கேவிஎஸ் சகோதரர்களின் பெற்றோர்கள், ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேரும் போது, மூத்தவர் கந்தசாமிக்கு இருபத்தி நான்கு வயது. மற்ற சகோதரர்கள் இருவரும் பதின்ம வயதின் இறுதியில் நின்றார்கள்.
குடும்பத்தை தாங்கி நடத்த பெண் ஒன்று வேண்டுமென்று, இருபத்தைந்து வயதில் பெரியநாயகியோடு திருமணம் நடந்தது கந்தசாமிக்கு.
அண்ணனின் திருமணத்தின் மூலம் வேலுச்சாமிக்கும் சுப்பிரமணியனுக்கும் கிடைத்தது அண்ணி அல்ல, அம்மா.
ஆமாம்… அத்தனை அன்பாகவும் பொறுப்பாகவும் குடும்பத்தை பார்த்துக் கொண்டார் பெரியநாயகி.
அண்ணனோடு வியாபாரத்தை பார்த்துக் கொள்ளவென்று, இளையவர்கள் இருவரும் தங்கள் படிப்பை இடைநிறுத்தம் செய்ய முயன்றபோது கூட, கணவனுக்கு வியாபாரத்தில் தோள் கொடுத்து, அவரின் பணிச்சுமையை குறைந்த நாயகி, கணவரின் சகோதரர்கள் இருவரும், தங்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்த பிறகே வியாபாரத்தில் முழுமூச்சாக இறங்க அனுமதியளித்தார்.
அதே போல கல்யாண வயதில் வேலுச்சாமிக்கு, இவர்களே பெண் பார்த்து தடபுடலாக திருமணத்தை நடத்தினார்களென்றால், சுப்பிரமணியன் காதல் என்று வந்து நின்றார்.
அவர் காதலித்த ரத்னா அழகி. ஆனால், இவர்கள் அளவுக்கு சொல்லிக் கொள்ளும் குடும்பமில்லை.
இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல், அந்த ரத்னாவையே தம்பியின் சரிபாதி ஆக்கினார்கள் கந்தசாமி தம்பதியினர்.
மூன்று தம்பதியருக்கும் காலாகாலத்தில் மக்கட் செல்வமும் குறைவில்லாமல் கிடைக்கவே நிம்மதியாக சுழன்றது வாழ்க்கை சக்கரம்.
ஆனால், அப்படி எல்லாம் உங்களை நிம்மதியாக இருக்கவிட முடியாது என்பது போல இருக்கும், பலநேரங்களில் ரத்னாவின் நடவடிக்கைகள்.
அவை அத்தனையையும் ஒன்றுமில்லை என்பது போல உதறி, அழகாக அந்த குடும்பத்தை சிதறவிடாமல், பொருத்தி கொண்டு செல்வதில் வல்லவராக நாயகி திகழ்வதால், அந்த குடும்பம் என்னும் கூடு சிதையாமல் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
வேலுச்சாமியின் மனைவி ராஜேஸ்வரியின் கருத்துக்களும், பெரியநாயகியின் கருத்துக்களும் எப்போதுமே ஒரே அலைவரிசையில் பயணிப்பதால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு என்பதே கிடையாது.
பெரியவர் கந்தசாமியின் பெண்பிள்ளைகளான, மீனாட்சியும் கயல்விழியும் ஏனைய சிறார்களை விட எட்டு, ஒன்பது வயது பெரியவர்கள்.
குழந்தைகளின் படிப்பு என்று வரும்போது, அந்த குடும்பத்தின் எல்லா குழந்தைகளுமே எந்தவித பாகுபாடுமின்றி குற்றாலத்தில் பிரசித்தி பெற்ற மெட்ரிக் பள்ளியிலேயே சேர்த்து படிப்பிக்க பட்டார்கள்.
பாவூர்சத்திரத்திலிருந்து பள்ளி சற்று தொலைவிலேயே இருக்க, பள்ளி வாகனத்தில் தான் அனைவரின் பயணமும் இருக்கும்.
எல்லா குழந்தைகளும் உற்சாகமாக பள்ளிக்கு சென்றார்கள் என்றால், ‘உங்கள் குழந்தை வயிற்றுவலியால் அவதிப்படுகிறான். வந்து அழைத்து செல்லுங்கள்” என்று வாரத்தில் பாதி நாட்கள் அருணுக்காக தகவல் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும்.
அப்புறம் என்ன? நம்பிக்கையான ட்ரைவரை காரோடு அனுப்பி, சிறுவனை வீட்டுக்கு அழைத்து கொள்வார்கள் இவர்களும். அவனும் சிறிதுநேரம் வீட்டில் பம்மி இருந்துவிட்டு, போய்நிற்பது தங்கள் கடையில் தான்.
ஹஹ… அந்த அரிசி, பருப்பு வாசனையில் அவன் கொண்ட வயிற்றுவலி எல்லாம் பறந்து போகும் போல.
சிறுவயதிலிருந்தே அவர்கள் கடை அருணை ஈர்த்தது போல, பள்ளி அவனை ஈர்க்கவில்லை.
பள்ளிக்கு செல்வதிலிருந்து தப்பிப்பதற்காக, வயிற்றுவலி நாடகத்தை அருண் தொடர, ஐந்தாவது வகுப்பிலிருந்து உள்ளூர் பள்ளியிலேயே சேர்க்கப்பட்டான் அருண்.
அந்தநாள் அருணின் வாழ்வில் பொன்னான நாள் என்றுதான் சொல்லவேண்டும். அத்தனை ஆர்ப்பரிப்பு சிறுவனிடம்.
உள்ளூர் பள்ளி என்றால், ஒன்பது மணிக்கு திறக்கும் தங்கள் கடையில், ஒன்பது மணியின் கடைசி நிமிடம் வரை நின்றுவிட்டு, பள்ளிக்கு ஓடலாமே!
அதுபோல நான்கு மணிக்கு பள்ளி விட்டு வந்ததும் பையை கடாசிவிட்டு கடைக்கு ஓடிவிடலாமே!
இந்த ஏற்பாடு அருணுக்கு ரொம்பவே பிடித்துப்போக, அதன்பிறகு அவன் வாழ்க்கையில் வயிற்றுவலி என்ற ஒன்றுக்கே இடமில்லாமல் போனது.
ரொம்ப சிறுவயதிலேயே கடையின் நெளிவு சுளிவு அத்தனையையும் கற்றுக் கொண்டான் அருண்.
கூடவே அவனிடம் இருந்த ஏதோ ஒரு வசீகரத்தன்மை, கடைக்கு வரும் அத்தனை வாடிக்கையாளர்களையும் கவர்ந்திழுத்தது.
மிகச்சிறு வயதிலேயே கடையின் அடுத்த வாரிசு என்று எல்லாரும் மரியாதையாக பார்க்கும் நிலமைக்கு வந்துவிட்டான் அருண்.
அவனை விட இரண்டு வயது பெரியவனான சசிதரனுக்கு அருண் அளவுக்கு அவர்கள் தொழிலில் நாட்டமில்லை. அதற்காக கடைக்கு வரமாட்டான் என்று சொல்வதற்கில்லை.
வீட்டின் பெரியவர்கள் அழைத்தால் செல்வான் தான். ஆனால் அருணைப்போல தெய்வத்தின் காலடியில் கிடப்பது போலெல்லாம் கிடையாது.
பெரியவர்கள் மூவரும் திடகாத்திரமாக இருக்கவே, அவர்களுக்கும் அது பெரிதாக தெரியவில்லை.
சசிதரன் தன்னுடைய பள்ளி இறுதிபடிப்பை முடிக்கவும், அவன் விருப்பப்படி கம்ப்யூட்டர் இஞ்சினியரிங்கில் சேர்த்துவிட்டார்கள்.
“என்ன படிச்சாலும், நான் நம்ம கடைக்கு தான் வரப்போறேன். அப்புறம் எதுக்கு பணத்தையும் நாளையும் வேஸ்ட் பண்ணனும்?” என்று பன்னிரெண்டாம் வகுப்புக்கு மேல் படிக்க மறுத்தான் அருண்.
எவ்வளவோ சொல்லியும் தன்முடிவில் அருண் உறுதியாக நிற்க, “ஒரு டிகிரியாவது முடிச்சா தான் கடைக்குள்ளேயே விடுவோம்” என்று சொல்லி ஒரு பி ஏ யை முடிக்க வைத்தார்கள்.
படிப்பு விஷயத்தில் மகனின் மீது ரத்னாவுக்கு பயங்கர ஏமாற்றம். சசிதரனைப் போல தன் மகனும் ஒரு இன்ஜினியராக வேண்டும் என்று கனவு கண்டவர், அவனிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், தன் பிடியிலிருந்து இம்மியளவும் இறங்கி வரவில்லை அருண்.
சசிதரன் படித்து முடித்து கல்லூரியை விட்டு வெளியே வரும் போதே, கேம்பஸில் தேர்வாகி கையில் வேலையோடு வர, “நீ படிச்ச படிப்பை வேஸ்ட் ஆக்காமல் வேலைக்கு போ… தப்பில்லை. ஆனா நமக்கொரு தேவைன்னு வரும்போது கண்டிப்பா நீ இங்க வந்துடணும்” என்று சொல்லியே அவனை வேலைக்கு அனுப்பி வைத்தார்கள்.
‘உடையவன் பார்க்காத வேலை ஒரு முழம் கட்டையாம்.’ தங்கள் கையருகிலேயே ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்திருந்தவர்கள், தங்கள் காலத்துக்கு பிறகு அதை, தங்களுடைய இரு ஆண்வாரிசுகளும் எடுத்து நடத்த வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லையே.
அப்படியும், எதிர்பாராமல் நடந்த பெரியவர் கந்தசாமியின் மறைவுக்குப் பின்னரும், சசிதரனை யாரும் கடைக்குள் வந்துவிடு என்று அழைக்கவில்லை.
அதற்குப் பதில், தன்னுடைய நண்பன் கணேஷை வேலைக்கு அமர்த்திக் கொண்டான் அருண். கணேஷூம் அத்தனை நம்பிக்கையானவனாக இருந்தான் அவர்களுக்கு.
எப்போதுமே தன் மகனின் முடிவில் உடன்பாடு இல்லாத ரத்னா, இன்று தன் மனகிலேசத்தை வெளியே சொல்லிவிட்டார்.
போதாததற்கு, கணவனின் மறைவிற்குப் பின்னரும் அந்த வீட்டின் மரியாதைக்குரிய ராஜமாதாவாக பெரியநாயகி உலா வந்து கொண்டிருக்க, வெளியில் காட்ட முடியாத கோபம் ஒன்று ரத்னாவின் மனதில் உழன்று கொண்டே தான் இருக்கிறது.
எல்லாமும் சேர்ந்து இன்று வார்த்தைகளாக வெடித்து விட்டது.
“காலங்காலமா நமக்கு சோறு போட்டு, செல்வாக்கா வச்சிருக்க நம்ம தொழிலை, நீயே இவ்வளவு இளக்காரமா பேசுறியே! இது நல்லாவா இருக்கு ரத்னா?” கோபமாக கேட்டார் ரத்னாவின் கணவர் சுப்பிரமணியன்.
“நல்லா இல்லைன்னு தான்ங்க நானும் சொல்லுறேன். இந்த வீட்டு பிள்ளைங்க எல்லாரும் டிப் டாப்பா வந்து நிக்கும் போது, எம்புள்ள மட்டும் இந்த கடையில் பொட்டலம் மடிச்சிட்டு இருக்கிறது நல்லா இல்லைன்னு தான்ங்க நானும் சொல்லுறேன்.”
அன்னையின் வார்த்தையில் மனதுக்குள் ஒரு சலிப்பு ஓடினாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “அதைப்பத்தி கவலைப்பட வேண்டியது நான் தான் ம்மா” என்று அழுத்தமாகச் சொல்லிய அருண்,
“எல்லாரும் பல்லக்குல ஏறி உக்கார்ந்துகிட்டா அதை தூக்குறது யாரு? அதைப்போல, எல்லாருமே போய் கம்ப்யூட்டரை தட்டிகிட்டு உக்கார்ந்துகிட்டா, மற்ற தொழிலை எல்லாம் பாக்குறது யாரு?” தாயைப் பார்த்து எரிச்சலோடு கேட்டான்.
“எனக்கு அதெல்லாம் தெரியாது அருண். ஆனா, எம்புள்ளயும் மரியாதையா சொல்லிக்கிற மாதிரி ஒரு வேலை பார்க்கணும்னு நான் நினைக்கிறது தப்பா?” தன் பிடியிலேயே நின்றார் ரத்னா.
“ம்மா… நம்மது வெறும் கடையில்ல, பெரும்கடல்ன்னு உங்களுக்கே தெரியும். அதால மாசாமாசம் நம்ம குடும்பத்துக்கு வர்ற வருமானமும் உங்களுக்கு தெரியும். அப்பிடியிருந்தும் எம்பெயருக்கு பின்னாடி வர்ற இஞ்ஜினியர், டாக்டர் இப்படி ஏதோ ஒரு பட்டத்துக்கு தான் மதிப்புன்னு நீங்க சொல்லுறீங்க. சூப்பர் ம்மா… இதுக்கு மேல வேற எப்படியும் என்னை அவமானப்படுத்த முடியாது.”
அவ்வப்போது குடும்பத்தின் அமைதியை கெடுப்பது போல பேசும் அன்னையின் பேச்சுக்களை எப்போதுமே ரசிக்காத அருண், இன்று கொஞ்சம் கோபமாக பேசிவிட,
“என்னவோப் போங்க, இந்த வீட்டுல எம்பேச்சை யாரு தான் மதிக்கிறாங்க.”
கணவனின் சுட்டெரிக்கும் விழிகளின் அனலைத் தாங்க முடியாமல், ஒரு முணுமுணுப்போடு இடத்தை காலி செய்தார் ரத்னா.
***************
அது, பாவூர்சத்திரத்திற்கு அருகேயுள்ள, அல்லிக்குளம் என்ற சிறிய கிராமம்.
அங்கே ஊருக்கு மத்தியில் இருக்கும் வீடு ஒன்று, சாயங்காலம் நடக்க இருக்கும் பெண்பார்க்கும் படலத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தது.
“அப்படியே அந்த ஜன்னல் கர்ட்டன், டோர் கர்ட்டன் எல்லாம் மாத்திடு சிவா.”
“சரிம்மா.”
“சாயங்காலம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றதுக்கு முன்னாடி, முற்றத்துல நல்லதா ஒரு கோலம் போட்டு கலர் குடுத்துடலாமா?”
“சரி ம்மா… நீங்க சொல்லுற எல்லாம் பண்ணிடலாம். டென்ஷன் ஆகாதீங்க” என்றாள் சிவா என்ற சிவரஞ்சனி.
“டென்ஷன் எல்லாம் இல்ல… சும்மா ஒரு பரபரப்பு… மொத முதலா உங்க அக்கா சந்த்ரியை பொண்ணு பாக்க வர்றாங்கல்ல, அதான்…” சின்னமகளிடம் தன் மனதை மறைக்காது உரைத்தார் ராதா.
“ஏய்… ரஞ்சனி… கொஞ்சம் இங்க வந்துட்டு போடீ…”
இத்தனை நேரமும், தாய் அழைத்துப் பேசிய பதத்திற்கு எதிர்பதமான, அதிரகார தொனியில் அறைக்குளிருந்து அழைப்பு வந்தது.
அவள்தான் சற்றுமுன் ராதா சொல்லிய சந்த்ரி என்ற சந்த்ரிகா. ராதாவின் மூத்த மகள்.
“போ… போய் உன் அக்கா என்ன சொல்லுறான்னு கேளு” இளைய மகளிடம் ராதா கிசுகிசுத்தார்.
“ச்சை… ஊரா இது? அவசரத்துக்கு ஒரு ஃபேஷியல் செய்யணும்னாலும் கூட எடுத்துகட்டிகிட்டு தென்காசிக்கு போகணும். அதுக்கு பயந்து நானே வீட்டுலயே பண்ணிகிட வேண்டியதா இருக்கு.”
ஃபேஷியல் செய்வதறக்காக ஒரு பௌலில் கிரீம் ரெடி செய்து கொண்டே, சத்தமாக அங்கலாய்த சந்த்ரிகா, அறைக்குள் நுழைந்த தங்கையிடம், “கொஞ்சம் ஐ ப்ரோ ப்ளக் பண்ண ஹெல்ப் பண்ணு டி” என்று அதிகாரமாக சொன்னாள்.
“ஐயையோ… ஐ ப்ரோல எல்லாம் கைவைக்காத சந்த்ரிகா. ஏற்கனவே, ஒரு முடி அதிகமில்லாமல் மெல்லுசா, வில்லாத்தான் வளைஞ்சியிருக்கு அது.”
‘முகத்தை திருத்துகிறேன் பேர்வழியென்று, மகள் ஏதாவது ஏடாகூடம் செய்து வைத்து விடக்கூடாது, அதுவும் அவளை பெண்பார்க்கவென்று மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இன்று வரயிருக்கும் நேரத்தில்… கூடவே… கூடாது.’
ஒருவித பதட்டத்தில் மகளின் அறைக்குள் நுழைந்த ராதா, படபடவென்று சொல்ல, “சந்த்ரிகா, ஹமாம்னு, சோப்பு பேரைச் சொல்லி கூப்பிடாதீங்க, சந்த்ரின்னு கூப்பிடுங்கன்னு உங்ககிட்ட எத்தனை நாள் ம்மா சொல்லணும்” தாயிடம் எரிந்து விழுந்தவள்,
“நீங்க டீச்சரா வேலை பாக்குறீங்கன்னு தான் பெயர். ஆனா உங்களுக்குள்ள இருக்கிறது அக்மார்க் பட்டிக்காடு. இல்லைன்னா ஒரு கம்ப்யூட்டர் இஞ்ஜினியரை இப்பிடி வேலைக்கு போகவிடாம வீட்டுக்குள் அடைச்சி வைப்பீங்களா?” எப்போதும் போல தனது புலம்பலை இப்போதும் அவிழ்த்து விட்டாள் சந்த்ரிகா என்ற சந்த்ரி.