அருணின் தோரணையான குரலில் உள்ளுக்குள் லேசாக உதறலெடுத்தாலும், எப்போதும் போல ‘நான் சரி’ என்ற எண்ணம், சந்த்ரிகாவை தைரியமாக அதே வார்த்தையை திரும்பவும் சொல்லவைத்தது.
“என் அண்ணா சர்ட் தான?… அப்போ நான் போடலாம்” இயல்பாக சொல்லியபடியே சட்டையின் பட்டனைப் போட ஆரம்பித்தான் அருண்.
“இந்த அண்ணன், தம்பி… நான் போடுவேன், உங்களுக்கு என்ன ங்குற பேச்செல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் தான்… இப்போ எங்களுக்கு கல்யாணம் ஆகிடிச்சி, இனிமே, என் ஹஸ்பன்ட் சட்டையைப் போடக் கூடாதுன்னு நான் சொன்னா, நீங்க போடக்கூடாது.”
‘தான் ஒன்று சொல்லி அது நடக்காமல் போவதா?’ என்ற பிடிவாதம் சட்டென்று சந்த்ரிகாவிடம் வந்து ஒட்டிக்கொள்ள, யோசிக்காமல் அடுத்து பேசினாள்.
“அட… கல்யாணம் ஆகிடிச்சின்னா, சசி எனக்கு அண்ணனும், நான் அவனுக்கு தம்பியும் இல்லாமப் போய்டுவோமா என்ன?!”
கிண்டலாக சொல்லிய அருண், “இதே சட்டையை, ஒருவேளை நீங்க சசிக்கு ஸ்பெஷலா எடுத்து குடுத்து, அதை நான் போட்டா தான் தப்பு. உங்க அளவுக்கு இல்லாட்டாலும், எங்களுக்கும் கொஞ்சம் மேனர்ஸ் தெரியும் அண்ணியாரே…”
உனக்கு நான் சளைத்தவனில்லை என்னும் விதத்தில் நக்கலாக பதில் சொல்லிய அருணின் கண்களில், முகமெங்கும் கோபத்தை பூசிக்கொண்டு, அங்கே நின்றிருந்த தன் அம்மா விழ, இதற்கு மேல் பேசினால், விஷயம் விபரீதம் ஆவது உறுதி என்று எண்ணி, எதுவும் பேசாமல் அங்கிருந்து நகரத் தொடங்கினான்.
“வேணும்டா… உனக்கு நல்லா வேணும் டா… படிச்சிட்டு வெளியே வேலைக்கு போ, இந்த கடைக்குள்ளயே அடைபட்டு கிடக்காதன்னு நான் தலைப்பாடா அடிச்சிகிட்டனே… கேட்டியா?.. நீயும் ஒரு கவுரவமான உத்யோகத்துல இருந்திருந்தா, இன்னைக்கு வந்ததுங்க எல்லாம், உங்கிட்ட போட்ட சட்டையை கழட்ட சொல்லுமா?” மகனிடம் சாடினார் ரத்னா.
“ம்ப்ச்… ம்மா… நீங்க எதுக்கும், எதுக்கும் இணை கூட்டுறீங்க?” அலுத்துக் கொண்ட அருண், தாயின் தோளில் கை போட்டு அங்கிருந்து நகர்த்தி கொண்டு செல்ல முயன்றான்.
சட்டென்று அவன் கையை உதறியவர், மருமகளின் பேச்சில் என்ன செய்வதென்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்த ராஜேஸ்வரியிடம் சென்று,
“எல்லார்த்துக்கும் சேர்த்து எம்புள்ள மட்டும் பொதி சுமக்குறதுனால தான், இவங்க எல்லாரும் நகத்துல அழுக்கு ஒட்டாம, பந்தாவா இருக்காங்கன்னு இத்தனை நாளாகியும், உங்க புது மருமகளுக்கு நீங்க சொல்லிக் குடுக்கலையா க்கா?” என்று காட்டமாக கேட்டார்.
“சந்த்ரி சின்ன பொண்ணு ரத்னா…, ஏதோ தெரியாம சொல்லிட்டா… அதைப் போய் பெரிசுபடுத்தாத” மெல்லிய குரலில் கெஞ்சினார் ராஜேஸ்வரி.
“ஏன் சொல்லமாட்டீங்க… அவமானப்பட்டு நிக்குறது எம்புள்ள தானே?” சிலிர்த்துக் கொண்ட ரத்னா,
“இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும். குடும்பம், ஒற்றுமை, அது இதுன்னு கதை விடுவாங்களே பெரிய அக்கா, அவங்களை கூப்பிடுங்க… இப்போ எங்க போச்சு உங்க ஒற்றுமைன்னு எனக்கு அவங்கிட்ட கேட்கணும்.”
“இந்த அவமானத்தை சுமந்துகிட்டு உங்க கூட சேர்ந்து இருக்கணும்னு எனக்கோ, எம்பிள்ளைக்கோ தலைல எழுதல. சொத்தை பிரிக்கச் சொல்லுங்க… வியாபாரத்தை, அவரவர் பங்கை அவரவர் பார்க்கட்டும். அப்போ தான் எம்புள்ளையோட அருமை எல்லாருக்கும் தெரியும்.”
ஏற்கனவே, எப்போதடா குடும்பத்திலிருந்து பிய்த்து கொண்டு போகலாம் என்று இருக்கும் ரத்னாவுக்கு, சந்த்ரிகா, தன் பேச்சின் மூலம் பிள்ளையார் சுழி போட்டு கொடுக்க, அதை பிடித்து கொண்டு பாகப்பிரிவினை செய்துவிட்டே இன்று ஓய்வேன் என்ற ரீதியில் பேசத் தொடங்கியவர், அங்கே வந்த சசிதரனிடமும் நடந்தது அத்தனையையும் ஒன்று விடாமல் சொல்லி, தன் முடிவையும் சொன்னார்.
“இதுக்காக, வியாபாரத்தைப் பிரிச்சு, நாம எதுக்கு சித்தி தனித்தனியா போகணும்? நானும் அருண் கூட இங்கயே கடையில் உட்கார்ந்திடுறேன். ப்ராப்ளம் சால்வ்ட்” எளிதாக தீர்வு சொல்லிய சசிதரன்,
“ஏன் சந்த்ரி… நீயும் உன் தங்கச்சியும், உங்க ட்ரெஸை ஒருத்தர் மாத்தி ஒருத்தர் போட்டுக்கவே மாட்டீங்களா? ஏதோ கூடப்பிறந்தவங்க அப்படி போடுறதே தெரியாத மாதிரி அருண்கிட்ட ரீஆக்ட் பண்ணியிருக்கிற?” குரலில் அதிருப்தி தொனிக்க கேட்டவன், “எடுத்தேன் கவிழ்த்தேன்னு, யோசிக்காமல் இப்படி பேசக்கூடாது சந்த்ரி” என்றும் சொன்னான்.
கடையை பிரிவினை செய்து, அவரவர் பாகத்தை அவரவர் பார்த்துக் கொள்ளட்டும் என்ற ரத்னாவின் பேச்சிலேயே அலமலர்ந்து போய் நின்றிருந்த சந்த்ரிகாவுக்கு, கணவனின் கண்டிப்பை விட, அவனது முடிவு மிரள வைத்தது.
‘அப்படியானால், கணவன் வேலையை விட்டு விட்டு இங்கேயே உக்கார்ந்து விடுவானோ? என் ஆசை, கனவு மீது நானே மண்ணள்ளி கொட்டிக் கொண்டேனா?’
நிலையின்றி தவித்தவளின் மனதை, “உனக்கு இங்க செட் ஆகாது... ஜோக் அடிக்காமல் கிளம்பி போற வழியைப் பாரு சசி” என்ற அருணின் வார்த்தைகள் நிலைப்படுத்தியது.
“அவனே கடைக்கு வரேன்னு சொல்லும்போது… உனக்கென்னடா வந்தது? எதுக்கு வேண்டாம்னு சொல்லுற?” ரத்னா மறுபடியும் மகனிடம் சண்டைக்கு வந்தார்.
“அம்மா… தயவு செய்து இதுல நீங்க தலையிடாதீங்க” உறுதியாக தாயிடம் சொல்லிய அருண், “நாங்க இங்க பாத்துப்போம் சசி… நீ எதையும் மனசுல வச்சிக்காம கிளம்பு” என்று சொன்னான்.
“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது டா. இப்படி இவங்களை தலைல தூக்கி வச்சி நீ ஆடுறதுனாலத் தான், உன்னை மனுஷனாக் கூட மதிக்க மாட்டேங்குறாங்க. நாம தனியா போய், நம்ம மரியாதையை காப்பாத்திக்கலாம்னு நான் சொன்னாலும், அப்பாவும் பிள்ளையும் கேக்க மாட்டேங்குறீங்க.”
அங்கலாய்த்த அன்னையிடம், “குடும்பம்னா எல்லாம் தான் இருக்கும்னு, இத்தனை வயசுக்கு பிறகும் புரியாமல், எப்போ பார்த்தாலும் பிரிச்சுட்டு போறதுலயே குறியா இருக்காதீங்க ம்மா” லேசான அதட்டல் குரலில் அருண் சொல்ல,
“ம்ஹூம்… என்னைக்கு தான் எம்பேச்சை நீ கேட்டுருக்க, இன்னைக்கு கேட்க, எக்கேடும் கெட்டுப்போ… கடைசியில நான் தான் கெட்டபிள்ளை எல்லோருக்கும்” இடைவெளி விடாமல் திட்டிக்கொண்டே வீட்டுக்குள் சென்றார் ரத்னா.
தாயின் வார்த்தைகளைக் கேட்டு அருண் சோபையாகச் சிரிக்க, “சந்த்ரி சார்பா, உங்கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் அருண். எதையும் மனசுல வச்சிக்காத” என்றபடி தம்பியின் கைகளைப் பிடித்தான் சசிதரன்.
“அம்மா மட்டும் சரியா அந்த நேரத்துக்கு வரலைன்னா, நானும் உன் ஆளை ஒருவழியாக்கி இருப்பேன். அதனால உன் மன்னிப்பை நீயே வச்சிக்கோ” என்றபடி கடைக்கு சென்று விட்டான் அருண்.
ஆக, அருண், சசிதரன் என்ற நல்மகவுகளின் முயற்சியால், வெடித்த பூகம்பத்தால் அந்த குடும்பத்தில் பெரிய அளவில் பிளவு வராமல் தடுக்கப்பட்டதோடு, சசிதரன், சந்த்ரிகா தம்பதியர் குறிப்பிட்ட நாளில் பெங்களூருவிற்கும் குடிபெயர்ந்திருந்தனர்.
நகரின் பிரபலமான பகுதியில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாவது தளத்தில் இருந்தது சசிதரனின் வீடு.
சொந்தவீடு தான். தனது சம்பளம் எதுவுமே குடும்பத்திற்கு தேவைப்படாத காரணத்தால், வீட்டு பெரியவர்களின் வழிகாட்டுதலின்படி, ஹவுஸிங் லோனில் இந்த மூன்று படுக்கையறை உடைய லக்ஸ்ஸூரி ப்ளாட்டை வாங்கியிருந்தான் சசிதரன்.
தனது பெரிய குடும்பம் இங்கு வந்தால் தங்குவதற்கு ஏதுவாகவே பெரியதாக வீட்டை எடுத்திருத்தான் சசிதரன். வீட்டு லோனும் முடியும் தருவாயில் இருக்கிறது.
திருமணத்திற்கு முன்பு வரை, தன் ஆபிஸில் வேலை செய்யும் நண்பனோடு வீட்டை பகிர்ந்து கொண்டான் சசிதரன். சாப்பாடு கூட, அவர்கள் இருவருமே தயார் செய்து சாப்பிட்டுக் கொண்டார்கள். அதனால் சமையலில் ஐயா புலி தான்.
இரண்டு நாட்கள் மனைவியோடு இருந்து, உதவி செய்து கொடுத்து, அவளை அங்கே பழக்கி விட்டு தனது அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்திருந்தான் சசிதரன்.
சந்த்ரிகாவும், வேலைக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்திருந்தாள். இந்த ஒருவாரத்தில் வேலைக்கான சில நேர்காணல்களை ஆன்லைனில் எதிர்கொள்ளவும் செய்திருந்தாள்.
சொல்லிவைத்தாற் போல அனைவரும் கேட்ட ஒரே கேள்வி, “படிப்பு முடிந்த இந்த இரண்டு வருஷமும், வேலைக்கு போகாம என்ன பண்ணுனீங்க?”
அவர்களிடம் ஏதேதோ சொல்லி சமாளித்தவளுக்கு, தன் இஷ்டப்படி, தன்னை வேலைக்கு விடாமல் வீட்டோடு வைத்திருந்த தாயின் மீது கட்டுப்படுத்த முடியாத கோபம் தான் வந்தது. தாய்க்கு ஃபோன் செய்து ஒரு மூச்சு கத்தி தீர்த்தாள்.
திருமணத்திற்கு பிறகு ஓரளவிற்கு தன் மகளின் குணத்தில் மாற்றம் வந்துள்ளது என்று மகிழ்ந்து போயிருந்த ராதாவுக்கு, மகளின் நடவடிக்கை மிகவும் ஏமாற்றத்தை கொடுத்தது.
சசிதரனும் கூட இத்தனை நாட்களில் மனைவியின் குணத்தை ஓரளவிற்கு படித்திருந்தான்.
‘பலவீனங்களும், குறைகளும் இல்லாத மனிதர்கள் மட்டும் தான் வாழ்க்கை துணையாக வேண்டும் என்றால், ஸ்பெஷலாக ஆர்டர் கொடுத்து, செய்து தான் வாங்க வேண்டும்’ என்ற எண்ணம் அவனுக்கு இருந்ததால், அவளுடைய குணத்தோடே மனைவியை ஏற்றுக் கொண்டான்.