“ஹேய்… விடாத… பிடி… அமுக்குங்கடா அவனை” என்ற நண்பர்களின் ஆரவார கூச்சலுக்கிடையே, கபடி.. கபடி… கபடி… என்று தம்கட்டி பாடிக் கொண்டே, மண்ணில் விழுந்து புரண்டு வெற்றிக்கோட்டை தொட்டு விட முயன்று கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன்.
அந்நேரம், டப..டபவென்று கேட்ட ராயல் என்ஃபீல்டு சத்தத்தில், விளையாடிக் கொண்டிருந்த அத்தனை பேரின் கவனமும் கலைந்து ஓரிடத்தில் குவிந்தது.
அவர்கள் அத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்காமல், புல்லட்டிலிருந்து அனாயசமாக கால்களை வீசி இறங்கிக் கொண்டிருந்த அருண், நல்ல நெடுநெடுவென்ற வளத்தியோடும், ஆரோக்கியமான உடற்கட்டோடும் இருந்தான்.
“எதுக்கு நிறுத்திட்டீங்க? விளையாடுங்க மச்சான்…”
அணிந்திருந்த டீசர்ட்டை கழற்றி புல்லட்டில் வைத்தபடியே சொன்ன அருண், தானும் களத்துக்குள் இறங்கி, குனிந்து மண்ணைத் தொட்டு உள்ளங்கை இரண்டிலும் தடவியபடியே விளையாட தயாரானான்.
“அதானே பாத்தேன்! என்னடா இன்னைக்கு இங்க பொண்ணுங்க நடமாட்டம் அதிகமா இருக்கே, ஒருவேளை நம்மளத்தான் சைட்டு கிய்ட்டு அடிக்க வந்துட்டாங்களோன்னு ஒரு அல்ப சந்தோஷத்துல இருந்தா…, கடைசில நீ வர்றதை தெரிஞ்சுகிட்டு தான் இங்க இத்தனை கூட்டமா?”
கபடிக் குழுவில் இருந்த இளைஞர்களில் ஒருவன் வேண்டுமென்றே அருணைப் பார்த்து கிண்டலடித்தான்.
“அடேய்… சும்மாவே அவனுக்கு சைட்டு தூள் பறக்கும். இதுல இப்பிடி ஆர்ம்ஸ காட்டிக்கிட்டு இவன் நின்னா, நமக்கு ஜன்மத்துக்கும் சைட்டெல்லாம் கனவுல தான்டா.”
அங்கிருந்த அத்தனை பேருமே அருணுக்கு தோழர்கள் தான். ஆனால் கணேஷ் இன்னும் ஒருபடி மேல்.
“அடேய்… சைட்டு மட்டுமே வாழ்க்கை ங்குற மாதிரி என்னா பேச்சு… வாங்கடா ஒரு மேட்ச் போடுவோம்” அவர்கள் பேசியது எல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல, வலது தொடையைக் கையால் தட்டி சிரித்தபடியே தோழர்களை விளையாட அழைத்தான் அருண்.
தோழனின் அழைப்பில் பகடி பேசுவதை விட்டுட்டு, கபடி விளையாடுவதற்கு தயாராக பக்கத்துக்கு ஏழு பேராக இளைஞர்கள் பிரிந்து நின்று கொண்டார்கள்.
முதல் ஆளாக அருண் கபடி பாடிச் சென்று, அனாயசமாக மூன்று பேரைத் தொட்டு அவுட் ஆக்கி, எதிர் அணியினரிடம் சிக்காமல் துள்ளிக்குதித்து தங்கள் அணியில் வந்து இணைந்து கொள்ள, அந்த பள்ளி மைதானமே ஆரவாரத்தால் குலுங்கியது.
ஆம்… பள்ளி மைதானம் தான்…
தென்காசிக்கு அருகேயுள்ள, கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத பாவூர்சத்திரம் என்னும் ஊரில் அமைந்திருக்கும் திரு. நடராஜர் மேல்நிலைப் பள்ளி மைதானம்.
அது, இருபாலரும் படிக்கும், அரசு உதவிபெறும் பள்ளி. சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரும்பான்மையான மாணவர்களின் கல்வித்தாகத்தை தீர்த்து வைக்கும் கலைக்கூடம்.
நல்ல விஸ்தாரமான நிலப்பரப்பில் அமைந்திருந்தது பள்ளி. தங்களுக்கு தேவையான இடங்கள் தவிர மற்ற இடங்களை பராமரிக்க முடியாமல் விட்டிருந்தது பள்ளி நிர்வாகம்.
அவர்களிடம் பேசி, அனைத்து இடங்களையும் அருணின் தலைமையில் துப்புரவு செய்த இளைஞர்கள் பட்டாளம், தினமும் காலையில் தங்கள் உடற்பயிற்சி மைதானமாக அதை உபயோகபடுத்திக்கொள்ள நிர்வாகத்திடம் கேட்க, இளைஞர்களின் ஆர்வத்தைக் கண்டு, அவர்களுமே அனுமதியளித்தார்கள்.
அதன்பிறகு தினமும் அதிகாலையில் உடற்பயிற்சிக்கென்று அங்கு குவிந்த நண்பர்களைப் பின்பற்றி ஒவ்வொருவராக அங்கு வர ஆரம்பிக்க, அந்த மைதானத்தின் தரத்தை உயர்த்த ஆரம்பித்தான் அருண்.
ஆம்…அங்கு உடற்பயிற்சிக்கென்று வரும் இளைஞர்களில் பலர், போலீஸ் செலக்ஷன், மிலிட்டரி செலக்ஷன் போன்ற கனவுகளில் இருந்தார்கள்.
அவர்களின் உடற்பயிற்சிக்கு தேவையான கட்டமைப்புகளை செய்து கொடுத்தான் அருண்.
தனியொருவனாக அத்தனையையும் செய்யும் மனமும், பணமும் இருந்தாலும், உடனிருக்கும் நண்பர்கள் மனமுவந்து தரும் பண உதவியை மறுத்ததில்லை அருண்.
அருண்… பாவூர்சத்திரத்தில் பெயர்பெற்ற கே வி எஸ் குடும்பத்தாரின் இளைய ஆண்வாரிசு. இருபத்தேழு வயது நிரம்பிய கட்டிளங்காளை.
‘கேவிஎஸ்’ இந்த பெயர் பாவூர்சத்திரத்தில் பலசரக்கு வியாபாரத்தில் காலங்காலமாக கொடிகட்டிப் பறக்கும் பெயர்.
பலசரக்கு கடை என்றால்…, மாத லாபமே பல லட்சங்களை அனாயசமாக ஈட்டும் கடை. ஆனால் பார்ப்பதற்கு எந்த பகட்டும் இல்லாமல், இரண்டு பெரிய அறைகளோடும், அதற்குப் பின்னால் மிகப்பெரிய குடோனோடு மட்டுமே இருக்கும்.
அருண், அந்த குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை வாரிசு.
“என்ன மச்சான், போன வேலை எல்லாம் சரியா முடிஞ்சுதா?”
தங்கள் பக்கத்திலிருந்து எதிரணிக்கு கபடி பாடி தோழனொருவன் சென்றிருக்க, அருணிடம் பேச்சுக் கொடுத்தான் கணேஷ்.
“ம்ம்… ஆமா டா... வத்தல் மட்டும் குண்டூர்ல இருந்து ஒருவாரம் லேட்டா வரும்னு சொன்னாங்க. நம்மகிட்ட தான் ஸ்டாக் இருக்குதே, அதனால நானும் சரின்னு சொல்லிட்டு வந்துருக்கேன்.”
கேவிஎஸ் பலசரக்கு கடையின் விஸ்வரூப வெற்றிக்கு காரணம், அவர்களின் நேரடிக்கொள்முதலே.
எங்கெங்கே என்னென்ன பொருட்கள் பிரபலமாக கிடைக்குமோ, அங்கெல்லாம் சென்று நேரடியாக கொள்முதல் செய்து கொள்வார்கள்.
அதுவும் கடன் என்ற பெயரே இல்லாமல், மொத்தமாக பணம் கொடுத்து கொள்முதல் செய்வதே அவர்களின் சிறப்பு.
அப்படி செய்வதன் மூலம் குறைந்த விலையில், தரமான பொருட்களை கொள்முதல் செய்து கொள்பவர்கள், அதை நியாயமான விலையில் தங்கள் கடையில் விற்பனையும் செய்வார்கள்.
தரமான பொருட்கள், நியாயமான விலையில் கிடைக்கும் போது, அவர்கள் கடைக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருகாமல் இருந்தால் தானே ஆச்சர்யம்.
சுற்றுவட்டாரத்தில் உள்ள குடும்பங்களின் மாதாந்திர செலவுக்கான மளிகை பொருட்களாகட்டும், கல்யாணம், காதுகுத்து, சடங்கு, திருவிழா, கொடை விழா, இப்படி அத்தனை நிகழ்வுக்கு தேவையான மளிகைப் பொருட்களாகட்டும், எல்லாம் இங்கிருந்து தான் செல்லும்.
போதாததற்கு, கிராமங்களில் சிறுசிறு கடைகள் வைத்திருப்பவர்கள், தங்கள் கடைகளுக்கு தேவையான சரக்கு கொள்முதல் செய்வதும் இங்கே தான்.
மொத்தத்தில் தினமும் கேவிஎஸ் பலசரக்கு கடையில் திருவிழா கோலம் தான்.
ஆரம்ப காலத்தில் அருணின் தாத்தாவால் சிறிய அளவில் நடைபெற்ற வியாபாரம் தான். அதன்பிறகு அவனுடைய பெரியப்பாமார்கள், கந்தசாமி, வேலுச்சாமி, அப்பா சுப்பிரமணியன் இவர்கள் மூவரும் தலையெடுத்த பிறகு தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று, அந்த ஊரின் அசைக்க முடியாத ஆளுமையாக மாறி நின்றார்கள்.
அதற்கு அவர்களின் சகோதர பாசமும், ஒற்றுமையும் தான் காரணம் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.
முன்பெல்லாம் அருணின் மூத்த பெரியப்பா கந்தசாமி தான், நேரடி கொள்முதலுக்கு செல்வது. அவரின் மறைவிற்குப் பிறகு இரண்டாவது பெரியப்பா வேலுச்சாமி சென்று கொண்டிருந்தார். இப்போது சிலவருடங்களாக அருண் செல்கிறான்.
மாதத்தில் பத்து நாட்களாவது, இப்படி கொள்முதலுக்காக அருண் அலைய வேண்டியிருக்கும். அந்த நாட்களில் மட்டும் தான் உடற்பயிற்சிக்காக, இந்த மைதானத்தில் அருணின் வருகை இல்லாதிருக்கும்.
இன்றும் அப்படித்தான் கொள்முதலுக்கு போய்விட்டு திரும்பி வந்திருக்கிறான் அருண். அதனாலேயே நண்பர்களிடையே இந்த ஆரவாரம்.
ஒருவர் மாற்றி ஒருவர் கபடி பாடிச் சென்று உற்சாகமாக விளையாடியவர்கள், விளையாட்டை முடித்து கொண்டு மொத்தமாக களத்திற்குள் கால்நீட்டி அமர்ந்தார்கள்.
“என்ன மாப்பிள்ளைங்களா?… இரண்டு மேட்ச்சை போட்டுட்டு, எதோ கோட்டையையே கயித்துல கட்டி இழுத்தது போல சோர்ந்து போய் உக்காந்திருக்கீங்க. தில் இருந்தா எங்கூட ஒரு மேட்ச் போடுங்கடா பாப்போம்.”
ஆணவமாக வந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது, குரலிலேயே அனைவருக்கும் புரிந்துவிட, ‘வேறவேலையே இல்லை இந்தாளுக்கு’ என்னும் ரீதியில், அருண் உட்பட அனைவரும் அசட்டையாக அமர்ந்திருந்தார்கள்.
அவர்களின் அந்த அலட்சியம் இன்னும் அந்த நபருக்கு வெறியைக் கூட்ட, “வேணும்னா, பாத்து… பதமா விளையாடுறேன். பயப்படாமல் உங்க ஸ்டார் ப்ளேயரையாவது எங்கூட ஒரு மேட்ச் போடச் சொல்லுங்க ப்பா” என்றான் கிண்டலாக.
அவன் லிங்கம்… அதே பாவூர்சத்திரத்தை சொந்த ஊராக கொண்ட பிரகஸ்பதி தான். நீதிமன்றத்தில் வழக்காடுவது அவன் தொழில். நாற்பது வயதுக்கு சொந்தக்காரன்.
வயது ஏற ஏற மனமும், குணமும் பக்குவப்படும் என்பதெல்லாம் இவனைப் பொருத்தவரை இல்லை போலும்.
இப்போது கொஞ்சநாட்களாக, எந்த முகாந்திரமுமே இல்லாமல், அருணை வம்புசண்டைக்கு இழுக்க முயற்சி செய்வதையே தன் முழுநேர வேலையாக கொண்டிருக்கிறான்.
அவன் முயற்சி தெரிந்து, அவன் விரிக்கும் வலையில் சிக்காமலேயே நழுவிக் கொண்டிருக்கிறான் அருண்.
இன்றும் தன் விடாமுயற்சியை லிங்கம் கடைவிரிக்க..
“மொதல்ல, பாத்து பதமா நீங்க பேசுங்க ண்ணே… இல்லைன்னா, எக்குத்தப்பா எதுவும் ஆகிடப்போகுது.” நண்பர்கள் கூட்டத்திலிருந்து சூடாக ஒரு கமெண்ட் பறந்து வந்தது.
“என்ன மச்சான்?… நாலு அடிப்பொடிங்க உம்பின்னாடி அலைஞ்சா, நீ பெரியாளு ஆகிடுவியா? ஒரு மட்டுமரியாதை வேண்டாம் இந்த மச்சான் கிட்ட..” இப்போது நேரடியாகவே அந்த லிங்கம், அருணிடம் பேசினான்.
எதற்காக இல்லையென்றாலும், லிங்கத்தின் வயதிற்காக மரியாதை கொடுத்து அமைதியாக அமர்ந்திருந்த அருணுக்கு, சுர்ரென்று கோபம் உச்சிக்கு ஏறியது.
அதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாமல், துள்ளி எழும்பிய அருண், “கொய்யால… யாருக்கு யாரு மச்சான்? மரியாதையா பேசலைன்னா வாய் வெத்தலை பாக்கு போட்டுக்கும், ஜாக்கிரத…”
நெஞ்சை நிமிர்த்தி கொண்டு லிங்கத்தின் முன்னால் நின்றவனின் கண்கள் இரண்டிலும் அனல் பறந்தது.
“உங்கப்பா மட்டும் குறுக்கால விழுந்து குட்டையைக் குழப்பலைன்னா, எனக்கு நீயும், உனக்கு நானும் என்னைக்கோ மச்சான் ஆகியிருப்போமே மச்சான்…”
எந்த வார்த்தையைச் சொன்னால் அருணை உசுப்பேற்ற முடியுமோ, அந்த வார்த்தையை சொல்லி இன்னும் நன்றாக அருணை உசுப்பேற்றிய லிங்கம், வலது கையால் தன் இடது கன்னத்தை தடவியபடியே,
“என்ன ஆனாலும் அந்த பலவருஷக் கணக்கை தீர்க்காம அடங்கமாட்டான் இந்த லிங்கம்” என்றான் கோணல் சிரிப்போடு.
“தில் இருந்தா தீர்த்துக்கோடா, அதை விட்டுட்டு சைகோ மாதிரி எங்கிட்ட பேசுன… மவனே சாவடிச்சுடுவேன்” ஆட்காட்டி விரலை லிங்கத்தின் முகத்துக்கு நேர் உயர்த்தி, ஐயனாராக உறுமினான் அருண்.
“உன்னை கோபபடுத்தணும் ங்குறதுக்காகவே இந்தாளு இப்படி பேசுறாரு… அது புரியாமல் அந்தாளுக்கு சரிக்கு சமமா, நீயும் சண்டபோட்டுகிட்டு… ம்ப்ச்… வாடா…”
சட்டென்று அருணின் கையைப்பற்றி கணேஷ் இழுத்தான். அவனைப் பின்பற்றி மற்ற நண்பர்களும் தங்கள் தோழனை அந்த இடத்திலிருந்து நகர்த்தி கொண்டு சென்றார்கள். அத்தனை பேரின் பார்வையும் லிங்கத்தின் மீது வெறுப்பாக படிந்து விலகியது.
“போங்கடா… போங்க… இந்த தெய்வீக நட்பெல்லாம் எத்தனை நாளுக்குன்னு நானும் பாக்கத்தானே போறேன்… அவனைத் தலையில தூக்கி வச்சி ஆடுற நீங்களே, தரையில போட்டு மிதிக்குற நாளும் வரத்தான் போகுது. அப்படி நடக்கலை… எம்பேரை மாத்தி வச்சிக்கிறேன்டா.”
“அப்போ சீக்கிரமாவே நல்லதா ஒரு பெயரை செலக்ட் பண்ணிக்கோங்க தல…” போகிற போக்கில், கமெண்ட்டை அள்ளித் தெளித்து விட்டே சென்றது அந்த இளையவர்கள் பட்டாளம்.
முன்னம், தன் இளமைப் பருவத்தில் கேவிஎஸ் குடும்பத்தோடு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவம், நீறுபூத்த நெருப்பாக நெஞ்சுக்குள் இன்றும் தகித்துக் கொண்டிருந்தது லிங்கத்துக்கு.
எந்த வகையிலாவது கேவிஎஸ் குடும்பத்தின் நற்பெயருக்கு பங்கம் ஏற்படுத்திவிட வேண்டும் என்று, அவனும் பல வருடங்களாக முயன்று கொண்டுதான் இருக்கிறான்.
ஆனால் அவன் முயற்சி எதுவும் இன்றுவரை பலித்தபாடில்லை. அதற்கு நேர்மாறாக அந்த குடும்பத்தினரின் செல்வாக்கும், சொல்வாக்கும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கின்றது.
ஆம்… ஊருக்குள் பேர் சொல்லும் குடும்பத்தில் பிறந்து, வக்கீலாக உலாவந்து கொண்டிருக்கும் லிங்கம் சம்பாதிக்காத பெயரையும் புகழையும், சிறுவயதிலேயே அலட்டிக்கொள்ளாமல் அருண் சம்பாதித்து விட, அதைக்கொண்டும் அவன் மீது தீராத பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது லிங்கத்துக்கு.
அதை, அங்கங்கே காணும் போதெல்லாம், அருணிடம் இறக்கி வைக்க இவன் முயற்சிக்க, ஒதுங்கி ஒதுங்கி போன அருண், இன்று பொங்கி எழுந்து விட்டான்.
சற்றுமுன் இங்கே எதுவுமே நடக்காத பாவனையில், தூரத்தில் நண்பர்களோடு நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அருணைப் பார்த்து, தன் பொறுமையை இழந்த லிங்கம், தன் காலுக்கருகில் கிடந்த கல்லை ஆத்திரம் தீர ஓங்கி மிதித்து தெறிக்க விட்டான்.
வாய், “எனக்கும் ஒருகாலம் வரும்… அன்னைக்கு வைக்கிறேன்டா உங்களுக்கு ஆப்பு” என்று முணுமுணுத்தது.
விளையாட்டு மைதானத்தில் நடந்த அத்தனையையும் அங்கேயே உதறிவிட்டு, உற்சாகமாக வீட்டுக்கு வந்து இறங்கினான் அருண்.
அந்த வீட்டில் வசிக்கும் மனிதர்களின மனங்களைப் போலவே, வீடும் விஸ்தாரமாக இருந்தது.
ஆம்… இன்றுவரை தொழில் எப்படி ஒன்றாக இருக்கிறதோ, அப்படித்தான் மூன்று அண்ணன் தம்பியின் குடும்பமும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்.
“ஹை… மாமா வந்தாச்சு…”
அருண் வீட்டுக்குள் நுழையவும், ஆணொன்று, பெண்ணொன்று என்று இரண்டு குழந்தைகள் ஓடிவந்து இவன் கைகளைக் கட்டிக்கொண்டு தொங்கினார்கள்.
“ஹேய்… எப்போ வந்தீங்க செல்லம்” கேட்டபடியே கைகளில் இருவரையும் அள்ளிக்கொண்டவன், ஹாலில் அமர்ந்திருந்த, தன் அக்காவின் கணவருக்கு பக்கத்தில் வந்து அமர்ந்து,
“ஹேய்… என்னடா?… பொண்ணு பாக்குறதுன்னு ரொம்ப ஈசியா சொல்லிட்ட?… என் தம்பிக்கு இரண்டு அக்கா நாங்க இருந்தும், ஒருத்தராவது இந்த ஃபங்ஷன்ல நிக்க வேண்டாமா? அப்புறம் நாங்க அக்கான்னு இருந்து எதுக்குடா?”
கேட்ட பெண்ணரசி, கேவிஎஸ் குடும்பத்தின் மூத்த தம்பதி கந்தசாமி, பெரியநாயகியின் இரண்டாவது மகள் கயல்விழி.
கயல்விழியோடு உடன் பிறந்ததும் பெண்ணே. மீனாட்சி, என்பது அவர் பெயர். தற்போது கணவன், இரண்டு பிள்ளைகள் என்று, குடும்பமாக இருப்பது அமெரிக்காவில்.
“அதுசரி… பொண்ணு பார்க்க போக நீ வந்தாச்சு. ஆனா, இன்னும் கல்யாண மாப்பிள்ளை வரலை போலயே?” என்றான் அருண் கேலியாக.
“ஆன் தி வே ன்னு சொன்னான், அருண்.”
தகவல் சொல்லியபடியே வந்தமர்ந்தார், வேலுச்சாமி. அருணின் இரண்டாவது பெரியப்பா. ராஜேஸ்வரி, அவரின் மனைவி.
இருவருக்கும் ‘சசிதரன்’ என்ற ஒற்றை மகனே. கம்ப்யூட்டர் இன்ஜினியர். பெங்களூருவில் பிரபலமான சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான்.
அவனுக்கு தான் திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலத்திற்காக, கயல்விழி குடும்பத்தோடு வந்திருப்பது.
கேவிஎஸ் ஸில் வரும் ‘எஸ்’ என்ற எழுத்துக்கு சொந்தக்காரர் சுப்பிரமணியன். அருணின் அப்பா. ரத்னா அவரின் மனைவி.
சுப்பிரமணியன், ரத்னா தம்பதியருக்கு ‘ராகினி’ என்ற மகளும் உண்டு. ‘பிஎஸ்சி மைக்ரோபயாலஜி’ கடைசிவருட படிப்பில் இருக்கிறாள்.
“உன் தம்பி ஆன் தி வே யா? இல்லை வர்ற வழியிலேயே பொண்ணைப் பாத்துட்டு வந்துடலாம்னு பொண்ணு வீட்டுக்கே போய்ட்டானா?”
கயல்விழியின் காதுகளில், அவள் கணவன் ராகவ் கிசுகிசுக்க, “அட நீங்க வேற… அருணைச் சொல்லுங்க அவனுக்கு அந்த தில் உண்டு. ஆனா சசி அப்பிராணி. அவனுக்கு அந்த சாமார்த்தியம் எல்லாம் போதாது” சொல்லிவிட்டு மலர்ந்து சிரித்தாள் கயல்விழி.
“அக்கா, இப்போ என்னை புகழுறியா? இல்லை டேமேஜ் பண்ணுறியா?”
“இதுக்குத் தான் உன்னைப் படி படின்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன் அருண். ஆனா, நீ நான் சொன்னது எதையும் கேக்காம வாழ்க்கையை விளையாட்டா எடுத்துக்கிட்ட. இப்போ பாரு, பெரிய அக்கா பிள்ளைங்க அமெரிக்காவுலயும், கோவா லயும். இந்த வீட்டுல உன்னை மாதிரியே பொறுப்பெடுக்க வேண்டிய சசி… பெரிய்ய்ய இஞ்சினியர்… நல்லா சுகவாசியா பெங்களூர்ல இருக்கான். நீ மட்டும் தான், இந்த பட்டிக்காட்டுல, உப்பு, புளி, மிளகா விக்குற கடையில, வியர்வை நாத்தத்துல கிடக்குற. போதாததக்கு இந்த பகை வேற. தேவையா உனக்கு?”
எப்போதும் போல வஞ்சனையில்லாமல் அருணின் அம்மா ரத்னா, தன் நரம்பில்லாத நாக்கை சாட்டையாய் சுழற்ற, ஸ்தம்பித்து போனது வீடு…