனை தடவை தோத்து போனாலும் திரும்பத் திரும்ப ட்ரை பண்ற உன்னோட விடாமுயற்சி எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. முதல் வேலை உனக்கு கிடைக்காத போ நீ எப்படி அழுத? இப்போ எவ்ளோ தெளிவா இருக்க.”
“எல்லாமே எங்க அம்மா எனக்கு கொடுத்த தைரியம் நம்பிக்கைதான். அதுவும் இல்லாம முதல் அடி வாங்கும் போது தான் வலிக்கும். அதுக்கப்புறம் மறுத்து போயிடும்.”
“என்ன சொல்ற மதி”
“இல்லடி வலிக்காது என சொல்லவந்தேன். பழகிப் போய்விடும். அதுக்காக நான் மனசு வெறுத்துப் போயிட்டேன்னு அர்த்தமில்லை. எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் வேலையை வாங்குவேன்.” என்று உறுதியாக கூறினாள். அவள் குரலில் தெரிந்த உறுதியை கண்டு வியந்தாள் கவிதா.
“எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!” என்று வெண்மதி அந்த எப்படியில் சோகத்தையும் இப்படியில் சந்தோஷத்தையும் காட்டி கூற கவிதா
“என்னடி விவேக் காமெடியை தலைகீழான எக்ஸ்பிரஷன்ல சொல்ற.” என்று கேட்க
“நமக்கு ஏத்த மாதிரி தாண்டி நாம சொல்லணும்.” என்று வெண்மதி கூற கவிதா, வெண்மதி இருவரும் சேர்ந்து சிரித்தனர்.
அன்று வெண்மதி தாயிடம் வந்து
“ அம்மா மோனிகா ரொம்ப நாளா என்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு இருக்கா. நான் போயிட்டு வரட்டுமா மா?”
“சரிமா போயிட்டு வா.”
“நாளைக்கு காலையில போயிட்டு மதியானம் வந்துடறேன்.”
“சரிமா போயிட்டு வா.” என்று தாயிடம் சொல்லிவிட்டு பாண்டிச்சேரி இன்டர்வியூக்கு கிளம்பினாள்.
தாயிடம் பொய் சொல்லியது அவளுக்கு வருத்தமாக இருந்தது. எனினும் அவளுடைய சூழ்நிலையில் அவளுக்கு இதை தவிர வேறு வழி தெரியவில்லை. எனவே தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு இன்டர்வியூவுக்கு சென்றாள்.
ஆர். பி. எல் சாஃப்ட்வேர் என்ற பெயர் பலகையை பார்த்ததும் உள்ளே சென்றாள். அது ஒரு சின்ன கம்பெனி அங்கு ஒரு 15 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். இவள் உள்ளே சென்றதும்
“என்னமா இன்டர்வியூவுக்கு வந்திருக்கீங்களா?”
“ஆமாம் சார்.” என்று வெண்மதி கூற
“உள்ள போங்க.” என்று மேனேஜர் அறையினை காண்பித்தான்.
இவள் உள்ளே சென்றாள். அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.
“டேக் யுவர் சீட் .”
என்று அவர் முன்பு இருந்த நாற்காலியைக் காட்டினார் அவர்.
வெண்மதி உட்கார்ந்தாள்.
பொதுவாக சில கேள்விகளை கேட்டார். அவள் எல்லாவற்றிற்கும் தெளிவாக பதில் கூறினாள்.கடைசியாக
“ இது ஒரு டெவலப்பிங் கம்பெனி. இந்த கம்பெனியில் நான் உன்ன மாதிரி பிரஸ் கேண்டிடட்ஸ் எடுத்து அவங்களுக்கு ட்ரெயினிங் கொடுத்து வேலையில் ஜாயின் பண்ணிக்கிறேன்.”
“ஓகே சார்.” என்று வெண்மதி கூற
“ஒரு மாசம் ட்ரெய்னிங் பீரியட். 15000 சம்பளம் தான் கிடைக்கும். அதுக்கு அப்புறம் முழு சம்பளம் 25000 கிடைக்கும் . இன்னும் ரெண்டு பேரை இன்டர்வியூ பண்ண வேண்டி இருக்கு. அவர்களையும் இன்டர்வியூ பண்ணதுக்கு அப்பறம் நான் முடிவு செய்வேன். ஒருவேளை நீங்க செலக்ட் ஆனா உங்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் இமெயிலில் வரும். பெஸ்ட் விஷேஸ்.” என்று கைகுலுக்கினார். இவளும் கைகுலுக்கி விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
இந்த வேலை கிடைத்துவிடும் என்று அவளுக்கு தோன்றியது. எனினும் ஒரு சில முறை அவள் சந்தித்திருந்த தோல்வி. அவளை முழுமனதுடன் மகிழ விடவில்லை. மதியம் வீடு வந்தாள் வெண்மதி.
லட்சுமி “என்னமா மோனிகா வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” “எல்லாரும் நல்லா இருக்காங்க அம்மா. உங்களை கேட்டதா சொல்ல சொன்னா.” “அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்க. இல்லை மதி?”
“ஆமாம் அம்மா. நானும் கேள்விப்பட்டேன்.” என்று வாய் தவறி கூறினாள் வெண்மதி.
“கேள்வி பட்டியா?”
சுதாரித்துக்கொண்டு “இல்லமா அவ சொன்னா. அதை தான் சொன்னேன். அவளோட மாமா பையன் தான் மாப்பிள்ளை. அந்த கதையை தான் பேசிட்டு இருந்தா. நேரம் போனதே தெரியல. வீட்டுக்கு வர மூணு மணி ஆயிடுச்சு.
பசிக்குது சாப்பிடணும்.”
“என்ன மதி சொல்ற? இவ்வளவு நேரம் அங்க இருந்திருக்க. சாப்பிடலையா?” ‘அச்சச்சோ பசி மயக்கத்தில் உளறிட்டோமே’ என்று நினைத்துக் கொண்டு அவள் “இல்லை மா. இன்னைக்கு அவங்க வீட்டில கருவாட்டு குழம்பு. எனக்குதான் கருவாடு பிடிக்காதே. அது அவங்களுக்கு தெரியாது. அதனால நான் ரசம் சாதம் மட்டும் சாப்பிட்டேன். அவங்க வேற ஏதாவது செய்யறேன் என சொன்னாங்க. ஆனா நான் தான் அவங்களுக்கு கஷ்டம் வேண்டாம்னு இதுவே போதும்னு சொல்லிட்டேன்.”
“சரி சரி இன்னைக்கு நம்ம வீட்டுல சிக்கன் பிரியாணி. உனக்கு ரொம்ப பிடிக்குமே. சாப்பிடு” என்று தாய் கூறினார்.
அவள் தட்டை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து ஒரு பிடி பிடித்தாள். “சாப்பிட்டேன்னு சொல்ற நீ சாப்பிடுவதை பார்த்தா சாப்பிடவே இல்லை போல தெரியுது.”
“உன்னோட சிக்கன் பிரியாணி டேஸ்ட் அப்படி. எங்க அம்மாவோட கைவண்ணமே தனி தான்.” என்று கூறி சமாளித்தாள்.
அன்று மாலை லேப்டாப் எடுத்து வைத்து இமெயில் ஏதாவது வந்திருக்கிறதா? என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
அப்பொழுது ‘ஆர். பி. எல் சாஃப்ட்வேர்’ என்ற கம்பெனியிலிருந்து அவளுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்திருந்தது. சில தோல்விகளுக்கு பிறகு அவளுக்கு இந்த வேலை அதுவும் முதல் வேலை கிடைத்துள்ளது. அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. உடனே இந்த நல்ல செய்தியை தாயிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தாள். வந்தவள் தாயை தேடினாள்.
“ அம்மா அம்மா” என்று கூப்பிட்டாள் கூப்பிட்டுக் கொண்டே வீடு முழுவதும் தேடிக் கொண்டிருந்தாள்.
அவளை கவனித்த லலிதா “என்ன அம்மா அம்மான்னு கூப்பிட்டுக்கிட்டு இங்கேயும் அங்கேயும் ஓடிக்கிட்டு இருக்க. பக்கத்து தெருவுல கமலா பொண்ணுக்கு சீமந்தம். அந்த பங்ஷனுக்கு போயிருக்கா.உன் கிட்ட சொல்லல?”
“நான் தூங்கிட்டு இருந்தேன். காலையில சொன்னாங்க. இப்பதான் ஞாபகம் வருது.”
“நானும் அங்கதான் கிளம்பிட்டு இருக்கேன்.”
“நான் போய் அம்மாவை பார்க்கிறேன்.” அவளுக்கு இந்த நல்ல விஷயத்தை சீக்கிரம் தாயிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. அங்கு பங்க்ஷன் நடந்துகொண்டிருக்கிறது என ஞாபகம் இருந்தது. அதனால் அணிந்திருந்த சாதாரண உடையை மாற்றி நல்ல பேபி பிங்க் சல்வார் ஒன்றை அணிந்து கொண்டு லேசான ஒப்பனையுடன் கிளம்பினாள். அதேநேரத்தில் பெரியம்மாவும் தயாராகி வர
“சரி வா. நாம ரெண்டு பேரும் போகலாம். உன்னோடு டிவிஎஸ் 50 எடு” என்று பெரியம்மா ஆணையிட இவள் அவளுடைய சிங்க வாகனத்தை எடுத்துக்கொண்டு வந்து பெரியம்மாவை அழைத்துக்கொண்டு கமலா வீட்டிற்கு சென்றாள்.
‘நல்லாத்தான் வண்டி ஓட்டுறா’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் லலிதா.
கமலா வீட்டின் முன்பு வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு இறங்கி இருவரும் உள்ளே சென்றனர்.