“உன்னை வேலைக்கு போகாதன்னு சொல்லலை சந்த்ரி… தங்கி வேலை பாக்க வேண்டாம்னு தான் சொல்லுறேன்…”
“இரண்டும் ஒன்னுதான்…” நொடித்துக் கொண்டவள்,
“இந்த காலத்துல பொண்ணுங்க வெளிநாட்டுக்கெல்லாம் தனியா போய் வேலைப் பாக்குறாங்க. இங்க என்னன்னா, தோ… இருக்குற பெங்களூருக்கு கூட போய் வேலை பாத்துடக் கூடாதாம். கேட்டா, கல்யாணத்தை பண்ணிட்டு உம்புருஷன் கூட போன்னு, ஒரு சப்பைகட்டு… அவ்வளவு நம்பிக்கை எம்மேல ம்ம்…”
கோபத்தில், அருகிலிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளில் கையை மடக்கி குத்திக்கொண்டவள், “இந்த மாப்பிள்ளை பெங்களூர்ல இஞ்சினியரா தானே வேலை பாக்குறான். இந்தாளையே கல்யாணம் பண்ணிக்கிட்டு, அப்படியே அவனையும் கூட்டிகிட்டு நான் அமெரிக்கா போய் செட்டிலாகிடுறேனா இல்லையா பாருங்க. அப்புறம் ஊருக்கு வா வா ன்னு தலைகீழா நின்னு என்னை நீங்க கூப்பிட்டாலும், இந்த பக்கம் தலைவச்சு கூட படுக்க மாட்டேன்” என்றாள் உறுதியாக.
‘எத்தனை சொன்னாலும் என் மனநிலையை இந்த பெண் ஒருபோதும் புரிந்து கொள்ளவே மாட்டாளா?’ மகளின் கோபம் பார்த்து ஆயாசமாக வந்தது ராதாவிற்கு.
இதோ… இப்போது மகள் சொன்னது போன்ற கட்டுப்பட்டியான எண்ணங்கள், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூட அவரிடம் கிடையாதே.
தன்னைப்போல் ஆசிரியராக பணியாற்றிய கணவர், இரண்டு வருடங்களுக்கு முன் திடீரென்று காலமாகவும், நிலைகுலைந்து போன பெண்ணை, உறவு என்று சொல்லிக் கொண்டு வந்த கூட்டம், அவருக்கு ஒரு ஆண் மகவு இல்லாத விஷயத்தைச் சொல்லிச் சொல்லி இன்னும் பலவீனமாக்கியது.
அவர்களின் பொல்லாத வாயில் தங்கள் பெண்கள் விழுந்து அரைபட்டு விடக்கூடாது என்பதற்காகவே, கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் வைத்து அடைகாப்பது போல அடைகாக்கிறார் ராதா. அதனாலேயே இத்தனை கட்டுப்பாடுகள் அவர்களுக்கு.
அன்னையின் மனநிலையை புரிந்து கொண்டு சமீபத்தில் பி எஸ்சி நர்சிங் முடித்த இளையமகள் சிவரஞ்சனி, பாவூர்சத்திரத்திலேயே ஒரு நர்சிங்ஹோமில் வேலைப் பார்க்கிறாள்.
ஆனால் இஞ்சினியரிங் பட்டதாரியான சந்த்ரிகாவோ, ‘மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி’ என்பது போல, “வேலைக்கு போனா அல்ட்ரா சிட்டிக்கு தான் போவேன், இல்லையோ வீட்டுல தான் இருப்பேன்” என்று கடந்த இரண்டு வருடங்களாக பிடிவாதமாக வீட்டில் இருந்து கொண்டிருக்கிறாள்.
வார்த்தைகள் லேசாக தளுதளுக்க சொன்ன அன்னையைப் பார்த்து, “எனக்கு எப்பவும், எதுவும் புரியவேண்டாம். இப்போ கண்ணை கசக்காம வெளியே போறீங்களா?” என்று கோபமாகச் சொல்ல, அறையை விட்டு வெளியேறினார் ராதா.
அங்கே நிற்கவா? இல்லை அம்மாவுடன் போகவா? என்று சிவரஞ்சனி தடுமாற, “அதான் எம்முகத்தை கூட என் இஷ்டப்படி எதுவும் செய்யக்கூடாது ன்னு உங்க அம்மா சொல்லியாச்சுல்ல. அப்புறம் எதுக்கு இங்க நிக்குற? போ…போ...”
தங்கையைப் பார்த்து சத்தமிட்ட சந்த்ரிகா, தன் கையிலிருந்த ஃபேஷியல் கிரீம் நிறைந்த கண்ணாடி பௌலை ஆத்திரத்தோடு சுவரில் ஓங்கி அறைய, சில்லுசில்லாக அது உடைந்தது.
மகளின் செயலில், கன்னம் கன்னமாக அவளை அறைந்து தள்ளும் ஆத்திரம் வந்தாலும், சாயங்காலம் நடைபெற இருக்கும் பெண்பார்க்கும் படலத்தை முன்னிட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட ராதா,
உடைந்த கண்ணாடி துண்டுகளை அப்புறப்படுத்த முயன்ற இளையமகளைத் தடுத்து, “உடைக்க தெரிஞ்சவங்களுக்கு, கிளீன் பண்ணவும் தெரிஞ்சிருக்கணும்” என்று சொல்லி வெளியே இழுத்துச் சென்றார்.
இப்போதென்றில்லை, எப்போதுமே சந்த்ரிகாவிடம் பிடிவாதமும், கோபமும் அளவுக்கதிகமாகவே உண்டு.
கூடவே, எல்லா இடத்திலும் தானே முதன்மையானவளாக, எல்லாராலும் கொண்டாடப்படுபவளாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணமும் உண்டு.
ஆனால், எவ்வளவு தான் பிடிவாதமும் கோபமும் இருந்தாலும், அன்னையின் வார்த்தைகளை எதிர்த்து, இதுவரையிலும் எந்த காரியத்தையும் சந்த்ரிகா செய்தது கிடையாது. அந்த இயலாமையை கோபமாக வெளிப்படுத்தி வீட்டில் இருப்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள்.
குணத்தில் சந்த்ரிகாவிற்கு நேரெதிர் சிவரஞ்சனி.
‘தன் வயிற்றில் பிறந்து, ஒன்றாகவே உண்டு, வளர்ந்த சகோதரிகளிடம் எப்படி, இப்படி குணநலன்களில் மாறுபாடு வந்தது?’ என்று ராதா அடிக்கடி நினைத்து பார்ப்பது உண்டு.
‘இப்படி ஒரு குணத்தை வைத்துக் கொண்டு, திருமணம் செய்து, ஒரு குடும்பத்தோடு தன்மகள் எப்படி ஒத்துப்போவாள்?
அதுவும் கேவிஎஸ் போன்ற கூட்டுக் குடும்பத்தில் தன் பெண் ஒன்றி, ஒற்றுமையாக வாழ்க்கை நடத்தி விடுவாளா?’ யோசிக்கும் போதே கண்ணைக் கட்டியது ராதாவுக்கு.
ஆமாம்… சந்த்ரிகாவைத் தான் சசிதரனுக்காக கேவிஎஸ் குடும்பத்தார் பெண் பார்க்க இன்று வருகிறார்கள்.
சுற்றுவட்டாரத்தில் கேவிஎஸ் என்ற பெயர் பிரபலமாதலால் அவர்கள் குடும்பத்தைப் பற்றி தெரிந்திருந்தது ராதாவுக்கு.
அதற்குமேல் வேலை எதுவும் ஓடாமல் சோர்ந்து போய் அமர்ந்துவிட்ட அன்னையிடம் வந்த ரஞ்சனி, “ம்மா… அக்கா வேலை விஷயத்துல தன்னோட ஆசை நிறைவேறாததால தான் இப்படி பிஹேவ் பண்ணுறா. ஆஃப்டர் மேரேஜ் பாருங்களேன் அக்கா அப்படியே மாறிடுவா. இப்போ நீங்க வாங்க, நாம அடுத்த வேலையைப் பாக்கலாம்” என்று கையைப்பிடித்து இழுத்தாள்.
‘அப்படி நடந்தா நல்லாத்தான் இருக்கும்’ எண்ணமிட்டபடியே மகளோடு எழுந்து சென்றார் ராதா.
சாயங்காலம் சரியாக நான்கு மணிக்கெல்லாம் கேவிஎஸ் குடும்பத்தார்கள் தங்களது காரில் வந்து இறங்கிவிட்டார்கள். கூடவே ரத்னாவின் அண்ணன் மனைவி பாக்யாவும் அவரது மகள் மாலதியும் வந்திருந்தார்கள்.
எதேச்சையாக நாத்தனார் வீட்டுக்கு மகளோடு வந்திருந்த பெண்மணி, விஷயத்தை கேள்விப்பட்டதும் அவர்களோடு இணைந்து கொண்டார்.
இது வெறும் பெண் பார்க்கும் படலம் என்பதால், தங்கள் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்கும், தன்னோடு பணிபுரியும் ஆசிரியை சுலோச்சனாவைத் தவிர வேறு யாரையும் ராதா அழைக்கவில்ல.
காரிலிருந்து இறங்கியவர்களை, வாசலுக்கு வந்து வரவேற்று ஹாலில் கிடந்த இருக்கைகளில் அமர வைத்த ராதாவுக்கு, கண்ணுக்கு நிறைவாக இருந்த மாப்பிள்ளை சசிதரனின் தோற்றம் அத்தனை திருப்தியாக இருந்தது.
கருப்பு காட்டன் பேண்ட், அதற்கு தோதாக வானநீல கலர் முழுநீள கை சட்டை, கண்களில் ரிம்லெஸ் கண்ணாடி என்று ஹீரோவை தோற்கடிக்கும் தோற்றத்தில் தான் இருந்தான் சசிதரனும்.
ஏற்கனவே இந்த சம்மந்தத்தை சொல்லியிருந்தவர்கள், சசிதரனின் ஃபோட்டோவை ராதாவுக்கு வாட்சப்பில் அனுப்பியிருந்ததால், அவனை எளிதாக அடையாளம் கண்டு கொண்டார் ராதா.
இல்லையென்றால், அவனுக்கு பக்கத்தில் வேஷ்டி சட்டை சகிதமாக, கம்பீரமாக நின்று கொண்டிருந்த அருணை, மாப்பிள்ளை என்று ராதா எண்ணுவதற்கு நூறு சதவீத வாய்ப்புகள் இருந்தது.
அப்படி ஒரு குழப்பம் வந்துவிடக் கூடாது என்று பெரியநாயகி நினைத்தாரோ என்னவோ, இருக்கையில் அமர்ந்தவுடனே, “இது தான் மாப்பிள்ளை” என்று சசிதரனை ராதாவுக்கு அறிமுகப்படுத்தியவர்,
அவனுக்கு அருகில் உட்கார்ந்த அருணிடம், “யாரு மாப்பிள்ளைன்னு குழப்பம் வந்துடக்கூடாது, நீ அத்தான் பக்கத்துல போய் உக்காரு அருண்” என்று சொல்ல, ஒரு சிரிப்போடு நகர்ந்து அத்தான் ராகவ் பக்கத்தில் அமர்ந்தான் அருண்.
பெரிய நாயகியின் இந்த அணுகுமுறை ராதாவுக்கு நிரம்பவே பிடித்தது, அதைவிட அந்த முகத்தில் ஜொலித்த தெய்வீகக்களை அவரை அடியோடு சாய்த்தது.
ம்ம்… அதனால் தானே கணவனின் மறைவிற்குப் பிறகு, தன்னுடைய மங்கல அடையாளங்களை நாயகி துறக்க முயன்றபோது, வீட்டிலுள்ளவர்கள் அவரோடு மல்லுக்கு நின்று எப்போதும் போல அவரை இருக்க வைத்தது.
பரஸ்பர அறிமுகம், சாதாரண பேச்சு இவற்றிலேயே வந்திருந்தவர்களை ராதாவுக்கு பிடித்து போக, ‘தன் மகளை இவர்களுக்கு பிடிக்க வேண்டுமே’ என்ற பதட்டமே வந்து விட்டது ராதாவுக்கு.
‘தன் பெண்ணை மட்டும் பிடித்து விட்டது என்று இவர்கள் சொல்லி விட்டால், எப்பாடுபட்டாவது இந்த திருமணத்தை முடித்துவிட வேண்டும்’ என்ற முடிவுக்கே வந்து விட்டார் ராதா.
சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, வந்தவர்களுக்கு காஃபி, டிஃபன் என்று கொடுத்து ராதா உபசரிக்க முயல, “பிள்ளையை முதல்ல பாத்துடலாமே” என்றார் நாயகி.
ஏற்கனவே ஃபோட்டோவில் பார்த்து, பிடித்து போனதால் தான் சசிதரனையே அழைத்து கொண்டு பெண் பார்க்க வந்தது. இல்லையென்றால் இப்படி எல்லோரும் கண்டிப்பாக வந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் சந்த்ரிகாவிற்கோ, மாப்பிள்ளை பெங்களூருவில் கம்ப்யூட்டர் இஞ்சினியராக இருக்கிறார் என்ற தகுதி மட்டுமே போதுமானதாக இருந்தது.
இந்த தகுதி இல்லை என்ற காரணத்துக்காகவே அவள் மறுத்த வரன்கள் ஏராளம். எல்லாம் வெறும் பயோடேட்டா பரிமாற்றத்தோடு முடிந்து போயிருக்கிறது.
இதுதான் முதல்முறையாக, பெண்பார்க்க என்று வீடுவரை வந்த சம்மந்தம். ராதாவும், அவரது இளையமகளும் மட்டும் தான் சசிதரனின் ஃபோட்டோவை பார்த்து இருந்தார்கள். சந்த்ரிகா பார்க்க மறுத்திருந்தாள்.
நாயகியின் வார்த்தைகளை தொடர்ந்து, ராதாவின் சக ஆசிரியை சுலோச்சனா, சந்த்ரிகாவை அழைத்து வந்தார்.
என்ன தான் கேடிபில்லா ரேன்ஜுக்கு வீட்டில் உள்ளவர்களிடம் பறந்து பறந்து எகிறினாலும், முதன்முறையாக தன்வாழ்வில் நடக்கும் அந்த பெண்பார்க்கும் வைபவம் சந்த்ரிகாவின் கால்களையும் பின்னத்தான் வைத்தது.
காலையில் தாயிடமும், தங்கையிடமும் சண்டை போட்டிருந்தாலும் கூட, ஷ்ரத்தை எடுத்து தயாராகியிருந்தாள் சந்த்ரிகா.
ஏற்கனவே அப்ஸரஸின் தங்கை போன்ற தோற்றத்தில் இருப்பவள், எளிய அலங்காரத்தில் அப்ஸரஸாகவே ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
பெண்ணை அழைத்து வந்து நிறுத்திய சுலோச்சனா, “எல்லாரையும் விஷ் பண்ணிக்கோ சந்த்ரி” என்கவும், கீ கொடுத்த பொம்மையாய், கைகளை குவித்தவளை,
“இதுதான் பொண்ணு, நல்லா பாத்துக்கோ சசி” என்ற டயலாக் வருவதற்கு முன்னரே ஆர்வத்தோடு பார்வையிட்டான் சசிதரன்.
முதல் பார்வையிலேயே பாவையிடம் வழுக்கி விழுந்தவன், திருப்தியாக தன் நாயகி அம்மாவைப் பார்த்து புன்னகைக்தான். அந்த புன்னகையிலேயே மகனின் மனம் புரிந்து போனது பெரிய அன்னைக்கு.
தங்கள் முன்னால் நின்ற பெண்ணை, தோளோடு அணைத்து அழைத்துச் சென்று தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்ட கயல்விழி, “அது தான் என்தம்பி சசி, பாத்துக்கோ” என்று சொல்லியபடியே, லேசாக குனிந்திருந்த சந்த்ரிகாவின் முகவாயைப் பற்றி தன் தம்பியை நோக்கி திருப்பினாள்.
உதடுகளில் தவழ்ந்த வசீகரப் புன்முறுவலோடு, தன்னையே ஆழ்ந்து பார்த்தபடி இருந்த சசிதரனின் கம்பீரத் தோற்றத்தில் விரும்பியே தொலைந்து போனாள் சந்த்ரிகா…